Friday, November 21, 2008

கைதுகளும் மௌனங்களும்


யாருக்குச் சொல்ல... ? சொல்லித்தான் என்ன...? என்கின்ற வலி காரணமாகவே வார்த்தைகள் செத்துவிடுகின்றன. ஆனாலும் இன்னமும் எங்கோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் துடிப்பு உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
பதிவர் லோஷன் கைதாகியது குறித்து எழுதுவதா விடுவதா என்பதிலேயே நாட்கள், வாரத்தைத் தொட்டுவிடப்போகிறது. மெளனமாயிருக்க விதிக்கப்பட்டோம் எனச்சொல்லலாமா? .... இல்லை. எதுவாயினும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

மலேசிய வலைப்பதிவர் ஒருவரின் கைது பற்றி அல்லது மற்றைய மொழிப் பதிவரின் கைது பற்றிப் பேச முடியுமெங்களுக்குச் சக பதிவரின் கைது பற்றி ஏன் பேசமுடிவதில்லை. தமிழக நண்பர்கள் கூடக் கேட்டிருந்தார்கள். இதை உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கமுடியுமென்பதில் சந்தேகமே. ஏனெனில் ஜனநாயகப் பளபளப்புப் பூசப்பட்ட பேரினவாதமது.

அங்கே கைதுகள், விசாரணைகள், தீர்புக்கள், எல்லாமே வித்தியாசமானவை. உள்நோக்கம் கொண்டவை. ஒருவர் கைதாகும் போதே அநேகமாத் தீர்ப்பும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதற்குப் பின்னான விசாரணையென்பது, அவர்கள் விருப்பத்துக்கு தக்கவாறு உருவாக்கப்படும். அரசியற் சட்டமும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் நம்மவர் சிலரும் சேர்ந்து உயர்த்தும் கைகளினால் உத்தரவாகும் அவசரகாலச் சட்டமும், அதற்குரிய சகல அதிகாரத்தையும், உரியவர்களுக்கு வழங்கிவிடுகிறது.

கைதுகள் பலவும் சாதரணமாய்தான் நிகழும். சற்றுத் தாமதமாகவே சோடனை அலங்காரங்கள் தொடங்கும். அந்த அலங்கரிப்புக்களுக்கு ஏடா கூடாமாக எதையும் எங்கள் எழுத்துக்களோ சொற்களோ எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே , இவ்வாறான தருணங்களில் எங்கள் மெளனங்கள்.

லோஷன் கைதும் சராசரியாகவே நடந்திருக்கிறது. அதனால் அவரைச் சார்ந்தவர்களும் சற்று அமைதியாகவே இருந்துவிட்டனர். ஆனால் அனுபவப்பட்ட ஊடகத்துறை உசாராகிக் கேட்கத் தொடங்க, கைதுக்கான காரணக்கதை வந்து விழுந்திருக்கிறது.

அல்ஹைடாத் தீவிரவாதிகளையறிந்து விவரணச்செய்தி தரும் அல்ஜசீரா ஊடகவியலாளன் அமெரிக்காவிலும் செய்தி சேகரிக்கலாம். மத்திய அரசும், மாநில அரசும், தேடிக்கொண்டிருந்த வீரப்பனை நக்கீரன் கோபல் தேடிச் சந்திக்கலாம். தேவையாயின் தூதனாகலாம். அது ஊடக சுதந்திரம்.
லோசனின் கைதில் இப்போது வந்து விழுந்திருக்கும் கதை, ஒரு ஊடகவியாலனுக்கு ஒட்டிப் பார்க்க முடியாதது. ஆனாலும் இலங்கையில் முடிகிறது காரணம்...? கைது செய்யப்பட்டிருப்பவன் ஒரு தமிழன். கைது செய்திருப்பது பேரினவாதம். இனி கதையைத் தொடரலாம், நிறுத்தலாம், நீட்டலாம்.... வெற்றி எப் எம்மில் வேறொரு தமிழன் முகாமையாளராகலாம்...அவனுக்கும் இது தொடரலாம்......

அவசரக்காலச்சட்டம் அதிக வருடங்கள் சிறிலங்காவில்தான் நீடித்திருந்ததென்னும் உலக சாதனைக்காக உங்கள் கைகளை உயர்த்தியதாக ஒரு பொய் சொல்லிட்டுப் போங்கள்......உங்களுக்கென்ன..?