Wednesday, June 25, 2008

அப்பா எனும் ஆன்மபலம்.

அப்பா!மனிதர்களை நேசிக்க, மாற்றங்களைக் காண, எனக்குக் கற்றுக்கொடுத்தவர். இளைஞர்கள் மீதான நம்பிக்கையையும், நட்பின் சுகத்தையும், மதிக்கத் தெரிந்த மனிதர். இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு முயலாத இயல்பினர். மற்றவர்களுக்குச் சராசரியான ஆன்மீகவாதி. எனக்கு ஆன்மீக வழி நின்று பொதுவுடமை கண்ட மனிதநேயர். புரட்சிபற்றியும், மாற்றங்கள் பற்றியும், யோசிக்கத்தெரிந்த தருணங்களில், சொற்பமாய் தெரிந்த அவர் செயல்கள், நாம் முயன்று முடியாது போனபோது மாபெரும் செயல்களாய் மனதில் பதிந்தன. நானறிந்து கொண்ட முதலாவது சமூகப் போராளி என் அப்பாதான்.

என் செயல்கள் குறித்த சந்தேகங்கள் எப்போதும் அவருக்கிருந்ததில்லை. சந்தேகங்கள் தோன்றுமளவுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமில்லை. இத்தனைக்கும் என் பல செயற்பாடுகள் அவருக்கு மிக இக்கட்டான நிலைகளைத் தோற்றுவித்திருந்தன. ஆனாலும் அவற்றின் பின்னிருந்த நியாயங்களை அவர் உணர்ந்திருந்தார். அவரது அமைதியான அந்த அங்கீகரிப்பே என் செயல்களைப் புடம்போட்டவண்ணமிருந்தன என்றால் மிகையில்லை. அது மட்டுமல்லாது, என் சமுகம் சார்ந்த பணிகளுக்கான அடித்தளமும் அதுவாகத்தானிருந்தது.அப்பாவும் நானும் அருகிருந்த காலம் என்னவோ சற்றுக்குறைவானதுதான். ஆனாலும் என்செயல்களில், நினைவுகளில் அருகிருந்ததனால் அது தெரிந்ததில்லை. எதையும் மாற்றாக எண்ணவோ, செய்யவோ, முயலும் போதெல்லாம், அந்த ஆன்மார்த்தம் பெரும் பலமாக நின்றென்னை நெறிப்படுத்தியிருக்கிறது. அதை இப்போது நன்குணர முடிகிறதென்னால்.தினமும் சிவனை நினைத்த அவர், என்றும் அவர் விரும்பிய வண்ணமே, ஈழமண்ணின் வன்னிநிலத்தில், சிவபுரத்தில் சிவனைக் கதியடைந்து நாட்கள் ஐந்தாகின்றன. நாட்டின் சூழலால், இறுதிக்கணங்களில் அருகிருக்க முடியாது போன துயருற்றிருப்பினும், ஊர்கூடிக் குளக்கரையில், உளங்களை நேசித்தவனை, வழியனுப்பிவைத்த செய்தி சற்று ஆறுதலாகவிருக்கிறது. அப்பா!ஆன்மாவின் பலமாய் என்னுள் கலந்திருங்கள்.

Saturday, June 07, 2008

அகதியாய் வந்த வீரன்




Euro 2008 உதைபந்தாட்டப் போட்டிகள், சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் அமைந்துள்ள St.Jackop மைதானத்தில் இன்று ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு, மிகவும் குதுகலமாக ஆரம்பமாகியது. உலகக் கோப்பை போட்டிகளைப்போலவே மிகவும் எதிர்பார்ப்புக்களும், ஆர்வங்களும் மிகுந்ததாக அமையும் இந்த ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இன்றைய ஆரம்பப் போட்டிகளில், சென்ற உலகக்கோப்பைப் போட்டிகளின் தகமையடிப்படையில், உலகத்தரத்தில் 6வது இடத்தில் இருக்கக் கூடிய செக் குடியரசு அணியுடன் சுவிற்சர்லாந்து அணி மோதியது. மிக இறுக்கமாகவும் விறுவிறுவிறுப்பாகவும் இருந்த விளையாட்டில் இடைவேளைக்கு முன்னதாக சுவிஸ் அணியின் தலைமைவீரர் அலெக்ஸ் ப்ரெய் காலில் பட்ட அடி காரணமாக, போட்டியில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. போட்டி ஆரம்பமாகி முதல் ஆட்டத்தின் அரையிறுதிக்குள்ளாகவே இதன் காரணமாக கண்ணீர் சிந்தியவாறே மைதானத்தைவிட்டு வெளியேறினார். போட்டியின் இரண்டாம் பகுதியில் செக். அணி ஒரு கோல் அடித்தது. சுவிஸ் அணி சிறப்பாக விளையாடியபோதும், இரு முறை கோல் விழும் சந்தர்பங்கள் தவறிப்போனது. போட்டியின் முடிவில் 1 கோலால் செக் குடியரசு அணி வெற்றிபெற்றது.

இனி அகதியாய் வந்த, அந்த வீரன் பற்றி.

91ல் முதல் முதலாக சுவிற்சர்லாந்தில் வேலைக்குச் சென்ற தொழிற்சாலையில் என்னுடன் வேலைக்கு அவனும் வந்திருந்தான். இருவருக்கும் எந்தவிதமான உறவோ, கலாச்சாரத் தொடர்புகளோ, நிற ஒற்றுமையோ இல்லை. ஆயினும் இருவருக்குமிடையில் ஒரு நெருக்கம் இருந்தது. காரணம் அவனும் என்னைப் போன்றே சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அகதி. அந்தக் காலப்பகுதியில் சுவிற்சர்லாந்திலிருந்து பெரும்பாலான அகதிகளின், அரசியல் தஞ்சம் கோரல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப் பட்டுக்கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த மண்ணிலும், நிச்சயமற்ற ஒரு வாழ்வு . இது குறித்த கவலையும் பகிர்தலுமே பெரும்பாலும் அவனும் நானும் சந்திக்கும் வேளைகளில் நிறைந்திருக்கும்.
சிலவருடங்களின் பின் மற்றொரு தொழிலிடத்தில் வேறு பணியிலிருந்தபோது, அவனது மனைவி அங்கே பணிக்கு வந்திருந்தாள். அவளிடமும் அதே துயரமும், பயமும், எப்போதுமிருந்தது. அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் . அவர்களது எதிர்காலம் குறித்த அச்சம், எல்லாப் பெற்றோர்கள் போலவும் பெரிதாகவிருந்தது. அந்தக்காலப்பகுதியில், அவர்களது நாடான கோசோவோ நாட்டில் பிரச்சனைகள் சற்று அமைதியுற, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளைத் திருப்பியனுப்பத் தொடங்கியது சுவிஸ். இவர்களும் திரும்பிச் செல்ல வேண்டும் எனும் நிலை தோன்றிற்று. கலங்கியவண்ணம் நின்ற பெற்றோர்களின் கையைப் பிடித்த வண்ணம் ஏதுமறியாது சிரித்த வண்ணம் நின்றான் அவர்களது மகன். அவன்தான் சுவிற்சர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவனான Valon Behrami. சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவன்.பாடசாலைக் காலத்திலேயே பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியவன். வலோனின் சகோதரியும் நல்லதொரு தடக்கள வீராங்கனை.

அந்தப் பணியிலிருந்து விலகிய சில காலங்களின் பின், ஒரு சந்தர்ப்பத்தில் வலோனின் பெற்றோரைச் சந்தித்த போது, தங்களது அரசியல் தஞ்ச மனு,
மேன்முறையீட்டின்போது, பிள்ளைகளின் கல்வி சார்ந்த மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். பிள்ளைகள் பற்றி விசாரித்த போது, வலோன் இத்தாலியில் ஒரு கழகத்துக்காக விளையாடுவதாவும், மகள் தொடர்ந்து படிப்பதாவும் சொன்னார்கள். பிள்ளைகளின் உயர்வின் மகிழ்வ அந்தப் பெற்றோர் முகத்தில் தெரிந்தது.

சென்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் போது சுவிஸ் அணிக்காக வலோன் விளையாடத் தொடங்கியபோது, அவனது புகழும், நிலையும் முற்றாக மாறியது. அவனது குடும்பத்தின் நிலையும் வாழ்வும் அப்படியே. தங்களுக்கு மறுவாழ்வளித்த இந்த நாட்டுக்கு, தன் மகனின் விளையாட்டு மூலம் நன்றி செலுத்த முடிந்ததையிட்டு பெருமையடைகின்றோம் என அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நா தழதழக்கக் கூறினார். இன்று அந்தக் குடும்பத்தின் வாழ்வு மலர்ச்சிபெற்றுள்ளது. அதற்குக் காரணம், வலோனின் விளையாட்டுத் திறமை மட்டுமல்ல, அதுவும் ஒரு தகுதியான அடிப்படைதான் என்றவகையிலும், தங்கள் விருப்தினடிப்படையில் அல்லாது, பிள்ளையின் ஆர்வம் அறிந்து அதன்வழியில், அவனை ஊக்குவித்து வளர்த்த பெற்றோரது நம்பிக்கையும்தான். அது இருக்கும்வரை வளர்வது வலோன் மட்டுமல்ல.....


Thursday, June 05, 2008

பாலபாரதி ,வலைப்பதிவு, இன்னும் சில

"நீண்டநாட்கள் வலைப்பதிவுகள் பக்கம் காணேல்ல..!" எனத் தெலைபேசியில் சயந்தன் கேட்டது உண்மையெனினும், புதிதாக எழுதவில்லையே தவிர, நேரங்கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கின்றேன்.சில வேளைகளில் எழுதுவதிலும் பார்க்க அதுவே நிறைவு தருவதாகவிருக்கிறது என்பதும் உண்மை. அன்மைக்காலங்களில் சில செய்திகள், பதிவுகள், பார்த்தபோது இதுகுறித்து நாமும் எழுதவேண்டும் என நினைத்ததுண்டு. அவை பற்றிய முழுமையாக இல்லாவிடினும் சிறுகுறிப்பாகவேனும் இன்று பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். ஏற்கனவே இப்படிச் சில இடுகைகள் எழுதியிருப்பினும், இன்று எழுதத் தூண்டுதலாயிருந்த பாலபாரதிக்கும், சயந்தனுக்கும் நன்றி. சயந்தனுக்கு கூடவே இனிய 49வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

வலைப்பதிவுகள் குறித்து, பதிவர் சிந்தாநதியிடம் நான் செவ்வி கண்டபோது, சிந்தா நதி அழகாக் குறிப்பிட்டிருந்தார் வலைப்பதிவுகள் என்பது திறந்து வைக்கும் நமது தினக்குறிப்பு என்று. இது சுவையான அனுபவம், புதிய இலக்கிய வடிவம் என்றும் கூட சொல்லலாம். பிறமொழிகளில் வரும் பெரும்பாலான வலைப்பதிவுகள் இப்படித்தான் உள்ளன. அத்தகைய போக்கில் தமிழில் அவ்வப்போது சிலர் எழுதியிருந்தாலும், பாலபாரதி தனது விடுபட்டவை வலைப்பதிவில் தற்போது திகதிவாரியாக எழுதிவரும் தினக்குறிப்புக்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. சுரதாவோடு பேசும்போது, பாலபாரதியின் இந்தத் தொடக்கம் மேலும் பலரை இவ்விதம் எழுதத் தூண்டும், அதுவே வலைப்பதிவுகள் என்பதற்கான முழுமை நோக்கி நமை அழைத்துச் செல்லும் என்றார். உண்மைதான், பாலபாரதியின் தினக்குறிப்புக்கள் மீதான இந்தப்பிடிப்பிற்கு பாலபாரதியின் எழுத்தழகும், அவர் தொடும் சமூகக்கூறுகளும் முக்கியமானவையென்று நினைக்கின்றேன். அவ்விதம் எழுதவிரும்புபவர்களுக்கு பாலபாரதியின் விடுபட்டவை குறிப்புக்கள் நல் உதாரணமாய் அமையட்டும்.

சென்ற சிலவாரங்களுக்கு முன் இலண்டனிலிருந்து ஒளிபரப்பாகும், தீபம் தொலைக்காட்சியில், மலேசியத் தமிழர்கள் சார்பில் அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்த அமைப்பின், முக்கிய உறுப்பினர் திரு. வேதமூர்த்தி அவர்களின் செவ்வி காணக்கிடைத்தது. செவ்வி கண்ட செய்தியாளர் அனஸ் அவர்களினால் முறையாகத் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு, மிக நேர்த்தியாகப் பதிலளித்திருந்தார் திரு. வேதமூர்த்தி. மலேசியத்தமிழர்களுக்குக் கிட்டாத பல உரிமைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் நேயர்கள் தொலைபேசிவாயிலாக வேதமூர்த்தியோடு உரையாடினார்கள். உரையாடலில் கலந்து கொண்ட பலர், ஈழத்தமிழர்கள். அவர்களில் பலரும் வேதமூர்த்தியிடம் முன் வைத்த வேண்டுகோள், தயவு செய்து உங்கள் பிர்ச்சனைகளை பேசித்தீர்க்க முயற்சியுங்கள். அதற்கு மேலான ஒருபோராட்டத்திற்கு, குறிப்பாக ஆயுதப்போராட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். பட்டவனுக்குத்தானே தெரியும் வலியின் கொடுமை. பேச்சுக்களின் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் எல்லோர் விருப்பமும், ஆனால் வட்டமிடும், கழுகுகளின் அலகிடுக்கில் ஆயுதமும், கண்களின் தேடலில் பிணங்களும் தானே இருக்கின்றன...இவை கடந்து மலேசியத் தமிழர்கள் வாழ்வு, நன்றென மலரட்டும்.

ஏதோ சில காரணங்களைக்காட்டி நாம் விலக்கிடும் சிலவிடயங்கள் மேலைத்தேயத்தவர்களினால் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் போது, அட இது நம்மிடம் இருந்ததுதானே எனவியக்கத் தோன்றும். 2006ல் என் மருதநிழல் வலைப்பதிவில் கும்பத்துமால் என்னும் இடுகையில், தென்தமிழீழத்தில் பழக்கதில் இருந்த ஒரு மாந்திரீக விளையாட்டைக் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றிய பின்னூட்டங்களில் மு.மயூரன், அது தற்போது ஆய்வில் உள்ள ஒரு தொழில்நுட்பம் என்ற வகையில் பின்னூட்டமிட்டிருந்தார். பின்னர் இத்துறைசார்ந்து கல்விபயிலும் என்மகனுடன் உரையாடும்போது, அவரும் அதை உறுதிசெய்தார். இருவரும் இதுபற்றி விரிவாக எழுதும்படியும் கேட்டிருந்தார்கள். எழுதவில்லை. சென்றவாரத்தில் பார்க்கக் கிடைத்தொழில்நுட்பச் செய்தியொன்றில், குரங்கொன்றின் மூளையின் சிந்திக்கும் ஆற்றலில், ரோபோ வின் கை அசைவுறச் செய்யப்படிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுநுட்பத்தின் வெற்றிப்பரிணாமம், விபத்துக்களில் உறுப்புக்களை இழந்தவர்களது செற்கை உறுப்புக்களை, அவர்களது சிந்தனைக்கட்டளைப்பிரகாரம் இயங்கவைக்கமுடியும் என்பதாகும். இந்த நுட்பத்தை அடியொற்றியதாக இருக்கக் கூடிய தென்தமிழீழ மாந்திரீக விளையாட்டில் நேரடியாக இந்தச் செயலைக்கண்ணுற்று வியந்திருக்கின்றேன். இத் தொழில்நுட்பம் தென் தமிழீழத்தில் மட்டும் இருந்ததாகச் சொல்ல மூடியாது. இதன் நீட்சி கேரளாவிலும், ஆபிரிக்காவிலும், கூட இருப்பதாக நண்பரொருவர் சொன்னார். இதுகுறித்து இன்னும் அறியவேண்டும்..

பாரி.அரசு அவர்களின் பதிவில் ஈழத்துச் சாதீயம் குறித்து எழுந்த உரையாடலுக்கு ஈழத்துச் சாதீயப்புரிதல் குறித்து சயந்தன் விரிவான ஒருபின்னூட்டத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஒருபகுதியில் "இயல்பாகவே யாழ்ப்பாணம் சைவச் சூழலுக்குட்பட்டது. பார்ப்பணர்கள் என்பது தனியே பிராமணர்கள்தான் (பார்ப்பனியம் என்பதை நான் சகல உயர்சாதி மேலாதிக்கங்களினதும் அடையாளம் என்ற நான் விளங்கி கொண்டிருக்கிறேன் )என உணரும் ஒரு யாழ்ப்பாணத்தவர் - பிராமணியத்துக்கெதிரான கருத்துடன் ஒன்றிப் போக அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை." எனக் குறிப்பிடுகின்றார். உண்மை. ஈழத்துச் சாதீயப் போராட்டங்களில் பங்கொண்டிருந்தவர்கள் பலரிடமும் இது குறித்த புரிதல் இருந்தது. (கே.டானியல், தெனியான் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களில் கூட அவற்றைக் காணலாம்) ஆனால் அங்குள்ள பிராமணர்களுக்கு இது குறித்த புரிதல் இருந்ததா என்பது சந்தேகம்தான்..

யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடர்பான ஆவணப்படம் "எரியும் நினைவுகள்" வெளிவந்துள்ளது. பார்த்த சில நண்பர்கள் சிலரின் கருத்தில், படம் முழுமை பெறவில்லையோ அல்லது அது தொடர்பாக முன்னமே நிறையத் தெரிந்திருந்தமையால், தமக்கு அவ்விதமாகத் தெரிகிறதோ என்பதாகச் சொன்னார்கள். இரண்டும் உண்மைதான். ஏனெனில் என்னிடம் சொன்னவர்கள் ஏலவே இது குறித்து நன்றாகத் தெரிந்திருப்பவர்கள். அவர்கள் அறிந்து கொள்ளப் புதிதாக எதையும் தருவதற்கில்லை.படத்தின் தொகுப்பு வேலைகள் நடைபெற்றபோது பார்த்த எனக்கும் அப்பிடித்தான் இருந்தது. இதற்கும் மேலாக அதன் பாதிப்பை வெளிக்கொணர வேண்டுமாயின், இது குறித்து இன்னமும் உணர்வு பூர்வமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். அது சாத்தியமாயிருக்குமெனத் தோன்றவில்லை.( இதுதொடர்பான கருத்துக்களைச் சொல்லலக் கூடிய முக்கியமான பலர் தாயகத்தில் இல்லை) அப்படித்தான் அதன் நெறியாளர் சோமிதரனும் சொல்கின்றார். எப்படியாயினும், முக்கியமான அடக்குமுறைக் குறியீட்டு அழிவினை, பதிவு செய்தவகையில் எரியும் நினைவுகள் முக்கியம் பெறுகிறது. தான் பிறந்த 19 தினங்களில் எரிக்கப்பட்ட ஒரு நூலகத்தின் வரலாற்றை, ஒரு அடக்குமுறை அரசின் கேவலமான முகத்தை, முடிந்தளவில் பதிவுசெய்தமைக்காக சோமிதரனைப் பாராட்டலாம்.

எரியும் நினைவுகள் குறித்து இயக்குனர் சோமிதரனின் செவ்வி.




செவ்விக்கு நன்றி: பெரியார் வலைக்காட்சி