Wednesday, May 09, 2007

தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன?


தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன? . தமிழ் மணத்திற்கு இது நியாயமா? இதற்குத் தமிழ்மணம் என்ன செய்யப் போகிறது? தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் கிடைக்குமா? தலைப்பினாலோ அல்லது என்மீதான அன்பினாலோ வந்திருக்கும் உங்களிடமும், தமிழ்மண நிர்வாகத்தினரிடமும், முதலில் இப்படியொரு தலைப்பிட்டமைக்கு, இவ்விடுகையின் தார்மீக காரணத்திற்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.


அன்மைக்காலங்களில் தமிழ்மணம் என்னும் பெயர் , இடுகைகளில் அல்லது பதிவுகளில், தமிழ்சினிமாக்களில் கூட்டம் சேர்க்க கவர்ச்சி நடிகை என்பதற்கிணையாக, பதிவுகளுக்கு ஆட்களை அழைத்துவரும் உத்தியாக, இடுகைத்தலைப்புக்களில் பாவிக்கப்படுவது போல் ஒரு தோற்றம் தென்பட்டதாலும், தமிழ்மணம் என நான் இவ்விடுகையில் சுட்ட விழைவது, தமிழ்மணத்தின் பதிவர்களையும், வாசகர்களையும் என்பதாலும், இந்த இடுகைக்கு இப்படியொரு தலைப்பு. மற்றும்படி இந்த இடுகைக்கும் தலைப்புக்கு எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் இடுகையின் நோக்கம் உன்னதமானது. ஆதலால் தயவு செய்து சற்றுப் பொறுமையுடன் வாசித்துச் செல்லுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

சென்றவாரத்தில் ஒரு நாள் பதிவர் ஒருவரிடம், இணையவழி பேசிக்கொண்டிருந்தபோது, பலவிடயங்களையும் இணையவழி அறிந்துகொள்கின்றோம். உலகின் எல்லா நன்மை தீமைகளும் தெரிகிறது. ஆனாலும் வாசித்து விட்டு அப்படியே அயர்ந்துவிடுகின்றோம், வேறில்லை எனக் கவலைப்பட்டார். இதே கவலையை பல பதிவுகளிலும், இடுகைகளிலும் கூட அவ்வப்போது கண்டிருக்கின்றேன். ஆனால் என்ன? பின்னூட்ட ஒப்பாரியோடு, அவை முடிந்துவிடும். பின் பிறிதொரு நாளில் ஆரம்பிக்கும்.


சென்ற சில மாங்களுக்கு முன் ரவிசங்கர் இட்ட இப்பதிவினை இரு தினங்களின் முன் பார்க்கக் கிடைத்தது. அதிலும் ஆதங்கங்கள் பல எழுந்திருந்தன. இப்பதிவில் சொல்லப்பட்ட விடயத்துக்கு முழுமையான தீர்வென்பது, அரசுகளால் அன்றி, சாதரண மக்களால் ஏதும் ஆவதிற்கில்லை என்றபோதும், எங்களால் முடிந்தவரையில் முயற்சிக்கலாம்.


சுவிஸ் ஒரு முதலாளித்துவக் கொள்கைசார் நாடு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிருந்து கூட இடதுசாரி நண்பர்கள் சிலர் கியூபாவில் உணவும், கல்வியும் பெறச் சிரமப்படும் குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து வந்து, இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில், தங்கியிருந்து உதவிகள்புரியும் தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிலருடன் எனக்கு அறிமுகமும் உண்டு. சில பணிகளில் இணைந்த அனுபவமும் உண்டு. நானறிந்தவரையில், அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அப்பணியின் பின்னால் இருப்பது வரையறையற்ற மனிதநேயமே.


இந்த நேயம், இணையத்தில் எழுதும் எங்களிடமில்லையா? இல்லாமலா மகாலட்சுமிக்கும், கெளசல்யாவுக்கும், வேறுசில உதவிகளுக்கும், எங்கள் கைகள் இணைந்தன. இத்தகைய பணிகளுக்கு முதலில் தேவையானது புரிந்துணர்வுமிக்க ஒரு கூட்டுழைப்பு. அந்தக் கூட்டுழைப்பு எங்களிடம் இருந்துவிட்டால், இத்தகைய செய்திகள் சுட்டும் இழப்புக்களில் ஒரு சிலவற்றையாவது இல்லாது செய்ய முடியும்.


உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்களே! உன் பின்னால் யார், என் பின்னால் நீ, என்றெல்லாம் எண்ணாது, மனிதநேயம் என்னும் மகத்தான சிந்தனையோடு மட்டும் செயலாற்ற விரும்புபவர்களே! வாருங்கள் ஒன்றாய் கூடி, ஒருமனதாய் திட்டமிட்டு, ஒருசில உயிர்களையாயினும் காத்திடுவோம். இதற்கான எண்ணம் மட்டுமே எம்மிடத்தில் இப்போதுண்டு. இணையும் கரங்களின் பலத்திலும், மனத்திலும், உருவாக வேண்டும் ஒரு பொதுவேலைத்திட்டம். ஆதலால் ஆர்வமுள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை இங்கே தாருங்கள், இணைந்து செயற்பட இங்கு uthavi@gmail.com மடலிடுங்கள். இணையும் பணி எல்லோர்க்குமாயினும், இணைக்கும் தமிழிலேயே முடிந்தவரை உறவாடுவோம், தொடர்பாடுவோம். இணையம் எனும் பெருந்துணையால், இயன்றவரை வழிநடப்போம்.....உங்கள் உறவாடல் கண்டபின் மறுபடியும் இது குறித்து உரையாடுவேன்.


- நட்புடன்

மலைநாடான்.

Monday, May 07, 2007

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1

வரவேற்பு

"அல்ப்ஸ் மலையின் சிகரத்திலே.." என்று பாடலைப் பாடிக்கொண்டு, ஈழத்தின் தெருக்களில் திரிந்த போது, சிறிதும் எண்ணிப்பார்த்திராத இந்த மண்ணில், சில வருடங்களின் முன் ஓரு மே மாதத்தின் முதல் வாரத்தில்தான் கால் பதிந்திருந்தேன். எத்தனையோ தடவை எழுத வேண்டுமென்று எண்ணிய போதும், ரவிசங்கர் ' நாடு நல்ல நாடு' தொடர்வினைக்கு அழைத்த போதும், எழுதும் சோம்பலில் விடுபட்டுப் போயிருந்த எண்ணம், கால்பதித்த நாட்களின் ஞாபகங்கள், மீள்நினைவாய் வந்து விழும் இன்றைய பொழுதுகளில் எழுந்திட எழுதுகின்றேன். வாருங்கள் இந்தத் தொடர்வழி, அல்ப்ஸ் மலைகளின் சாரல்களில் அலைந்து வருவோம். நான் கண்ட, கேட்ட கதைகளினூடு, ஐரோப்பிய சொர்க்கம், உலகின் பூந்தோட்டம், என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்ட சுவிற்சர்லாந்தில் நடைபயில்வோம்.








Willkommen auf Schweizer சுவிஸ் டொச்.

Bienvenue dans le Suisse சுவிஸ் பிரெஞ்.

Benvenuto in Svizzera சுவிஸ் இத்தாலி.

Allegra de Svizra சுவிஸ் ரொமான்ஸ்


சுவிற்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கிலும் வரவேற்புக் கூறினால் மட்டும் போதுமா? சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் உங்களுக்குத் தேசிய வாத்திய இசை மூலம் வரவேற்றால்தானே மரியாதையாக இருக்கும்.

தேசிய வாத்தியமான அல்ப்ஹோர்னைப் பற்றி, " சுவிசின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று அல்ப்ஹோர்ன் ( Alphorn) . அன்னளவாக எமது நாதஸ்வரத்தை ஒத்திருக்கும். குழல் வடிவான இக்கருவி வாய்பகுதியிலிருந்து சிறிது சிறிதாக அகன்று சென்று, மேல் நோக்கி வளைந்து , பலத்த சத்தத்தை ஒலிக்கும் வகையில் பருத்து விரியும். நிலத்தில் நின்றவண்ணம் ஊதி இசைக்கும் இக்கருவியின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மீற்றரைத் தாண்டும். கோடைகால வருகையுடன், மேச்சலுக்காக கால்நடைகளை அல்ப்ஸ் மலைச்சாரல்களை நோக்கி நகர்த்துகின்ற விவசாயிகள், கூடிக்குதுகலித்து குரலெழுப்பும் விவசாயிகளின் செய்தி கூறுமிசையாகவும் இதைப்பார்க்க முடிகிறது. இயற்கை வனப்புக்களோடு முட்டி மோதி வருகின்ற சுவிசின் சுவாசக்காற்றை, சுருதி பேதமின்றி ஒலிக்கும் அல்ப்ஹோர்ன் " முன்னரே எழுதியுள்ளேன்.
வரவேற்ற உங்களுக்கு வகையாய் சுவையாய் சொக்லேட் தரவிடின், பிறகென்ன சுவிஸ் வரவேற்பு. ஆகவே வந்த உங்களுக்கு வாய்க்கு ருசியாக, சுவிஸ் ப்ரீமியம் சொக்லேட்.



Photo Sharing and Video Hosting at Photobucket
சொக்லேட் சாப்பிட்டாயிற்றா? இந்த இடுகையை இன்றைக்கு வாசியுங்கள். சுவிற்சர்லாந்து பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கும். அடுத்த பகுதியில் அல்ப்ஸின் சாரல்களில் நடக்கத் தொடங்குவோம்....

Thursday, April 26, 2007

மொழி

சென்றவாரத்தில் இளைய மகளின் பாடசாலையில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்கள். சற்று அலுத்துக் கொண்டேதான் போனேன். காரணம் சில சின்ன பிரச்சனைகளையும், தீவிரமாகக் கதைத்துக்கொள்வார்கள். ஐரோப்பியர்கள், வெள்ளையர்கள், எல்லா விவரமும் புரிந்தவர்கள் எனும் எண்ணம், இப்படியான சந்திப்புக்கள் சிலவற்றிலேயே என்னிடமிருந்து அற்றுப்போனது. ஆனால் ஒன்று பிடித்திருந்தது. புரியவில்லை, தெரியவில்லை என்பதை, எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. இம்முறை சந்திப்புச் சற்றுச் சுவாரசியமாகவிருந்தது. காரணம் நாங்களும் அடிக்கடி பேசிக் கொள்ளும் ஒருவிடயம், அங்கும் அன்று விவாதத்திற்கு வந்திருந்தது.

சுவிற்சர்லாந்தில் மாநில அரசுகளுக்கான அதிகாரப்பரவலாக்கம் பலவிடங்களிலும், பல துறைகளிலும், அந்தந்த மாநிலங்களின் தனித்துவத்தை அதிகமாகப் பேணும். மொழிசார்ந்த விடயங்களில் இந்தத் தனித்துவத்தை எங்கள் மாநிலம் சற்று இறுக்கமாகவே கடைப்பிடிக்கும். அரச அலுவல்கள் தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக மாநில மொழியிலேயே எல்லாம் நடைபெறவேண்டுமென இறுக்கமாக இருப்பார்கள். அன்றைய கலந்துரையாடலிலும் இந்த மொழிசார்ந்த விடயமே பிரதானமாகப் பேசப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான கல்வித்துறை மாற்றத்தில், ஒன்பதாம் ஆண்டு கல்வியை நிறைவு செய்து, மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர், கட்டாயம் மாநில மொழியில் கண்டிப்பாகத் திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதுவே அன்றைய கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விடயம். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவனுக்கு துறைசார் பாடங்களில் திறமைச்சித்தியிருந்தால் போதும்தானே? மொழியில் திறமைச்சித்தி ஏன் ? நிகழ்கால உலகில் ஆங்கிலம்தான் உலகத் தொடர்புக்கு உகந்தது, என்ற வகையில் விவாதங்கள் நடைபெற்றது. ஆனால் இறுதியில் தாய் மொழி என்ற வகையில் மாநிலமொழி திறமை பெற்றிருப்பது, உயர்கல்விகற்கும் எவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டியதகமை. இல்லையெனில் தாய்மொழிக்கான அவமானம் அது, என்ற வகையிலும் கருத்துக்கள் வந்தன. இம்மாற்றம், வெளிநாட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணமும் எடுத்தாளப்பட்டது. உயர்கல்விக்குத் தெரிவாகும் மாணவன், தன் துறைசார் பாடங்களிலும், தாய்மொழியிலும்(மாநிலமொழி) கண்டிப்பாக திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது, அநேகமாக அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வரலாம். சந்திப்பு முடிந்து வரும் போது என் மனதில் மொழிகுறித்த இந்த அக்கறை நம்மிடம் அவ்வளவாக இல்லையோ?... என எண்ணத் தோன்றியது.


சென்றவாரத்தில் ஒரு நண்பரின் குழந்தை, அழகாகத் தமிழில் நன்றி என்று சொல்லியபோது, மனங்குதுகலித்தது. சுஜெய் எனும் பெயர்கொண்ட அக் குழந்தையின் வயது பதின்னான்கு மாதங்கள். குழந்தையின் தாய் சுவிஸ் ஜேர்மன் மொழியிலேயே தன் முழுக்கல்வி நிலையையும் கற்றுத் தேறியவர்.

Monday, April 09, 2007

ஊட்டியது யார் ?

" ஆண்களுக்குச் சமானமாக நின்று பேசத்தெரியாமல், அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு 'ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் ' என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலா வரும். அவையும் அவையின்ர வெட்கமும்... " இது வாரஇறுதியில் நான் சந்தித்த ஒரு இளைய எழுத்தாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியின் முதலாவது கதையின் மேற்கோள் வாசகம்.. "

வார இறுதியில் குடும்பமாக வெளியே சென்று வரும் போது, பிள்ளைகளோடு பேசுகையில் என் பெரிய பெண், தன் வகுப்பில் விவாதிக்கப்பட்ட ஒரு விசயத்தைச் சொன்னாள். ஐரோப்பிய சமூகத்தைச்ச சார்ந்த ஒரு இளம்பெண் தனது ஆண்நண்பனுடன் ஏற்பட்ட மனமுறிவைச் சீர் செய்ய, தனது செல்லிடத்தொலைபேசியிலுள்ள ஒளிப்பதிவுக்கருவி மூலம் தன்னை நிர்வாணப்படமெடுத்து, தொலைப்படமாக அனுப்பிவைத்திருக்கிறாள். அதை அவளின் ஆண் நண்பன் தன் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி மகிழ்ந்திருக்கிறான். ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். இந்தச் சிந்தனையாக்கம் சின்ன சின்னச் சந்தோசங்களினால் எல்லோராலும் கட்டி எழுப்பப்படுகிறது. அது சீர்குலைந்து, தன் பிரமாண்டத்தைக் காட்டும்போது மட்டும் ஆளையால் குற்றம் சாட்டி மற்றவர் தப்பித்துக்கொள்கின்றோம். அவ்வளவுதான்..


எழுத்தாளர்களிடம் நேரடியாக நூல்பெறும் போது அவர்களின் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ளும் என் வழக்கத்தின் படி அந்த இளம் எழுத்தாளரிடமும் கேட்க, அவர் சிரித்துக்கொண்டே கையெழுத்திட்டுத் தந்தார். எதிர்காலத்தில் பலர் கையெழுத்திட்டு வாங்கக் காத்திருக்கக்கூடும் என்னும் நம்பிக்கையை, அவர் எழுத்துக்கள் தோற்றுவிக்கின்றன...

"அர்த்தம்" எனும் அச்சிறுகதைத்தொகுப்பின் முதலாவது கதையான "கேள்விகளில்" உள்ளே வரும் உரையாடல்களில் ஒன்று..
“ எங்களில கன பிள்ளையள்கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ? எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப எல்லா நாட்டு கல்வியறிவும் இருக்கிறதுதான். அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை
"