Tuesday, September 12, 2006

காவிய எழுத்தாளன் இராசரத்தினம்

தமிழீழத்தின் பழைய தலைமுறை மறந்துவிட்ட, புதிய தலைமுறைக்குத் தெரியாத, ஒரு ஈழத்து எழுத்தாளன் வ.அ.இராசரத்தினம். அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த மூதூர் மண் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டிருக்கிறது. காரணம், யுத்தமும் மரணமும். ஆனால், காலங்கள் பல கடந்தும் பேசப்பட வேண்டிய ஒரு கலைஞன் காணமற்போய்விட்டான்.
Photobucket - Video and Image Hosting

ஆர்பாட்டங்கள் எதுவுமற்ற, மிகமிகச் சதாரணமான மனிதன்.அற்புதமான கலைஞன். அவரை எழுத்துக்களால் ஏலவே அறிந்திருந்தபோதும், நேரிடையாகச் சந்தித்தது 1977ல் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக் கூட்டமொன்றில். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு தேடி நடத்தப்பட்ட பிரச்சாரமேடைகளில், அரசியல் பேச்சாளனாக நான் அவதாரம் எடுத்திருந்த வேளையது. ஒரு கூட்டத்திற்கு அவரும் பேச்சாளனாக வந்திருந்தார். மதுப்பழக்கம் உடையவர் என்பதால் சற்றுப் போதையில் இருந்தார் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் பேச்சினை மிகத்தெளிவாக ஆற்றினார். ஆலாபனைகள் அலங்காரங்கள் அற்ற மிக இலகு தமிழில், சராசரி மக்களுக்கும் புரியக் கூடிய எளிமையான பேச்சு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அறிமுகஞ்செய்துகொண்டு, அவர் பேச்சுக்குறித்த என்அபிப்பிராயத்தைச் சொன்னேன். சிரித்துவிட்டு, இந்த மக்களுக்குக் கருத்துச்சொல்ல வந்த நாங்கள் ஏன் தேவையில்லாமல் அலட்டிக் கொள்ள வேண்டும். அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்வதுதானே முறை என்று சொன்னார். நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது, மேடையில் ஒரு கூட்டணிப்பிரமுகர், 'ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஒன் தமிழே சலசலத்து ஓடவேண்டும்.. ' என அடுக்குமொழியில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களின் பேச்சுக்குத்தானே மக்கள் கைதட்டுகின்றார்கள் என நான்கேட்டதற்கு 'கைதட்டல்களையெல்லாம் கணக்கெடுத்தால், கருத்துச்சொல்லமுடியாது. கடைசியா கைதட்டல்களுக்காகவே கதை சொல்ல வேண்டி வரும்.. 'என்றார். எவ்வளவு உண்மையான வார்த்ததைகள்.

வாழ்வாதாரத்துக்கென ஒரு ஆசிரியனாகவும், வாழ்வின் உன்னததுக்காய் எழுத்தாளனாகவும், வாழ்ந்த ஒரு கலைஞன் வ.அ.இராசரத்தினம். எழுத்தாளனின் படைப்புக்களை, அச்சில் வடிக்கும் அவஸ்த்தையின் தன்மைபுரிந்ததினால் அவரும் மனைவியும் இனைந்து, ஒரு பதிப்பகத்தையும் நடத்தினார்கள். இராசத்தினம் அவர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் பலவாக இருந்தபோதும், எனக்குத் தற்போது ஞாபகத்தில் இருப்பது, ஒருகாவியம் நிறைவேறுகிறது எனும் குறுநாவலும், தீர்த்தக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள தீர்த்தக்கரை என்ற சிறுகதை ஆகியன மட்டுமே. ஏனெனில் அவை இரண்டும் அற்புதமான வாழ்வியல் சித்திரங்கள்.

தீர்தக்கரை:-
ஆடிஅமாவாசைக்கு முந்தையதினம், மகாவலி நதி, திருமலைக்கடலில் கலக்கும் கங்கைத்துறையில், (இது உப்பாறுக்கும், மூதூருக்கும் இடையில் உள்ள கழிமுகம்) கொட்டியாரக்குடாவின் பல பகுதிகளிலும், இருந்து மக்கள் மாட்டுவண்டில்களில், குடும்பம் குடும்பமாக வந்து கூடுவார்கள். அன்று மாலை தம்பலகாமம் கோணேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் பூஜை விக்கிரகமும், கோவில் பணியாளர்களும் வந்து, வழிபாடுகளை ஆரம்பிப்பார்கள். வழிபாட்டின் தொடர்ச்சியாக திருக்கரைசேர் புராணம் விடிய விடியப் படிக்கப்படும். காலையில் விக்கிரகத்துடன் சென்று கடலும், கங்கையும், கலக்குமிடத்தில் ஆடிஅமாவாசைத்தீர்த்தம் ஆடுவார்கள். இதனால் அந்தக்கழிமுகத்துக்கு தீர்த்தகரை என்ற பெயரும் உண்டு.
தீர்த்தக்கரையின் மற்றொருபுறத்தில், கலைநிகழ்ச்சிகள் பலவும் விடிய விடிய நடைபெறும். இந்தத் தீர்த்தக் கரையில், தன் எழுத்துக்களை அச்சாக வெளியீடு செய்யும் ஒரு எழுத்தாளனின் அவஸ்த்தையை அற்புதமாகச் சொல்லும் கதைதான் தீர்த்தக்கரை. எழுத்தாளன், தன்மனைவியின் கைவளையல்களை அடகுவைத்து, எழுத்துக்களை அச்சாக்குவது முதல், அதை வெளியிடுவது, வெளியீட்டின் பின் கைவளையல்களை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை, நடைமுறையில் அது பொய்துவிடுவது, ஏனையோரின் ஏளனம், என்பவற்றை சராசரிக் கதாபாத்pரங்களைக்கொண்டு, சாதாரண மனிதர்களின் உரையாடலில அற்புதமாக வடித்திருந்தார். இது அவரது வாழ்க்கையின் உண்மைநிகழ்வாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கை யதார்த்தம் அதுதானே. இச்சிறுகதைத் தொகுதி கூட அவர்களது பதிப்பகவெளியீடு என்றே ஞாபகம்.

ஒரு காவியம் நிறைவேறுகிறது :-
இது ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல். முதலில் வீரகேசரி பத்திரிகையிலும், பின்னர் வீரகேசரிப்பிரசுரமாகவும் வந்தது. இராசரத்தினத்தின் மனைவி ராணி மரணமடைந்தபோது நடைபெறும் நிகழ்வுகழும், அவரகளிருவரின் வாழ்வியல் சம்பவங்களும், மாறிமாறி கவிதைப்படிமங்கள் போல இயல்பாகத் தொகுக்கப்பட்ட அருமையான கதை. இல்லையில்லை உண்மையில் அது ஒரு காவியம்தான். கருத்தொருமித்த ஒரு கணவன் மனைவியின் வாழ்க்கையின் ரசனை மிக்கப் பதிவு அது. இதுவரையில், கணவன் மனையருக்கிடையிலான அப்படியொரு காதலின் வெளிப்பாட்டை எழுத்தில் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. காதல் நினைவான தாஜ்மஹாலைப் போன்ற மற்றுமொரு காதல் நினைவுதான் ஒரு காவியம் நிறைவேறுகிறது.

இத்தகைய உணர்வு பூர்வமான எழுத்துக்குச் சொந்தக்காறனான அந்தக் கலைஞனை மறந்திடலாமோ? மூதூர் மன் தந்த, அந்த முத்தான அந்தக் கலைஞனின் படைப்புக்கள் எந்த வடிவில் இருந்தாலும், அதைப் பதிவு செய்ய உதவுங்கள். அவர் வாழ்வு சராசரியானதா இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துச் சாதாரணமானது அல்ல, அது சாதனையானது.


படம் தந்துவிய ரமணீதரனுக்கு நன்றி

என் நட்சத்திர நல் வணக்கம் பதிவுவுக்குப் பின்னூட்மிட்டபோது, நண்பர் யோகன்,
உங்கள் திரு விழாவில் ஏறுபடிகள் எதிர்பார்க்கிறேன் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.இதிலே வரும் ஏறுபடி என்ற சொல்லுக்கு ஈழத்தின் வடபகுதியில் குறிப்பான ஒரு பொருண்டு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இச்சொற் பயன்பாடு தமிழகத்திலும் உண்டா எனச் சொல்லுங்களேன். இச் சொல்லுக்கான பொருளை நாளை சொல்கின்றேன்.

31 comments:

இளங்கோ-டிசே said...

மலைநாடன், வ்.அ.இராசரத்தினம் பற்றிய குறிப்புக்களுக்கு நன்றி. இப்போது அவரின் 'மண்ணின் மைந்தன்' என்ற நாவல் (குறுநாவல்?) வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அதுவும் மூதூர் மக்களின் வாழ்வினைத்தான் கதைக்களனாய் கொண்டிருக்கின்றது. இரமணி, வ.அ.இராசரத்தினம் பற்றி ஒரு ஆக்கத்தை -ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையாக- பதிவுகள் இணையத்தளத்தில் எழுதியதாய் நினைவு. கவிஞரான ஆழியாளும் மூதூரைச் சொந்த ஊராகக் கொண்டவர்.

Anonymous said...

நல்ல பதிவு!
இவரது மகளை அண்மையில் நோயாளர்காவு வண்டியில் செல்கையில்
இராணுவம் சுட்டுக் கொன்றது.அவர் கணவனாரும் அதிற் கொல்லப் பட்டார்.

மலைநாடான் said...

\\இவரது மகளை அண்மையில் நோயாளர்காவு வண்டியில் செல்கையில்
இராணுவம் சுட்டுக் கொன்றது.அவர் கணவனாரும் அதிற் கொல்லப் பட்டார். \\

அனானி!

நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் நான் அறியாத செய்தி. நீங்கள் குறிப்பிடுவதைப் பார்த்தால்,இறுதியாக நடைபெற்ற தாக்குதல்களின்போது இடம்பெற்றிருக்க வேண்டுமென எண்ணுகின்றேன்.

சின்னக்குட்டி said...

இராசரத்திரனம் அவர்களை கேள்விபட்டிருக்கிறேன்.... அவருடைய படைப்புகள் எதுவும் வாசிக்கவிலலை... எங்கையோ அவர் சார்பாக சிறு கதை போட்டி வைத்தார்கள்...மல்லிகையோ, சிரித்திரனிலையோ தெரியவில்லை ஞாபகம் வருகுதில்லை

விருபா - Viruba said...

வ.அ.இராசிரத்தினம் அவர்கள் 60 களில் எழுதிய "துறைக்காரன்" மீண்டும் 2005 டிசம்பரில் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளது.

முன்னுரையில்
"வ.அ.இராசரத்தினத்தின் படைப்பிலக்கியவெறியின் உச்ச வெற்றியே துறைக்காரன். நெய்தலும், மருதமும், முல்லையும் கொஞ்சிடும் கொட்டியாபுரத்தின் அத்தனை இயற்கை அழகுகளும், இங்கு வாழும் மக்களின் மனிதநேய மாண்பும் சேதாரமின்றி இழைக்கப்பட்ட கலை முழுமையே துறைக்காரன். ஈழத்தில் சென்ற நூற்றாண்டில் முகிழ்ந்த நாவல்களில் சுருதி சுத்தமாக மண்வாசனை தேய்ந்த முதனைமையான நாவல். இது ஈழத்து இலக்கிய வல்லமையை என்றும் ஏந்தி நிற்கும் அற்புதப் படைப்பு." என்று எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தகத்தின் இறுதியில் பின்வருமாறு வ.அ.இராசிரத்தினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

"நம் பக்கத்துவீட்டு மொழிகள் சிலவற்றில் நாவல் வளர்ந்திருக்கும் நிலையைக்கண்டு நாம் பொறாமைப் படவேண்டியவர்களாக இருக்கின்றோம். வங்காள ஆசிரியர் பபானி பட்டாச்சாரியா எழுதிய "புலிச்சவாரி", டாக்டர் முல்க்ராஜ் ஆனந் எழுதிய "பெரிய இதயம்" (big heart) போன்ற ஒரு நாவலாவது நம்மிடம் இருக்கிறதா? இந்த ரகத்திலேதான் நான் இந்த நாவலை எழுதத் துணிகிறேன்...

Anonymous said...

we never forget him. He is the son of EAST.

வெற்றி said...

மலைநாடான்,
நான் அறிந்திராத, தெரிந்திராத ஒரு ஈழத்து எழுத்தாளரைப் பற்றி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
இவரைப் பற்றி இப்போதே! கேள்விப்படுகிறேன்.தகவலுக்கு நன்றி! இவர் ஒரு கதையாவது ,தங்கள் மருதநிழலில் தொடராக போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

மலைநாடான்
வ.அ.இராசரத்தினம் பற்றி எழுதியது மகிழ்வைத் தருகிறது. குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது தோணி கதை படித்திருக்கிறீர்களா. மிகவும் நல்ல கதை. ஒரு காவியம் நிறைவேறுகிறது எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

Anonymous said...

//இவரது மகளை அண்மையில் நோயாளர்காவு வண்டியில் செல்கையில்
இராணுவம் சுட்டுக் கொன்றது.அவர் கணவனாரும் அதிற் கொல்லப் பட்டார்//

1990 ஆம் ஆண்டு ஜூன் 13ம் திகதி மூதூர் புனித அந்தோனியார் திருவிழா அன்றுதான் தான் குழந்தை குட்டிகளுடன் ஊரை விட்டு ஓடியதாக தனது இலக்கிய நினைவுகளில் குறிப்பிடுகிறார் வ. அ. தனது மகளின் குழந்தைகள் மூவரையும் தூக்கிக் கொண்டு உடுத்த உடுப்போடு ஓடினாராம். அப்படி ஓடியவர் எங்கெங்கோ அலைந்து இரண்டு மாதங்கள் கழித்துத் தான் திருகோணமலையை அடைந்திருக்கிறார்.

இன்று அதே மூதூரில் மீண்டும் ஒரு இடப்பெயர்வு. அவரின் மகளும் கணவரும் கொல்லப்பட்டது அறிந்து மிகுந்த கவலையுற்றேன்.

வ. அ. வின் இலக்கிய நினைவுகள் நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது. சில காலத்துக்கு முன்னர் இலங்கை சென்ற போது டாம் வீதியிலுள்ள கடை ஒன்றில் கேட்பாரற்றுக் கிடந்து வாங்கி வந்தேன். நிறைய விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். முடிந்தால் பின்னர் விபரமாகப் பதிவிலிடுகிறேன். மலைநாடான், உங்கள் நட்சத்திரப் பதிவுக்கு நன்றி.

மலைநாடான், உங்கள் பதிவுகள் ஏனோ திறக்கக் கஷ்டப்படுகிறது. அரைவாசி மட்டும் தான் தெரிகிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்கும் உண்டா?

Chandravathanaa said...

சில காலத்துக்கு முன்னர் இலங்கை சென்ற போது டாம் வீதியிலுள்ள கடை ஒன்றில் கேட்பாரற்றுக் கிடந்து வாங்கி வந்தேன். நிறைய விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். முடிந்தால் பின்னர் விபரமாகப் பதிவிலிடுகிறேன்.

கனாக்ஸ்
முடிந்தால் அவைகளைப் பதியுங்கள்.

உங்கள் பதிவுகள் ஏனோ திறக்கக் கஷ்டப்படுகிறது. அரைவாசி மட்டும் தான் தெரிகிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்கும் உண்டா?


இந்தப் பிரச்சனையை நானும் பலமுறை எதிர்கொண்டேன். சில தடவைகள் முயற்சித்த பினனரே முழுமையாகத் திறக்கும்.

வசந்தன்(Vasanthan) said...

//மலைநாடான், உங்கள் பதிவுகள் ஏனோ திறக்கக் கஷ்டப்படுகிறது. அரைவாசி மட்டும் தான் தெரிகிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்கும் உண்டா?//

எனக்கும் தான்.
ஆனால் refresh செய்தால் சரிவருகிறது.

சின்னக்குட்டி said...

//மலைநாடான், உங்கள் பதிவுகள் ஏனோ திறக்கக் கஷ்டப்படுகிறது. அரைவாசி மட்டும் தான் தெரிகிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்கும் உண்டா//

வணக்கம்..kanagsஅவர்கட்கு....மலை நாடனின் பதிவு அரை குறையாக எனக்கு தெரிகிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் பக்கத்தை மூடிவிட்டு மூண்டும் திறக்கும்போது முழுமையாக தெரிகிறது

Anonymous said...

//அப்படியான சந்தர்ப்பத்தில் பக்கத்தை மூடிவிட்டு மூண்டும் திறக்கும்போது முழுமையாக தெரிகிறது//
அப்படித்தான் மூன்று நான்கு தடவை முயற்சித்த பின் தான் முழுமையாகக் கிடைத்தது. மலைநாடான், கட்டாயம் இதற்கு ஒரு மாற்றுவழி பாருங்கள். நட்சத்திர வாரமும் அதுவுமாக.

ஒரு காவியம் நிறைவு பெறுகிறது நூலகம் திட்டத்தில் கிடைக்கிறது:
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது

விக்கிபீடியா கட்டுரை பார்க்க: வ. அ. இராசரத்தினம்

மலைநாடான் said...

// அப்படித்தான் மூன்று நான்கு தடவை முயற்சித்த பின் தான் முழுமையாகக் கிடைத்தது. மலைநாடான், கட்டாயம் இதற்கு ஒரு மாற்றுவழி பாருங்கள். நட்சத்திர வாரமும் அதுவுமாக.
//

பக்கத்திலிருந்த ஒலி, ஒளிச்செயலி, இணைவதில்தான் காலதாமதமாகின்றது என்று எண்ணுகின்றேன். அதனால்தான் முழுமையாகத்திறக்கவில்லை. இரண்டாவது தடவையில் திறக்கிறது. தற்போது ஒலி ஒளிச் செயலியை எடுத்து விட்டேன். இப்போ சரியாக உள்ளதா என்பதை அறியத்தாருங்கள்.

உங்கள் சுட்டிகளுக்கும், சுட்டிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

Anonymous said...

நன்றி மலைநாடன், இப்பொழுது முதல் முறையிலேயே முழுமையாகத் தெரிகிறது.

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

இளைய தலைமுறையினர் பலர், இவரை வாசிக்கத் தவறிவிட்டார்கள். இங்கே பின்னூட்டத்தில் அவரது படைப்புக்களுக்கான சில சுட்டிகளை, நண்பர் கனக்ஸ் இணைத்துள்ளார்கள், சென்று வாசித்துப்பாருங்கள். நல்லதொரு வாசிப்பனுவபம் கிடைக்கும்.
நன்றி!

மலைநாடான் said...

விருபா!

உங்கள் வருகைக்கும் , இணைப்புச் சுட்டிகளுக்கும், மிக்க நன்றி!

மலைநாடான் said...

அனானி!

உண்மைதான். இராசரத்தினம் மறக்கமுடியாத மண்ணின் மைந்தன் தான்
நன்றி!

மலைநாடான் said...

வெற்றி!

ஆவரைப்பற்றித் தற்போது அறிந்து கொண்டடீர்கள்தானே. இனிக்கிடைக்கும் தருணங்களில் வாசியுங்கள்.
நன்றி!

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

வ.அ.இராசரத்தினம் அவர்களின் எழுத்துக்கள் என் கல்லூரி நூலகத்தின் மூலம் அறிமுகமாகின. கிரெளஞ்சப் பறவைகள் கூட அவரின் படைப்புத் தான் என்று நினைக்கின்றேன். மீள ஞாபகப்படுத்தியமைக்கு என் நன்றிகள்.

theevu said...

Chandravathanaa
//இவரது தோணி கதை படித்திருக்கிறீர்களா. //

தோணி கதை இன்னமும் நினைவில் நிற்கிறது.இதுவே அவரது வெற்றி.யாரிடமும் இருந்தால் இணையத்தில் ஏற்றவேண்டும்.

செல்வநாயகி said...

மலைநாடான்,

இராசரத்தினம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. அவரது ஆக்கங்களைப் படிக்கும் ஆர்வத்தை உங்களின் இப்பதிவும், பின்னூட்டங்களும் தூண்டுகின்றன.

சிலநேரங்களில் உங்கள் இடுகைகளில் பின்னூட்டமிட முயற்சித்தால் ஏதோ தொழில்நுட்பத் தகராறு வந்து அனுமதிப்பதில்லை மலைநாடான். மற்றபடி உங்களின் இவ்வார இடுகைகளை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.

Anonymous said...

மலைநாடான்
பதிவுகளில் ஈழத்துச்சிறப்பிதழ் போட்டபோது, தோணியும் வந்ததாக ஞாபகம்.
http://www.geotamil.com/pathivukal/pathivukal_pongal2003/Pathivukal_Pongal2003.html
இணைப்புத்தான் கிட்டேல்லை

மலைநாடான் said...

//வ.அ.இராசரத்தினம் பற்றி எழுதியது மகிழ்வைத் தருகிறது. குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது தோணி கதை படித்திருக்கிறீர்களா. மிகவும் நல்ல கதை. //

சந்திரவதனா!

வ.அ.இ, மறக்கலாமா? தோணி வாசித்த ஞாபகம் இல்்லை. காவியம் நிறைவேறுகிறது கண்டிப்பாக வாசிக்க வேண்டும். முயற்சியுங்கள்.
நன்றி!

மலைநாடான் said...

கனக்ஸ்!

நீங்களெல்லாம் தவறாது வந்து வாசித்துக் கருத்துச் சொல்வதே மகிழ்ச்சி தருகிறது. வ.அ.இ ன். குடும்பத்தினர்க்கு நடந்த சோகம் நானும் தற்போதே அறிந்து கொண்டேன். என்ன செய்வது இதுவே நம் வாழ்வாகிப்போயிற்று.

மலைநாடான் said...

வசந்தன்!
வந்து போறியள் என்டு சொல்லுறியள். வந்து
ஏதாச்சும் சொல்லுங்கோ

மலைநாடான் said...

தீவு!
தோணி கதை நானும் இன்னமும் வாசிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். தற்போது கனக்ஸ் இங்கே இணைத்திருக்கும் இணைப்புக்களில் இருக்கிறது போல் தெரிகிறது. வாசிக்க வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மலைநாடான் said...

செல்வநாயகி!

இராசரத்தினம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு மக்கள் கலைஞன். இங்கே இணைக்கபட்டுள்ள இணைப்புக்களால் அவரை நீங்களும் வாசிக்க முடியும்
நன்றி!

விருபா - Viruba said...

பதிவுகள் தளத்தில் தோணி இணைக்கப்பட்டுள்ளது.

http://www.geotamil.com/pathivukal/story_va_rasarathinam.html

Anonymous said...

vidayaththukku mikka nannry,avarathu thaai sirukathaaiyai pirasurippathhu varavetkaththakkkathu.