Saturday, January 25, 2014

இந்த நாள் இசையின் நாள்


பனிப்பொழிவு, பரபரப்பான பயணங்கள், பணிநெருக்கடி என்பவை விட்டுவிலகி, வீட்டில் நிற்கமுடிந்த இன்றைய பொழுது சுகமானது.
காலைச் சூரியனின் கதிரொளி மனதுக்கும் உடலுக்கும் தந்தது மகிழ்வான உற்சாகம். பிரியத்துக்குரிய நாய்குட்டியுடன் விளையாடி, பிடித்தாகப் பூங்கன்றுகளுக்கு நீர் வார்த்து, இணையம் மேய்கையில், எங்கெங்கும் மனம் விரும்பும் இசையின் தொடுப்புக்கள்.

மலேசியாவிலிலுந்து கேரளம் பாடலைக் கேட்டு லயித்து, இங்கே பகிர்ந்து முடிக்கையில்,  " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன்... " இமானின் இசையில் மதன் கார்க்கியின் வரிகள், வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் வந்து ஒலிக்கிறது.

Monday, January 20, 2014

மனம் கொத்திச் செல்லும் மணிவர்மாவின் கோடுகள்


கோட்டோவியங்கள் எப்பொழுதும்  புதுவித ரசானுபவம் தருபவை. என் விருப்பத்துக்குரியவை.

சில்பி, பத்மவாசன், மணியம் செல்வன், யாழ்.ரமணி, என ஒவ்வொருத்தருடைய கோடுகளும் தனித்துவமான பாணியுடையவை. மணிக்கணக்கில் பார்த்து இரசித்திருக்கிறேன். குறைந்தளவிலான கோடுகளில் முகபாவங்கள் வெளிப்படுத்தும் ஓவியங்கள் ஏற்படுத்தும் ஆச்சரியம் அளவிடமுடியாதவை. ஓவியர் ஆதி மூலம், ஈழத்தில் மாற்கு மாஸ்டர், ஆகியோரது கோடுகள் அவ்வாறான ஜாலம் புரிபவை.
85களின் பின்னதாக யாழ்ப்பாணத்தில், ஓவியர் மாற்கு அவர்களின் ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. காட்சியிலிருந்த ஓவியங்களைப் பார்த்தவாறு வருகையில், இரு கோடுகள் மட்டும் கொண்ட ஒரு ஓவியம் என்னுள் ஆச்சரியத்தையும் கேள்விகளையும், எழுப்பியது.

நீலம், சிவப்பு, நிறத்திலான வளைந்து நெளிந்திருந்த அந்தக் கோடுகளுக்கு ராதையும் கண்ணனும் எனத் தலைப்பிட்டிருந்தார் ஓவியர் மாற்கு. கண்கவர் வண்ணப்படங்களாக கண்ணன் ராதையைப்  பார்த்துப் பழகியிருந்த எம் பட்டறிவுக்கு, கோடுகளில் கண்ணன் ராதை தெரியவில்லை. இது தொடர்பாக மாற்கு அவர்களிடம் பின் பேச வாய்ப்பும் அமையவில்லை.
தங்கத் தாமரை விருது பெற்ற படமான இயக்குனர் சேது மாதவனின்,  'மறுபக்கம்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்குமாரின் ஒளிப்பதிவில் நடிகை ராதா ஒரு காட்சிச் சட்டகத்தில், சிறு கோடுகளாய் தெரிய, ஆச்சரியமானேன்.  உச்சி மீதிருந்து, ஒரு கோணத்தில் ஒளியுமிழ, இருள் மறைப்பிலும், ஒளித்தெறிப்பிலும், ராதா கோடுகளில் தெரிந்த போது, மாற்கு மாஸ்டரின்  கண்ணன் ராதை ஓவியக் கோடுகள் நினைவுக்கு வந்தது மட்டுமன்றிப் புரியவும் தொடங்கியது. ஓவியனின் கற்பனையும், அவை பிரசவிக்கின்ற  கோடுகளும் அர்த்தமுடையவை. அழகியலின் கதை பேசுபவை.

Monday, January 06, 2014

புதிய கதைசொல்லிகள் !


கதை சொல்லலும், கேட்டலும், மனித வாழ்வியலின் முக்கியமானதொரு கூறு. தமிழர்கள் நாமும் கதைசொல்லிக் கேட்டு வளர்ந்தவர்கள்தான்.
ஆனால் வணிக நுகர்வுக்குக் கலாச்சார மாற்றமும், நில நிகழ்வின் துயரங்களும்,  எங்கள் இளையவர்களை அதிலிருந்து வெகுதூரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவ்வாறு  தொலைதூரம் சென்று , நம் தொன்மம் தொலைந்து போகாதிருக்கும் முயற்சியாக இந்தக் கதை சொல்லிகள் புறப்பட்டிருக்கின்றார்கள்.

இக் கதை சொல்லிகள் சொல்லும் கதைகள் எமக்குத் தெரிந்தவையாகவும் இருக்கலாம். ஏனெனில் அக் குழுமத்தின் முதல்நிலையாளனாகிய ஞானதாஸ் காசிநாதர் " எமது பண்பாட்டில் .கதைகள், வயற்காட்டிலும், வரம்புகளிலும், வடலி வழியவும், தெருவோரங்களிலும், மதவுகளிலும், சந்தி வழியவும் சொல்லப்பட்டது. நாங்கள் பள்ளிக்கூட கழிவறைக்குள், சிறுநீர் கழித்தபடி கூட கதைகளும் பகிடிகளும் சொன்னதுண்டு.. "  எனக் குறிப்பிடுவதுபோல், எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்த எங்கள் கதைகளை மறந்து போனவர்களானோம்.

அவ்வாறு மறந்து போன கதைகளையும், கணினி விளையாட்டுக்களுக்குள் தங்களைத் தொலைத்துக் கொள்ளக் கூடிய இளைய தலைமுறையையும் மீட்டெடுத்து, விழியத்தின் வழியே இணையத்தில் கொண்டு வர முயல்கின்றார்கள் இக் கதை சொல்லிகள்.

Sunday, December 29, 2013

ஓயுதல் செய்யோம் !


கடுங் குளிர், பனிப்பொழிவு என்பவை கடந்து வீடு வந்து இணையம் தொடுகையில் இரண்டு உவப்பான செய்திகள் காத்திருந்தன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4தமிழ்மீடியா படைபாய்வகம் வெளியிட்ட  " திருப்பூர் ஜோதியின் - டாலர் நகரம் " இந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டுப் புத்தகங்களில் விகடன் குழுமத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை ஜோதிஜி அறிவித்திருந்தார்.

பின் இணைப்பில் சென்று வாசித்த போது இப் புத்தகத்திற்கான தெரிவுக் குறிப்பில்,  ' தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது ' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் ஜோதிஜியின் முதற் பிரதியைப் பார்த்த போது என மனதில் தோன்றியதும், பின் பிரசுரத்திற்கான காரணங்களில் முக்கியமானதாகவுமிருந்த விடயம் உணரப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. தொடர்ந்து வாசிக்க

Wednesday, December 25, 2013

வரமெனக்கு வாய்த்திட வேண்டும் !



கால நகர்வின் வேகத்தில் மறைந்து வரும் பழக்கங்களும் அதிகரிக்க, வாழ்வியலின் வழக்கங்கள் அருகி, இயல்பு வேகமாக மாறிவருகிறது.
 ஒரு காலத்தில் அவசியமாகக் கருதப்பட்ட விடயங்கள், அல்லது விருப்பத்திற்குரிய விடயங்கள் இப்போ வேண்டத்தகாதன ஆகிவிட்டன. அடுத்த தலைமுறை அநேக விடயங்களைக் குறிப்புக்களின் பதிவுகளிலேயே வாசித்தறிய வேண்டியிருக்கும். இது இயல்புதானென ஏற்றுக் கொண்டாலும், இம் மாற்றத்தில் சில வாழ்வாதாரத் தொழில் முனைவுகள் முடங்கிப் போவதும், அதனை நம்பி இருக்கும் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகிப் போவதும் வருத்ததிற்குரியது.
 "ஆனந்தி" சஞ்சிகையை ஐரோப்பிய அச்சுத்தரத்தில் வெளியிடத் தொழில் சார் முறையில் உதவிய அச்சக நண்பர்களை, கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்னதாகச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவரச் சென்றிருந்தேன். வருட இறுதியில் பரபரப்பாக இருக்கும் அந்தப் பாரிய அச்சகம், ஆளரவமற்றுக் கிடந்தது. அங்குமிங்கம் வேகமாகச் சுழன்று திரியும், தொழிலாளர்கள் தொகை சரிபாதிக்கும் மேலாகக் குறைந்திருந்தது.
புதிய வடிவங்களிலும், வண்ணங்களிலும், நாட்குறிப்புக்களும், நாட்காட்டிகளுமாக நிறைந்திருக்கும் அந்தக் கூடம் வெறிச்சோடிப்போயிருந்தது. முதலாளியாகவும், தொழிலாளியாகவும், குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் பதிப்பகத்தை நடத்திவரும் நண்பன், வேதனையின் ரேகைகளை அகத்தினுள் மறைத்து, முகம் சிரித்து வரவேற்றான்.
 கைகுலுக்கிக் கட்டியணைத்தவனிடம் "என்னாச்சு...?" என்றேன்.
 "காலம் மாறிப் போச்சு... " என்றான்.
ஐரோப்பியப் பொருளாதார மந்த நிலைத் தொழில் முடக்கமாக இருக்குமெனும் என் எண்ணத்தினை மாற்றி, யோசிக்க வைத்தது அவன் பதில். யோசித்துப் பார்க்கின்றேன்.. தொடர்ந்து வாசிக்க..இங்கு அழுத்துங்கள்

Thursday, March 08, 2012

விட்டுவிடுங்கள்..!



இன்னும் எத்தனை முறை
வன் புணர்வீர்கள்
அவள் உடல் மீது...?

Sunday, November 29, 2009

அம்மா - ஒரு கவிதா அனுபவம்



நமது பிள்ளைகளின் மகிழத் தக்க செயல், மனதுக்குள் திரும்பத் திரும்ப மலர்ந்து மகிழ்ச்சி தரும். அது போலவே எமக்குப் பிடித்தமான படைப்பாக்கமும். அன்மையில் அப்படி ஒரு நிறைவைத் தந்தது இந்த ஒலிப்பதிவு.

அம்மாவைப் பற்றி ஒரு பத்து வயதுச் சிறுமியின் இயல்பான கவிதை. கிராமிய வார்த்தைகளில் தாய் குறித்த ஒரு பாடல். அன்னையின் புகழ் பாடும் ஒரு நவீன இசைப் பாடல். இவை ஒவ்வொன்றும் ஒவ்வாரு சந்தர்ப்பங்களில் கேட்டவை. இந்த ஒலிப் பத்தியை உருவாக்க யோசித்த போது ஒன்றோடொன்று இசைந்து வந்தது.

கவிதை ஒரு ஈழத்துச் சிறுமி, கிராமியப்பாடல் தமிழகத்துப் பாடகன், நவீன இசைப்பாடல் மலேசியக் கலைஞன். இந்த மூன்று தமிழையும், இசையோடு கோர்வையாக்கிய போது, இந்த ஒலிப்பத்தி ஒரு முப்பரிமானத் தோற்றத்தில் ஒலித்தது. கேட்பதற்கு மனதுக்கு இதமாகவும், திருப்தியாகவும் இருந்தது.

ஒரு தடவை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.

Wednesday, October 14, 2009

நல் உருவாக்கம்

2009ம் ஆண்டுக்கான உலகச் சைக்கிள் ஓட்டப் பந்தயப் போட்டிகள் கடந்த மாதம் 23, 24, 26, 27ந் திகதிகளில் சுவிற்சர்லாந்தின் மென்திரிசியோ எனும் இடத்தில் நடைபெற்றது. இதனைத் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தைக் கவனிக்க முடிந்தது. ஐந்து பள்ளிச் சிறுவர்களை , இளம் பத்திரிகையாளர்களாக அந்தப் போட்டிகளை நேரில் பார்த்துச் செய்தித் தொகுப்பாகக்க அழைத்து வந்திருந்தார்கள். 10 தொடக்கம் 12 வயது வரையிலான அவர்கள், உலக சாம்பியன்களைச் சந்தித்து செவ்வி காண்பதும், நிழற்படமெடுப்பதுமாக பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தொலைக்காடசி செய்தியாளர் ஒருவர் மடக்கிப் பேட்டி கண்டார். இங்கு நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றபோது, தாங்கள் இரு மாதகாலமாக அந்த உலகப்போட்டிகள் தொடர்பான செய்தி இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்காக சைக்கிள் ஓட்ட வீரர்களைச் செவ்வி கண்டும் நிழற்படங்கள் எடுத்து வருவதாகவும் சொன்னார்கள். இதுவரையில் எத்தனை படங்கள் எடுத்திருப்பீர்கள் எனச் செய்தியாளர் கேட்க , அந்த இளம் பத்திரிகையாளர் இதுவரையில் 5000 படங்கள் எடுத்திருப்போம் என்கிறார்

தொலைக்காட்சிச் செய்தியாளர் ஆச்சரியத்தில் 5000 படங்களா? என வியக்கின்றார். தொலைக்காட்சியைப் பாரத்துக் கொண்டிருக்கும் நாமும் தான் வியக்கின்றோம். அடுத்த கணம், அந்த ஐவரில் மற்றொருவர், அந்த 5000ம் படங்களில் பத்துப் படம்தான் நல்லா வந்திருக்கு என்று சொல்லிச்சிரிக்கின்றார். நாமும் சிரித்து விடுகின்றோம் அந்தச் சிறு பிள்ளையின் மழலையில். ஆனால் அதற்குப் பின்னால் மற்றுமொரு உண்மையும், தொழில் அக்கறையும் கூட ஒளிந்திருப்பது உண்மை. சுவிற்சர்லாந்தில் தரம் காணல் என்பதில் அத்துனை அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்ம.
நாட்டிற்கான நாளைய தலைமுறை உருவாக்கம் என்பதில் அவர்கள் காண்பிக்கும் அக்கறையும், ஆர்வமும், இளைய தலைமுறை குறித்த உயர்வான சிந்தனையும் அதற்குள் அடங்கியிருந்தன.

Saturday, August 08, 2009

ஒரு ஜேர்மனியத் திரைப்பட அனுபவம்

பாயும் வேங்கைப் புலியினை அடையாளமாகவும், மஞ்சள் நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப் பெயரையும் கொண்டமைந்த லோகார்ணோ உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் முதலிரு வாரங்களில் நடைபெறும் இந்தத் திரைத்திருவிழா 62ம் ஆண்டுக் கோலாகலம், இம்மாதம் 5ந் திகதி முதல், 15ந் திகதிவரை நடைபெறுகிறது.


இநத் விழாவின் (இது பற்றிய விரிவான கட்டுரையை இந்தச் சுட்டியில் காணலாம்) பல்வேறு சிறப்புக்களில் ஒன்று , திறந்தவெளிச் சினிமா. அந்தத் திறந்த வெளிச்சினிமாவில் இயக்குனர் Ludi Boeken நெறியாள்கையில் உருவான UNTER BAUERN - RETTER IN DER NACHT எனும் ஜேர்மனியத் திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இரண்டாம் உலக யுத்த காலத்தைக் கதையின் நிகழ்காலமாகவும், ஜேர்மனியை கதையின் நிகழ்களமாகவும் கொண்ட ஒரு திரைப்படம். படத்தின் மொழிமூலமும் ஜேர்மனே.


போர் எத்தகைய கொடியது என்பதைப் போர் நடந்த நாடுகளில், அந்தப்போருக்குள் வாழ்ந்தவர்களால்தான் மிகநன்றாக உணரமுடியும். இந்தப் போர்களின் வலி, தனிமனித மனங்களில் ஏற்படுத்தும் , வலி, துயரம், என்பது சொல்லி விவரிக்க முடியாதது. ஆனால் அந்த வலியைப் பார்வையாளர்களின் மனதில் சிறப்பாக பதிவு செய்ய லூடி போகெனால் முடிந்திருக்கிறது என்பதை படம் நிறைவுபெற்றதும், Locarno Piazza Grande பெருமுற்றத்தில் நிறைந்திருந்த பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் கரவொலி நிரூபனம் செய்தது.


UNTER BAUERN - RETTER IN DER NACHT என்ற ஜேர்மனிய மொழித் தலைப்பைத் தமிழில் 'பண்ணைக்காறர்கள் இருக்கிறார்கள் இரவுகளைக் காப்பாற்ற' எனப் பொருள் கொள்ள முடியும். பொருத்தமான தலைப்புத்தான். இரண்டாம் உலக மாகாயுத்ததின் போது நிகழ்ந்த உண்மைக்கதையினை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. ஒரு யுத்தகாலக் கதையென்றபோதும், ஒரு விமானக் குண்டுவீச்சு , ஒரு துப்பாக்கிச்சூடு, ஒரு இரத்தம் தெறிக்கும் காட்சி, என்பன மட்டுமே திரையில் வருகிறது. 100 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில், இவை சில நொடிகள் மட்டுமே.


யூதக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு தாய், மகள், தந்தை, என மூன்றுபேரை ஜேர்மன் குடும்பம் ஒன்று, ஹிட்லரின் நாசிப்படைகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் கதை. அந்தக் கதைக்குள் எத்தனை தனிமனித உணர்வுகள், உணர்ச்சிப் போராட்டங்கள், வலிகள் வந்து போகின்றன. எல்லாக் கணங்களிலும், மனிதநேயம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆக்ரோசமான வசனங்கள், அடிதடிகள், என எதுவுமில்லாமல், அமைதியாக, பண்ணைக்காறர்களின் வாழ்வியலோடு நகர்கிறது கதை. நாமும் அதனோடே வாழ்ந்து விடுகிறோம்.


என்னைப் பொறுத்தவரை படத்தின் எல்லாக் காட்சிகளும் தவிர்க்கமுடியாதவை. ஆனாலும் ஒரு சில காட்சிகள் அப்படியே கண்வழிபுகுந்து, புலனில் ஆழப் பதிந்து விடுகிறது. ஹிட்லரின் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பேரன், இறந்ததையும், போரின் நிலையையும், அறியும் பெரியவர், சுவரில் மாட்டியிருக்கும் ஹிட்லரின் படத்தைக் கழட்டிக் கீழே வைப்பது, தொலைபேசி மணி அடிக்கும் போதெல்லாம் பயந்வாறும், பிரார்த்தித்தவாறும், தொலைபேசியை எடுக்கும் தாய், ஜேர்மனியர்கள் தோற்றுப் போவதை அறியும் யுதப் பெண், அந்நாட்டு மக்களுக்கு அத்தகைய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென பச்சாதாபம் கொள்ளும் நிலை, என எல்லாவிடத்திலும் எழுந்து நிற்பது மனித நேயம். நாசிகளால் மூன்று இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வேளையில் எம்மால் மூன்ற பேரைக் காப்பாற்ற முடிந்ததே எனக் காப்பாற்றிய அந்த ஜேர்மன் குடும்பத்தின் மன நிறைவு கொள்கின்றது. ஆனால் அதே சமயம் அந்தப்போரில் தங்களது இரு ஆண் வாரிசுகளை இழந்து நிற்கிறது.


அதிகாரங்கள் எல்லாவிடத்திலும் பிறழ்நிலையாகவே இருக்கின்றன. ஆனால் அதிகாரங்களுக்ககுட்பட்ட மக்களேயாயினும், நேயமிக்க மனிதர்களாக இருக்கின்றனர் பலர் என்பது பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனதில் இன்னும் சில கதைகள் ஒடின. 83க் கலவரத்தின் போது, தமிழர்களைக் காப்பாற்றிய சிங்களக் குடும்பங்கள், 85களில், தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் அரசால் வேட்டையாடப்பட்டபோது, அவர்களை மறைத்து வைத்திருந்த தமிழ்க் குடும்பங்கள், என நான் கண்ட சாட்சியங்களின் கதைகள் அவை. போரின் வலியை மனித உறவுகளின் உணர்வினால் சொன்ன வகையில், சிங்கள இயக்குநர் பிரசன்னா விதானகேயின் நெறியாள்கையில் வந்த புரஹந்த களுவர சிங்களப்படம் ( இப்படம் பற்றிய ஷோபா சக்தியின் பதிவு) ஞாபகத்துக்கு வந்தது.


விழாவில் இக்காட்சியின் ஹைலைட்டான விடயம், படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக கலைஞர்கள் அறிமுகத்தின் போது, இந்த உண்மைக் கதையின் சாட்சியங்களாக இயக்குனர் இரு பெண்மணிகளை மேடைக்கு அழைத்தார். இக்கதையின் நிஜமான நாயகியான அந்த யூதப் பெண்ணுக்கு 97 வயது. அவரைக் காப்பாற்றிய குடும்பத்தலைவியான ஜேர்மனியப் பெண்ணுக்கு 82 வயது. அந்த இரு மூதாட்டிகளும் இத்திரைக்கதையின் மூலக்கதைக்குரிய நிஜப் பாத்திரங்கள். நிஜமான நாயகியான 97 வயதுடைய Marga Spiegelக்குப் பக்கத்தில் நின்ற, திரைப்படத்தில் அவரது பாத்திரத்தை ஏற்று நடித்த Veronica Ferres பேசுவதற்கு வார்த்தைகளின்றிக் கலங்கி நின்றார்.


இயக்குனர் Ludi Boeken இத் திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் போது , இது ஒரு வரலாற்றுப் படமல்ல. ஆனால் வரலாற்றில் வாழ்ந்த மாந்தர்களின் மன உணர்வு பேசும் படம் என்று. அது முற்றிலும் உண்மை . படம் பார்த்து முடிகையில் அதை உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன், யூதக் குடும்பத்தைக் காப்பாற்றிய ஜேர்மன் குடும்பத்தின் தலைவியான அநத் 82 வயதுப் பெண்மணிக்கு இப்படத்தை அர்ப்பணிக்கின்றேன் எனச் சொல்ல..அதிர்ந்து ஒலித்தது கரவொலி. வெற்றி பெற வேண்டியது அதிகாரங்கள் அல்ல மானுடம் என அழகாக அடுத்த தலைமுறைக்குச் சொலலிக் கொடுக்கின்றார்கள்...ம்ம்..

நன்றி: 4தமிழ்மீடியா

Wednesday, July 22, 2009

சிந்தாநதியை பிரபாகரனுக்குப் பிடிக்கும்.




" சிந்தா! உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்.."

" என்னங்க திடீரென இப்பிடிச் சொல்றீங்க.."
" உண்மை சிந்தா! உங்கள அவர் சந்தித்தால், நிச்சயம் அவருக்கு உங்களைப் பிடிக்கும்.."

பதிவர் சிந்தாநதிக்கும் எனக்குமிடையில் நடந்த உரையாடல் ஒன்றில் பரிமாறப்பட்ட வசனங்கள் இவை. இன்று, சிந்தாவும் இல்லை, பிரபாகரனும் இல்லை.
..........................................................................................

கடந்த வாரங்களில் இணையத் தொடர்பற்ற இடத்தில் நின்றதால் உடன் தெரியவில்லை. நேற்றிரவு மீளவும் இணையத் தொடர்பில் வந்த போதே இணையவழி கிடைத்த நண்பனை இழந்திருக்கின்றேன் என்பது தெரிந்தது. வலித்தது. வலித்துக் களைத்துப் போன மனதில் மறுபடியும் ஒரு மரணத்தின் வலி.
சிந்தாநதியின் சொந்தப் பெயர் என்ன?, அவரது வயதென்ன..? அவரது படம் உண்டா..? அவரைச் சந்தித்திருக்கின்றீர்களா..? என பதிவுலக நண்பர்களைக் கேட்டால், அவை அத்தனைக்கும் அநேகம் பேர் தரும் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அத்தனை பேருடனும் அருகிருந்தவர் போல் இணைய வழி இணைந்திருந்தார் . அதுதான் சிந்தாநதி.

சிந்தாநதி தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்த போதுதான் தொடர்பு கொண்டேன். ' இணையத்தில் இன்பத் தமிழ் ' வாராந்திர வானொலி நிகழ்ச்சி தொடங்கியபோது, வலைப்பதிவுகள் பற்றிச் செவ்விகாண்பதற்குப் பொருத்தமான நபராக, மதி கந்தசாமி எனக்குச் சுட்டி தந்தது சிந்தாநதியை. அந்த ஒலிப்பதிவுக்காகத் தான் முதலில் தொடர்பு கொண்டேன். அன்று தொடங்கி, கடந்த சில மாதங்களாக இணையத் தொடர்பில் அவர் இல்லாதிருக்கும் வரை அருகிருந்தோம்.

இணையத்தின் மூலம் நான் அதிகம் பேசிய நண்பர் அவர் மட்டும்தான். ஐ.டி துறையில் பட்டம் பெற்றவராக அவரை நானறியேன். ஆனால் அவருள் ஐ.டி தொழில் நுட்பம் அடங்கிக் கிடந்தது. தேடலில் கணினி கற்ற அவரிடம், தேங்கிக் கிடந்தது கணினித் தொழில் நுட்பம். அதைவிட மிகுதியாகவிருந்தது அவரது தன்னடக்கம்.

அவரைப் பற்றி காசி அவர்கள் நினைவு கூர்கையில், தேனி உமரும், தேன் கூடு சாகரனும் இணைந்த கலவை சிந்தாநதி எனக் குறிப்பிடுகின்றார். உண்மையும் அதுதான். நுட்பத் தகவல்களை வலைப்பதிவுலகில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதின் தொடக்கப் புள்ளி என்று கூடச் சொல்லலாம்.

கணினி, இணையம், என்பதற்கப்பாலும், பன்முகத் திறமை மிக்கவராக சிந்தாவைக் காண முடிந்தது. ஈழத்து அரசியல் யதார்த்தம் குறித்து சரிவரத் தெரிந்த பதிவுல நண்பர்களின் எண்ணிக்கையை அடக்கிவிட இரு கைவிரல்கள் அதிகமென்பேன். ஆனால் அந்த எண்ணிக்கைக்குள் தவிர்க்கப்பட முடியாதவராக சிந்தா இருந்தார்.

செய்தியாளனாக, கணனிச் சித்திரம் வரைபவராக (சாகரனுக்கு அஞ்சலி செலுத்த "சாகர சங்கமம்" ஒலிப்பதிவு செய்த போது, ஒரு நிமிடத்தில் முகப்புப் படம் செய்து தந்தார்) , இசை ரசிகராக, எனப் பலவிதமாய் பரிமளித்த அவர் , எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல நட்புப் பாராட்டுபவராக இருந்தார். அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் நான் கண்ட சிறப்பு சுயமரியாதை மிக்கவராக இருந்தார் என்பதே. அவருடன் பழகிய பலருக்கும் அவர் ஒரு ஊனமுற்றவர் என்பது நீண்ட காலத்தின் பின்பே தெரிய வந்திருக்கும். தன்மீது மற்றவர் கழிவிரக்கம் கொள்ளக் கூடாதென்னும் சுய மரியாதையின் நிமித்தமே அதனை அவர் வெளிப்படுத்துவதில்லை என்பதை அறிந்து கொண்ட தினத்திலேதான்
" சிந்தா! உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்.." என்றேன்.
ஏன் என்றார்.
சார்ள்ஸ் அன்டனியை தனக்குப் பிடிக்கும் என்பதற்குப் பிரபாகரன் சொல்லும் காரணம், தன் மீது யாரும் கழிவிரக்கம் கொள்வதைச் சார்ள்ஸ் விரும்புவதில்லை என்பதே என்கிறார். அதே குணமும், மனலிமையும், உங்களிடமும் இருக்கிறது. ஆகையால் பிரபாகரனை நீங்கள் சந்தித்தால் நிச்சயம் உங்களை அவருக்குப் பிடிக்கும் என்றேன்.
சிரித்தார்.
அழுகின்றேன். சொல்ல இன்னமும் உண்டு. ஆனாலும் சொல்ல முடியாது அழுகின்றேன். சென்ற ஆண்டில் அவரை நேரில் சந்திக்கும் தருணத்தைத் தவறவிட்டதை எண்ணி, பிள்ளைகள் மீது அவர் கொண்டிருந்த நேசம் கருதி, இரத்தலற்ற அவரது ஆளுமை நினைந்து, ஆறுதல் தரும் நட்பு நினைத்து அழுகின்றேன்.

சிந்தா! சென்று வா நண்பா!

Monday, May 18, 2009

Sunday, May 10, 2009

முரண் முகங்கள்




பேச்சுக்கள் யாவும்
மக்கள் வாழ்வுக்காயின்
பேச்சுக்களுக்கப்பால்..?

உதவுவது யாவும்
மறு வாழ்வுக்காயின்
அழிப்பது..?

வெளியே தெரிவது
அசோகமாயின்
உள்ளே ஏன் அகோரம்..?

Saturday, May 09, 2009

முருகதாசன்= ஜான்பால்க் (தொலைக்காட்சி விவரணம்)


1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.

நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு செய்கிறது ஒரு வெளிநாட்டு ஊடகம். அவன் மரணத்தின் பின்னால் உள்ள செய்தி என்ன ஆராய்ந்து சொல்கிறது பார்வையாளனுக்கு.

முருகதாசனது நினைவில் தொடங்கித் தொடர்கிறது சுவிஸ் அரச இத்தாலிய மொழித் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான ' Falo ' நிகழ்ச்சியில் கடந்த 07ந் திகதி இரவு ஒளிபரப்பான 'Era un giovane Tamil ' எனும் விவரணம். இந்த தியாக மரணத்தின் செய்தியறிந்து துயரமுறும் தமிழ் இளைஞி நிதிலாவின் மன உணர்வுகளின் வழி தொடர்ந்து தொகுக்கப்டும் விவரணத்தில், முருகதாசனின் மறைவுச்செய்தி, அவர்கள் பெற்றோர், நண்பர்களின் , உளக்குறிப்புக்கள், ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர்களைப் பறிகொடுத்த புலம்பெயர் உறவுகளின் சாட்சியங்கள், புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்கள், மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் எனப் பல குறிப்புக்களுடன் ஈழத்தமிழர் பிரச்சனை ஆராயப்படுகிறது.

ஒரு செய்தியாளனுக்கேகுரிய ஆய்வு, தகவல், உண்மை, என்னும் வகைகளில், நிறைவாகத் தொடர்கிறது விவரணம். செய்தியாளர் Dinorah Cervini யின் நேர்த்தியான தொகுப்பு, சுமார் ஒரு இலட்சத்துக்குமதிகமான இந்நிகழ்ச்சியின் பார்வையாளருக்கு, ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறது என்பதில் சந்தேகமில்லை.

விவரணத்தைக்காண

Tuesday, April 21, 2009

சுட்ட மண்


என் காலடி மண்ணை
கந்தகத் தீயில்
சுட்டவர் நீங்கள்
ஒட்டச் சொல்கின்றீர் ?

Friday, November 21, 2008

கைதுகளும் மௌனங்களும்


யாருக்குச் சொல்ல... ? சொல்லித்தான் என்ன...? என்கின்ற வலி காரணமாகவே வார்த்தைகள் செத்துவிடுகின்றன. ஆனாலும் இன்னமும் எங்கோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் துடிப்பு உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
பதிவர் லோஷன் கைதாகியது குறித்து எழுதுவதா விடுவதா என்பதிலேயே நாட்கள், வாரத்தைத் தொட்டுவிடப்போகிறது. மெளனமாயிருக்க விதிக்கப்பட்டோம் எனச்சொல்லலாமா? .... இல்லை. எதுவாயினும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

மலேசிய வலைப்பதிவர் ஒருவரின் கைது பற்றி அல்லது மற்றைய மொழிப் பதிவரின் கைது பற்றிப் பேச முடியுமெங்களுக்குச் சக பதிவரின் கைது பற்றி ஏன் பேசமுடிவதில்லை. தமிழக நண்பர்கள் கூடக் கேட்டிருந்தார்கள். இதை உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கமுடியுமென்பதில் சந்தேகமே. ஏனெனில் ஜனநாயகப் பளபளப்புப் பூசப்பட்ட பேரினவாதமது.

அங்கே கைதுகள், விசாரணைகள், தீர்புக்கள், எல்லாமே வித்தியாசமானவை. உள்நோக்கம் கொண்டவை. ஒருவர் கைதாகும் போதே அநேகமாத் தீர்ப்பும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதற்குப் பின்னான விசாரணையென்பது, அவர்கள் விருப்பத்துக்கு தக்கவாறு உருவாக்கப்படும். அரசியற் சட்டமும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் நம்மவர் சிலரும் சேர்ந்து உயர்த்தும் கைகளினால் உத்தரவாகும் அவசரகாலச் சட்டமும், அதற்குரிய சகல அதிகாரத்தையும், உரியவர்களுக்கு வழங்கிவிடுகிறது.

கைதுகள் பலவும் சாதரணமாய்தான் நிகழும். சற்றுத் தாமதமாகவே சோடனை அலங்காரங்கள் தொடங்கும். அந்த அலங்கரிப்புக்களுக்கு ஏடா கூடாமாக எதையும் எங்கள் எழுத்துக்களோ சொற்களோ எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே , இவ்வாறான தருணங்களில் எங்கள் மெளனங்கள்.

லோஷன் கைதும் சராசரியாகவே நடந்திருக்கிறது. அதனால் அவரைச் சார்ந்தவர்களும் சற்று அமைதியாகவே இருந்துவிட்டனர். ஆனால் அனுபவப்பட்ட ஊடகத்துறை உசாராகிக் கேட்கத் தொடங்க, கைதுக்கான காரணக்கதை வந்து விழுந்திருக்கிறது.

அல்ஹைடாத் தீவிரவாதிகளையறிந்து விவரணச்செய்தி தரும் அல்ஜசீரா ஊடகவியலாளன் அமெரிக்காவிலும் செய்தி சேகரிக்கலாம். மத்திய அரசும், மாநில அரசும், தேடிக்கொண்டிருந்த வீரப்பனை நக்கீரன் கோபல் தேடிச் சந்திக்கலாம். தேவையாயின் தூதனாகலாம். அது ஊடக சுதந்திரம்.
லோசனின் கைதில் இப்போது வந்து விழுந்திருக்கும் கதை, ஒரு ஊடகவியாலனுக்கு ஒட்டிப் பார்க்க முடியாதது. ஆனாலும் இலங்கையில் முடிகிறது காரணம்...? கைது செய்யப்பட்டிருப்பவன் ஒரு தமிழன். கைது செய்திருப்பது பேரினவாதம். இனி கதையைத் தொடரலாம், நிறுத்தலாம், நீட்டலாம்.... வெற்றி எப் எம்மில் வேறொரு தமிழன் முகாமையாளராகலாம்...அவனுக்கும் இது தொடரலாம்......

அவசரக்காலச்சட்டம் அதிக வருடங்கள் சிறிலங்காவில்தான் நீடித்திருந்ததென்னும் உலக சாதனைக்காக உங்கள் கைகளை உயர்த்தியதாக ஒரு பொய் சொல்லிட்டுப் போங்கள்......உங்களுக்கென்ன..?

Monday, September 29, 2008

tamilish, thamilbest, தமிழ்மணம்,மாற்று, ஒரு ஒப்பீடு


உதிரிகளாக எத்தனை வலைப்பதிவுகள் எழுதப்பட்டாலும், அவை பலரது கவனம்பெறுவது என்னவோ திரட்டிகளால்தான் என்பது மறுக்கப்பட முடியாதது. இந்தப்பணியில், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பதிவுகள், என்பன இதுவரை காலமும் கூடிய பங்கு வகித்து வந்தன.இவற்றில் தமிழ்மணம் மிக அதிகமான வலைப்பதிவுகளைத் திரட்டுவதென்பதும், அநேக பதிவர்கள், வாசகர்களைக் கொண்டதென்பதும் தெரிந்ததே. இதுவே தமிழ்மணத்திற்கு பலமாகவும், சில நேரங்களில் பலவீனமாகவும் இருந்திருக்கிறது. இதன் அடிப்படையிலே ஏனைய திரட்டிகளைத் தவிர்த்து தமிழ் மணத்தை இவ் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்கின்றேன்.




புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசதிகள் தமிழிலும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கிடைத்திருக்கும் மற்றுமொரு புதிய நுட்பத்தினடிப்படையில் தோன்றியிருப்பவைதான், தமிழிஷ், தமிழ்பெஸ்ட், ஆகியன. தற்போதைக்கு அதிக வாசகர்வட்டத்தை தம்பால் இவையிரண்டும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பது மிகையல்ல. ஆதலினால் அவையிரண்டும் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தமிழ்மணம் உட்பட பல திரட்டிகளில் இணைந்துள்ள சில பதிவர்கள், தாம் ஆங்காங்கே வாசித்த நல்ல இடுகைகளை த் தொகுக்கும் திரட்டியாக மாற்று திரட்டி இருக்கிறது. நான் அறிந்த வரையில், இவ்வகைத்திரட்டியாக இது மட்டுமே உள்ளதென்பதால் இவ் ஒப்பீட்டிற்கு மாற்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இனி இவற்றின் பயன்பாட்டில், வலைப்பதிவுகள், பதிவர்கள், பற்றிப் பார்ப்போம்.

தமிழிஷ், தமிழ்பெஸ்ட்டில், இணைத்தேன் நல்ல கிட்ஸ் என நண்பரொருவர் சொன்னார். இணைப்பது சுலபம், கட்டுப்பாடுகள் கிடையாது, நிறைந்த வாசகர் வருகை, என்பன இவற்றின் சிறப்பென்பது உண்மைதான். பதிவர்களே அநேகமாக வாசகர்களாகவும் இருக்கும் வலைப்பதிவுத் திரட்டிகளை விடவும், பதிவர் அல்லாத இணைய வாசகர் அனைவரையும் இவ்வகைத்திரட்டிகள் கவர்கின்றன என்பதும் உன்மைதான். அதனாலேயே அதிக வாசகர் வருகை இங்கே இணைக்கும் போது கிடைக்கின்றது. ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுகளும், தரமான எழுத்துக்களை, பதிவுகளைத் தர உதவுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், அதிக வாசகர் பரம்பலை விரும்பும் போது, அங்கே பரபரப்பான தலைப்புக்கள்,கவர்ச்சிகரமான விடயங்களே அதிகம் முன் வைக்கப்படும். அவற்றின் நடுவே ஒருசில நல்ல விடங்களும் வரலாம். ஆனால் மற்றவைகள் பெறும் முன்னிலையில் இவை பின்னடைந்து போகும். கவனிப்பிழந்து போகும். ஆக இவை ஒரு பரபரப்புத் தரும் திரட்டிகளாக இருக்குமெனக் கருதவே இடமுண்டு.

சில பதிவர்களினால் தெரிவு செய்யப்பட்ட பதிவுகளின் தொகுப்பாக இருக்கும் மாற்று திரட்டி, அதன் பெரைப்போலவே மேற்குறித்த திரட்டிகளுச் சிறப்பான மாற்றே. இது பதிவர் குழுவின் தெரிவுகள் எனும்போது ஒரு குழுநிலை இரசனைப் பதிவுகள் தொகுக்கப்படுகின்ற ஒரு சூழல் வரும். அப்படி வரும் போது அதன் தெரிவுகள் ஒரு வட்தத்துக்குள் அமுங்கிப்போய்விடும் நிலை வரக்கூடும். இது இத்தகைய திரட்டிகளின் பலவீனம். ஆயினும் மாற்று இந்த நிலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் இதுவரையில் பயனிப்பது ஆறுதலானது. அது அத்திரட்டி உறுப்பினர்கள் கொண்டிருக்கும் கட்ப்பாட்டுப் பொறுப்புணர்வை உணர்த்துகிறது.

இவையெல்லாவற்றுக்கும் பொதுவழங்கிபோல, இன்றுவரை தமிழ்மணமே இருந்து வருகின்றது. அநேகம் வலைப்பதிவுகள் தமிழ்மணத்தாலேயே மற்றவர்களுக்கும், மற்றைய திரட்டிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தனக்குப்பின் தோன்றிய திரட்டிகளின் சேவையை தன்னுள்ளும் காட்சிப்படுத்திக்கொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும், தமிழ்மணம் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இதன் வளர்சிப்போக்கும், கடைப்பிடிக்கும் சில வரையறைகளும், அவ்வப்போது வலைப்பதிவுலகில் காரசாரமான விமர்சனங்கள் விவாதங்களுக்கு உள்ளாகினாலும், ஒரு சராசரி வாசகனை, ஒரு எழுத்தானாக உருவாக்குவதற்கு , தமிழ்மணமும், அதையொத்த வலைத்திரட்டிகளாலுமே முடியும். அந்தவகையில் தன்னுள் திரட்டப்படும் வலைப்பதிவின் உள்ளடக்கங்களை தமிழ்மணத்தால் ஒழுங்கமைப்பது என்பது வலைப்பதிவரின் உரிமையைப் பறிக்கும் செயலெனக் கொள்ளப்பட்டாலும், அப்பதிவு தமிழ்மணத்தில் பெறும் முக்கியத்துவத்தை ஒழுங்கமைக்க முடியும். அந்த வகையில் தமிழ்மணத்தில் மாற்றங்களைக் காலத்திற்குக் காலம் காண்பதும் வளர்வதும் வலைப்பதிவுலகத்திற்கு நல்லதே.

இந்த வகையில் தமிழ்மணத்தின் அவ்வப்போது பலராலும் தேவையற்றது அல்லது மாற்று வடிவம் காணப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது, சூடான இடுகைகள் பகுதி. அன்மையில் இதன் பயன் குறித்து செந்தழல் ரவியும் எழுதியிருந்தார். இந்தப்பகுதியை மாற்றம் செய்வதால் தமிழ்மணம் அதிக வாசகர் பரம்பலை இழந்துவிடுமென்றோ, பதிவர்களை இழந்து விடுமென்றோ எண்ணத் தேவையில்லை. மாறாக புதிதாக வரும் வரும்வலைப்பதிவுகளுக் சிறப்பான வழிகாட்டலாகவும், நல்ல எழுத்தாளர்களை உருவாக்கும் பட்டறையாகவும் அமைய முடியும்.

Thursday, September 11, 2008

எங்கள் மண்ணின் இன்னுமொரு இசைக்கலைஞன் மறைந்தான்

எங்கள் மண்ணின் இன்னுமொரு இசைக்கலைஞன் இயற்கை எய்தினான். இரட்டையர்களாகப் பெருமை சேர்க்கும் கலைஞர்கள் நீண்டகாலம் இணைந்திருப்பதில்லை என்பது கலையுலகில் எழுதாவிதி. அதை நீண்டகாலம் பொய்திருக்கச் செய்த ஈழத்து இசைச்சகோதரர்கள், வி.கே. கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.

அவர்களில் மூத்தவரான வி.கே. கானமூர்த்தியே தற்போது காலமாகி நிற்கும் கலைஞர். இவர் காலமாகிவிட்டார் என முன்பொரு தடவையும் வதந்தியொன்று பரவியிருந்தது. இந்த இசைச் சகோதரர்கள் குறித்து எனது நட்சத்திரவாரத்தில் எழுதிய விரிவான இடுகையினை இங்கே காணலாம்.


மறைந்த கலைஞனுக்கு மரியாதை அஞ்சலிகள்!. இணை பிரிந்த உறவுகளுக்கு கரம்பற்றித் துயர் பகிர்வுகள்.

படம்: ரமணீதரன்

Friday, July 11, 2008

சஞ்சிகை வெளியீடும், அறிவியல் கருத்தரங்கும்

பத்திரிகை வெளியீடு, சஞ்சிகை வெளியீடு, புத்தக வெளியீடு, என்பன புலம் பெயர்ந்த மண்ணிலும் நிறையவே நடந்திருக்கிறது. செய்தவற்றையே மீளவும் செய்வதை, " சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்க" எனும் ஒரு சொல்லாடல் மூலம் விமர்சிப்பது ஈழத்தில், அதிலும் யாழ்ப்பாணத்தில் வழக்கம். இங்க நடந்த, நடக்கும், பல வெளியீடுகளையும் அதே சொல்லாடக்குள் வைத்துவிடலாம். அத்திபூத்தாற்போல் எப்போதாவது இந்த எல்லை மீறப்படுவதும்முண்டு. அப்படியானதொரு மகிழ்ச்சியான மீறல்தான் "கணினிக்களம்" தொழில் நுட்பச் சஞ்சிகை.

"கணினிக்களம்" சென்ற ஏப்ரல் மாதத்தில் தனது முதலாவது இதழை வெளியிட்டிருந்தது. புதிய தொழில்நுட்பம் விரிந்து கொண்டு செல்லும் இக்காலத்தில், தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு இது சற்று எட்டாக் கனியே. ஆனால் இந்த எட்டாக்கனியைத், தட்டிக் கனிய வைத்திருக்கிறார்கள் " கணினிக்களம்" தொழில் நுட்பச் சஞ்சிகை வெளியீட்டார்கள். புதிய தொழில்நுட்ப வெளியீடுகளை, படங்களுடன் விபரமாகவும். இலகுவாகவும்அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அந்தச் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் தற்போது வெளியிடலுக்குத் தயாராகிவிட்டது. அந்த வெளியீட்டை ஒரு விழாவாக முன்னெடுத்திருக்கிறார்கள். 19.07.08 சனிக்கிழமை, சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் நடைபெறவுள்ளது .அந்த விழாவில், ஒரு அறிவியற் கருத்தரங்கையும், ஒழுங்கு செய்துள்ளார்கள். இந்த முயற்சிகள் எம் சமூகத்திற்கு மிக அவசியமான முன்னெடுப்புக்களாகும். இவைகுறித்த மேலும் விபரங்களை இங்கே காணலாம்.

Wednesday, June 25, 2008

அப்பா எனும் ஆன்மபலம்.

அப்பா!மனிதர்களை நேசிக்க, மாற்றங்களைக் காண, எனக்குக் கற்றுக்கொடுத்தவர். இளைஞர்கள் மீதான நம்பிக்கையையும், நட்பின் சுகத்தையும், மதிக்கத் தெரிந்த மனிதர். இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு முயலாத இயல்பினர். மற்றவர்களுக்குச் சராசரியான ஆன்மீகவாதி. எனக்கு ஆன்மீக வழி நின்று பொதுவுடமை கண்ட மனிதநேயர். புரட்சிபற்றியும், மாற்றங்கள் பற்றியும், யோசிக்கத்தெரிந்த தருணங்களில், சொற்பமாய் தெரிந்த அவர் செயல்கள், நாம் முயன்று முடியாது போனபோது மாபெரும் செயல்களாய் மனதில் பதிந்தன. நானறிந்து கொண்ட முதலாவது சமூகப் போராளி என் அப்பாதான்.

என் செயல்கள் குறித்த சந்தேகங்கள் எப்போதும் அவருக்கிருந்ததில்லை. சந்தேகங்கள் தோன்றுமளவுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமில்லை. இத்தனைக்கும் என் பல செயற்பாடுகள் அவருக்கு மிக இக்கட்டான நிலைகளைத் தோற்றுவித்திருந்தன. ஆனாலும் அவற்றின் பின்னிருந்த நியாயங்களை அவர் உணர்ந்திருந்தார். அவரது அமைதியான அந்த அங்கீகரிப்பே என் செயல்களைப் புடம்போட்டவண்ணமிருந்தன என்றால் மிகையில்லை. அது மட்டுமல்லாது, என் சமுகம் சார்ந்த பணிகளுக்கான அடித்தளமும் அதுவாகத்தானிருந்தது.அப்பாவும் நானும் அருகிருந்த காலம் என்னவோ சற்றுக்குறைவானதுதான். ஆனாலும் என்செயல்களில், நினைவுகளில் அருகிருந்ததனால் அது தெரிந்ததில்லை. எதையும் மாற்றாக எண்ணவோ, செய்யவோ, முயலும் போதெல்லாம், அந்த ஆன்மார்த்தம் பெரும் பலமாக நின்றென்னை நெறிப்படுத்தியிருக்கிறது. அதை இப்போது நன்குணர முடிகிறதென்னால்.தினமும் சிவனை நினைத்த அவர், என்றும் அவர் விரும்பிய வண்ணமே, ஈழமண்ணின் வன்னிநிலத்தில், சிவபுரத்தில் சிவனைக் கதியடைந்து நாட்கள் ஐந்தாகின்றன. நாட்டின் சூழலால், இறுதிக்கணங்களில் அருகிருக்க முடியாது போன துயருற்றிருப்பினும், ஊர்கூடிக் குளக்கரையில், உளங்களை நேசித்தவனை, வழியனுப்பிவைத்த செய்தி சற்று ஆறுதலாகவிருக்கிறது. அப்பா!ஆன்மாவின் பலமாய் என்னுள் கலந்திருங்கள்.

Saturday, June 07, 2008

அகதியாய் வந்த வீரன்




Euro 2008 உதைபந்தாட்டப் போட்டிகள், சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் அமைந்துள்ள St.Jackop மைதானத்தில் இன்று ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு, மிகவும் குதுகலமாக ஆரம்பமாகியது. உலகக் கோப்பை போட்டிகளைப்போலவே மிகவும் எதிர்பார்ப்புக்களும், ஆர்வங்களும் மிகுந்ததாக அமையும் இந்த ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இன்றைய ஆரம்பப் போட்டிகளில், சென்ற உலகக்கோப்பைப் போட்டிகளின் தகமையடிப்படையில், உலகத்தரத்தில் 6வது இடத்தில் இருக்கக் கூடிய செக் குடியரசு அணியுடன் சுவிற்சர்லாந்து அணி மோதியது. மிக இறுக்கமாகவும் விறுவிறுவிறுப்பாகவும் இருந்த விளையாட்டில் இடைவேளைக்கு முன்னதாக சுவிஸ் அணியின் தலைமைவீரர் அலெக்ஸ் ப்ரெய் காலில் பட்ட அடி காரணமாக, போட்டியில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. போட்டி ஆரம்பமாகி முதல் ஆட்டத்தின் அரையிறுதிக்குள்ளாகவே இதன் காரணமாக கண்ணீர் சிந்தியவாறே மைதானத்தைவிட்டு வெளியேறினார். போட்டியின் இரண்டாம் பகுதியில் செக். அணி ஒரு கோல் அடித்தது. சுவிஸ் அணி சிறப்பாக விளையாடியபோதும், இரு முறை கோல் விழும் சந்தர்பங்கள் தவறிப்போனது. போட்டியின் முடிவில் 1 கோலால் செக் குடியரசு அணி வெற்றிபெற்றது.

இனி அகதியாய் வந்த, அந்த வீரன் பற்றி.

91ல் முதல் முதலாக சுவிற்சர்லாந்தில் வேலைக்குச் சென்ற தொழிற்சாலையில் என்னுடன் வேலைக்கு அவனும் வந்திருந்தான். இருவருக்கும் எந்தவிதமான உறவோ, கலாச்சாரத் தொடர்புகளோ, நிற ஒற்றுமையோ இல்லை. ஆயினும் இருவருக்குமிடையில் ஒரு நெருக்கம் இருந்தது. காரணம் அவனும் என்னைப் போன்றே சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அகதி. அந்தக் காலப்பகுதியில் சுவிற்சர்லாந்திலிருந்து பெரும்பாலான அகதிகளின், அரசியல் தஞ்சம் கோரல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப் பட்டுக்கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த மண்ணிலும், நிச்சயமற்ற ஒரு வாழ்வு . இது குறித்த கவலையும் பகிர்தலுமே பெரும்பாலும் அவனும் நானும் சந்திக்கும் வேளைகளில் நிறைந்திருக்கும்.
சிலவருடங்களின் பின் மற்றொரு தொழிலிடத்தில் வேறு பணியிலிருந்தபோது, அவனது மனைவி அங்கே பணிக்கு வந்திருந்தாள். அவளிடமும் அதே துயரமும், பயமும், எப்போதுமிருந்தது. அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் . அவர்களது எதிர்காலம் குறித்த அச்சம், எல்லாப் பெற்றோர்கள் போலவும் பெரிதாகவிருந்தது. அந்தக்காலப்பகுதியில், அவர்களது நாடான கோசோவோ நாட்டில் பிரச்சனைகள் சற்று அமைதியுற, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளைத் திருப்பியனுப்பத் தொடங்கியது சுவிஸ். இவர்களும் திரும்பிச் செல்ல வேண்டும் எனும் நிலை தோன்றிற்று. கலங்கியவண்ணம் நின்ற பெற்றோர்களின் கையைப் பிடித்த வண்ணம் ஏதுமறியாது சிரித்த வண்ணம் நின்றான் அவர்களது மகன். அவன்தான் சுவிற்சர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவனான Valon Behrami. சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவன்.பாடசாலைக் காலத்திலேயே பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியவன். வலோனின் சகோதரியும் நல்லதொரு தடக்கள வீராங்கனை.

அந்தப் பணியிலிருந்து விலகிய சில காலங்களின் பின், ஒரு சந்தர்ப்பத்தில் வலோனின் பெற்றோரைச் சந்தித்த போது, தங்களது அரசியல் தஞ்ச மனு,
மேன்முறையீட்டின்போது, பிள்ளைகளின் கல்வி சார்ந்த மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். பிள்ளைகள் பற்றி விசாரித்த போது, வலோன் இத்தாலியில் ஒரு கழகத்துக்காக விளையாடுவதாவும், மகள் தொடர்ந்து படிப்பதாவும் சொன்னார்கள். பிள்ளைகளின் உயர்வின் மகிழ்வ அந்தப் பெற்றோர் முகத்தில் தெரிந்தது.

சென்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் போது சுவிஸ் அணிக்காக வலோன் விளையாடத் தொடங்கியபோது, அவனது புகழும், நிலையும் முற்றாக மாறியது. அவனது குடும்பத்தின் நிலையும் வாழ்வும் அப்படியே. தங்களுக்கு மறுவாழ்வளித்த இந்த நாட்டுக்கு, தன் மகனின் விளையாட்டு மூலம் நன்றி செலுத்த முடிந்ததையிட்டு பெருமையடைகின்றோம் என அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நா தழதழக்கக் கூறினார். இன்று அந்தக் குடும்பத்தின் வாழ்வு மலர்ச்சிபெற்றுள்ளது. அதற்குக் காரணம், வலோனின் விளையாட்டுத் திறமை மட்டுமல்ல, அதுவும் ஒரு தகுதியான அடிப்படைதான் என்றவகையிலும், தங்கள் விருப்தினடிப்படையில் அல்லாது, பிள்ளையின் ஆர்வம் அறிந்து அதன்வழியில், அவனை ஊக்குவித்து வளர்த்த பெற்றோரது நம்பிக்கையும்தான். அது இருக்கும்வரை வளர்வது வலோன் மட்டுமல்ல.....