Sunday, January 21, 2007

புதிய முயற்சி !

நண்பர்களே!

புத்தாண்டில் ஒரு புதிய முயற்சி. புதிய முயற்சி என்று சொல்லலாமோ எனத் தெரியவில்லை. ஆனாலும் எடுத்துக்கொண்ட விடயத்தினடிப்படையில் புதிய முயற்சி எனச் சொல்கின்றேன். புதிர் போதும்...


..விடயம் இதுதான். ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றைத் தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளேன்.


பிரதி ஞாயிறு தோறும் ஐரோப்பிய நேரம் மாலை 19.30 மணிக்கு, இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இவ்வொலிபரப்பினை செய்மதியூடாக ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், பண்பலை வரிசைகளில், கனடாவில் ரொறன்ரொவிலும், மொன்றியலிலும், இணையவழியாக உலகம் முழுவதிலும் இவ்வொலிபரப்பினைக் கேட்கலாம்.


இந்நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்கூறு நல்லுலகம் சார்ந்த படைப்பாளர்கள், பதிவாளர்கள் பலரதும் , நல்ல படைப்புக்களை, எழுத்துக்களை, ஒலிவடிவமாக்கி வான்பரப்பில் தவழவிட முனைகின்றேன்.
அந்த வகையில் தமிழ்மணத்தில் வலைப்பதியும், சகநண்பர்கள் சிலரது படைப்புக்களை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்துள்ளார்கள். மேலும் சிலரிடம் கேட்கவுள்ளேன். அவ்வப்போது நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் தாங்கி வரும் படைப்புக்களை இனைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். அத்தருணங்களில் நிச்சயம் படைப்புக்களைப் பதிவு செய்த நண்பர்களிடத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றுக் கொள்வேன்.


இந்நிகழ்ச்சி மூலம், வலைப்பதிவுலகுக்கும் அப்பால் உள்ள தமிழ்மக்களிடத்தில், இணையப்பதிவுகளில் உலாவரும் சிறப்பான கருத்துக்களை கொண்டு செல்லலாம். நிகழ்சிகளின்போது வலைப்பதிவுகள் பற்றித் தெரியப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதியவர்கள் வலைப்பதிவுகள் பற்றி அறியவும், பதியவும், கூடும் என்றும் எண்ணுகின்றேன்.

முதலாவது நிகழ்ச்சி இன்று 21.01.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பானது. சென்ற வருடத்தில் இங்கே நான் பதிவு செய்த ஒரு பாடல்பதிவுடனும், நண்பர் வசந்தனின் ஒரு குரற்பதிவுடனும், இந்த முதலாவது நிகழ்ச்சி அமைந்தது. முதலாவது நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய குறைகள் சிலவற்றுடன், ஒலிபரப் பான அந்நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை கீழேயுள்ள செயலியில், கேட்கலாம்.


நண்பர்களே! ஒலிப்பதிவினைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் நிகழ்ச்சியை மேலும் செழுமைப்படுத்துமென்று நம்புகின்றேன்... செய்வீர்களா?





Inpaththamil 1.wma

Sunday, January 14, 2007

எங்கள் பொங்கல்

பொங்கலோ பொங்கல்....

தமிழரின் தனித்துவமான பண்டிகை. தரணியெங்கும் பரந்து வாழும் தமிழர்களெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடும் ஒரு திருநாள். உழவர்கள் தங்கள் தொழிலுக்கு உறுதுணையாய் நின்ற பகலவனுக்கு நன்றிச்சொல்லி, தங்கள் விழை பயன்பொருட்களைப் படைத்து மகிழ்வுறும் நாள் இந்த இனிய நாள், பொங்குதிருநாளாக எங்களுக்கும் இருந்தது. ஒரு காலத்தில்...ஈழத்தின் தமிழர்பகுதிகளிலெல்லாம் பெரு மகிழ்வாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும், அவ்வப் பகுதிகளுக்கான தனித்துவங்களுடன் கொண்டாடப்பட்டது. பொதுமையில் ஒரேவிதமாகக் காணப்பட்ட போதும், அந்தத்தப் பகுதிகளுக்கான சிறப்புக்களும் சேர்ந்தே மிளிர்ந்தன. ஆனால் எல்லா இடங்களிலும் நகர்புறங்களைவிட, கிராமங்களில் இந்தப் பண்டிகையின் சோபிதமே அலாதியானது. இது உழவர் திருநாளல்லவா?. அந்த உன்னதமானவர்களின் உறைவிடம் கிராமங்கள்தானே?

ஈழத்தின் வடக்கே, பொங்கல் சற்று இந்து மதபாரம்பரியம் சார்ந்ததாக இருக்கும். ஆனாலும் தமிழர் திருநாளின் தனித்துவங்கள் தவறிப்போவதில்லை. காலையில் எழுந்து அனைவரும் குளித்து, புத்தாடைகள் அணிந்து, வீட்டின் முற்றங்கள் சாணகத்தால் மெழுகப்பட்டுக் கோலங்கள் வரையப்பட்டு, குத்துவிளக்கு, நிறைகுடம் வைத்து, நிறைகுடத்திற்குப் பக்கத்தில் முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றும் அலங்கரித்து வைத்து, அடுப்பு மூட்டுவார்கள். அடுப்பு மூட்டுவதற்காகப் பெரும்பாலும், காய்ந்த தென்னம் பாளைகள் விறகாகப் பாவிப்பார்கள். பொங்கல் பானைகளின்( பிற்காலத்தில் அவை அலுமினியப்பானைகளாகின) கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி சூடாக்குவார்கள். பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது சிலர் ‘பொங்கலோ பொங்கல் ‘ என்பார்கள், சிலர் சூரியனைப்பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள். பொங்தித்தள்ளும் அந்த நுரைத்தபால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.சிறுவர்கள் சேர்த்துக்கட்டி வைத்திருக்கும், வெடிக்கட்டுக்களைக் கொழுத்தி வெடிவெடிப்பார்கள். வெடிகளின் அதிர்வை வைத்தே அயல்வீடுகளில் பொங்கல் பொங்கிற்றா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொங்கி முடித்ததும் படையல் செய்வார்கள். தலைவாழையிலை விரித்து, சர்க்கரைப்பொங்கலிட்டு, அதன்மேல் சற்றுத் தயிர்விட்டு, அதன்மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து, சுற்றிவர பண்டிகைக்காகத் தயாரிக்கப்பட்ட பொங்கல் பட்சணங்களும் சேர்த்துப் படைப்பார்கள். குடும்ப மொத்தமும் ஒன்று கூடிநின்று, சூரியனைப்பார்த்து தேவாம்பாடித் துதிப்பார்கள். பின் அனைவரும் பொங்கல் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள். சிலர் ஆலயம் சென்று வழிபாடியற்றிபின் வீடு வந்து உண்பார்கள். எப்போதும், பானையிலிருக்கும் பொங்கலை விடவும், வாழையிலையில் படையல் செய்த பொங்கலை, தயிருடன் சேர்த்துச் சுவைப்பது, மிகுந்த சுவையாக இருக்கும்.

பொங்கலன்று மாலைகளில், சில இடங்களில் மாட்டுச்சவாரியும் இடம்பெறும். பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் நடைபெறும். இது யாழ்ப்பாணத்தில் அநேகமாக மாலைவேளைகளிலேயே நடைபெறுவதைக் கண்டிருக்கின்றேன். மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, மாடுகட்டும் இடங்களிலேயே பானை வைத்துப்பொங்கிப் படைத்து, பின் பொங்கலை மாடுகளுக்கு தீனியாக்கி மகிழ்வார்கள்.

தங்கள் தொழிலுக்குத் துணையாகவிருந்த மாடுகளை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும், இம் மாட்டுப்பொங்கலும், சூரியனுக்கு நன்றி சொல்வதாக அமையும் தைப்பொங்கலும், தமிழர்களின் நன்றியுணர்வுக்குச் சான்றான ஒரு பண்டிகை எனவும் சொல்லலாம். தென் தமிழீழத்தின் பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். எப்படியென்று அறிய ஆவலா? இங்கே வாருங்கள்.

Monday, January 08, 2007

நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது.

இந்த வருடத்தின் முதல் நாளிலேயே இந்தப்பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணமிருந்திருந்தாலும், எப்படியோ தள்ளிப் போயிற்று. ஆனாலும் அது கூட நல்லதற்குத்தான் போலும்.



//பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும்//

கருத்தாளர்களும், களமாடுபவர்களும், புரிதலில் வேறுபடும் புள்ளியிது. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

இது ஆழியூரானின் பதிவில் நான் இட்ட பின்னூட்டக்கருத்து. இது ஏதோ இந்தப் பதிவைப்படித்ததாலோ அல்லது இதனூடு தொடர்புபட்ட பிற பதிவுகளைப்படித்ததினலோ மட்டும் வந்ததில்லை. இதுவரையிலான என் வாழ்க்கைக்காலத்தில் பலதடவைகள் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் வந்த வார்த்தைகள் அவை. கண்ட உண்மையும் அதுதான்.


ஒரு இக்கட்டான சூழலை, கருத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கையாளும் தன்மையிலும், செயலாற்றுவோர் , அனுகும் தன்மையிலும், இந்த வேறுபாடு தெரியும். உடனடித் தேவையை அல்லது உடனடி உதவியை வழங்குவதில் , எப்போதும் சிந்தனையாளர்களை விடச் செயலாளார்கள் ஒரு படி முன்னேயே நிற்பார்கள். அதேசமயம் ஒரு ஒரு செயற்திட்டத்தைச் ஒழுங்குறச் செயற்படுத்துவதில், செயற்பாட்டாளர்கள் தவறிவிடுவதும் உண்டு. இதற்கு முக்கியமான காரணம், உதவிசெய்வதில் அவர்களை உந்தித்தள்ளும் உணர்வுதான். அதீத உணர்ச்சி வசப்படுதல் காரணமாக புறச்சூழ்நிலை பற்றிய சிந்தனையை இழந்துவிடுவது. இந்த உணர்ச்சி வசப்படுதலைக் கட்டமைத்துச் செலாற்ற எல்லோராலும் முடிவதில்லை. உதவி என அபயம் எழுப்புவோர் உள்ளங்களில் எப்போதும் இடம்பிடித்துக் கொள்பவர்கள் செயலாற்றுபவர்களே.

சென்ற ஆண்டிலேயே வலைப்பதிவு செய்ய வந்த என்னை, தங்கள் உதவும் பண்பால் உளம்கவர்ந்து கொண்ட சில பதிவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது. தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடிப்பது, படைப்பது, என்பதற்கும் அப்பால், செயல்முனைபவர்களாத் தென்பட்ட அவர்களை சிறப்பிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். இத்தகைய உதவிச் செயற்பாடுகள் ஏலவே முன்னரும், சுனாமி அனர்த்தத்தின் போதும், பிற சந்தர்பங்களிலும், நடந்துள்ளதாக மூத்த வலைப்பதிவாள நண்பர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய செயற்பாட்டாளர்களையும், அவர்களது செயற்திறனையும் விதந்து கொண்டே, சென்ற ஆண்டின் செயற்பாட்டாளர்களைக் கண்டு கொள்வோம்.

என்றென்றும் அன்புடன் பாலா , திரு , செந்தழல் ரவி ஆகிய இந்த மூன்று நண்பர்களும் ஆற்றியுள்ள, ஆற்றிவருகின்ற பணி எப்போதும் பாராட்டத்தக்கது.


என்றென்றும் அன்புடன் பாலா:-

செப்ரெம்பர் மாதத்தில், மாணவி கெளசல்யாவுக்கு உதவி , நவம்பர் மாதத்தில், ஸ்வேதா உயிர்வாழ உதவி , டிசம்பர் மாதத்தில், லோகப்பிரியாவுக்கு உதவி , என தன்னாலான உதவிப்பணிகளை முன்வைத்து, வலைப்பதிவு நண்பர்கள் பலரையும் ஒன்றினைத்து, தொடர்ந்து முன்முனைகிறார். பணிகளை முன்னெடுப்பது மட்டுமல்ல, தொடர்ந்து அவற்றின் செயற்திறனையும், அவதானித்து அவ்வப்போது அறியத்தந்து கொண்டுமிருப்பது அவரது பணிகளின் மேல் நம்பிக்கையையும், ஆர்வத்தினையும் ஏற்படுத்துகிறது. தொடருங்கள் பாலா!


திரு:-

கண்ணீருடன்... பதிவில் தொடங்கி, அடுத்தடுத்து பதிவுகள் மூலம் நண்பர்கள் பலரின் ஆலோசனைகள் பெற்று , ஈழத்தமிழர்களுக்கு உதவக் கையெழுத்து இயக்கம் எனத் தொடங்கிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் கையெழுத்தினைப் பெற்று, ஐ.நா சபைக்கு அனுப்பும் பெரும்பணியை நிறைவேற்றியுள்ளார். அதற்கும் மேலாக, தன் தமிழகப் பயணத்தின் போது, ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள அகதிமுகாம்களுக்குச் சென்று, அகதிகள் நிலைகுறித்தும், அவர்களுக்கு மேலதிக உதவிகளை எப்படிச் செய்வது என்பதும் பற்றியும் ஆராய்ந்துள்ளார். அரசியலுக்கப்பால், துன்பப்படுகின்ற மக்களுக்கான மனிதாபிமான உதவிப்பணியாக, அதை முன்னெடுத்து முனைவது பாராட்டுதலுக்குரியது. இதை ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய காரணத்தால், ஈழத்தமிழன் எனும் வகையில் ஈரலிக்கும் இதயமுடன் பார்த்தபோதும், இங்கே நான் பாராட்டுவது, அவரது மனிதாபிமானம் எனும் மானுடநேசிப்பிற்காகவே.


செந்தழல் ரவி:-

ஆண்டின் இறுதிப்பகுதியில் அதிரடியாக, ஏழைப்பெண் மகாலட்சுமிக்கு ... உதவிகோரிப் பதிவிட்டுக் , காரசாரமான கருத்துப்பகிர்வுகளுடன் தளர்ந்துபோகாமல், மகாலட்சுமி கல்விக்கு உதவி , பின்னர் என்றென்றும் அன்புடன் பாலாவின் பணிகளுடன் இணைந்துள்ளார்.

இது என்னவோ பார்ப்பதற்கு இலகுவான பணிகளெனத் தோன்றிடினும், செயலாக்கும் போது பல சிரமங்களையுந் தரக்கூடியவை. அத்தகைய தடைகளனைத்துயும் தாண்டி, வெற்றிகரமாக இப்பணிகளை நிறைவேற்றியுள்ள இந்த நண்பர்களுக்கு (நண்பர்களுக்குள்) நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது என்பதால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தத் தோன்றியது.
இவர்களை மட்டுமல்ல, இவர்களோடு இப்பணியில் பங்கு கொண்ட பலரும் இருக்கின்றார்கள். அத்தனை உள்ளங்களையும் உவகையுடன் பாராட்டுவோம்.

நண்பர்களே! உங்கள் உந்துதிறன், புத்தாண்டில் மேலும் பல புதிய பணிகளுக்கு வித்திடட்டும். பல்லுயிரும் பலன் பெறட்டும். வலைப்பதிவுலகு வளமான பணிகள் பலவற்றை வளர்த்தெடுக்கட்டும்

பாலா!
என்றென்றும் இது போன்றே அன்பாயிருங்கள்.

திரு!
உங்கள் பெயரில் போலவே செயலிலும் திரு நிறையட்டும்.

செந்தழல் ரவி!
உங்கள் சிந்தனைகள் மேலும் சிறப்படையட்டும். அதனால் பசித்திருக்கும் பலரும் பயன் பெறட்டும்.

- இனிய அன்புடன்
மலைநாடான்