Friday, February 23, 2007

இந்திய மயிரும், ஏற்றுமதி வர்த்தகமும்.


பாரிஸின் மத்திய நகர் பகுதியிலிருக்கும் அந்தப் பிரபலமான சிகையரிப்பு நிலையத்திலிருந்து வெளியே வரும் கிறிஸ்டினாவின் முகத்தில் அளவிலா ஆனந்தம். தன் தோள்களில் புரளும் அந்தப்பளுப்பு நிற முடிக்கற்றைகளை, ஆசையாய் வருடி, அழகாகக் கோதுகிறாள்.
அங்கே வரும் ஸ்டெல்லா, கிறிஸ்டினாவைக் கண்டதும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அளவளாவி, முத்தம் சொரிந்து, குசலம் விசாரிக்கின்றாள். கிறிஸ்டினாவின் தோள்களில் புரளும் முடியின் அழகு அவளையும் வசீகரித்திருக்க வேண்டும், அவளும் ரசித்து மகிழ்கிறாள்.
“ இப்போதுதான் செய்து கொண்டு வருகிறேன். நூற்றியம்பது முடிச்சுக்கள் நடுவதற்கு ஆயிரம் யூரோக்கள்.. “ என்றவள் ‘ இது செயற்கை முடியல்ல, இயற்கையானது ’ என மேலும் பெருமிதமாய், தொட்டுத் தடவி ரசிக்கின்றாள்...

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 00 0 0 0 0 0 0 0 0 0


ஏழு குண்டல வாடா, வெங்கட ரமணா, கோவிந்தா கோவிந்தா. எனும் பக்தி கோஷம் கேட்கிறது, ஆட்களின் உடை அலங்காரம், முகங்களின் பரிச்சயம், யானையின் அலங்கரிப்பு, உயர்ந்தெழுந்த கோபுரங்கள், என ஒவ்வொன்றாகத் தொலைக்காட்சியில் கமெரா காட்சிப்படுத்தும் போதே உணர்ந்து கொள்ள முடிகிறது அது ஓர் இந்திய நகரம் என்று. எண்ணிக் கொண்டிருக்கும் போதே, ‘ நான்கு மாடிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய சிகைதிருத்து நிலையம் என அறிமுகம் செய்கிறது விவரணக்குரல். அட ஒரு தடவை சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் நேரும் என நம்மக்களின் மனதில் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கும் திருப்பதியில், ஆழ்வார்களும், அடியவர்களும் போற்றித் துதித்த திவ்வியதிருத்தலத்தில் உள்ள வேண்டுதல் மையத்திற்கு, அல்லது நேர்த்திக்கடனென நிறைவேற்றப்படும் நம்பிக்கை மையத்திற்கு, இப்படியொரு அடைமொழி வர்ணனனையா? சுவிற்சர்லாந்து தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் ஒளிபரப்பாகியது அவ்விவரணம்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவில்களில் நேர்த்திக்காக மழிக்கப்படும், நீண்ட மயிர்கள் சேகரிக்கப்பட்டு, உள்ளுர் தரகரூடாக சேகரிக்கபட்டும், திருப்பதி தேவஸ்தானத்தில் வேண்டுதலுக்காக மழிக்கப்படும் மயிர்கள் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து பெறப்பட்டும், மொத்த ஏற்றுமதியாளரரூடாக இத்தாலிய நாட்டிற்கு ஏற்றுமதியாகிறது. இப்படி ஏற்றுமதி செய்யப்படும், ஒவ்வொரு கிலோ மயிருக்கும், சுமார் இருநூறு யூரோக்கள் வழங்கப்படுகிறது.

இத்தாலிக்கு இறக்குமதியாகும் இந்திய மயிர்கள், இரசாயணச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் கருமைநிறம் அகற்றப்படுகிறது. கருமைநிறம் இழந்த வெண்முடிகளுக்குத் தேவையான வண்ணம் ஏற்றப்பட்டுகின்றன. இதன்பின் நடைபெறும் தரப்பிரிப்பிப்பில், வண்ணமூட்டப்பட்ட மயிர்களுக்கிடையில், கறுப்பு நிறத்தில் காணப்படின், அம்மயிர்கற்றைகள் மீளவும், இந்தியாவுக்குப் பயனப்படுகின்றன. அங்கு வைத்து அவை குறைந்த கூலிக்குக் கிடைக்கும் தொழிலாளர்களின் மூலம் துல்லியமாகத் தெரிவு செய்யப்பட்டு, மீளவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறுதியாக வந்து சேரும் தெரிவு செய்யப்பட்ட மயிர்க்கற்றைகள், தரவாரியாக, கவர்ச்சிகரமாகப் பொதி செய்யப்பட்டு, உலகின் பல பாகங்களிலுமுள்ள, மிகப்பெரிய சிகைபராமரிப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வர்த்தகத்தில் புழங்கும் பணப்பெறுமதிகளைக் கேள்விப்படும் போது, ஆச்சரியமாகவிருந்தது. மிகக்குறுகிய காலத்துக்குள் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் சம்பாதிருப்பது லட்சங்களில் அல்ல கோடிகளில். விவரணத்தின் இறுதியில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் முக்கியமானவை.

வெளிநாடுகளில் தற்போது அதிகரித்து வரும் இயற்கைப்பொருட் பாவனை ஈர்ப்பும், பெண்களிடையே அடர்த்தியான நீண்ட முடிமீது ஏற்பட்டுள்ள பெருவிருப்பும், இத்தகைய தலை மயிர் வர்த்தகத்திற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை நிவர்த்தி செய்ய இந்திய்ர்களின் தலைமயிர்கள் நீளமாகவும், அடர்த்தியாகவும், இருப்பதனால் , இந்தியா இவ்வர்த்தகத்தில் முக்கிய கவனிப்புப் பெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் இருபதினாயிரம் இந்தியர்கள், தங்கள் மயிர்களை மத ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிப்பார்களாம். அவர்களுக்கு இலகுவில் நன்றாக மயிர் வளர்ந்துவிடும். ஒருவர் மற்றுமொரு தடவை மயிர் வழிக்காவிடினும் கூடக் கலையில்லை. இந்தியாவில் அதியுயர் சனத்தொகையிருப்பதனால், அதற்கும் மேலாக மதரீதியான நம்பிக்கை வலுத்திருப்பதனால், இந்த மயிர்க் கொள்வனவில் தடங்கல் கிடையாது. இவ்வாறு அதீதமான நம்பிக்கையோடு கூறுகின்றார்கள் மூன்று ஹெலிகாப்டர்கள், ஆடம்பர பங்களா, என அட்காசமாகப்பொருள் சேர்த்திருக்கும், இவ்வர்த்தகத் தொழிலதிபர்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000000000

கிறிஸ்டினாவின் முடியழகில் மயங்கிய ஸ்டெல்லா, அது இயற்கை முடிதான் என்பதை, கிறிஸ்டினாவிடம் கேட்டு, மீளவும் உறுதி செய்கின்றாள்.

கிறிஸ்டினா விடைபெற்றுச் செல்ல, ஸ்டெல்லா சிகை பராமரிப்பு நிலையத்திற்குள் நுழைகின்றாள். வேறெதற்கு, தனது முடியையும் நீளமாக அடர்த்தியாக மாற்றிக்கொள்ளத்தான். ஏனென்றால் ஐரோப்பிய ஆண்களுக்கு நீள் முடி மங்கையரைத்தான் நிரம்பப் பிடிக்கிறதாம்...

தலைமயிரை மழித்து, மொட்டையிட்டிருப்பவர்களைப் பார்த்து, "திருப்பதியா, பழனியா? " எனக்கேட்பதுண்டு. இனி, பாரிஸா இத்தாலியா? எனக் கேட்கலாமோ?.

Saturday, February 17, 2007

சாகர சங்கமம் - எண்ணங்கள்

சாகரனை எனக்குத் தெரியாது. சாகரனின் மறைவின் பின்னரே சாகரனைப் பற்றி அறியத் தொடங்கினேன். தமிழ்மணத்தில் வந்த அஞ்சலிப்பதிவகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் மதிகந்தசாமி தொடர்பு கொண்டு, எனது வானொலி நிகழ்ச்சியில் சிறு நினைவுக்குறிப்புச் செய்ய முடியுமா எனக் கேட்டிருந்தார். அவர் கேட்கும் போது சென்றவார வானொலி நிகழ்ச்சி, ஒலிபரப்புக்காக இணையத்தொடர்பில் ஏற்றப்பட்டுவிட்டதென்பதைச் சொல்லிவிட்டு, இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த இளைஞருக்கு தனியாக ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை செய்வது கூடப் பொருத்தமாக இருக்குமெனத் தெரிவித்தேன். தேனீ உமர் அவர்களுக்குச் செய்யத் தவறிவிட்டதையும் நினைவில் கொண்டேன். தெரிவித்த மாத்திரத்தில், சாகரனைப் பற்றித் தெரிந்து கொள்ள அவரது பதிவுகளின் சுட்டிகளையும், பலரது தொலைபேசி இலக்கங்களையும், மின்மடல் முகவரிகளையும் தந்தார்கள். சாகரன்பற்றிய பதிவுகளைஇட்டிருந்த நண்பர்கள் சிலரை நானும் தெரிவுசெய்தேன்.

உலகளாவிய ரீதியில் தமிழ்மொழிக்கெனச் செயற்பட்டவனின், மறைவுக்கு உலகப் பரம்பலில் இருந்து அஞ்சலிகள் வரக்கூடியதாக இருக்கும் வகையில், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தேன். விடுத்தமாத்திரத்தில் பலரும் விரைந்து வந்து பங்களித்தார்கள். சிலர் விருப்பம் தெரிவித்த போதிலும், உரையாட முடியாமல் தவித்தார்கள். சிலநண்பர்கள் ஒலிப்பதிவின் போது அழுதேவிட்டார்கள். நண்பர் கே.வி.ராஜா பேசமுடியாது விக்கித் நின்றுகொண்டார். சக வலைப்பதிவாளனின் இழப்பில் நேசமுடன் இவர்கள் கலந்து கொண்டது நெஞ்சுக்கு நிறைவாக இருந்தது. அவர்களுடைய உணர்வுகளைக் கலைக்காது, ஒலிப்பதிவுகளைத் தொகுக்க மிகுந்த சிரத்தையெடுக்க வேண்டியிருந்தது. பதிவுக்குத் தேவையான எழுத்துப்பிரதியை உருவாக்குவதிலும், இசைக்கோப்புக்குத் தேவையான இசைகோப்புக்களைத் தேடியெடுத்துத்தருவதிலும், ஈழத்து நண்பர்கள், நேரடி இணையத்தொடர்பில் நின்று, நேரகாலம் பாராது உதவினார்கள்.
நண்பர் சிந்தாநதி தேவையான படங்கள் அனைத்தையும் மின்மடலில் தந்துவினார். இப்படியாக நண்பர்கள் பலரும், தந்த சிறப்பான பங்களிப்புக்களுடன் முடிந்தவரையில் ஒலிப்பதிவாக, நாம் முன்னால் வாழ்ந்து மறைந்த சாகரனுக்கு, அனைத்து வலைப்பதிவர் சார்பிலும், அஞ்சலி செய்துள்ளோம்.

இணைந்து பணியாற்றிய அனைவர்க்கும் நன்றிகள்.

அஞ்சலிப் பதிவுக்கு இங்கே