Thursday, June 14, 2007

வெல்க தமிழ்

படம்: நன்றி "புதினம்"

வெல்க தமிழ் பேரணிநிகழ்வும் சில அவதானிப்புக்களும்.

11.06.2007 திங்கள் கிழமை, சுவிற்சர்லாந்து ஜெனிவாவில் ஐ.நா சபை நோக்கி, புலம்பெயர்தமிழர்களால் "வெல்க தமிழ்" எனும் அடையாளத்தோடு, நடாத்தப்பட்ட பேரணி, அரங்க நிகழ்வுகள் குறித்த, நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியை ஐரோப்பியத் தமிழ்வானொலி, ஆவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவற்றுக்காக தொகுத்து வழங்கச் சென்றிருந்தேன். என் அவதானிப்பில் சில..

அன்று முழுவதும், சுவிற்சர்லாந்தின் எல்லாப்பகுதிகளிலும் அடைமழைபெய்து கொண்டிருந்த போதும் நன்பகல் முன்பதாகவே பலர், பேரணி ஆரம்பமாகிய மைதானத்தில் குவியத் தொடங்கினார்கள்.

நமது குடும்ப உறவுகள் ஐம்பது பேருடன் ஒரு வைபவத்தை நிகழ்த்துவதாயின் கூட நாம் படும் சிரமமே சொல்லி மாளாது. பல நாடுகளிலிருந்தும் வரும் முகந்தெரியா உறவுகளை, வரவேற்று உணவளித்து, நிகழ்வில் பங்கேற்கவைத்து, மீண்டும் வழியனுப்பி வைப்பது என்பது இலேசான காரியமல்ல. ஆனால் அதை இம்மியும் பிசகாமல் செய்த, அர்ப்பணிப்புமிக்க தொண்டு பணியாளர்களின் பணியும், அதை கட்டமைத்து வழிநடத்திய சுவிஸ் பணியகத்தின் திறமையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

ஏதிலிகளாக இந்நாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த எம்மவரை, சுயமற்ற சிலர் எள்ளி நகையாடினார்கள், இன்று சுயதொழில் முனைவர்களாக உயர்ந்துள்ள நம்மவர் பலர், நிகழ்ச்சிக்கு பல அனுசரனைகளை வழங்கியிருந்தது பெருமையாகவிருந்தது.

பிற்பகல் 2.00 மணிக்கு ஜெனிவா தொடரூந்துநிலையத்திற்கு அண்மையிலுள்ள பூங்காவில் ஆரம்பமாகிய பேரணி சுமார் 3.00 அளவில் ஐ.நா சபையை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த வேளையிலும், பேரணி ஆரம்பமாகிய இடத்தில் பேரணியில் மக்கள் இணைந்து கொண்டிருந்தார்களாம்.

எங்கள் எண்ணங்களை, துன்பங்களை, உலகின் கண்ணுக்கு ஒப்புவிக்க ஒருகாலத்தில் ஊடகம் எதுவுமில்லாதிருந்த நிலைமாறி, உலகம் எங்கெனும், ஒலி,ஒளிஅலைகளில் உணர்வுகளைக் கொண்டு செல்ல எங்கள் ஊடகங்கள் திரண்டிருந்தன. அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், புலிகளின் குரல், ஐரோப்பியத்தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவை ஒலிஅலை வழியாகவும், தரிசனம், ரீ.வி.ஐ ஆகிய தொலைக்காட்சிகள் ஒளி அலை வழியாகவும், உலகம் நிகழ்ச்சிகளைக் கருத்தாகவும், காட்சியாகவும் வெளிப்படுத்தின. இம்முறை இணைய ஊடகம் சார்ந்தும் செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.

பேரணியின் முன்னணியில் திரு. பழ.நெடுமாறன்ஐயா அவர்கள் மாறாத அதே மென்னகையோடு, ஐ.நாசபை வரை, கையில் தேசியத்தலைவரின் படந்தாங்கி நடந்தே வந்தார். ஐயா அவர்கள் உடல் நலம்குன்றியிருந்தபோது, புலத்தில் அவரது நலம் வேண்டி பிரார்த்தித்த ஒவ்வொரு தமிழனும், அகமகிழ்ந்திருப்பான். அதுபோன்றே ஐயா அவர்களும், ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்ததற்காக, இரண்டாண்டுகள் சிறைப்பட்ட துயரம், மறந்திருப்பார். அரங்க உரையில் அவரே சொன்னார்.

அரங்க நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் உரையாற்றியது, எங்கள் விடுதலைப்போராட்ட நியாயத்தினை சாட்சிப்படுத்துவதாக இருந்தது.

தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், தன் உரையில் பேரணியின் ஒழுங்கமைப்பை வியந்தார். சுவைபட மக்களிடம் செய்திகள் சொன்னார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்காவின் உறவினர், கலாநிதி, பிறையன் செனவிரட்னாவின் உரையில், சிறிலங்காவின் அரசியல் யதார்த்தம் தெரிந்தது. உலகத்தமிழர்களின் உறுதி எவராலும் கலைக்கப்படா முடியாது என்பதை தெளிவாகச் சொன்னார்.

நீண்ட தூரங்களிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து பிரயாணம் மேற்கொண்டு வந்த களைப்போ, தூறலாகத் தொடங்கிய மழை உரக்கப் பெய்யத் தொடங்கியபோதோ, உறுதியாக நின்ற மக்களின் மனத்திடம் மகத்தானது. அந்த மகிமைதானே, தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் முன்னெடுத்துச் செல்கிறது.











6 comments:

வி. ஜெ. சந்திரன் said...

மலைநாடான் தகவலுக்கும், பதிவுக்கும் நன்றி.

ஆனால்
//உலகத்துக்கு எடுத்து செல்ல உடகங்கள் இருக்கிறன//
இந்த கூறில் சொன்ன அனைத்து ஊடகங்களுமே தமிழர்களுக்காக, தமிழரால் நடாத்தப்படுபவை. அவற்றின் வாசகர் வட்டம், ரசிகர் வட்டம்/ பார்வையாளர்கள் தமிழ் மக்களே. தமிழ் மக்களா உலகம்?
கடந்த முறை ஐரோப்பிய பாராளுமன்றின் முன்னும் 20,000 மேல் மக்கள் கூடினார்கள் ஆனால் உலகின் சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்திகளின் ஒரு வசனம் தன்னும் இடம்பெறவில்லை.

ஆனால் இந்த முறை நடைபெற்ற சுவிஸ் நிகழ்வை ஏஎவ்பி யின் செய்தியில் மட்டும் காண முடிந்தது. கனடா நிகழ்வை கன்டாவின் ஒரு இணைய பத்திரிகையில் மட்டும் காண முடிந்தது.
கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது ஒரிரு சர்வதேச செய்தி நிறுவனங்களின் பார்வையாவது பட்டுதே என சொல்ல முடியும்.

ஆனால் எமது உடகங்களில் உலகம் முழுக்க ஒலி/ஒளி பரப்பினாலும் எனக்கு அது குண்டு சட்டிக்குள் குதிரை ஒடுவது போல் தான்.

எமது மக்களுக்கு இச்செய்தி எப்படியும் பொகும், போக தான் வேணும், ஆனால் அது உலகமல்ல.....

சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா தெரியவில்லை. முன்பு சயந்தனும் ஒரு ஒலிப்பதிவு இதை பற்றி போட்டிருந்தார்.

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

இந்த நிகழ்வை எங்கள் நேரம் இரவு 10.30 மணி முதல் சிறப்பான தொகுப்பை அளித்திருந்தீர்கள், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகிகள் தமது நன்றியறிதலைத் தெரிவித்திருந்தார்கள், வெல்க தமிழ் மூலம் இணைந்தோம்.

தொடர்ந்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
தகவலுக்கு நன்றி!
சந்திரன் உலக ஊடகங்கள் "நித்திரைபோல் நடிக்கிறார்கள்" என்ன? செய்வது.
பாரிசில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 3 நாள் போட்டுக் காட்டினார்கள். ஆனால் அதை ஒட்டி நடந்த ஊர்வலமுயற்சி, அரசமறுப்பு...ஒன்று கூடல் பற்றி எந்தச் செய்தியும் கசிய விடவில்லை. இவர்களை என்ன? செய்வது.
அதாவது செய்தியில் பாகுபாடு காட்டுகிறார்கள். இது வெளிப்படையாகத் தெரிகிறது.
செங்சிலுவைச் சங்க ஊழியர் கொலை, இங்கு காட்டவில்லை.இவர்களைப் பொறுத்த மட்டில் இது செய்தியல்ல!!
அல்ஜீரா-இன்ரநசனல் போல் ஒன்று வரவேண்டும்.

மலைநாடான் said...

வி.ஜே!

உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கேள்விக்கு யோகனின் கருத்துக்களில் ஒரு சில பதில்கள் உண்டு.

தமிழ் ஊடகங்களினூடு, பல்திசையிலும் வாழும் எமது மக்களுக்குத் தகவல் தரத் தொடர்பற்றிருந்த நிலை மாறியிருப்பது கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும் இந்தத் தொடர்பாடலினாலும் பயன் இருக்கவே செய்கிறது. இல்லையெனில் ஏன் ரீ.ரீ.என் தொலைக்காட்சி மீது அழுத்தம் வருகிறது.

தமிழ்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியில் மட்டும் செய்தியில் சிறுபகுதி காட்டப்பட்டது. ஆனால் அவர்கள் முயற்சித்தால், ஒரு நிகழ்ச்சித்தொகுப்பை தரிசனத் தொலைக்காட்சியினூடு பெற்று, நிறைவாக இனிமேலும் ஒளிபரப்பலாம். அதன்மூலம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இந்தச் செய்திகள் சென்றடையும்.


பிறமொழி ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கின்றார்கள். ஆனால் பிரசுரிப்பதுதான் இல்லை. ஆனால் அது போகவேண்டிய உயரிடங்களுக்குப் போகத்தான் செய்கிறது. அதனால்தான் இன்றளவும், விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தமுடியாது என்பதை உணர்ந்த ஊசலாட்டங்கள், பேச்சுவார்த்தைகள் வடிவத்தில் அரங்கேறுகின்றன.


எங்கள் ஊடகங்கள் இப்போது செய்யவேண்டிய இன்னுமொரு பணி, தங்கள் சேவைகளின் ஒருபகுதியை, மாற்றுமொழிச்சேவையாக வழங்குவது.
தமிழ்நெற் ஒன்றுதான் இந்தவழியில் இதுகால்வரைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இணையவழியில், இளைஞர்களால், இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட முடியும்.

மற்றும்படி நீங்கள் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

மலைநாடான் said...

பிரபா!

உங்கள் பாராட்டுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

மலைநாடான் said...

யோகன்!

பல சரியான கருத்துக்களைச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.