Saturday, April 29, 2006

சிலுவைப்பாடு - ஒரு பண்பாட்டுக் கோலம்


1998 ம் ஆண்டில் பார்க்கத்தவறியதே என எண்ணிக் கவலைப்பட்ட ஒரு பண்ணபாட்டுப் பாராம்பரியத்தை, சென்ற 13.14ம் திகதிகளில் பார்க்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது.ஐரோப்பியர்களின் பாரம்பரிய பழமை பேணுதலில் இத்தாலியர்களின் மரபு உலகப்பிரசித்தமானதே. கத்தோலிக்க மத பாரம்பரியம் சார்ந்த அவர்களது பழமை பேணுதல் இன்றைய பொழுதுகள் வரை தொடர்கிறது.

ஜெர்மனிய, பிரெஞ்சு, இத்தாலிய, பாரம்பரியங்களுடன், தமது பூர்விக பாரம்பரிய நடைமுறைகளும், மிகக் கவனமாகப் பேணப்பட்டு வருகின்ற சிறிய தேசம் சுவிற்சர்லாந்து. இதன் இத்தாலிய எல்லைப்புறமாநிலம் ரெசின் என அழைக்கப்படுகிறது. இத்தாலிய கத்தோலிக்க பாரம்பரியங்கள் நிறைந்து காணப்படும் இம்மாநிலத்தில் உள்ள சிறிய நகரமொன்றில் புனித வியாழன் புனித வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறும் சிலுவைப்பாடு நிகழ்வுகள் பிரசித்தமானதும், ரசனைக்குரியதென்றும், என் நண்பன் தெரிவித்திருந்ததனால், 98ல் குடும்பத்தினருடன் அவ்வைபவத்தைக் கண்ணுறச் சென்றிருந்தபோதும், காலநிலைச் சீர்குலைவால் அந்த வருடத்தில் அதைக் காணமுடியாது போய்விட்டது. ஆயினும் பேணுதல் என்னும் சொல்லிற்கான பொருளை அங்குணர்ந்தேன்.

ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்காக கல்வாரி மலைக்கு சிலுவை சுமந்து செல்லும் கதையினை சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரமுள்ள வழிப்பாதையில், வீதிநாடகப்பாணியில் செய்து காண்பிப்பதுதான் பிரதான நிகழ்வு. கல்வாரி மலைக்கு கிறிஸ்து அழைத்துச் செல்லப்பட்ட அந்தக்காலத்தைய ஆடை ஆபரணங்கள் முதல், வாத்தியங்கள், குதிரைப்படை வீரர்கள், அவர்களது போர்க்கவசங்கள், ஈட்டிமுதலாய ஆயுதங்கள், தீப்பந்தம் காவுவோர், அராபிய அடிமைகள், என அக்காலத்திற்குரிய அத்தனை பாத்திரங்களும் உள்ளடங்கப்பட்ட மிகப்பெரிய நகர்வல நிகழ்வு அது. இந்த நிகழ்வு நடைபெறும் அந்நகர்பகுதி கட்டிடங்கள் கூட அந்தப் பழமையைப் பேணிநின்றன. இந்நிகழ்வையொட்டி, அப்பகுதிக்கு புராதன நகர் எனப் பெயர் சூட்டி, கட்டிடங்களின் வெளிப்புறங்களிலோ, வீதிகளிலோ, புராதன வடிவமைப்புக்களில் மாற்றம் செய்யாதவாறு அந்நகரசபை கவனித்துக் கொள்கிறது. நாகரீகப் பாவனையில் வந்த மின்சார ஒளிரும் வழிகாட்டிப்பலகைகளும், தெருவிளக்குகளும் கூட குறித்த நேரத்தில் அணைக்கப்பட்டுவிடுகின்றன.

தனியே தீப்பந்தங்களின் வெளிச்சத்திலே நிகழ்வு நடைபெறும். இசைக்கப்படும் இசை, குதிரைகளின் குளம்பொலி, தீப்பந்தங்களின் செந்நிறஒளி, சூழலின் நிசப்தம், என 2000 வருடங்களுக்கு முன்னைய காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்று, ஒருமதக்கோட்பாட்டை கலைவடிவமாக நிகழ்த்திக்காட்டுகிறார்கள். மதக்கோட்பாடும், கலாரசனையும், இணையும் புள்ளியில் பார்வையாளர்கள், கதைமாந்தர்களாகிவிடுகிறார்கள். ஏசுபிரான் சிலுவையைச்சுமந்து தள்ளாடி நடந்து தடுக்கி விழும்போது, அரச அடக்குமுறைக்கு அடங்கிய மக்கட்கூட்டமாக, ஏங்கித் தவிக்கின்றனர் பார்வையாளர்கள்.


1998ல் 200 வது ஆண்டாக, அந்த நிகழ்வுகள் நடைபெறுவதனால், சிறப்பான ஏற்பாடுகளும், ஐரோப்பாவெங்கிலுமிருந்து ஆர்வலர்களும், மதப்பற்றாளர்களும் குழுமியிருந்தனர். அணைத்து ஏற்பாடுகளும் நிறைவாக நடைபெற்றாயிற்று. 65க்கும் மேற்பட்ட குதிரைகள், உரியவர்களால் கொண்டு வரப்பட்டாயிற்று. பாத்திரங்களை ஏற்கும் கலைஞர்கள் வந்தாயிற்று. ஆயினும் அழையா விருந்தாளியாக வந்த மழைமட்டும் விட்டபாடில்லை. இதுவே நம் ஊராக இருந்தால், இறைவன் ஆசீர்வதிக்கின்றான் என்று சொல்லிக்கொண்டு, அல்லது அடாது மழை பெய்தாலும், விடாது நாடகம் நடத்தப்படும் எனச் சொல்லிக்கொண்டும், வெளியில் இறங்கி ஆடி முடித்திருப்போம். ஆனால் அங்கே அத்தருணத்தில் கூடிய நிர்வாகக்குழு, பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வரப்படுகின்ற, அந்த ஆடைகள், ஆபரணங்கள், இன்ன பிற விடயஙகள் யாவும், மழையினால் பழுதடைந்துவிடக்கூடாது, ஆகவே அப்பொருட்களின் காப்பகத்தில் சென்று மக்கள் அவற்றைப்பார்க்கலாம், ஆனால் வீதிபவனி நடைபெறமாட்டாது என ஒலிபெருக்கியில் அறிவித்தது. நிகழ்வுக்கான இரு மணித்தியாலங்களுக்கு முன்னதாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. நிகழ்வை அன்று பார்க்க முடியாது எனும் ஏமாற்றம் கண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோதும், பழமையான பொருட்களை பேணுகின்ற அவர்களது அக்கறை என்னைக் கவர்ந்தது. அன்று அப் பொருட்களை காப்பகத்தில் பார்த்துவிட்டு, ஒரு தேவாலயத்தில் இருந்து மற்றுமொரு தேவாலயம் வரை செல்லுக்கின்ற அந்த நிகழ்வுப் பாதையில், அமைக்கப்பட்டிருந்த பைபிளின் பல்வேறு ஒளிச்சித்திரங்களைப் பார்த்தபடியே வீடுதிரும்பினோம்.

அன்று பார்க்கத் தவறிய அந்த காட்சி அனுபவங்கள் இவ்வருடத்தில் கிடைத்தது. புனித வியாழனில் கல்வாரி மலைநோக்கிச் செல்லும் நிகழ்வும், புனித வெள்ளியில் அன்னைமேரியுடன், மரித்த இயேசுவின் பவனியும் நடைபெறுகிறது. இரண்டுநாள் நிகழ்வுகளும், மன உணர்வுகளை அழுத்தும் வகையில் நிகழ்த்தப்படுகின்றன. இதில் எனக்குக் கிடைத்த மற்றுமொரு அனுபவம், இது ஒருமதக்கோட்பாட்டு நிகழ்வாக இருந்தபோதும், பலரும் அதை ஒரு சமூகப்பாராம்பரியமாக நோக்கினார்கள்.

அந்தப்பகுதிப்பிரசையான என் நண்பரின் நண்பர் ஒருவர், தீவிர இடதுசாரிக்கொள்கைக்ககாரர். ஆனால் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளில் அவரும் கணிசமான பங்கு வகிக்கின்றார். ஒரு சரித்திரப்பேராசிரியரான அவர், இது ஒரு சமுகத்தின் வரலாற்றுப்பதிவு. அதை பேணி அடுத்த தலைமுறைக்கு பிசகின்றிக் கொடுக்க வேண்டியது நமது காலக்கடமை என்கிறார். நிகழ்வு முடிந்து திரும்பும் வழியில், நண்பன் கேட்டான் ''மூத்தகுடிப்பாரம்பரியம் பேசும் நாங்கள் எங்கே நிற்கிறோம் ?..''உண்மைதான். நாகரீகத்தின் உச்சாணியில் நிற்கின்ற ஒரு சமூகம், தங்களது வரலாற்றுப் பாரம்பரியத்தை கச்சிதமான ஒரு கலைப்பண்பாட்டுக்கோலமாக ஒப்படைக்கும் பொறுப்போடு செயற்பட நாங்கள் நாகரீகத்தின்பேரால்....?

Tuesday, April 18, 2006

திருகோணமலை-ஒருபார்வை- பகுதி 10



திருகோணமலையில் சிங்களப் பேரினவாதம் தன் ஆக்கிரமிப்பை வியாபிக்க, பௌத்த பாரம்பரியத்தை கவசமாக்கின்றது என்பதும், அதன் அண்மைய வெளிப்பாடு திருமலை மத்திய பேருந்து நிலைய புத்தர்சிலை நிர்மாணம் எனப் பகுதி 8ல் குறிப்பிட்டிருந்தோம். இதற்கு முன்னர் நடந்த அத்தகைய
சம்பவங்களையும் குறிப்பிடும்படி நண்பரொருவர் தனிமடலில் கேட்டிருந்தார். ஆதலால் நானறிந்த அல்லது எனக்கு ஞாபகமுள்ள சில புதிய பௌத்த நிர்மாணங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். இவைகள் கடந்த 25-30 வருட காலப்பகுதிக்குள் புதிதாக நிர்மானிக்கப்பட்டவை என்பன குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் வழியிலமைக்கப்பட்டுள்ள பௌத்தவிகாரை, வெண்டரசன் குளத்துக்கு அண்மையிலுள்ள சாமிமலையில் (இந்த மலையும், அதன் சூழலும், புராதன தமிழப்பிரதேசங்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருந்தன அவைபற்றி பிறிதொரு பதிவில் பார்ப்பபோம்.) அமைக்கப்பட்ட பௌத்த விகாரை, கண்டிவீதி ஆறாம்கட்டை அல்லது ஆண்டாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த பீடம், கண்டிவீதி நான்காம் கட்டையில் ஒரு பௌத்தவிகாரை, தம்பலகாமம் சந்தியில் ஒரு பௌத்த பீடம், நிலாவெளி செல்லும் பாதையில் ஒரு பௌதத விகாரை, கன்னியா வெந்நீருற்றுப் பகுதி அண்மித்ததாக ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம், என்பனவற்றைக் குறிப்பிடலாம்.(இவை எனக்குத் தெரிந்த அல்லது அறியப்பட்டவை மட்டுமே. இவைதவிர வேறுபலவும் இருக்கலாம், அவைபற்றி அறிநத வாசகர்கள் தெரியப்படுத்தினால், ஆவனப்படுத்தலுக்காக அவை சேர்த்துக்கொள்ளப்படும்)



இவ்விதம் பௌத்த பாரம்பரியத்தை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளின்போது, சிலபகுதிகளில் ஏற்கனவே இருந்த பிறமத அடையாளங்கள் அழிக்கபட்டு அல்லது அவமதிக்கப்பட்டு இருந்தன. இதன் உச்சக் கட்ட கொடூரமாக பின்னாட்களில் நடந்த கலவரங்களின்போது, பிறவணக்கத்தலங்களுக்குள் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் கூட நடந்தன. இந்த இடத்தில் என் மனதைக்காயப்படுத்திய ஒருசம்பவத்தையும் சொல்லவேண்டும்.
பாலையூற்று என்றொரு அழகிய சிறிய தமிழ்க்கிராமம் ஒன்றிருந்தது. அக்கிராமத்தில் அழகிய ஒரு கத்தோலிக்கத் தேவாலயம். அந்த ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளும், கல்வாரி மலையும், சிறிய வடிவில் அழகாக அமைக்கபட்டிருந்தது. அழகிய சோலையாக இருந்த அந்தபிரகாரத்தில் சிறிய நீருற்று ஒன்றும் இருந்ததாக ஞாபகம். என் மனங் களைக்கும் வேளையிலெல்லாம் அந்தச் சூழலில் சுற்றிவந்து மாற்றம் பெற்றிருக்கின்றேன். பின்னாளில் நடந்த ஒரு கலவரத்தின் போது, அந்த அற்புதச் சோலையில் வைத்துத் சிங்களக்காடையர்கள், தமிழ்ப்பெண்களை மானபங்கம் செய்து கொலைசெய்தார்கள், எனுங் கொடுமையை என் நண்பன் சொன்னபோது உடைந்துபோனேன்.




இப்படி நீண்டகாலமாக நடந்து வந்த குடியேற்ற ஆக்கிரமிப்புக்களுக்கும், பௌத்தபாராம்பரிய பரவலாக்கலுக்கும், அண்மைக்காலத்தில் தமிழ்மக்கள் காட்டிய எதிர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. திருகோணமலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள், கிளர்தெழும் மக்களின் உணர்வுகளை மழுக்கடிப்பதற்காக பேரினவாதம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளேயாகும்.

இனிவருங்காலங்களில், இலங்கையில் ஓர் அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமாயின், அதற்கான ஆரம்பம் திருகோணமலை யிலிருந்தே தொடங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அந்த ஆரம்பத்தினூடாக எட்டப்பட வேண்டிய எல்லைகள் மிகவும் தொலைவானவை. பேரினவாதம் மேற்கொண்ட குடியேற்றங்கள், பரப்புதலுக்காக நிர்மானிக்கப்பட்ட பௌத்தநிலைகள், குறித்தெல்லாம் ஆராயப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் சிங்களப் பேரினவாதத்திடம் ஏற்புடைய தீர்வுகளோ அல்லது வேலைத்திட்டங்களோ இருக்கின்றனவா? இல்லை அவ்வகை எண்ணப்பாட்டினைத்தான் கொண்டிருக்கின்றார்களா? காலங்காலமாய் ஏமாற்றப்பட்டுவரும் ஈழத்தமிழர்கள் இவற்றை இனிமேலும், சிங்களப்பேரினவாதத்திடம் எதிர்பார்க்கமுடியுமா?
இப்படிப் பல கேள்விகள் முடிவிலியாய்.....

திருகோணமலை தமிழர்களின் தலைநகராக வரவேண்டும். அவ்விதமாய் வரும்போது, இலங்கைதீவில் மட்டுமல்லாது, தென்கிழக்காசியப்பிராந்தியத்தில் மட்டுமல்லாது, சர்வதேசத்திலும், தமிழர் எனும் தொன்மைக்குடி துலங்கி நிற்கும் பொற்காலமாக அமையும். நாம் சொந்த மண்ணின் சுகமான தென்றலை சுவாசிக்க முடியும்.

பத்துப்பகுதிகளாக எழுதப்பெற்ற இத்தொடரில், திருகோணமலையுடனான எனது சிலஅனுபவங்களையும், சில எண்ணங்களையும், உங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடிந்தது. இந்தத் தொடர்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். ( தனி மெயிலில் தொடர்பு கொள்ள விரும்பின் malainaadaan@hotmail.com)
வலைப்பதிவிற்கு வருகை தந்தவர்களுக்கும், வாசித்தபின் ஊட்டமாகக் கருத்துப்பகிர்ந்தவர்களுக்கும், படங்களுக்கான www.eelavision.com நிர்வாகிகளுக்கும், மனமார்ந்த நன்றிகள். சந்திப்போம்.

Monday, April 17, 2006

திருகோணமலை-ஒருபார்வை- பகுதி 9



பௌத்தத்தின் பெயரால் திருகோணமலையில் சிங்களப் பேரினவாதம் செய்து வரும் அதீத செயற்பாடுகளின் எதிர்வினைகள் சிலவேளைகளில், சிங்களத்தேசியத்திற்கும், ஏன் ஸ்ரீலங்காவின் அனைத்து இனங்களின் இறையாண்மைக்கும் சாவு மணி அடிப்பதாகக் கூட அமைந்துவிடக்கூடும். தமிழ்த் தேசியத்தை ஒடுக்குவதற்காக, சிங்களப் பேரினவாதம், ஸ்ரீலங்காவிற்கு மாலையிட்டு, வெற்றிலை கொடுத்து, அழைத்துவருகின்ற அந்நிய சக்திகளின் வல்லாதிக்க மனபாவத்தைப் பொறுத்து, இது நடைபெறலாம். ( அப்படி நடைபெறாது என வாதிடுவோர், இந்திய அமைதிப்படை வருகைக்கு, ஈழத்தமிழர்கள் கொடுத்த குதுகல வரவேற்புக் கொண்டாட்டங்களையும், பின்விளைவுகளையும் ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், வங்கம் தந்த பாடம் என, வங்காளப்போரை மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள பலர், பரீட்சை நேரத்தில் படித்ததை மறந்து போன மாணவர்கள் போல் ஆனதுதான். )

திருகோணமலையில், இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆகிய அரசுகளுக்கு அதிக கவனம் இருப்பதையும், இவை அனைத்தும் தென்கிழக்காசியப்பிராந்தியத்தில், தமது ஆளுமையை நிலைநிறுத்திக்கொள்ளவும், எத்தணிக்கின்றன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இவைகளில் அண்டைநாடு எனும் வகையில், இந்தியா இது விடயத்தில் தொடர்புபடக் கூடிய சில விடயங்களைப் பார்ப்போம்.

திருகோணமலையில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் குதங்களை, ஸ்ரீலங்கா அரசு குத்தகைக்கு விடுவதற்கு முனைந்த போது, சீனாவுடன் போட்டிபோட்டுப் பெற்றுக் கொண்டது இந்திய அரசு. இந்தியாவின் பிராந்திய ஆளுமைக்குத் தேவையானதாக அது அமைந்தது என்று கூடச் சொல்லலாம். தமிழ்மணத்தில் முன்பு ஒரு பதிவில், இந்தியாவின் ஆதரவுதான், ஈழத்திற்குத் தேவை. ஆகையால் தமிழீழம் இந்தியாவை நாடி நிற்க வேண்டும் என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்ததை வாசித்தபோது, மனம் வலித்தது. உண்மையில் இலங்கைத்தீவில் இந்தியாவிற்கான நேசசக்தியொன்று வலுப்பெறும் தேவை, இந்திய நலனுக்கே அவசியமாகிறது. தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக முகிழ்ந்த வேளையி;ல், அப்போதைய இந்தியப்பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரால், ஈழவிடுவிலைப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட பல்வகைஉதவிகளும், இந்த நோக்கிலேஅமைந்தன.

இலங்கைத்தீவில், இந்தியநலனுக்கான நேசசக்தியாக அமையக்கூடியவர்கள் எனப்பார்க்குமிடத்து, சிங்களப்பேரினவாதத்திலும் பார்க்க தமிழ்த்தேசியம் என்பதே பொருத்தமுடையதாகும். இதற்குத் தமிழீழ, தமிழகப் பாராம்பரிய உறவுகள் தொட்டு பல்வேறுவிடயங்களைச் சுட்டலாம். இந்நெருக்கத்தில் சிங்களப் பேரினவாதத்தின் உறவு என்பது, என்றும் ஐயுறவுக்குள்ளானதே. இந்தியா ஈழத்தமிழர்கள் குறித்து அக்கறைகொள்ளும் போதெல்லாம், சிங்கள அரசு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு நேரெதிர் போக்குடையவர்களுடன் கைகுலுக்கிக்கொள்வதன் மூலம் இது நிரூபனமாகிறது. காலத்திற்குக்காலம் மாறிவரும் இந்த அரசியல் நகர்வுகளில், அண்மைய அசைவு, பாகிஸ்தானுடனான இலங்கை அரசின் நெருக்கம். இலங்கைமீதான இந்தியாவின் இத்தகைய ஆர்வத்தினை வைத்துக் கொண்டே சிங்கள அரசு ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், திருகோணமலையில் தமிழர்கள் வலுப்பெறுவது, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் சாதகமானதே.

Thursday, April 13, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 8

ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களிலெல்லாம், திருகோணமலையில் இனககலவரம் நிகழ்ந்திருக்கிறது. இப்போதும்....தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து நிற்பவர்கள் காலம்காலமாக பேரினவாதிகளால் அழிக்கப்படுகிறார்கள் என்பதை இப்பதிவில் நான் எழுதியதற்கு, மேலும் ஆதாரம் சேர்பதாக, பின்னூட்டப் பதிவிட்ட நண்பர் வசந்தன், \\ திருமலை நடராசன் \\ பற்றிய மேலதிகத் தகவல்கள் அமைந்தன. அவருக்கும், அவர்கூற்றை மேலும் உறுதிப்படுத்திய மற்றைய நண்பர்களுக்கும் நன்றி. இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலிலும், அன்றைய பொழுதில் நடந்தவை போன்ற தாக்குதல்களும், கொலைகளும் தொடர்ந்த வண்ணமிருப்பது, நாட்டின் மொத்த நலனுக்கும் ஊறுவிளைக்கக் கூடியதென்பது இன்னமும் உணரப்படாமலிருக்கும். கசப்பான உண்மை. இத்தகைய சந்தர்பங்களில் எல்லாம் ஊடாகங்களில் வரும் செய்திகளை உற்று நோக்கின் ஒரு ஒற்றுமையை அவதானிக்கலாம்.திருகோணமலையில் கலவரங்கள் நடைபெறும் போதெல்லாம்; தமிழர்கள் மீதான தாக்குதலுக்காக வெளியிடங்களில் இருந்து கலகக்காறர்கள் அழைத்து வரப்படுவதுதென்பது. இப்போதும் அப்படியே. திருகோணமலையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் சிங்கள ஒற்றுமையை கலைப்பதற்கு பேரினவாத ஆட்சியாளர் கையாளும் தந்திரோபாயம் இது. திருகோணமலையில் தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தடையாக வளர்ந்து விட்டது கண்ணுற்று மருண்டு போயிற்று. அதை முறியடிக்க பலவழிகளிலும் முயற்சிக்கிறது. அதில் ஒன்று இலங்கைத்தீவின் உள்ளநாட்டுப்பிரச்சனைக்கு மூல காரணமாய இனப்பிரச்சினையை, மதப்பிரச்சினையாக வெளியுலகுக்கு காட்ட முற்படுவது. வெளிநாடுகளின் கவனம் பல்வேறு காரணிகளாலும், இலங்கைத்தீவு நோக்கித் திசை திரும்பியுள்ள இக்கால கட்டத்தில் இப்பிரச்சினையை, பௌத்தபாரம்பரியத்தின் மீது தொடுக்கப்படுகின்ற போராட்டமாக அடையாளப்படுத்துவதன் மூலம், பௌத்தபாரம்பரியம் மிக்க சீனா, ஜப்பான், ஆகிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனும் தந்திரோபாயத்தை தற்போது பேரினவாதம் கவசமாக அணிந்து கொள்ள முனைகிறது.மேலும் இந்த விடயம் உடனடியாக, கவனயீர்ப்புப் பெற வேண்டுமாயின், உலகின் கண்கள் உற்று நோக்கும், திருகோணமலையில் அதை நடைமுறைப்படுத்துவதே பயன்தரும் எனப்புரிந்துகொண்டு செயற்படுகின்றது. இந்நோக்கத்தின் வெளிப்படையான செயற்படுதான், அண்மையில், திருகோணமலையில் மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்ட புத்தர்சிலை விவகாரம். உலகின் பார்வைக்கு இலங்கை ஒரு பௌத்த பாரம்பரிய நாடு என வெளிப்படுத்தவும், தனது ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை நியாயப்படுத்தவும், திருகோணமலையில் தமிழர் வரலாற்றினை அழித்தொழிக்கவும், போடப்பட்ட இப்புதிய திட்டத்தினை, இரவோடிரவாக அரச இயந்திரத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தியது. இந் நடவடிக்கைக்கு எதிர்புத் தெரிவித்த தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தொடரின் மூன்றாவது பகுதிக்கு, தேவன் எனும் வாசகர் எழுதி, எம்மால் பிரசுரிக்கப்படாத பின்னூட்டம், உண்மைநிலையினைப் புரிந்து கொள்ளும் அவசியம் கருதி இங்கே சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
மலைநாடன் அவர்களே!
கேடு கெட்ட இந்துமதத்தின் பிள்ளையார்களை ஏன் தமிழர்கள் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? பிள்ளையார் குளிக்கப்போனால் அப்படியே போய்த்தொலையட்டும் என்று இருந்திருக்க வேண்டியதுதானே? தமிழர்கள் எல்லோரும் கேடு கெட்ட இந்து மதத்தை விட்டு விட்டு பௌத்தமதத்தில் சேர்ந்திருந்தால் சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் பூத்துக்குலுங்கியிருக்குமே? அதனை விட்டு ஏன் கேடு கெட்ட இந்துமதத்தின் குளிக்கப்போன பிள்ளையார்களை தேடி எடுத்து உட்கார வைக்க வேண்டும்? பிள்ளையார்களை விட்டுவிட்டு புத்தசிலைகளை மட்டுமே வணங்க வந்திருந்தால் இத்தனை பிரச்னைகள் இருந்திருக்காதே? அம்பேத்கார் வழியில் பெரியார் வழியில் பௌத்தமதத்தை தழுவியிருந்தால் இத்தனை அழிவு நடந்திருக்காதே. அதே வேளையில் உலகத்தின் ஒரே மோசமான விஷயமான சாதியையும் ஒழித்திருக்கலாம்.
சிந்தியுங்கள்.
எப்போது பௌத்தமதத்தில் இணைந்து சிங்களம் பேச ஆரம்பிக்கப்போகிறீர்கள்?
தேவன்.

மதங்களின் ஆளுமை, தேசிய சிறுபாண்மை இனங்களின் இறைமையை அழித்துவிடக் கூடாதென்பதே எமது கருத்து. இனத்தின், மொழியின், இறைமையைப் பாதிக்கா வண்ணம் இணைந்தியங்குவதென்பது வேறு, இனத்தை, மொழியை, ஆக்கிரமித்து, நிலைகொள்வதென்பது வேறு. அது பௌத்தமோ, இந்துத்துவமோ, கத்தோலிக்கமோ, அல்லது இஸ்லாமோ, எந்த ஒரு மதக்கோட்பாட்டையும், இனத்தின் அடையாளமாகக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்வது போன்று தமிழர்களெல்லாம் பௌத்தர்களாகிவிடுவது, இப்பிரச்சினைக்குத் தீர்வாகிவிடுமா?. இது சிறுபிள்ளைத் தனமான வாதமாக உங்களுக்குத் தெரியவில்லை. (இந்துத்துவ அடிப்படை, விமர்சனத்துக்குரியது என்பது வேறுவிடயம்.அதற்காக, அதை மேற்கோளிட்டு, சிங்களப்பேரினவாதத்துக்குச் சாமரம் வீசமுடியாது ) எங்களில் சிலர் இப்படியான எண்ணப்பாடுகளில் தான் இன்னமும் உள்ளார்கள். இத்தகைய எண்ணங்களே மாற்றார், எம்மை அடிமை கொள்ள வலுச்சேர்க்கிறது. இலங்கையில், திருகோணமலையிலும் ஏனைய தமிழ்ப்பிரதேசங்களிலும், தமிழ்மக்கள் மீது பௌத்த மூலாம் பூசப்பட்ட சிங்களப் பேரினவாதமே திணிக்கப்படுகிறதன்றி, தூய பௌத்தமதக் கோட்பாடு கொண்டாடப்படவில்லை என்பது அனைவராலும் உணர்ந்து கொள்ளப் படவேண்டியதொன்று. உணரப்படுமா...?

Sunday, April 09, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 7

கல்மெட்டியாவகுளம் என்று தற்போது அழைக்கப்படும் குளத்தின் உண்மையான பெயர் 'வெண்டரசன்குளம்'. கந்தளாய்குளத்தின் கட்டுமானப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிய தன் மந்திரிகளில் ஒருவனனான வெண்டரசன் பெயரினைக் கந்தளாய் குளத்தின் இனைக்குளமான இக்குளத்திற்கு குளக்கோட்டு மன்னன் வைத்து, அவனைக் கௌரவித்தான் என்பது இக்குளம்பற்றி திருகோணமலைவாழ் தமிழ்மக்கள் மத்தியில் செவிவழிக்கதையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுபற்றிய வரலாற்றுக்குறிப்புக்கள் இருப்பது பற்றிச் சரியாகத்தெரியவில்லை. ஆயினும் கந்தளாய்குளம், வெண்டரசன் குளம், என்பன அக்காலத்தமிழ்மன்னர்களின் சிறந்த நீர்ப்பாசனத்திட்டத்திற்குச் சிறப்பான உதாரணமாகச் சொல்லலாம்.தமிழ்மக்களின் வாழ்விடப்பயிர்நிலங்களின் நீர்ப்பாசனத்துக்கென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நீர்நிலைகளின் நீர்கூட, பேரினவாத அரசுகளின் சூழ்ச்சிகாரணமாக கந்தளாய் சீனி ஆலையின் கரும்பு வயல்களுக்குத் திருப்பப்பட்டு, சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாச்சப்பட்டு, எஞ்சிய நீரைதமிழ்பகுதிகளுக்கு வழங்கிய சம்பவங்கள் கூட நடந்தன. இந்த நீர்ப்பாசனங்களால் வருடத்திற்கு மூன்றுபோக நெற்செய்கை நடந்த தமிழ் வயல்களெல்லாம், இரண்டுபோகம், ஒருபோகமென்றாகி, விளைச்சலை முற்றாக நிறுத்திக் கொண்ட கொடுமை கூட, சிங்களப்பேரினவாதிகளின் கடும்போக்கில் நடந்தது. திருகோணமலை மாவட்டத்தின் நெல்விளைச்சலில், பெரும்பகுதியை விளைவித்துக் கொடுத்த அந்த விளைநிலங்களும், அந்த விளைநிலங்களின் உழைப்பாளர்களும், ஒருகாலத்தில் இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. திருகோணமலையின் புவியற்சிறப்பில் முக்கியமான மற்றொரு விடயம், தமிழ் கூறும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்பவற்றில், பாலை தவிர்ந்த ஏனைய நால்வகை நிலங்களையும், இம்மாவட்டத்தில் ஒரு சேரக்காணலாம். எத்துனை இன்னல்கள் விளைந்த போதும், இப்பகுதி மக்களின் திடமான மனப்போக்கினை அசைக்கமுடியாமலிருந்தது. அதனைக்குலைப்பதற்கு வேறு சில முறைகளைப் பேரினவாதம், கையாளத் தொடங்கியது. பலகாலமாக தமிழ்ப்பிரதேசங்களுள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்த சிங்களக்குடும்பங்களை (இவர்களில் சிலர் திருமணபந்தங்களினாலும், தமிழர்களோடு இணைந்திருந்தனர்) தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள். அதற்காகச் சிலபல சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படியான சலுகைகளுக்கு பலியாகிவிட்ட சிங்களக் குடும்பங்களையும், சில முஸ்லீம் குடும்பங்களையும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, முற்போக்கச் செயற்பட்ட இளைஞர்கள் சம்பந்தமான தரவுகளையும், வேறு விடயங்களையும், அறிந்து கொண்டார்கள். அப்படி அறியப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு, அவ் இளைஞர்களைக் குறிவைத்து அரச இயந்திரம் நகர்ந்தது. அந்த நகர்வில் சிக்குண்ட சில இளைஞர்கள் தவிர, பலர் பின்னாளில் தமிழீழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களின் முதல்நிலை உறுப்பினர்களானார்கள்.பின்னாட்களில், சிங்களப்பேரினவாதம் செயற்பட்ட விதத்திலும், அதன்வேகத்திலும், திருகோணமலையை சூழவும் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களால் முற்றாக அழிந்தொழிந்து போயிருக்கும். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறா திருப்பதற்கு முக்கிய காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்ததனாலென்றே சொல்லலாம். ஆயுதப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, இன்றைய பொழுதில் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டமாக மாற்றம் பெற்றிருக்கும் நிலையில், அதன் வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாத பேரினவாதம் மாற்று வழிகளை நாடத் தொடங்கியுள்ளது போன்று, அதன் தற்போதைய செயற்பாடுகள் தோற்றம் காட்டுகின்றன. அந்த நரித்தனச் செயற்பாடுகளால் மொத்த நாட்டினையும், அழிவின் பாதையில் வழி நடத்தத் துணிந்து விட்டார்கள் போலும்.....

Saturday, April 08, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 6

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நதிமூலம், தமிழ் மாணவர்கள் மீதான கல்வித் தரப்படுத்தல் என்றே பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். வட தமிழீழ இளைஞர்கள், பேரினவாத அரசின் நிசத்தை நேரடியாகத் தரிசிக்க அது வழியிட்டிருக்கலாம். ஆனால் தென் தமிழீழத்தில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், தமிழீழம எனும் எண்ணப்பாடு கருவுறக் காரணமாய் அமைந்த முக்கிய அம்சம், பேரினவாத ஆட்சியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றங்களும், அக்குடியேற்றவாதிகள், தமிழ்மக்கள் மீது மெல்ல மெல்ல காட்டிய அடக்குமுறைகளுமே. 1983 க்கு முன்னரும் தென்பகுதியில் தமிழர்கள் மீதான தாக்குதல்களுடனான இனக்கலவரம், நடைபெற்றிருந்தாலும், 83 கலவரம் தேசியமட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், சற்றுச் சர்வதேச மட்டத்திலும், கவனயீர்ப்புப் பெற காரணமாக பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். அவை எல்லாவற்றிலும், குறிப்பிடத்தக்கதானது, தமிழ் இளைஞர்களின் ஆயுதத் தாக்குதல். ஆனால் இக்கால கட்டத்திற்கு முன்னமே, தென் தமிழீழத்தில், சிங்களக் காடையர்களிடமிருந்து, தங்கள் பிரதேசங்களைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்தாக்குதல் செய்ய, அல்லது எதிர்தாக்குதலுக்கு தயராக உள்ளார்கள் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழ்மக்களுக்கு இருந்தது. அந்தக் கட்டாயத்தை உணர்ந்து அதனைக் கையேற்றுக் கொண்டவர்கள் தமிழ் இளைஞர்கள்.தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள், தங்கள் பாராளுமன்றப் பதவி பறிபோகா வண்ணம், தமிழ்காத்துக் கொண்டிருக்க, ஆங்காங்கே எந்தவித நிறுவனப்படுத்தலுமின்றி, சிறுசிறு குழுக்களாக, (விழிப்புக்குழு, எல்லைக்குழு, காவற்குழு, என்பது போன்று) தமிழ்மண் பறிபோகா வண்ணம் காத்துக் கொண்டிருந்தார்கள் தமிழ் இளைஞர்கள்.நானறிந்தவரை, திருகோணமலையில் சிவன்கோவிலடி, பத்தாம்குறிச்சி, நிலாவெளி சாம்பல்தீவு, தம்பலகாமம், சேனயூர் கட்டைபறிச்சான், அரசடி, படுக்கை,ஆகிய பகுதிகளில், இவ்வாறு சில இளைஞர்குழுக்கள் அவ்வப்போது நிகழும் கலவரங்களிலிருந்து, தமிழ்பிரதேசங்களைக் காப்பாற்றி வந்தார்கள். அவர்களின் எதிர்செயற்பாடு குறித்து இனஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் அச்சமும் இருந்தது.காலப்போக்கில், கருத்தியல் ரீதியாக இவ்விளைஞர்கள் நெருக்கம் கொள்ள, இதே கருத்தோட்டத்திலிருந்த வடபகுதி இளைஞர்களோடும், தொடர்புகளுண்டாயிற்று. இந்தக் கருத்தியலும் எண்ணப்பாடும் பரவலாகத் தமிழ்இளைஞகள் மத்தியில் வலுப்பெறவே, தமிழ்அரசியற் தலைவர்களின் தலைக்குள்ளும் இது விடயம் மெதுவாகக் குடிபுகுந்தது. என்நினைவுக்குள்ள வரையில் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோஷத்துடன் தேர்தலுக்கு களமிறங்கியது. தமிழுணர்வால் உந்தப்பட்டிருந்த இளைஞர்களை உள்வாங்கவும், அவர்கள் உடலுழைப்பினைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெற்றுக்கொள்ளவும், தமிழீழக்கோஷம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தமிழீழம் எனும் தனிநாட்டுக் கோரிக்கையும், தமிழீழத்தின் தலைநகராக திருகோணமலை மொழியப்பட்டதும், அந்தச் சந்தர்ப்பத்திலென்றே கருதுகின்றேன். அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்ற பின், வெற்றிக்கொண்டாட்டங்கள் பெரும் விழாவாக திருகோணமலையிலேயே நடந்தன. சிவன்கோயிலடியிலிருந்து, விழா நடந்த திருமலை முற்றவெளிவரைக்கும், அலங்காரங்களும் , ஊர்வலங்களும் கூட நடைபெற்றதாக ஞாபகம். வெற்றித் தலைவர்களுக்கு இரத்தத் திலகங்கள் கூட வைக்கப்பட்டதாகவும் ஞாபகம். இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம், பேரினவாதிகளைச் சற்று மருளச்செய்ததென்றும் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் வெகுகாலம் நீடிக்கவில்லை. ஆக்கிரமிப்பும், அடக்குமுறைகளும், தொடர்ந்தன. ( இந்த இடத்தில் பெயர் சுட்டாது பின்னூட்டமிட்ட நண்பர் குறிப்பிட்ட சம்பவத்தைச் சேர்த்துக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன்.) தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்களின் சாம்பல் திருகோணமாலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செய்யப்பட்ட போதும் ஒரு கலவரம் வெடித்தது. தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அச்சமுற்ற பேரினவாதம், அதைக்குலைத்துவிடவேண்டுமென்ற அக்கறையோடு, அச்சமூட்டும் வகையில் அரங்கேற்றியது. அதைவிட இரகசியமாக இன்னொரு விடயமும் நடந்தது. தமிழுணர்வுடன் செயற்பட்ட இளைஞர்கள், பேரினவாதக்கட்சிகளில் அங்கம் பெற்றிருந்த தமிழ், முஸ்லீம், அரசியல் தலைவர்கள் சிலரால், அரச இயந்திரத்துக்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். இவ்விதம் திருகோணமலை, தமிழர்களால் முக்கியத்துவப்படுத்துவதைக் கவனித்துக் கொண்ட பேரினவாதிகளால், குடியேற்றச் செயற்பாடுகளிலும், புராதன தமிழ்நிலங்களிலிருந்து, மக்களை குடிவிரட்டும் செயற்பாடுகளிலும், தீவிரமாகச் சிங்களக் காடையர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இத்தகைய செயற்பாட்டுக்கு பலியான முதல் தமிழ்கிராமங்களென, பன்குளம், கந்தளாய், என்பவற்றைக் குறிப்பிடலாம்.மொரவேவாத் திட்டத்தின் மூலம் குடியேற்றஞ் செய்யப்பட்டவர்களால், பன்குளம் சூறையாடப்பட்டது. பன்குளத்தில் வசித்த மக்கள் அடித்துவிரட்டப்படனர். தங்கள் உறவுகள் வாழ்ந்த ஏனைய இடங்களுக்கு, அவர்கள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். இதுபோல் கல்மெட்டியாவத்திட்டத்தின் மூலமும், மற்றுமொரு திட்டத்தின்( பெயர்சரியாக ஞாபகம் இல்லை) மூலமும், கந்தளாய் பகுதியைச் சூழவும் குடியேற்றப்பட்ட காடையர்களால், கந்தளாய் பகுதி தமிழ்மக்கள் நிர்க்கதியாக்கப் பட்டார்கள். இதில் கல்மெட்டியாவத்திட்டத்தின் மூலமான கல்மெட்டியாக்குளம், ஒரு புராதன நீர்பாசனத்திட்டம். அதற்குச் சுவையான ஒரு கதையுமுண்டு. கதைகேட்க அடுத்த பகுதி வாருங்கள்..

Sunday, April 02, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி5


பெயர் என்பது அழைப்பதற்கு மட்டும்தான் என்பதையும் கடந்து, மனிதர்களின், சமுகத்தின், வரலாற்று ஆவணமாகவும் பயன் தரக்கூடியது. ஆதலால்தான் வரலாற்றுத் திரிபாளர்கள் இது குறித்த விடயத்தில் மிக அவதானமாகச் செயற்படுகிறார்கள் போலும். சிங்களப் பேரினவாத அரசுகளும் தனது திட்டமிட்ட குடியேற்றங்களின் போது, பெயர்குறித்த விடயங்களில் அவதானமாகவே செயற்பட்டது. அதனால்தான் பன்னெடுங்காலம் அழகிய தமிழ்பெயர்களைத்தாங்கி நின்ற எங்கள் தமிழ்கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களின் பின் தம் பெயரிழந்து, பொலிவிழந்து, போயின. அப்படித் திருகோணமலை மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சில தமிழ்கிராமங்களின் பெயர்களையும், அவை தற்போது அழைக்கப்படும் சிங்களப் பெயர்களையும் தருவது இந் நோக்கினைச் செம்மைப்படுத்துமெனக் கருதி இங்கே தருகின்றேன்.

கந்தளாய் - கந்தல
குமரேசன் கடவை - கோமரங்கடவெல
புடவைக்கட்டு - பொடவக்கட்டுவ
பன்குளம் - மொரவெவா
தம்பலகாமம் - தம்பலகமுவ
வெண்டரசன் குளம் - கல்மெட்டியாவ
கும்புறுபிட்டி - கும்புறு பிட்டிய

இவை தவிர இன்னும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் பலவும் உண்டு. மேலேயுள்ள படத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் சில சிகப்பு நிறத்திலும், புராதன தமிழப்பெயர்களுடைய கிராமங்கள் நீல நிறத்திலும் காட்டப்படிருக்கிறது. இதை நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்கள் என்றால் தமிழ்க்கிராமங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக்கிராமங்களைக் காண்பீர்கள். இவ்விதம் காணும் குடியேற்றங்களை மேலும் ஊன்றிக் கவனித்தால், திருமலை நகரைச் சுற்றிவளைப்பதுபோல் அமைந்திருக்கும்.
இப்படியான குடியேற்றங்களுக்கு சிங்கள அரசுகள், வெளிநாட்டு உதவிகளைத் தந்திரமாகப் பயன்படுத்தியதுபோன்று, வேறு சில விடயங்களையும் பயன்படுத்திக் கொண்டன. அதில் முக்கியமானது தமிழ், முஸ்லீம், மிதவாத அரசியல் தலைவர்களின் பதவி மோகம் என்பது மிகையாகாது. இக்கட்சிகளின் பிரமுகர்கள் தஙகள் பாராளுமன்ற இருப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக, தக்க வைத்துக் கொள்வதற்காக, இக்குடியேற்றங்கள் குறித்து அக்கறை கொள்ளாது அல்லது கண்டுகொள்ளாது இருந்தனர். தமிழ்மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிதுத்துவப்படுத்திய இத் தலைவர்களின் அசமந்தப்போக்கு பின்னாளில் தமிழ்மக்களை சொல்லொனாத் துயருக்கு இட்டுச் சென்றது. இக்குடியேற்றங்களின் பயங்கரத்தை முதலில் சரிவரப்புரிந்து கொண்டவர்கள் தமிழ்இளைஞர்களே! . இளைஞர்கள் இதைப்புரிந்து கொண்டதன் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? . பார்ப்போம்....