Tuesday, March 27, 2007

Weird - வினையா விளையாட்டா ?

சிந்தாநதி , குமரன் இருவரும் என்னை இந்த தொடர்பகிரலுக்கு அழைத்திருக்கிறார்கள். இதை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செய்யமுடியும் என்று தெரியவில்லை. இது வினையா, விளையாட்டா? புரியவில்லை. இதற்கான விளக்கத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் ஒருவித குழப்பத்துடனே எழுதுகின்றேன். எழுதப்பட்ட பதிவுகள் சிலதை வாசித்த போதும், குழப்பமான புரிதலே ஏற்பட்டது. எனக்குப் பிடித்த ஒரு விடயம், மற்றவர்களுக்கு வித்தியாசமாக அல்லது வேடிக்கையாகத் தெரியலாம் என்ற புரிதலுடன் எழுதுகின்றேன்.

மலைமுகடுகளுக்குப் போவதும், அதன் சூழலில் லயிப்பதும் எனக்குப் பிடிக்கும். அதன் மிதமிஞ்சிய ஆர்வத்தில், என்னிடம் வரும் நண்பர்களை, உறவினர்களை , வாறீர்களா மலைக்கு போகலாம் என்றழைத்தால், அவர்களும் சம்மதித்து வருவார்கள். சென்றபின் என்னை நோகடிக்கக்கூடாதென்று, பிரயத்தனப்பட்டுச் சமாளித்துக்கொண்டிருக்கும் அவர்களிடம் மலைகள்பற்றி நான் அளந்து கொட்டுவேன். அவர்களோ...
இறுதியில், இனி யாரையும் அப்படி அழைத்துச் செல்லக் கூடாதென எண்ணுவேன்.. வெறுமனே எண்ணுவேன்.

ஏரியில் படகுச் சவாரியை, அதுவும் பெடல் படகினை, ஏதோ கப்பல் ஓடுவது போன்று ரசித்துச் செய்வேன், பார்ப்பவர்களுக்கு அது சிறுபிள்ளை விளையாட்டாகத் தோன்றும்..ஆனாலும் செய்வேன். அதுபோலவே பயனிக்கும் படகுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பிடிக்கும். ஆனால் மற்றவர்களுக்கு..

வீட்டில் எல்லோரும் திட்டித் தீர்த்தாலும், மலசலகூடத்திற்குப் போகும் போது, புத்தகம், பத்திரிகை கொண்டுபோய் வாசிப்பது.

ஒவ்வொரு வருடமும் அக்கறையாக வரவு செலவுக் கணக்கெழுத ஆரம்பித்து, ஒன்றிரண்டு மாதத்தில் நின்றுவிடுவது.

தேவையென ஒரு பொருளைத் தீர்மானித்து விட்டால் வேண்டித் தீருவது.

கடைகடையாய் ஏறியிறங்கி பொருள் பார்த்து வாங்கத் தெரியாது, ஆனால் வாங்கிவரும் பொருள் தரமாயிருப்பது.

ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.


எழுதத் தொடங்கினால், வாசிக்கத் தொடங்கினால், மற்றவை மறந்து போவது.

வீட்டில் ஐந்து பொருள் வாங்கிவரும்படி வழிக்கு வழி சொல்லி விட்டாலும், ஏதாவது இரண்டு பொருளை மறந்துவிட்டு வந்து நிற்பது. ஆனால் வெளியே என் ஞாபகசக்திக்குப் பாராட்டப்படும்.

சடுதியாக யோசிக்க நினைவுக்கு வந்த இவைகளுடன் நிறைவு செய்கிறேன்.

நான் அழைப்பது

சயந்தன்
வசந்தன்
வி.ஜெ. சந்திரன்
மழை.ஷ்ரேயா
கொழுவி

Friday, March 16, 2007

அவன் நினைவுக்கு வந்தான்.

அந்தப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. ஆமாம் சதாம் எனும் ஒரு சர்வாதிகாரியின் பெயர் மெல்ல மெல்ல உலகில் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால் சதாமின் வாழ்வினூடு மறக்கப்படக் கூடாத பல விடயங்கள் உண்டு.

ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வரும் வழியில்தான் அவனைச் ச்ந்தித்தேன். சத்தார் என்ற வகையில் ஏதோ பெயர். அவனும், அவனது மனைவியும், அழகான இரண்டு குழந்தைகளுமாக வந்திருந்தனர். அவன் ஒரு குர்த்திஷ் விடுதலைப்போராளி. அவன் மனைவி ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியை. பிள்ளைகள் ஏதுமறியா இளமைப்பருவம். குர்திஸ் விடுதலைப் போராட்டம் தந்த கசப்பான அனுபவங்ளை மனத்திலும், காயங்களை உடம்பிலும் கொண்டிருந்தான். எத்தனையோ பேர் இருந்த அந்த அகதிகளுக்கான முகாமில், ஏறக்குறைய அவனது மனநிலையே , அப்போது எனக்கும் இருந்ததால் ஏதோ ஒரு நெருக்கம் எங்கள் மத்தியில் தோன்றிற்று.

ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில், இரண்டாம் உலகப்போரில் பாவிக்கப்பட்ட, பழைய இராணுவமுகாமிருந்த கட்டடிடத்தில், எந்தவிதமான அறிமுகங்களும் பொழுதுபோக்கு வசதிகளும் அற்ற ஒருநிலையில், உணவு நேரங்களில், உணவு மண்டபத்தில் அவனது குழந்தைகளின் சிரிப்பினூடு ஆரம்பமாகி எங்கள் அறிமுகம், அங்கிருந்த ஒரு வாரகாலத்தில், சற்று நெருக்கமாகவும், பரஸ்பரஆறுதலாகவும், இருந்தது. இருவருக்கும் தெரிந்தளவிலான ஆங்கிலத்தில் எங்கள் உரையாடல்கள் அமைந்தன. அப்படியிருந்தும், உரையாடல்களின் உட்பொருள் இருவருக்கும் ஏற்புடையதாகவோ, பொருந்துவதாகவோ, அல்லது ஒத்ததாகவோ இருந்ததினால், அவனது மனைவி தயாரிக்கும் கறுப்புத் தேநீரைக் குடித்தபடி நள்ளிரவு தாண்டியும் அவை நீண்டன. பெரிய நிலப்பரப்பில் மின்விளக்குகள் தந்த குறைந்த ஒளியில், பருத்த மரங்களின் நிழல்கள் தரும் இருள் அச்சத்தையும், அவன் பிள்ளளைகள் தூங்குவதற்காக சிறிய ரெக்டகோடரில் மெலிதாக ஒலிக்கவிடப்பட்டிருந்த குர்திஸ்விடுதலைப்பாடல்கள், எங்கள் உரையாடல்களுக்கு பின்னணியிசையாக சேர்ந்தன.

நீண்ட காலமாக குர்திஸ்விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது அரசியல் செயற்பாட்டுப் பொறுப்புக்குள்ளிலிருந்த கிராமத்தின் மீதுதான் சதாம் விஷவாயுக் குண்டுகளை வீசி ஓரேநாளில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்களை, சிறுவர் பெரியவர், பெண்கள் எனும் பேதமில்லாமல், கொண்றொழித்திருந்ததிலிருந்து, அப்போராட்டத்தை அழித்தொழிக்க, ஈராக், ஈரான், துருக்கி, என எல்லா நாட்டு அரசுகளையும், சந்தர்பத்துக்குத் தககவாறு அமெரிக்கா பாவித்துக் கொண்டது பற்றியும், குர்திஸ் போராளிகள் எவ்விதமாக இந்தச்சூழ்சிகளுக்குப் பலியாகினார் என்பதையும் விலாவாரியாகப் பேசினான். சோகமும், கோபமும், நிரம்பிய கதைகள் அவை. இரத்தமும், சதையும் சிதறிய துயரங்கள் அவை.

அண்மையில் சதாம் தூக்கிலிடப்பட, எல்லோரும் சதாமைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். சதாமின் மரணம் சிலருக்கு மகிழ்ச்சியாகவும சிலருக்குத் துக்கமாகவும் இருந்தது. ஆனால் அவனுக்கு எப்படி இருந்திருக்கும். அது சதாமுக்கு நூற்றிநாப்பது சொச்சம் சுனி முஸ்லீம்களின் கொலைவழக்குககாக வழங்கப்பட்ட மரணதண்டனை. ஆனால் அதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னால் நடத்தபட்ட, எண்ணிக்கையில் அதி கூடிய குர்த்திஷ் மக்களைக் கொன்ற விடயங்கள் நீதிமன்றுக்கு ஏன் வரவில்லை. அல்லது அவை குறித்த விசாரணைகளும், வழக்குகளும், விசாரிக்கப்படுதற்கு, முன்னதாகவே, சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்கக் கூடிய அவன் என்ன நினைத்திருப்பான்.

சரி. இதையெல்லாம் இவ்வளவு நாளுக்குப் பிறகு நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களா? இரண்டொரு தினங்களுக்கு முன், ஐரோப்பியத் தொலைக்காட்சியொன்றில், சிறிலங்காவின் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் காங்கிரசின் அமைச்சர் ஒருவர், புலிகள், தங்களை, முஸ்லீம்களை அங்கீகரிக்க வில்லையென்பதற்காகத்தான் தாங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றோம். அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றோம், என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போதும் அவன் நினைவுக்கு வந்தான்.

Tuesday, March 13, 2007

ஆண்டொன்று போனால்..




எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்பது மட்டும் அவாவுற வைக்கிறது. வலைப்பதிவு எழுத வந்த இந்த ஒரு வருடகாலத்திலும் அனுபவித்திராத அவஸ்தையிது. நினைத்த மாத்திரத்தில் நினைத்தை எழுதிவிடுவது வழக்கம். ஆனால் இன்று, நின்று நிதானிக்கத் தோன்றுகிறது. எதையும் தவறவிட்டுவிடக் கூடாது எனும் எண்ணமே தவற வைத்துவிடும்போல் இருக்கிறது. ஆனாலும் எழுதவேண்டும்..

எழுத்து, வாசிப்பு, எனத்தொடங்கிப் பிரியப்பட்ட கலைகளிலெல்லாம் தொட்டுப்பார்க்கும் சிறுபிள்ளை ரசிப்பு ரகம் என்னது. அதுவே அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம், எனும் சமுத்திரக்கரைகளிலும் சற்று நடந்துவரத் தூண்டியது. இதனால் பார்பவர்க்குக் குழப்பங்களின் கலவைதான் இந்த மலைநாடான்.

எண்ணியதிலெல்லாம் முயன்று, முட்டி,மோதி,விழுந்து, எழுந்த போதினில், புலப்பெயர்வு. புதிய வாழ்க்கையில் முன்னையதின் எச்சங்கள் எதுவும் தொடராதிருக்க வேண்டும் என்பதில் கவனமாயிருந்தேன். ஆயினும் கலைகள் எதுவும் என்னை கைகட்டிநிற்க விடவில்லை. ஆடியகால்கள் ஆடித்தான் ஆக வேண்டுமென அடம்பிடித்தன. புலத்தின் இறுக்கத்திற்கு, இந்தத் தளர்வும் வேண்டும் போல் தோன்றிற்று. ஆனாலும் அனுபவம் தந்த பட்டறிவின்பால் நின்று நிதானித்துச் செயற்பட முடிந்தது. அப்படியிருந்தும், கலையுலகில் கால்வாரலுக்கென்ன பஞ்சமா? பட்டு,நொந்து விட்டு விலகி நின்றேன். ஆனால் எந்தப் பொழுதிலும், ஏழுவயதில் என் அன்னை எனக்குக் கற்றுத்தந்த வாசிப்பு என்பது மட்டும் ஒட்டிக்கொண்டே வந்தது. அந்த வாசிப்பின் வரிசையிலே வலையுலகும் இருந்தது. சென்ற ஆண்டு மார்ச்மாதம், கானா.பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடியால் தமிழ்மணத்துக்கு வந்தேன். எழுத்துக்கள் சில எனைக் கவர்ந்தது. சரி நாமும் ஒரு பாராட்டுச் சொல்லிவிடலாமே என முயன்றபோது முடியவில்லை. உதவிப்பக்கங்கள் தந்த அறிவுறுத்தலின் வழிநடத்தலில் வந்து விழுந்த இடம்தான் என் முதலாவது வலைப்பூவான குறிஞ்சிமலர். முடியாததென்று எண்ணியதொன்று, எளிதில் சாத்தியமாயிற்றே எனும் நிறைவோடு அன்று நித்திரைக்குப் போனேன்.

பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை மலரும் பூ. நாமும் குறைந்தது பன்னிரெண்டு வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாம் என்பதற்கும், மலைநாடான் என்பதற்கும் ஏற்புடையதாக குறிஞ்சிமலர் எனப் பெயரிட்டேன் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறியது அப்போது எனக்குத் தெரியவில்லை). என்ன எழுதுவது?. நமக்கு எப்போதும் பிடித்தமான, சாதரண மனிதர்களைப் பற்றிக் கொஞ்சம் பதிவு செய்வோமே என்றுதான் எண்ணினேன். ஆனால் முதலில் எழுதவேண்டுமென எண்ணிய ஒரு சாதாரண மனுசியைப்பற்றி இன்னமும் எழுதவேயில்லை. ஏன்?.. பிறகு சொல்கின்றேன்.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பழக்கம். சிலருக்கு எழுதுவதென்றால் இசைவேண்டும், சிலருக்கு இரைச்சல் வேண்டும். எனக்கு இவையிரண்டையும் விட முக்கியம் எழுதும் தளத்தின் வடிவம். அதுவென்னவோ படிக்கும் காலத்திலேயே அப்பியாசக்கொப்பி வேண்டினால், அதற்கு அழகாகச் சட்டைபோட்டு, பெயரிடுவதுவரைக்கும கணகச்சிதமாய் நடக்கும். படிப்பது..?.. :)))).

இலவமாகத் தந்த அடைப்பலகையை இரவு பகலாகக் கழட்டிப்பொருத்தினத்தில், HTML என்ற அந்த மொழி கூட சற்றுப் புரிந்ததுபோல் தெரிந்தது. சரி வெட்டி ஒட்டி விளையாடிப் பார்த்தில், நானும் நாலுந் தெரிஞ்ச மனுசனாகிப்போனேன். அதனால்தான் இன்று என் அடைப்பலகைகள், இரண்டுங்கெட்டானாய் நிற்கின்றன. சோடிச்சால் மட்டும் போதாது, ஏதாவது எழுதவும் வேணும்தானே. தெரியாத விசயங்களை விட்டு, தெரிந்தவற்றைச் சொல்வோம் என எண்ணிய போதினில் என் தேசம் பற்றிய கதைகளே அதிகம் நினைவுக்கு வந்தன. ஆரம்பத்தில் ஆர்வமாய் வந்த நண்பர்கள் சிலர், அரசியற் பேச்சுக்கள் வந்தபோது, விலகிக் கொண்டார்கள். வேறு சிலர் விரும்பி வந்தார்கள்.

எழுதுவது என்பது விருப்பமாயினும், எழுதுவதற்குச் சற்றுச் சோம்பேறிதான். ஆனால் தீர்மானித்து இருந்துவிட்டால், முடிக்காது எழும்புவதில்லை. குறிப்புக்கள் எதுவும் வைத்துக்கொள்ளாது, எண்ணப்போக்கிலே எழுதிக்கொண்டிருக்கும்போது, இடையில் நிறுத்திவிட்டால், திரும்பவும் அது எழுதுப்படுவதென்பது அநேகமாக இல்லை. அப்படிக் குறையாக நிற்கும் பதிவுகள், சேகரிப்பில் நிறையவே உண்டு. அதற்குள் முன்னர் குறிப்பிட்ட அந்த வயதான மனுசியும் இருக்கிறாள். இந்தத் தொடரெழுத்துப் போக்குக்கு தொடும் விசயங்களும் காரணமாகலாம். ஆனாலும் வலைப்பதிவுலகில், எழுதுவதிலும் பார்க்க வாசிப்பதே எனக்கு எப்போதும் பிடித்தமாயிருந்தது. எழுதத் தொடங்கிய பின்தான், தென்தமிழீழத்து, தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவு செய்யப்படாதிருப்பதை அறிந்தேன். அதை எழுத முற்பட, தளத்தின் வடிவம் உறுத்தத் தொடங்கியது. உடன் உருவாகியதுதான் எனது இரண்டாவது வலைப்பூவான மருதநிழல். ஒன்றிலேயே ஒழுங்கா எழுதாத பயலுக்கு, இத்தனை வலைப்பூ தேவையா என எண்ணிய நண்பர்களே, என் வலைப்பூக்களின் பின்னால் உள்ள பிறப்பு இரகசியம் இதுவே. அதன் நீட்சி
யே நெய்தற்கரையும், முல்லைவனமும்.

வலைப்பதிவுலகம் விசித்திரமானது. இங்கே எல்லோரும் எழுதுபவர்கள், எல்லோரும் வாசிப்பவர்கள். ஆகையால் ஆரோக்கியமான ஒரு கருத்துக்களம் என்ற எதிர்பார்புடனேயே வந்திருந்தேன். வந்த ஒரு சில பொழுதுகளிலே தெரிந்துவிட்டது இதன் சீத்துவம். நமக்கென்ன நமது பாட்டுக்கு ஒரு ஓரமாய் செல்வோம் என நடந்த போதினில் பல நல்ல நண்பர்களைச் சந்திக்க முடிந்து. நான் பார்க்க வளர்ந்த கானா.பிரபா, எல்லோருடனும் பின்னூட்டத்தால் உறவாடும் யோகன் பாரிஸ், நகைச்சுவையும் நல்லிதயமும் கொண்ட வசந்தன், சயந்தன்,( இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.) அசமாத்தமில்லாமல் அட்டகாசம் பண்ணும் சின்னக்குட்டி,( வசந்தனின் பின்னவீனத்துவப்பதிவில், அத்துவித ஒப்பீட்டை கமுக்கமாகப் போட்டிட்டு கம்மென்று இருப்பதைப்பாருங்கள்), பெயரற்றவன் எனச்சொன்னாலும் பல பெயர்களுக்குச் சொந்தக்காறனான பெயரிலி, ( இவர் வலையில் என்னிடம் சிக்கியதே ஒரு சுவாரசியமான அனுபவம்தான்.) எல்லோரிடத்திலும் இலகுவில் பழகிடும் மதி,பதிவர் வட்டத்தில் அமைதிப்பூங்காவாக இருக்ககூடிய சந்திரவதனா, தனித்துவமான எழுத்து நடையால் எல்லோருக்கும் தெரிந்த தமிழ்நதி, சிநேகிதமான சிநேகிதி, இப்போ வந்த வி.ஜெ. சந்திரன், என ஈழத்து நண்பர்கள் வரிசை நீள்கையில், தமிழக நண்பர்கள் பட்டியல் இன்னும் நீண்டது. திரு, பொன்ஸ், செல்வநாயகி, குமரன், ஆழியூரான், ஜி.ராகவன், ஞானவெட்டியான், ஜெகத், சிந்தாநதி, பாலபாரதி, கீதா.சாம்பசிவம், எனத் தொடர்கிறது....
இதற்கப்பால், அவ்வப்போது பல நண்பர்கள் வந்து உறவாடி, உற்சாகமூட்டுகின்றார்கள். எல்லோர்க்கும் நன்றிகள்!

வலைப்பதிவில் எழுதும் எல்லோரும், தமது திருப்த்திக்காகத்தான் எழுதுகின்றார்கள். அதே போல்தான் நானும். ஆனால் நமது எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? என அறிய எல்லோர்க்கும் விருப்பம் இருப்பது இயல்பே. அதே எண்ணம் எனக்குமுண்டு. ஏனெனில் எம் எழுத்துக்களை வாசிப்பவர்களது நேரத்தை நாம் எடுத்துக்கொள்கின்றோமே, அது அவர்களுக்குப் பயனுடையதாகவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்வதாயின் எப்படி என்று எண்ணிய போது எண்ணத்தில் வந்தவர்கள் சிலர்.

தெளிந்த நீரோடைபோன்ற எழுத்துக்குச் சொந்தக்காறர்களாக இருக்கக்கூடிய சிலரில், வலைப்பதிவுகளின் மூலம் அறிமுகமான செல்வநாயகி. தமிழகத்தைச்சார்ந்த இவரது பார்வைக்கும், ஈழம்சார்ந்தவர் பார்வைக்கும் வேறுபாடிருக்கலாமே எண்ணியபோது, ஈழம் சார்ந்த ஒருவருடைய கருத்தையும் இணைத்துக் கொள்ளலாம் எனத்தோன்றியது. அந்த எண்ணம் வந்தபோது கூடவே இன்னுமொரு யோசனையும் வந்தது. வலைப்பதிவுகளுக்கப்பாலிருந்து வாசிக்கும் ஒரு நண்பரைத் தெரிவு செய்யலாமே என்று. அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தார் நண்பர் ஏ.ஜே.யோகராஜா. சரி இவர்களிருவரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களாயுள்ளார்கள், வலைப்பதிவு வட்டத்திற்கப்பால்இளையவர்கள் சிலர் என எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகின்றார்கள். ஆகவே இளையவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தெரியாது போய்விடுமே என்று சிந்திக்கத் தோன்றியது. அதை நினைத்த போது, நினைவுக்கு வந்தவர் வலைப்பதிவு நண்பர் ஜெகத். மூவரிடமும் மின்மடல் மூலம் எண்ணத்தைச் சொல்லியபோது, எந்தவித மறுப்பும் சொல்லாது, எழுதித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள் சொன்ன போலவே எழுதிக்கொடுத்துள்ளார்கள். இந்த மூவருக்கும் எனக்குமுள்ள பரிச்சயமும், பழகுதளங்களும், வெவ்வேறானவை. ஆனால் மூவருடைய பதிவுகளும் ஏறக்குறைய ஒரே கருத்தியலில் வந்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என் எழுத்துக்களைவிடப் பன்மடங்கு சுவாரசியமான அவர்களது கருததுக்கோர்வைகள் அனைத்தும் , நான் முக்கியமென எண்ணி எழுதிய பதிவுகளைத் தொட்டுக்காட்டியபோது, நம்மாலும் ஏதோ எழுத முடிந்திருக்கிறது எனும் திருப்தி ஏற்படுகிறது. இதுவே இப்போதைக்கு எனக்கு மேலதிகமான பொறுப்புணர்வையும் தந்து நிற்கிறது..

இந்த ஓராண்டு காலத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவிய, உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், சென்ற செப்டெம்பர் மாத்தின் ஒருவாராத்தில் நட்சத்திரமாக அறிமுகம் செய்து பெருமைப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், எனது பல ஆக்கங்களையும் பூங்கா இதழில் இணைத்துச் சிறப்பித்த பூங்கா இதழ் குழுவினருக்கும், மிக்க நன்றிகள்.

செல்வநாயகி, யோகராஜா, ஜெகத், நீங்கள் மூவரும், என்னை எனக்கே மீளவும் அடையாளங் காண்பித்துள்ளீர்கள். நான் பயணிக்கும் பாதை சரியெனச் சுட்டியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருத்தரும், பல்வேறுபணிச்சுமைகள் மிக்கவர்கள் என்பது, நன்கறிவேன் நான். அத்தகைய நெருக்குதல்களுக்கும் நெஞ்சார்ந்த நேயமுடன் கருத்துரைத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு நன்றிசொல்வது நாகரீகமாகாது எனினும்,இப்போதைக்கு நன்றியைத் தவிர வேறோன்றும் பகிர முடியவில்லை. நன்றி நண்பர்களே!

நண்பர்களின் கருத்துக்களையும், இந்த ஒருவருட காலத்தில் சுயமாகக் கற்றுக்கொண்ட இணையத்தொழில் நுட்ப அறிவினைக் கொண்டு நான் வடிவமைத்துக்கொண்ட இணையத்தளத்தினையும் காண, இவ்வழியால் வாருங்கள்.