Thursday, May 31, 2007

வெட்கம் கெட்டவர்கள்

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் சிறிலங்கா அரசின் சூழ்ச்சியில் எரிந்து சாம்பலாகிப் போன யாழ்ப்பாண நூலகம் பற்றி, சோமியின் காற்றோடு வலைப்பதிவில் அப்பால் தமிழ் இனையத்தளத்துக்காக செளம்யன் எழுதிய கட்டுரை, பல உண்மைகளையும், செய்திகளையும் பேசுகிறது. அதிலே கல்வியறிவு மிக்க ஈழத்தமிழ் சமூகம் மீது மறைமுகமாக மேற்கொள்ளபட்ட அறிவியல் அழிப்பு என்ற செய்தி முக்கியமாகச் சுட்டப்படிருக்கிறது.

தமிழ்மக்கள் மீது சிங்களப்பேரினவாதம், இனவாத யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகளை உற்று நோக்கிக் கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தமிழ்சமூகத்தின் அறிவியல் மீது, உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் திட்டமிட்டு மேற்கொள்ளும், அழிப்பு நடவடிக்கை தெள்ளனெத் தெரியும்.

வடஇலங்கையில், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்த போதும், பல்வேறு கிராமங்களிலும் இருக்கும் சனசமுக நிலையங்கள் பல, பல் வேறு சந்தர்ப்பங்களிலும் இராணுவ நடவடிக்கைகளின்போது பாதிப்புக்குள்ளானது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும், ஞாபகத்திலிருப்பதுமானது, வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு சனசமுகநிலையக் கட்டிடத்திற்குள் வைத்து, இராணுவச்சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது. அந்தகட்டிடத்தின் சூழலிலே சுற்றி வந்தவர்களின் குருதி, அந்தக் கட்டித்தின் சுவர்களிலும், படிக்கும் மேசைகளிலும், கொட்டிக்கிடந்தது.

எத்தனை பாடசாலைகள் மீது தாக்குதல் செய்திருக்கின்றார்கள். எத்தனை கல்விக்கூடங்களை இராணுவமுகாம்களாக மாற்றியிருக்கின்றார்கள். நாகர் கோவிலில் பாடசாலை மீதும், பாடசாலை மாணவர்கள் மீதும், நடாத்தப்பட்ட விமானக்குண்டுவீச்சு, செஞ்சோலையில் பள்ளிமாணவர்கள் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதல், என்பவையெல்லாம் சொல்லுகின்ற செய்தி என்ன? இவற்றின் பின்னே மறைந்திருக்கின்ற நோக்கு, அறிவியல் அழிப்பென்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும். ஏன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முகிழ்வே, தமிழ் இளைஞர்களின் அறிவியல் தரப்டுத்தலில் இருந்துதானே ஆரம்பமாகியது.

இப்படித் திட்டமிட்ட வகையில், அறிவியல் படுகொலை செய்து வரும் அரசும், அது சார்ந்த தலைவர்களும், உலகப்பரப்பில் தம்மை நாகரீக மனிதர்களாகவும், தமது அரசினைத் தார்மீக அரசாகவும் பறைசாற்றிக்கொள்வதையும், இதற்கு அகத்திலும் புறத்திலும், வக்காலத்து வாங்குபவர்களையும், வளங்கள் வழங்குபவர்களையும், என்னவென்று சொல்வது? வெட்கம் கெட்டவர்கள்.

Tuesday, May 15, 2007

Made in Switzerland.

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 2

இந்தத் தொடரில் , பல்வேறு தலைப்புக்களலிலும் இங்குள்ள வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளையும் பார்க்கலாம் என எண்ணிருப்பதால், அத்தியாயங்களுக்கான தலைப்பை பிரதான தலைப்பாகவும், தொடரின் பகுதிவரிசையை உபதலைப்பாகவும், சுவிற்சர்லாந்து எனும் வகைப்பிரிவுக்குள்ளாகவும், இத்தொடரினை எழுதுகின்றேன். வாசிப்பவர்கள் குழப்பமற்று வாசிப்பதற்கான சிறு வழிகாட்டுதலிது.






ஐரோப்பாவிலும் சரி, அனைத்துலகிலும் சரி, சந்தைப்படுத்தலில், Made in Switzerland, Swiss Quality, என்பவற்றுக்கான தரமும், விலையும், தனித்துவமானது. அவை குறித்து விபரமாக, பின்னர் பார்ப்போம். இந்தப் பகுதியில், தனது நாட்டுக்கான பிரசைகளை எவ்விதம் திட்டமிட்டு உருவாக்கிறது என்பதை பார்க்கவிருக்கிறோம். இவைகளில் பல நடைமுறைகள், ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் நடைமுறையில் இருப்பவைதான். இந்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இவை புதிதாகவோ, அன்றிப் புதினமாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் ஏனைய பலபகுதிகளில் வாழ்பவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சுவாரசியத்துக்காகவும் சற்று விரிவாகக் குறிப்பிடுகின்றேன்....

காரில் வெளியே சென்றுகொண்டிருந்தோம். ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி வந்தது. எங்கள் சாலையில் சிகப்பு வண்ணச் சைகைவிளக்கு. அதனால் வாகனங்கள் வரிசையாக நின்றன. பின் ஆசனத்திலிருந்த என் மகள், காரின் இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தழுதாள். மனைவிக்கு என்ன காரணம் எனப் புரியவில்லை. நான் புரிந்து , உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு காரணத்தை மனைவிக்குச் சொன்னேன். அவரும் அதுவரை அதனைக் கவனினக்கவில்லை. அது ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி என்பதால், சைகைவிளக்கு அணைந்து எரிய, கூடிய நேரம் தேவை. அந்த நேரத்தில் அங்கே நிற்கும் வாகனங்களின் இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்குமாயின், அவற்றிலிருந்து வரும் புகையினால், சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதற்காக, அப்படியான பெருஞ்சந்திகளில், இயந்திரத்தை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்புப் பலகை கண்டுகொண்டதனால்தான் அவள், இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு வயது ஆறு. பாலர் வகுப்புக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள்.



பாலர்வகுப்புக்களிலேயே, சிறிது சிறிதாக நடைமுறை வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பல்துலக்குவதிலிருந்து, உணவு உட்கொள்ளும் முறைமை, அதற்கான ஆயத்தம் செய்தல்,(மேசைஒழுங்கு செய்தல். கரண்டி எந்தப்பக்கம், கத்தி எந்தப்பக்கம், சாப்பாட்டுத்தட்டு எங்கே என்பனபோன்றவை) வீதியால் நடப்பது, வீதியை கடப்பது, என்றுபல விடயங்கள். இதைநேரில் பார்க்காதவர்களுக்கு சற்றுமிகுதியாகச் சொல்வது போல் கூடத்தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.

இந்தியாவில் ஒருமுறை காரில் பயனம் செய்துகொண்டிருந்த போது, வெற்றுபிஸ்கட்பெட்டி, முடிந்த தண்ணீர்போத்தல் என்பவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் நான் சேகரிப்பதைப்பார்த்த வாகனச்சாரதி, சிரித்தபடி " தூக்கி வெளியில போடுங்க சார்.." என்று சொன்னது மட்டுமல்லாமல், ஓடிக்கொண்டிருந்த வாகனத்திற்கு வெளியே சாலையில், அக்கழிவுப்பொருட்களை எறிந்துவிட்டுத் திருப்தியானார். ஆனால் இதுவென்னவோ, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் என்று சொல்லமாட்டேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கூட இன்றும் காணக்கூடிய காட்சிதான். ஆனால் சுவிற்சர்லாந்தில் தெருக்களும் நகரங்களும் துடைத்த வைத்ததுபோல் காணப்படுவதற்கு, தன்நாட்டுப்பிரசைகளை இளவயதிலேயே பழக்கப்படுத்திக் கொள்கிறது.

பாலர் வகுப்புப் பிள்ளைகளாகவிருக்கும் போதே, சிலநாட்களில் வீட்டிலிருந்து வெற்றுப்பெட்டி, வெற்றுப்பிளாஷ்டிக் போத்தல், வெற்றுத்தகர டப்பா, என்பவற்றைப் பிள்ளைகளைக் கொண்டுவரச்சொல்லும் ஆசிரியர், அன்றையதினங்களில், பிள்ளைகளை அப்பொருட்களுடன் வெளியே அழைத்துச்சென்று, எங்கே எந்தக் கழிவுப்பொருளைப் போடவேண்டுமென்பதைக் காட்டிக் கொடுக்கின்றார். சிறுவயதில் பழகும் பழக்கம் தொடர்ந்து அவர்களிடம் வருகிறது. நாடும் துப்பரவாக இருக்கிறது. ஏதாவது ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்த மைதானங்கள், தெருக்கள், மண்டபங்கள், என்பவற்றில் சேரும் கழிவப்பொருட்கள், மறுநாள் அப்படியொரு நிகழ்வு நடந்த சுவடேதெரியாதவாறு துப்பரவு செய்யப்பட்டுவிடும்.

வீட்டினுள் சேரும் கழிவுப்பொருட்களைத் தனித்தனியாக, அதற்குரிய இடங்களில் சேர்க்கவேண்டும். தவறும்பட்சத்தில் அதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையினைக்கூட சில மாநிலஅரசுகள் வைத்துள்ளன. வெளிநாட்டவர்கள் சுவிஸ் பிரசாஉரிமைகோரி விண்ணப்பிக்கும் போது, சில இடங்களில் அவர்கள் வீசும் கழிவுப்பைகளின் ஒழுங்கு, கண்ணகாணிக்கப்படுவதாகக் கூட ஒரு கதையுண்டு.



பிள்ளைகள் பாடசாலை செல்லத் தொடங்கியதும், வீதியில் சைக்கிள்ஓட்டும் முறை, போதைவஸ்துக் கெடுதல், சுற்றாடல்பாதுகாப்பு, உனது கிராமம், உனது நகரம், உனது மாநிலம், உனது நாடு, எனப்படிப்டியாக அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. சகமனிதனைப்புரிந்துகொள்ளலுக்கான ஆரம்ப நிலைவரை இந்தத் தொடர் உருவாக்கம், முதல்நிலைபள்ளிக்காலங்களில் நடந்தேறும்.
இந்த உருவாக்கத்தின் முதுநிலையை முதலில் கண்டபோது மேலும் வியப்புற்றேன்.

தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்தபோது, ஒரு திங்கட்கிழமை காலை வேலைக்குச் சென்றிருந்தேன். திங்கட்கிழமை காலைகள் எப்போதும் பரபரப்பானவை. வேலைகள் நிரம்பிக்கிடக்கும். பரபரப்பாகத் திரியும், என் பணிப்பகுதி மேலாளர் மிகுந்த அமைதியோடு செயற்பட்டுக்கொண்டிருந்தார். உதவி மேலாளர் என்னருகே வந்தபோது மெதுவாகச் சொன்னார், மேலாளரின் தாயார் சனிக்கிழமை மாலை இறந்துவிட்டார். இன்று மதியம் நல்லடக்கம் என்றார். அப்படியாயின் அவர் செல்லவில்லையா? பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் நல்லடக்கம். அவர் பன்னிரண்டு மணிக்குச் சென்றுவிடுவார் என்று. கட்சித்தலைவன் இறந்ததற்காக, கணக்கற்றவர்களை இறக்கப்பண்ணும் கலாச்சாரத்தில் பழக்கப்பட்ட எங்களுக்கு இது அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றலாம். ஆனால் ஒருநாளின் முக்கியத்துவம், பெறுமதி, உண்மையாக உணரப்பட்டதால் இது சாதாரணமாக இங்கு சாத்தியமாகிறது. இந்த உருவாக்கத்துக்கு கல்விபயில்காலக் கற்கைகள் மட்டும் காரணம் என்று சொல்லிட முடியாதாயினும், தொடக்கம் அதுவே.

இது ஒருவகை மூளைச்சலவை என்று சொல்லி வாதிடலாம். இதுகுறித்து வேறுபல விமர்சனங்களும் வைக்கலாம். ஆனால் சுவிஸ் என்ற வளம்குறைந்த ஒருபிரதேசம், வளம்பொருந்திய நாடாக நிமிர்திருப்பதற்கு, இத்தகைய உற்பத்தியும் ஒரு காரணம்.

Wednesday, May 09, 2007

தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன?


தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன? . தமிழ் மணத்திற்கு இது நியாயமா? இதற்குத் தமிழ்மணம் என்ன செய்யப் போகிறது? தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் கிடைக்குமா? தலைப்பினாலோ அல்லது என்மீதான அன்பினாலோ வந்திருக்கும் உங்களிடமும், தமிழ்மண நிர்வாகத்தினரிடமும், முதலில் இப்படியொரு தலைப்பிட்டமைக்கு, இவ்விடுகையின் தார்மீக காரணத்திற்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.


அன்மைக்காலங்களில் தமிழ்மணம் என்னும் பெயர் , இடுகைகளில் அல்லது பதிவுகளில், தமிழ்சினிமாக்களில் கூட்டம் சேர்க்க கவர்ச்சி நடிகை என்பதற்கிணையாக, பதிவுகளுக்கு ஆட்களை அழைத்துவரும் உத்தியாக, இடுகைத்தலைப்புக்களில் பாவிக்கப்படுவது போல் ஒரு தோற்றம் தென்பட்டதாலும், தமிழ்மணம் என நான் இவ்விடுகையில் சுட்ட விழைவது, தமிழ்மணத்தின் பதிவர்களையும், வாசகர்களையும் என்பதாலும், இந்த இடுகைக்கு இப்படியொரு தலைப்பு. மற்றும்படி இந்த இடுகைக்கும் தலைப்புக்கு எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் இடுகையின் நோக்கம் உன்னதமானது. ஆதலால் தயவு செய்து சற்றுப் பொறுமையுடன் வாசித்துச் செல்லுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

சென்றவாரத்தில் ஒரு நாள் பதிவர் ஒருவரிடம், இணையவழி பேசிக்கொண்டிருந்தபோது, பலவிடயங்களையும் இணையவழி அறிந்துகொள்கின்றோம். உலகின் எல்லா நன்மை தீமைகளும் தெரிகிறது. ஆனாலும் வாசித்து விட்டு அப்படியே அயர்ந்துவிடுகின்றோம், வேறில்லை எனக் கவலைப்பட்டார். இதே கவலையை பல பதிவுகளிலும், இடுகைகளிலும் கூட அவ்வப்போது கண்டிருக்கின்றேன். ஆனால் என்ன? பின்னூட்ட ஒப்பாரியோடு, அவை முடிந்துவிடும். பின் பிறிதொரு நாளில் ஆரம்பிக்கும்.


சென்ற சில மாங்களுக்கு முன் ரவிசங்கர் இட்ட இப்பதிவினை இரு தினங்களின் முன் பார்க்கக் கிடைத்தது. அதிலும் ஆதங்கங்கள் பல எழுந்திருந்தன. இப்பதிவில் சொல்லப்பட்ட விடயத்துக்கு முழுமையான தீர்வென்பது, அரசுகளால் அன்றி, சாதரண மக்களால் ஏதும் ஆவதிற்கில்லை என்றபோதும், எங்களால் முடிந்தவரையில் முயற்சிக்கலாம்.


சுவிஸ் ஒரு முதலாளித்துவக் கொள்கைசார் நாடு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிருந்து கூட இடதுசாரி நண்பர்கள் சிலர் கியூபாவில் உணவும், கல்வியும் பெறச் சிரமப்படும் குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து வந்து, இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில், தங்கியிருந்து உதவிகள்புரியும் தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிலருடன் எனக்கு அறிமுகமும் உண்டு. சில பணிகளில் இணைந்த அனுபவமும் உண்டு. நானறிந்தவரையில், அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அப்பணியின் பின்னால் இருப்பது வரையறையற்ற மனிதநேயமே.


இந்த நேயம், இணையத்தில் எழுதும் எங்களிடமில்லையா? இல்லாமலா மகாலட்சுமிக்கும், கெளசல்யாவுக்கும், வேறுசில உதவிகளுக்கும், எங்கள் கைகள் இணைந்தன. இத்தகைய பணிகளுக்கு முதலில் தேவையானது புரிந்துணர்வுமிக்க ஒரு கூட்டுழைப்பு. அந்தக் கூட்டுழைப்பு எங்களிடம் இருந்துவிட்டால், இத்தகைய செய்திகள் சுட்டும் இழப்புக்களில் ஒரு சிலவற்றையாவது இல்லாது செய்ய முடியும்.


உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்களே! உன் பின்னால் யார், என் பின்னால் நீ, என்றெல்லாம் எண்ணாது, மனிதநேயம் என்னும் மகத்தான சிந்தனையோடு மட்டும் செயலாற்ற விரும்புபவர்களே! வாருங்கள் ஒன்றாய் கூடி, ஒருமனதாய் திட்டமிட்டு, ஒருசில உயிர்களையாயினும் காத்திடுவோம். இதற்கான எண்ணம் மட்டுமே எம்மிடத்தில் இப்போதுண்டு. இணையும் கரங்களின் பலத்திலும், மனத்திலும், உருவாக வேண்டும் ஒரு பொதுவேலைத்திட்டம். ஆதலால் ஆர்வமுள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை இங்கே தாருங்கள், இணைந்து செயற்பட இங்கு uthavi@gmail.com மடலிடுங்கள். இணையும் பணி எல்லோர்க்குமாயினும், இணைக்கும் தமிழிலேயே முடிந்தவரை உறவாடுவோம், தொடர்பாடுவோம். இணையம் எனும் பெருந்துணையால், இயன்றவரை வழிநடப்போம்.....உங்கள் உறவாடல் கண்டபின் மறுபடியும் இது குறித்து உரையாடுவேன்.


- நட்புடன்

மலைநாடான்.

Monday, May 07, 2007

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1

வரவேற்பு

"அல்ப்ஸ் மலையின் சிகரத்திலே.." என்று பாடலைப் பாடிக்கொண்டு, ஈழத்தின் தெருக்களில் திரிந்த போது, சிறிதும் எண்ணிப்பார்த்திராத இந்த மண்ணில், சில வருடங்களின் முன் ஓரு மே மாதத்தின் முதல் வாரத்தில்தான் கால் பதிந்திருந்தேன். எத்தனையோ தடவை எழுத வேண்டுமென்று எண்ணிய போதும், ரவிசங்கர் ' நாடு நல்ல நாடு' தொடர்வினைக்கு அழைத்த போதும், எழுதும் சோம்பலில் விடுபட்டுப் போயிருந்த எண்ணம், கால்பதித்த நாட்களின் ஞாபகங்கள், மீள்நினைவாய் வந்து விழும் இன்றைய பொழுதுகளில் எழுந்திட எழுதுகின்றேன். வாருங்கள் இந்தத் தொடர்வழி, அல்ப்ஸ் மலைகளின் சாரல்களில் அலைந்து வருவோம். நான் கண்ட, கேட்ட கதைகளினூடு, ஐரோப்பிய சொர்க்கம், உலகின் பூந்தோட்டம், என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்ட சுவிற்சர்லாந்தில் நடைபயில்வோம்.








Willkommen auf Schweizer சுவிஸ் டொச்.

Bienvenue dans le Suisse சுவிஸ் பிரெஞ்.

Benvenuto in Svizzera சுவிஸ் இத்தாலி.

Allegra de Svizra சுவிஸ் ரொமான்ஸ்


சுவிற்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கிலும் வரவேற்புக் கூறினால் மட்டும் போதுமா? சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் உங்களுக்குத் தேசிய வாத்திய இசை மூலம் வரவேற்றால்தானே மரியாதையாக இருக்கும்.

தேசிய வாத்தியமான அல்ப்ஹோர்னைப் பற்றி, " சுவிசின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று அல்ப்ஹோர்ன் ( Alphorn) . அன்னளவாக எமது நாதஸ்வரத்தை ஒத்திருக்கும். குழல் வடிவான இக்கருவி வாய்பகுதியிலிருந்து சிறிது சிறிதாக அகன்று சென்று, மேல் நோக்கி வளைந்து , பலத்த சத்தத்தை ஒலிக்கும் வகையில் பருத்து விரியும். நிலத்தில் நின்றவண்ணம் ஊதி இசைக்கும் இக்கருவியின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மீற்றரைத் தாண்டும். கோடைகால வருகையுடன், மேச்சலுக்காக கால்நடைகளை அல்ப்ஸ் மலைச்சாரல்களை நோக்கி நகர்த்துகின்ற விவசாயிகள், கூடிக்குதுகலித்து குரலெழுப்பும் விவசாயிகளின் செய்தி கூறுமிசையாகவும் இதைப்பார்க்க முடிகிறது. இயற்கை வனப்புக்களோடு முட்டி மோதி வருகின்ற சுவிசின் சுவாசக்காற்றை, சுருதி பேதமின்றி ஒலிக்கும் அல்ப்ஹோர்ன் " முன்னரே எழுதியுள்ளேன்.
வரவேற்ற உங்களுக்கு வகையாய் சுவையாய் சொக்லேட் தரவிடின், பிறகென்ன சுவிஸ் வரவேற்பு. ஆகவே வந்த உங்களுக்கு வாய்க்கு ருசியாக, சுவிஸ் ப்ரீமியம் சொக்லேட்.



Photo Sharing and Video Hosting at Photobucket
சொக்லேட் சாப்பிட்டாயிற்றா? இந்த இடுகையை இன்றைக்கு வாசியுங்கள். சுவிற்சர்லாந்து பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கும். அடுத்த பகுதியில் அல்ப்ஸின் சாரல்களில் நடக்கத் தொடங்குவோம்....