Wednesday, October 18, 2006
தசையாடிய தமிழகக் கலைஞர்களுக்கு!
ஆணிவேர் எங்கள் போரியல் வாழ்வை பொய்யுரைக்காது சொல்லியிருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்வேன். இன்னுமொன்று சொல்வேன், தமிழக நண்பர்களே! குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழக நண்பர்களே! உங்கள் நாடுகளில் ஆணிவேர் திரையிடப்படும் போது, எந்தவித விருப்புவெறுப்புகளுமின்றி, ஒருதடவை சென்று பாருங்கள். தயவு செய்து சென்று பாருங்கள்.
இதைச் சொல்ல மட்டுமல்ல இப்பதிவு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்று சொல்வார்களே, தமிழீழத்திற்கும், இந்தியாவுக்குமான, தொப்புள்கொடி உறவின் வழிவந்த கலைஞர்கள் நந்தா, மதுமிதா, நீலிமா, ஜான், ஆணிவேரில் எங்கள் உறவுகளாக வாழ்ந்திருக்கிறார்கள். நன்றி என்று சொல்ல நா எழவில்லை. அந்த உறவுகளை உரிமையோடு வாழ்த்திட, உணர்வோடு கரங்குலுக்கவே இப்பதிவு.
நடிப்பும், இயக்கமும், என்பது இக்கலைஞர்களுக்குத் தொழில். தொழிலாகவே எண்ணி இத்திரைப்படத்தில் இணைந்திருந்தாலும், படத்தின் முழுமையும் முடிந்தபின், திரையில் பாரத்திருப்பார்களாயின், அவர்கள் கூட அழுதேயிருப்பார்கள் என்பது நிச்சயம் .
நந்தா, மதுமிதா, நீலிமா, ஜான், மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களே! உங்களின் உளமார்ந்த அர்ப்பணிப்புக்கு, எம் நெஞ்சார்ந்த நேசங்கள்.
Tuesday, October 17, 2006
புதுத்தமிழ் - புலத்தமிழ்
சின்னக் குட்டியர்!உங்களுக்கும் பூக்குதா??? அடுத்த வருடம் கலப்புக் குறைந்து தனி நிறமாகச் சாத்தியமுண்டு.அந்தி மந்தாரையாமே!!! நாலுமணிப்பூ பெயரை மறக்கலாம்.நான் லண்டனில் நிற்கிறேன்.யோகன் பாரிஸ்
சின்னக்குட்டி said...
வணக்கம் யோகன்..... லண்டனிலா நிற்கின்றீர்கள்....... . உங்களுக்கொரு பின்னூட்டம் உங்கள் பதிவில் போட்டிருக்கிறேன் பாருங்கள்
குமரன் (Kumaran) said...
பூக்கள் நன்றாக இருக்கின்றன. 'நான் லண்டனில் நிற்கிறேன்' என்று யோகன் ஐயா சொல்லியிருக்கிறார். பொருள் என்ன?
சின்னக்குட்டி said...
//'நான் லண்டனில் நிற்கிறேன்' என்று யோகன் ஐயா சொல்லியிருக்கிறார். பொருள் என்ன?//வணக்கம் குமரன்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...யோகன் பாரிஸ் இல் வசிப்பவர்...லண்டனுக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார் போலை... தற்போது லண்டன் வந்துள்ளேன் என்று கூறுவது தான் லண்டனில் நிற்கிறேன் என்ற கருத்து...என்னங்க இது... ஈழ தமிழை புரிய இப்படி கஸ்டப்படுகிறியள்பழைய நடிகர் லூஸ் மோகன் பேசுற உந்த கஸ்டமான மட்ராஸ் தமிழைக் கூட நாங்கள் இலகுவாக புரிஞ்சிருக்கிறோம்
குமரன் (Kumaran) said...
சின்னகுட்டி (ஐயா/அண்ணா), எனக்கு ஈழத்தமிழ், சென்னைத்தமிழ் இரண்டுமே அவ்வப்போது புரிவதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி தான் நானும் யோகன் ஐயா சொன்னதற்குப் பொருள் கொண்டேன். ஆனாலும் தெளிவாக அறிந்து கொள்வோம் என்றே கேட்டேன். விளக்கம் சொன்னதற்கு நன்றி. :-)
இது, சின்னக்குட்டியின் பதிவில் நடந்த பின்னூட்ட உரையாடல். இது சராசரியாக ஈழத்தவர்கள் மத்தியில் நடைபெறும் பேச்சு வழக்கு உரையாடல்தான். இதைப்பார்த்த போது, எனக்கு புலம்பெயர்ந்த புதிதில் எம்மவர் மத்தியில் இடம்பெற்ற புரியாத சில தமிழ் உரையாடல்கள் ஞாபகத்திற்கு வந்தன.
ஐரோப்பாவிற்குள் நுழைந்த முதல் நாள் நண்பனொருவனின், நண்பர் வீட்டில் நின்றேன். அங்கே தொலைபேசி எடுத்த நண்பர் என்னுடன் கதைத்துவிட்டு, என்னைக் தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார். அது தொடர்பாக அவர்களுக்குள் நடந்த உரையாடல் எனக்குப் புதியதாக இருந்தது.
"...சரி நீங்கள் எத்தினை மணிக்கு இறங்கப் போறியள்..?"
"இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம்.."
"... வழி தெரியுமே ..? "
" எதுக்கும் இன்னுமொருதரம் சொல்லுமன்.."
".. பச்சையில....காட்டுவான், அத எடுத்திட்டு வர வலது பக்கம் நீலத்தில இறக்குவான்..... அதை எடுத்திட்டு வாங்கோ "
இந்த உரையாடலை அன்று கேட்கும்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று நானும் அப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐரோப்பா தவிர்ந்த மற்றைய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இது புரிகிறதா எனச் சொல்லுங்கள் பார்ப்போம்...உங்கள் நாடுகளில் உள்ள புதிய மொழி நடைகளையும் குறிப்பிட்டால் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
சின்னக்குட்டி குறிப்பிட்டிருக்கும் மற்றுமொரு விடயம் முக்கியமானது. தமிழகத்தின் வட்டார வழக்கு உரையாடல்கள் பலவற்றையும், தமிழீழ மக்கள் இலகுவில் பரிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியச் சினிமா என்றே கருதுகின்றேன். ஆனால் தென்தமிழீழ சொல்லாடல் வடதமிழீழத்திலும், வடதமிழீழச் சொல்லாடல் தென் தமிழீழத்திலும் புரிதலில் சிரமங்கண்டுள்ளது. இது குறித்து வசந்தன் ஒரு பதிவு எழுதியிருந்ததாக ஞாபகம். விரைவில் மருதநிழலில் இதுபற்றி விரிவாகப் பேசுவோம்.
Sunday, October 15, 2006
உங்களுக்குத் தோன்றுவது என்ன..?
"ஜப்பானியர்களுக்கு அதிக நேரம் இருக்கிறது போலும்.." என்றார். ஆனால் என்னால் அப்படி இதைப்பார்க முடியவில்லை. உருளை வடிவான தர்பூசணிப்பழத்தைச் சதுரமாக மாற்றுவதற்குள் சில பொருளாதார நுட்பங்கள் இருக்கின்றன என எண்ணுகின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? சொல்லுங்கள். நானும் சொல்லுகின்றேன்.
Saturday, October 14, 2006
உலகமக்கள் அனைவருக்கும்
Wednesday, October 11, 2006
சுபதினம்
ஒரு சுபதினம்.
எப்படி....?
காலைக் கருக்கலில்
நெற்றியில் வடிந்து
நிலம் சேரும்
குருதி சகதியுடன்
சந்திகளில் கிடக்கும்
"பொடிகள்" பற்றி, மக்கள்
பேசக்காணோம்....
நிலத்திலோ
நீரிலோ
புலிவேட்டை ஆடியதாய்
புழுகு வானொலிகள்
புலம்பக் காணோம்....
ஆதலால்
ஐயமின்றிச் சொல்வேன்
நேற்று ஒரு சுபதினம்.
களனிக் கரையிலும்
களுபோவிலச் சந்தியிலும்
தலையில்லா
முண்டங்கள் பற்றிய
பத்திரிகைத் தலைப்புக்கள் எதுவும்
பரபரப்பாயில்லை.
ஆதலினால் சொல்வேன்....
ஐயமின்றிச் சொல்வேன்...
இலங்கைத் தீவில்
நேற்று ஒரு சுபதினம்.
இந்தக்கவிதை(?) சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், அப்போதுள்ள சூழலைக்கருத்தில் கொண்டு என்னால் எழுதப்பட்டு, எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இன்றுள்ள இலங்கைச் சூழலுக்கும் இது பொருந்தி வருகிறது எனும் போது..... என்ன செர்லவது..?
Monday, October 09, 2006
வானுலா
தாயகத்தில், ஊர்கள், வீதிகள், தெருக்கள், ஒழுங்கைகள், எனச் சுழன்ற காலங்கள் மாறி, காடுகள் கரைகள் எனக் கரைந்த காலங்களுமுண்டு. எல்லாப்பொழுதுகளிலும், இன்னல்கள் நிறைந்த வேளைகளிலும், உலாத்தல்கள் என்பது, எனக்கு உவப்பானதாகவே இருந்திருக்கின்றன.
புலத்தில் உலாத்தல்கள் உயர்மலைகளில் நிகழ்ந்தபோது, அதற்கப்பாலும் உயர்ந்து உலாவரவும் ஆசைப்பட்டது மனம். அதற்குத் தேவை மனம் மட்டுமல்ல, என்பதை உணர்ந்தபோது, நெஞ்சுமூலையில் அடக்கமாக அமர்ந்துவிட்டது ஆசை. ஆனாலும் வானில் வண்ணப் பறவைகள்போல் பறக்கும் மனிதர்களைக் காணும்போது, நாமே உயரப்பறப்பது போன்ற உணர்வு வரும்.
நேற்று என்மகன் சொன்னான் " அப்பா இன்று நல்ல காலநிலை. நண்பர்கள் சிலருடன் உயரப்பறந்து உலாவரப்போகின்றேன்" என்று. சென்று வந்தவனின் உலாவிலிருந்து ஒரு சில துளிகள் உங்களுக்காகவும்....
Wednesday, October 04, 2006
இணைத்த தமிழால் இனிய சந்திப்பு
சதீஸ், ராஜேஸ், ஆன்டோ, சஞ்சய், வெங்கட் (மற்றவர்கள் பெயர் மறந்துவிட்டது) என இந்த ஏழு இளைஞர்களும், எங்களை அன்பாகவும் ஆவலுடனும் வரவேற்றுக் கொண்டார்கள். ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் சகஜமாகப் பேசினார்கள். இனி அவர்கள் பேச்சுக்களிலிருந்து....
தாயகத்தையும், உறவுகளையும், பிரிந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் முதற் கவலை இங்கு வருவதற்குச் செலவழித்த பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பது. அடுத்த பெரும் சிக்கலாக இருப்பது மொழிப்பிரச்சனை. அவர்கள் தற்போது இருக்குமிடத்தில் ஜேர்மன் மொழி பேசப்படுகிறது. இங்குள் சராசரி மக்கள், ஏனைய ஐரோப்பியர்களைப் போன்றே, தாய்மொழி தவிர்ந்த ஏளனய மொழிகளில் பேசுவதில் ஆர்வமில்லாதவர்கள். அதனால் ஆங்கிலம் பேசத் தெரிந்த இவர்களுக்கு சகஜமாக இங்குள்ள மக்களுடன் பழக முடிவதில்லை. ஜேர்மன் மொழி கற்பது பேசுவது என்பதும் அவ்வளவு சுலபமில்லை.
இவர்களின் அடுத்த பெரும் பிரச்சனை உனவு. தமிழ்நாட்டு உணவுவகைகள் எதுவும் இவர்களது விடுதியில் பெற்றுக் கொள்ள முடியாது. சாதத்தைக் கறிபோல் குறைந்தளவில் பரிமாறப்படும் ஐரோப்பிய உணவுமேசைகளின் முன் உட்காரும் நம்மவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே அதுதானே. அதிலும், மாமிச வகைகளுடனான உணவுவகைகளும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருக்கிறது. இது விடயத்தில் தற்போதைக்கு அவர்களுக்கு ஆறுதல் தருவது, சற்றுப் பக்கத்தில் ஈழத்தமிழர்கள் நடாத்தும், இந்துக்கோவிலில் வெள்ளிகிழமை மாலைகளில் வழங்கப்படும் அன்னதானம்தான். இந்த இன்னல்கள் எல்லாம் ஏற்கனவே அநுபவித்தவர்கள் என்பதாலும், இவர்கள் தமிழர்கள் என்பதாலும், இங்குள்ள ஈழத்தமிழர்கள், இவர்கள் மேல் மிகவும் பரிவு காட்டுகின்றார்கள்.
இவைகளையடுத்து இவர்களுக்குச் சிக்கலாகவிருப்பது, மேலைத்தேய கலாச்சாரப் பழக்கவழக்கங்கள். இவர்கள் விடுதியின் கீழ்தளத்தில் உள்ள மண்டபத்தில், வெள்ளி சனிக்கிழமை இரவுகளில் நடைபெறும் டிஸ்கோ நடனக்களியாட்டங்களை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு வரும் அப்பாவிகளாகச் சிரித்தார்கள்.
அதற்கடுத்த பெரும் சிக்கல், இங்குள்ள நேரக்கட்டுப்பாடு. “ காலைல ஏழுமணிக்குப் பின்னாடி தாமதிச்சா காலை சாப்பாடே கொடுக்கிறாங்க இல்லை. நேரத்தில இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாங்களே” என ஆச்சரியப்பட்டார்கள்.
“அதெல்லாம் சரி வந்த நோக்கம் எப்டிப்பா என்னு கேட்டா?”
“ரொம்பக் கஸ்டம்ங்க. வாரத்துக்கு மூணு எக்ஸாம் வைக்கிறாங்க. நம்ம ஊரில் வருஷத்துக்கு மூணு எக்ஸாம்தானுங்க....இப்பிடி பென்டெடுக்கிறாங்களே..”
பேசிமுடித்துத் திரும்பி வரும்போது,? ஹாலில் வெள்ளைப்பெண் ஒருத்தி படித்தபடி இருந்தாள். பார்த்ததும் நான் சொன்னேன் “பாருங்கப்பா எவ்வளவு அக்கறையாப் படிக்கிறாள். நீங்க பாட்டெல்லோ கேட்டுக்கிட்டுருங்கீங்க....”
“ அவங்க அப்பிடி மாஞ்சு மாஞ்சு படிப்பாளுக. ஆனா மாக்ஸ என்னவோ மூணத் தாண்டாது. நாங்க சிம்பிளாத்தான் படிப்போம், சிக்கெண்ணு அஞ்சு எடுத்திருவோமில்ல..” என்றார்கள் அட்டகாசமாக.
அதுதானே பார்த்தேன். தமிழ்ப்பசங்களாச்சே. எப்பிடி....?
அவர்களுடன் கல்வி கற்கும், ஏனைய இந்திய மாணவர்களாகிய ஆந்திர, மலையாள, வட மாநில மாணவர்கள் எல்லோரும் அந்நியமண்ணிலும் அந்நியமாய் நிற்பதை, நேசமுடன் எங்களிடம் நெருங்கி நின்று சொன்னார்கள் சோகமுடன்.... ஏனெனில் எங்களை இணைத்திருப்பது இன்பத்தமிழல்லவா?