Tuesday, November 27, 2007

பொற்காலம் எமதாக்கப் போனவரைப் போற்றுவோம்.

மாவீரர்களுக்கு அஞ்சலிகள்.


எங்கள் வாழ்வுக்காய், தங்கள் இன்னுயிர் ஈந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் சொந்தப் புதல்வர்களை, பொற்காலம் எமதாக்கப் போனவர்களை, போற்றித் தொழுவோம்!

நிலத்துள் ஒளிரும் நிலவுகளுக்கு, விளக்கேற்றி அஞ்சலிப்போம்!
இணையத்தில் சுடரேற்ற

தமிழீழத்திலிருந்து மாவீரர் நாள் நிகழ்வுகளை புலிகளின் குரல் வானொலியூடாக நேரலையில் கேட்க

Wednesday, November 21, 2007

எனக்கு மூன்று காதலிகள்.


இளமை எனக்கு மிகவும் பிடித்தமானது. அது புதிதானது. சிந்தனை, செயல், என எல்லாவற்றிலும், ஒரு புதுவேகம் இருக்கக் கூடிய பருவம். தன்னைச் சார்ந்திருப்போரையும் கூட சற்றுத் தொற்றிக் கொள்ளும் சுறுசுறு பருவம். அதனால் எனக்கு இளமை பிடிக்கும். கருப்பு வெள்ளைச் சினிமாக்காலத்தவன் இல்லையென்றாலும், இளையவன் எனச்சொல்லும் வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், பெருசாகிப்போனவன். இளமையாய் எண்ணங்களை வைத்துக்கொள்ள விரும்பும் எனக்கு எப்போதும் இளைய நண்பர்கள் மீது சற்று விருப்பம் அதிகம். அப்படியான இளையவர்கள் மூவருடன் ஒரு மாலைப்பொழுது...



புலம்பெயர் தேசத்தில் நான் பழகிய நம் இளைஞர் பலரிடத்திலும் காணப்பட்ட ஒரு கவலை, பெரியவர்கள் எப்போதும் தகமைபெற்று தலைநிமிரும் இளையவர்கள் பற்றிக் கருத்திற் கொள்ளாது, தவறிப்போகும் இளையவர்களையே முன்னுதாரணம் காட்டிப் பேசுகின்றார்களென்று. இதில் உண்மையில்லாமலும் இல்லை. இப்படியான சிந்தனைப்போக்கினால், சாதிக்க முனையும் எம்மிளைஞர்கள் பலரும் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் நிறையவே. இவர்களுக்கும் அவைகளுண்டு....

" எனக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. ஆனாலும் நான் ஒரு தமிழன்தான். எம்மவர்களிடையே எனது "ரேப் " பாடல்களை பாடுவது, இலக்கியத்தரமற்றது எனும் நகைப்புப்குரியதாகிவிடும். அதனால்தான் பிறமொழிக்காறர்கள் மத்தியில் பாடுகின்றேன். " ரேப் " இசை வெறும் இசையல்ல. அது ஒருவாழ்வு. ரேப்பராக அனுபவித்து வாழாத ஒருவனால் சிறப்பான ரேப்பிசையைப் பிரசவிக்க முடியாது. என் உணர்வுகளை, அனுபவித்து இசையாகத் தருவதற்கு "ரேப்" இசைவாக இருக்கிறது. அதை நான் அனுபவித்து, சிறப்பாக இசைப்பதற்கு ஒரு ரேப்பராக வாழவிரும்புகின்றேன். இந்த விருப்பம் என் தோற்றத்தில் தரும் மாற்றங்கள், நம்மவர்கள் மத்தியில் என்னை பிழையாக அடையாளப்படுத்தலாம். அதனாலென்ன? நான் நானாகவாகவே இருக்கிறேன். ஒரு தமிழனால் ரேப்பிசையிலும் சிறந்திருக்க முடியும் என்பதை மாற்று இனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனும் வேட்கையோடே பாடுகின்றேன்..."

" சின்ன வயது முதலே நடனமும், காட்சிப்படுத்தலும், நானாகக் கற்றுக் கொண்டது. அந்நியச் சூழலில் நிறம், பொருளாதாரமுட்பட்ட பலவும் எம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. இவற்றோடு போட்டியிடுகின்ற எமக்குப் பெரியவர்களிடமிருந்து உதவிகள் வேண்டாம், உற்சாகமான சில வார்த்தைகள் வந்தாலே போதும். எங்களுக்குத் தெரியும், உயரங்களைத் தொடுவதற்கு வேண்டிய உழைப்பு என்னவென்று. எங்களுக்கான சுயகட்டுப்பாடுகளுடனேயே நாம் இருக்கிறோம்..."

" எல்லோரும் இசையை ரசிப்பதற்குத்தான் காதைப்பாவிப்பார்கள். ஆனால் எனது இசையைப் பிரசவிப்பது என்காதுகள்தான் என்பேன். எந்நேரமும் என்னைச் சுற்றிக் கேட்கும் சப்தங்களின் மீதான என் அவதானிப்பும், அது என்னுள் ஏற்படுத்தும் அனுபவமும், எந்தவொரு வாத்தியமும் இசைக்கத்தெரியாத என்னிடமிருந்தும் இசையைப்பிரசவிக்கிறது. இந்த அவதானிப்புக்கும், அனுபவத்திற்கும் நிறையத் தனிமை எனக்குத் தேவைப்படுகிறது. அது என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்கும் எனக்குமிடையில் ஒரு முரணைத் தோற்றுவிக்கிறதென்றும் சொல்லலாம். இவற்றையெல்லாம் மீறி, எனது ஆர்வம் என்னை வெளிப்படுத்தும்...."


ரேப்பிசை, நடனம் ஒளிப்பதிவு, இசையமைப்பு, எனும் துறைகளில், தங்கள் தடங்களை தமிழனாகவே பதிக்கும் இந்த இளம்கலைஞர்களின் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் வானமே எல்லை. புலம்பெயர் சூழலின் நெருக்குதல்களோடு போட்டியிட்டு முன்னேறும் இவர்களும், இவர்களைப் போன்றவர்களும், எங்கள் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகளைச் செதுக்காவிடினும், சிதைக்காதிருப்போமா?

பி்.கு: இசை, வேலை, காதலி, ஆக எனக்கு மூன்று காதலிகள் என்னும் இந்த இசைஞனின் வாழ்வில், முதலாம் விருப்பம் விரைவில் மூன்றாமிடத்துக்குப் போகவிருக்கிறதாம். வாழ்த்துச் சொல்வோமா? வேண்டாமா? தன்னுள் எழுந்த இசையைப் புணர்ந்து, கணனிகளில் கருக்கட்டிக் அவன் காதுகளால் பிரசவித்திருக்கும் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்டுச் சொல்லுங்கள்.

Friday, November 02, 2007

தமிழ்செல்வன் மறைவு குறித்து - சுவிஸ் வானொலி


தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் துறைச் செயலர் பிரிகேடியர்: சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து, சர்வதேச ஊடகங்களில் செய்திகளும், நோக்குகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. சுவிஸ் இத்தாலிய மொழிக்கான அரசுசார் வானொலி Rete Uno இன்று மதியம் வழங்கிய செய்தியில் அன்னாரது மறைவு குறித்து, முக்கியத்துவம் வழங்கி வெளியிட்ட செய்தித் தொகுப்பில்:
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் ஏனைய ஐந்து போராளிகளுடன் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, உலகெங்கும் வாழும் தமது மக்களுக்கு அறியத் தந்துள்ளது. இதனை சிறிலங்கா அரசும் உறுதிசெய்துள்ளது.
தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் கோரிக்ககைகளை மிக நிதானமாக வெளிப்படுத்தியவர் தமிழ்ச்செல்வன். கடந்த வருடம் தோல்வியில் முடிந்த ஜெனிவாப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
சராசரி மக்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர், அதன்மூலம் அவர்களது குறைகளை, தேவைகளை, பேச்சரங்குகளில் கொணர்ந்தவரென, தமிழ்மக்களினால் பாராட்டப்பட்டவர் எனச் சொல்லப்படும், இவரது மறைவு குறித்து பாதுகாப்புத் துறைசார்ந்து சிறிலங்காஜனாதிபதியின் சகோதரர் கருத்துக் கூறுகையில், " இவ்விதம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருத்தராக நிச்சயம் அழிக்கப்படுவார்கள் " எனத்தெரிவித்துள்ளார்.
சமாதான காலத்தில் சுமார் 5000 பேரளவில் கொல்லப்பட்டிருக்கும் சிறிலங்காவில் , இதன்பின்னான சமாதான நடவடிக்கைகள் கேள்விக்குரியதாகவும், நம்பிக்கையற்தாகவும் காணப்படுகிறது.
வானொலிச் செய்தியின் மூலவடிவம்:


Rete uno News




அரசியற்துறைச் செயலர் பிரிடிகேயர்: சு.ப.தமிழச் செல்வன் அவர்களுக்கும், ஏனைய போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள்.