Thursday, April 26, 2007

மொழி

சென்றவாரத்தில் இளைய மகளின் பாடசாலையில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்கள். சற்று அலுத்துக் கொண்டேதான் போனேன். காரணம் சில சின்ன பிரச்சனைகளையும், தீவிரமாகக் கதைத்துக்கொள்வார்கள். ஐரோப்பியர்கள், வெள்ளையர்கள், எல்லா விவரமும் புரிந்தவர்கள் எனும் எண்ணம், இப்படியான சந்திப்புக்கள் சிலவற்றிலேயே என்னிடமிருந்து அற்றுப்போனது. ஆனால் ஒன்று பிடித்திருந்தது. புரியவில்லை, தெரியவில்லை என்பதை, எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. இம்முறை சந்திப்புச் சற்றுச் சுவாரசியமாகவிருந்தது. காரணம் நாங்களும் அடிக்கடி பேசிக் கொள்ளும் ஒருவிடயம், அங்கும் அன்று விவாதத்திற்கு வந்திருந்தது.

சுவிற்சர்லாந்தில் மாநில அரசுகளுக்கான அதிகாரப்பரவலாக்கம் பலவிடங்களிலும், பல துறைகளிலும், அந்தந்த மாநிலங்களின் தனித்துவத்தை அதிகமாகப் பேணும். மொழிசார்ந்த விடயங்களில் இந்தத் தனித்துவத்தை எங்கள் மாநிலம் சற்று இறுக்கமாகவே கடைப்பிடிக்கும். அரச அலுவல்கள் தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக மாநில மொழியிலேயே எல்லாம் நடைபெறவேண்டுமென இறுக்கமாக இருப்பார்கள். அன்றைய கலந்துரையாடலிலும் இந்த மொழிசார்ந்த விடயமே பிரதானமாகப் பேசப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான கல்வித்துறை மாற்றத்தில், ஒன்பதாம் ஆண்டு கல்வியை நிறைவு செய்து, மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர், கட்டாயம் மாநில மொழியில் கண்டிப்பாகத் திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதுவே அன்றைய கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விடயம். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவனுக்கு துறைசார் பாடங்களில் திறமைச்சித்தியிருந்தால் போதும்தானே? மொழியில் திறமைச்சித்தி ஏன் ? நிகழ்கால உலகில் ஆங்கிலம்தான் உலகத் தொடர்புக்கு உகந்தது, என்ற வகையில் விவாதங்கள் நடைபெற்றது. ஆனால் இறுதியில் தாய் மொழி என்ற வகையில் மாநிலமொழி திறமை பெற்றிருப்பது, உயர்கல்விகற்கும் எவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டியதகமை. இல்லையெனில் தாய்மொழிக்கான அவமானம் அது, என்ற வகையிலும் கருத்துக்கள் வந்தன. இம்மாற்றம், வெளிநாட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணமும் எடுத்தாளப்பட்டது. உயர்கல்விக்குத் தெரிவாகும் மாணவன், தன் துறைசார் பாடங்களிலும், தாய்மொழியிலும்(மாநிலமொழி) கண்டிப்பாக திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது, அநேகமாக அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வரலாம். சந்திப்பு முடிந்து வரும் போது என் மனதில் மொழிகுறித்த இந்த அக்கறை நம்மிடம் அவ்வளவாக இல்லையோ?... என எண்ணத் தோன்றியது.


சென்றவாரத்தில் ஒரு நண்பரின் குழந்தை, அழகாகத் தமிழில் நன்றி என்று சொல்லியபோது, மனங்குதுகலித்தது. சுஜெய் எனும் பெயர்கொண்ட அக் குழந்தையின் வயது பதின்னான்கு மாதங்கள். குழந்தையின் தாய் சுவிஸ் ஜேர்மன் மொழியிலேயே தன் முழுக்கல்வி நிலையையும் கற்றுத் தேறியவர்.

Monday, April 09, 2007

ஊட்டியது யார் ?

" ஆண்களுக்குச் சமானமாக நின்று பேசத்தெரியாமல், அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு 'ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் ' என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலா வரும். அவையும் அவையின்ர வெட்கமும்... " இது வாரஇறுதியில் நான் சந்தித்த ஒரு இளைய எழுத்தாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியின் முதலாவது கதையின் மேற்கோள் வாசகம்.. "

வார இறுதியில் குடும்பமாக வெளியே சென்று வரும் போது, பிள்ளைகளோடு பேசுகையில் என் பெரிய பெண், தன் வகுப்பில் விவாதிக்கப்பட்ட ஒரு விசயத்தைச் சொன்னாள். ஐரோப்பிய சமூகத்தைச்ச சார்ந்த ஒரு இளம்பெண் தனது ஆண்நண்பனுடன் ஏற்பட்ட மனமுறிவைச் சீர் செய்ய, தனது செல்லிடத்தொலைபேசியிலுள்ள ஒளிப்பதிவுக்கருவி மூலம் தன்னை நிர்வாணப்படமெடுத்து, தொலைப்படமாக அனுப்பிவைத்திருக்கிறாள். அதை அவளின் ஆண் நண்பன் தன் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி மகிழ்ந்திருக்கிறான். ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். இந்தச் சிந்தனையாக்கம் சின்ன சின்னச் சந்தோசங்களினால் எல்லோராலும் கட்டி எழுப்பப்படுகிறது. அது சீர்குலைந்து, தன் பிரமாண்டத்தைக் காட்டும்போது மட்டும் ஆளையால் குற்றம் சாட்டி மற்றவர் தப்பித்துக்கொள்கின்றோம். அவ்வளவுதான்..


எழுத்தாளர்களிடம் நேரடியாக நூல்பெறும் போது அவர்களின் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ளும் என் வழக்கத்தின் படி அந்த இளம் எழுத்தாளரிடமும் கேட்க, அவர் சிரித்துக்கொண்டே கையெழுத்திட்டுத் தந்தார். எதிர்காலத்தில் பலர் கையெழுத்திட்டு வாங்கக் காத்திருக்கக்கூடும் என்னும் நம்பிக்கையை, அவர் எழுத்துக்கள் தோற்றுவிக்கின்றன...

"அர்த்தம்" எனும் அச்சிறுகதைத்தொகுப்பின் முதலாவது கதையான "கேள்விகளில்" உள்ளே வரும் உரையாடல்களில் ஒன்று..
“ எங்களில கன பிள்ளையள்கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ? எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப எல்லா நாட்டு கல்வியறிவும் இருக்கிறதுதான். அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை
"