Thursday, October 25, 2007

யாருக்காக ? ஆனந்தசங்கரி!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை, விசுவாசிப்பவர்கள், விவாதிப்பவர்கள், என எல்லோரும், அநுராதபுர விமானப்படைத்தாக்குதல் குறித்து அதிர்ந்து போன தினங்கள் இவை. இருபத்தியொரு உறவுகளின் தியாகத்தில் உணர்வுகள் உறைந்துபோன தருணங்களிவை.


இந்தத் தாக்குதல் குறித்தும், தாக்குதலுக்குப் பின்னும் ...

படைத்துறை எதிர்பாராத நேரத்தில் நடந்த தாக்குதலிது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்

- அமைச்சரும் பாதுகாப்பு விவகார, அரசாங்க பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல .

அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்

-இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன்.

தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அந்த சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சடலங்களை நிர்வாண கோலத்தில் எடுத்துச் செல்லாது மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம்

- அநுராதபுரம் ஆயர் நோபர்ட்

வலைப்பதிவுகளில் புலிகளை விமர்சிக்கும் ஜனநாயகம் எனும் பதிவர் கூட இப்படி அழுதிருக்கிறார்.

புலிகள் விவகாரத்தில் முந்திரிக்கொட்டைபோன்று அறிக்கைவிடும் நாடுகளோ அல்லது ஏகாதிபத்தியத்தின் ஏககாவலர்களோ அறிக்கைவிடாமல் அடக்கிவாசிக்க,

அனுதாரபுரம் வான் படைத்தளத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறது

- வீ. ஆனந்தசங்கரி

எங்கள் நிலங்களில் குண்டுகள் வீசி, எத்தனையோ தமிழ்மக்களின் உயிர்களைக் காவுகொண்ட விமானப்படைகளின் தளம் தாக்குதலுக்குள்ளானதற்காக, உங்கள் கோடிக்குள் குண்டுவிழுந்ததுபோல் கண்டனக்குரல் எழுப்பியுள்ளீர்களே.

ஆனந்தசங்கரி நீங்கள் அழுவது யாருக்காக ?





Saturday, October 20, 2007

ஐரோப்பிய அரசியலில், அடிவைக்கும் தமிழிச்சி

"மனித உரிமை மீறல்கள் எங்கு நடைபெற்றாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு. அதிலும் முக்கியமாக எமது இரத்த உறவுகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் எனக்குண்டு.இது இயல்பானது. ஆனால் இது விளம்பரங்கள் இல்லாமல் செய்யப்படும் போது அதன் செயற்திறன்(Efficiency) மிகவும் உயர்வாக இருக்கும்" இப்படிச் சொல்கின்றார், ஏதுமற்ற ஏதிலிகளாக, சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, வந்த நாட்டில் வசவுகளுக்கும், வடுக்களுக்குள்ளும், வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், சுவிற்சர்லாந்தின் தேசிய அரசியலுக்குள், தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஈழத்தின் இளைய தலைமுறைப் பெண் செல்வி: சுஜிதா வைரமுத்து.

21.102007 ல் சுவிற்சர்லாந்தின் பாராளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில், தேசிய பாராளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் சுஜிதா, " முரசம்" இணைய சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியையும், ஏனையோரது கருத்துக்களையும் இங்கே , இங்கே , இங்கே காணலாம்.

தட்டுக்கழுவிகள் என்றும், தகமையற்ற அகதிகளென்றும், எள்ளப்படுகின்ற ஒரு சமுகத்தின் இளையதலைமுறைப் பெண்ணொருத்தியின், அந்நியதேசத்து அரசியல் பிரவேசம் அசாத்தியமானதுதான். அது சாத்தியமாகட்டும் என வாழ்த்துரைப்போம்.



செய்திகள், படங்களுகாக: முரசத்துக்கு நன்றி.

Monday, October 08, 2007

கருப்பைக் காலால் உதை.

பெயரிலி ஏதோ கனக்க போபியாக்கள் பற்றி எழுதிறார் என்டதுக்காக நான் இதை எழுதுவதாக நினைக்கப்படாது.:)) சுவிஸின் இன்றைய பொழுதுகளில் க்ஸேனோபோபியா ( Xenofopia ) என வருணிக்கப்படுகின்ற சுவிஸ் உள்நாட்டு அரசியல் சர்ச்சை, குறித்த செய்திகளிவை.


சுவிற்சர்லாந்தில் என்றுமில்லாதவாறு, இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர், " இது சுவிற்சர்லாந்தின் ஜனநாயக பாராம்பரியத்துக்கு முரணானது" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இம் முறை இவ்வளவு குழப்பங்களும் நிகழக் காரணம் என்ன? SVP எனும், வலதுசாரி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களும், பரப்புரைகளுமே இவ்வன்முறையின் தோற்றுவாயெனலாம். குறிப்பாக அது வெளியிட்டுள்ள சுவரொட்யும், அதே கருத்தைக்கொண்ட பிரச்சாரங்களும் பல தரப்பின் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அதுபோலவே பல சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.




சுவிஸின் இவ்வருட தேசியதினத்தின் போதே, இந்தச் சுவரொட்டிச்சித்திரம் சிறிய அட்டைகளாக வெளியிடப்பட்டது. சுவிஸின் பகுதியில் நிற்கும் மூன்று வெள்ளை ஆடுகளில் ஒன்று கருப்பு ஆடொன்றைக் காலால் உதைத்து வெளியேற்றுவது போன்று வரையப்பட்டுள்ளது. அத்தோடு "பாதுகாப்பை உருவாக்குவோம்" எனும் வாசகங்களும் இருந்தன. இதனுடைய விளக்கமாக வெளிநாட்டவர்களின் குற்றச் செயல்களில் இருந்து சுவிஸைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் சுட்டி எழுதப்பட்டுமிருந்தது. அதற்கான காரணங்களாக அல்லது ஆதாரங்களாக குறிப்பிட்டிருந்தது, சுவிஸ் காவல்துறை வெளியிட்டிருந்த, சுவிஸில் நடைபெற்ற குற்றச்செயல்கள் சம்பந்தமான அறிக்கையிலிருந்து, வெளிநாட்டவர்களின் விகிதா சாரம் . ஆகவே பாதுகாப்பான தூய சுவிஸை உருவாக்க அணிசேருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டது.
இது வெளியிடப்பட்டபோதே இலேசாக எதிர்ப்புக்களும் கிளம்பத் தொடங்கின. இப்படியாக ஆரம்பமாகிய இந்தப்பிரச்சாரம், அக்கட்சியின் தேர்தல்பிரச்சாரமாக மாறியபோது மேலும் எதிர்ப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கின. அதன் நீட்சியாக, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரமும் நிகழ்ந்துள்ளன.





தேர்தல் பிரச்சாரத்திற்கா ஒரு கட்சியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வசனங்களை மாற்றி எழுதுவது, கிழிப்பது, போன்றவற்றை, முதல்முறையாக இந்த ஆண்டிலேதான் சுவிஸில் நான் காண்கின்றேன். இந்தளவிற்கு நிலமை செல்வதற்கு அந்தக் கட்சின் பரப்புரைகளும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்து எழுப்பப்படும் ஆட்சேபனைகளுக்கு முழு வெளிநாட்டவர்களையும் நாம் அப்பிடிச் சொல்லவில்லை, குற்றச் செயல்களைச் செய்பவர்களை மட்டுமே வெளியேற்றச் சொல்கின்றோம் என்கிறார்கள்.


இப்படிச் சொல்கின்ற அக்கட்சியின் இணையத்தளத்தில், இணைய விளையாட்டுக்களிலும் இதேவிதயத்தைப் புகுத்தியுள்ளார்கள். இதன் மூலம் சிறுவர்கள் மத்தியிலும், வெளிநாட்டவர்களுக்கெதிரான உளப்பாங்கை உருவாக்க முயல்வதாக. ஐ.நா. சபையின் மனிதஉரிமைகளமைப்பு குற்றம் ட்டியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.




வெளிநாட்டவர்மேல் வெறுப்பைக் காட்டும், க்ஸேனோபோபியா ( Xenofopia ) கருத்துருவாக்கம் என மாற்றுக்கருத்தாளர்களால் விமர்சிக்கப்படும் இப்பிரச்சாரத்தை, "தூய சுவிற்சர்லாந்திற்கான பாதுகாப்பை உருவாக்குவோம்" என முன்வைக்கின்றனர், SVP/UDC கட்சியினர். இவர்களது வேண்டுகோளுக்கு சுவிஸ் மக்கள் என்ன பதிலளிக்கப் போகின்றார்கள் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
படங்கள் நன்றி: K Image

Wednesday, October 03, 2007

மற்றுமோர் தமிழ் நிமிர்வு.

போர்ச்சூழலினால் பாடசாலைகள் சரியாக இயங்காத நிலை, ஆசிரியர்கள் மாணவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்த நிலை, பெற்றெடுத்த தந்தை காணாமற்போன நிலை, என சூழலின் பாதிப்புக்கள் அதிகமாகவே இருந்த போதும், நடைபெற்று முடிந்த ஆண்டு ஐந்து, புலமைப்பரிசுப் பரீட்சையில் சிறப்பாகச் செயற்பட்டு அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தையும் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தினை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் செல்வன் மணிவண்ணன் மதுஸனுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழர்களுக்கெதிரான போரில், தமிழ் மக்களின் கல்வித்தரத்தை அழித்தொழிப்பதையும், முக்கிய இலக்காகக்கொண்டு செயற்பட்டுவரும், சிறிலங்கா அரசினதும், அதனது நேசசக்திகளினதும், நினைப்பில் மண்தூவி, நெஞ்சுநிமிர்த்திய தலைநிமிர்வு. நிச்சயம் இது மற்றுமோர் தமிழ்நிமிர்வு.

இது குறித்த முழுமையான செய்திக்கு இங்கேசெல்லுங்கள்.