சென்றவாரத்தில் தொழில் நிமித்தம், வேறிடத்தில் நின்றேனெனச் சொன்னேன் அல்லவா? அப்படி நிற்கும் போது. இந்த இளைஞர்களைச் சந்திக்கக் கூடியதாகவிருந்தது. இந்தியாவிலிருந்து, ஒரு வருட ஹோட்டல் முகாமைத்துவப் பயிற்சிநெறிக் கற்கைக்காக வந்திருக்கும், இந்திய மாணவர்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக திருச்சி, சென்னை, ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முதலாறுமாதப் பயிற்சி சுவிற்சர்லாந்தில் உள்ள பெருநகரில், வளாகத்தில் நடைபெறுகிறது. அதன் விடுதியில் தங்கியிருக்கும் அவர்களை ஒரு ஞாயிறுமாலையில், இவர்களைப் பற்றி எனக்கு அறிமுகம் செய்த நண்பரொருவருடன் சென்று சந்திந்தேன். தமிழர்களைச் சந்திப்பதிலும், தமிழ்கதைப்பதிலும், ஆர்வமாக உள்ள அந்த இளைஞர்களின் உணர்வுகளும் எண்ணங்களும், புலம்பெயர்வாழ்வின் ஆரம்பகாலத்தில் எனக்கும், ஏன் எல்லோருக்கும், இருந்ததைப் போன்றதே இருந்தது.

சதீஸ், ராஜேஸ், ஆன்டோ, சஞ்சய், வெங்கட் (மற்றவர்கள் பெயர் மறந்துவிட்டது) என இந்த ஏழு இளைஞர்களும், எங்களை அன்பாகவும் ஆவலுடனும் வரவேற்றுக் கொண்டார்கள். ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் சகஜமாகப் பேசினார்கள். இனி அவர்கள் பேச்சுக்களிலிருந்து....

தாயகத்தையும், உறவுகளையும், பிரிந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் முதற் கவலை இங்கு வருவதற்குச் செலவழித்த பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பது. அடுத்த பெரும் சிக்கலாக இருப்பது மொழிப்பிரச்சனை. அவர்கள் தற்போது இருக்குமிடத்தில் ஜேர்மன் மொழி பேசப்படுகிறது. இங்குள் சராசரி மக்கள், ஏனைய ஐரோப்பியர்களைப் போன்றே, தாய்மொழி தவிர்ந்த ஏளனய மொழிகளில் பேசுவதில் ஆர்வமில்லாதவர்கள். அதனால் ஆங்கிலம் பேசத் தெரிந்த இவர்களுக்கு சகஜமாக இங்குள்ள மக்களுடன் பழக முடிவதில்லை. ஜேர்மன் மொழி கற்பது பேசுவது என்பதும் அவ்வளவு சுலபமில்லை.
இவர்களின் அடுத்த பெரும் பிரச்சனை உனவு. தமிழ்நாட்டு உணவுவகைகள் எதுவும் இவர்களது விடுதியில் பெற்றுக் கொள்ள முடியாது. சாதத்தைக் கறிபோல் குறைந்தளவில் பரிமாறப்படும் ஐரோப்பிய உணவுமேசைகளின் முன் உட்காரும் நம்மவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே அதுதானே. அதிலும், மாமிச வகைகளுடனான உணவுவகைகளும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருக்கிறது. இது விடயத்தில் தற்போதைக்கு அவர்களுக்கு ஆறுதல் தருவது, சற்றுப் பக்கத்தில் ஈழத்தமிழர்கள் நடாத்தும், இந்துக்கோவிலில் வெள்ளிகிழமை மாலைகளில் வழங்கப்படும் அன்னதானம்தான். இந்த இன்னல்கள் எல்லாம் ஏற்கனவே அநுபவித்தவர்கள் என்பதாலும், இவர்கள் தமிழர்கள் என்பதாலும், இங்குள்ள ஈழத்தமிழர்கள், இவர்கள் மேல் மிகவும் பரிவு காட்டுகின்றார்கள்.
இவைகளையடுத்து இவர்களுக்குச் சிக்கலாகவிருப்பது, மேலைத்தேய கலாச்சாரப் பழக்கவழக்கங்கள். இவர்கள் விடுதியின் கீழ்தளத்தில் உள்ள மண்டபத்தில், வெள்ளி சனிக்கிழமை இரவுகளில் நடைபெறும் டிஸ்கோ நடனக்களியாட்டங்களை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு வரும் அப்பாவிகளாகச் சிரித்தார்கள்.
அதற்கடுத்த பெரும் சிக்கல், இங்குள்ள நேரக்கட்டுப்பாடு. “ காலைல ஏழுமணிக்குப் பின்னாடி தாமதிச்சா காலை சாப்பாடே கொடுக்கிறாங்க இல்லை. நேரத்தில இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாங்களே” என ஆச்சரியப்பட்டார்கள்.
“அதெல்லாம் சரி வந்த நோக்கம் எப்டிப்பா என்னு கேட்டா?”
“ரொம்பக் கஸ்டம்ங்க. வாரத்துக்கு மூணு எக்ஸாம் வைக்கிறாங்க. நம்ம ஊரில் வருஷத்துக்கு மூணு எக்ஸாம்தானுங்க....இப்பிடி பென்டெடுக்கிறாங்களே..”
பேசிமுடித்துத் திரும்பி வரும்போது,? ஹாலில் வெள்ளைப்பெண் ஒருத்தி படித்தபடி இருந்தாள். பார்த்ததும் நான் சொன்னேன் “பாருங்கப்பா எவ்வளவு அக்கறையாப் படிக்கிறாள். நீங்க பாட்டெல்லோ கேட்டுக்கிட்டுருங்கீங்க....”
“ அவங்க அப்பிடி மாஞ்சு மாஞ்சு படிப்பாளுக. ஆனா மாக்ஸ என்னவோ மூணத் தாண்டாது. நாங்க சிம்பிளாத்தான் படிப்போம், சிக்கெண்ணு அஞ்சு எடுத்திருவோமில்ல..” என்றார்கள் அட்டகாசமாக.
அதுதானே பார்த்தேன். தமிழ்ப்பசங்களாச்சே. எப்பிடி....?
அவர்களுடன் கல்வி கற்கும், ஏனைய இந்திய மாணவர்களாகிய ஆந்திர, மலையாள, வட மாநில மாணவர்கள் எல்லோரும் அந்நியமண்ணிலும் அந்நியமாய் நிற்பதை, நேசமுடன் எங்களிடம் நெருங்கி நின்று சொன்னார்கள் சோகமுடன்.... ஏனெனில் எங்களை இணைத்திருப்பது இன்பத்தமிழல்லவா?