நல் உருவாக்கம்

>> Wednesday, October 14, 2009

2009ம் ஆண்டுக்கான உலகச் சைக்கிள் ஓட்டப் பந்தயப் போட்டிகள் கடந்த மாதம் 23, 24, 26, 27ந் திகதிகளில் சுவிற்சர்லாந்தின் மென்திரிசியோ எனும் இடத்தில் நடைபெற்றது. இதனைத் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தைக் கவனிக்க முடிந்தது. ஐந்து பள்ளிச் சிறுவர்களை , இளம் பத்திரிகையாளர்களாக அந்தப் போட்டிகளை நேரில் பார்த்துச் செய்தித் தொகுப்பாகக்க அழைத்து வந்திருந்தார்கள். 10 தொடக்கம் 12 வயது வரையிலான அவர்கள், உலக சாம்பியன்களைச் சந்தித்து செவ்வி காண்பதும், நிழற்படமெடுப்பதுமாக பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.


அவர்களைத் தொலைக்காடசி செய்தியாளர் ஒருவர் மடக்கிப் பேட்டி கண்டார். இங்கு நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றபோது, தாங்கள் இரு மாதகாலமாக அந்த உலகப்போட்டிகள் தொடர்பான செய்தி இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்காக சைக்கிள் ஓட்ட வீரர்களைச் செவ்வி கண்டும் நிழற்படங்கள் எடுத்து வருவதாகவும் சொன்னார்கள். இதுவரையில் எத்தனை படங்கள் எடுத்திருப்பீர்கள் எனச் செய்தியாளர் கேட்க , அந்த இளம் பத்திரிகையாளர் இதுவரையில் 5000 படங்கள் எடுத்திருப்போம் என்கிறார.

தொலைக்காட்சிச் செய்தியாளர் ஆச்சரியத்தில் 5000 படங்களா? என வியக்கின்றார். தொலைக்காட்சியைப் பாரத்துக் கொண்டிருக்கும் நாமும் தான் வியக்கின்றோம். அடுத்த கணம், அந்த ஐவரில் மற்றொருவர், அந்த 5000ம் படங்களில் பத்துப் படம்தான் நல்லா வந்திருக்கு என்று சொல்லிச்சிரிக்கின்றார். நாமும் சிரித்து விடுகின்றோம் அந்தச் சிறு பிள்ளையின் மழலையில். ஆனால் அதற்குப் பின்னால் மற்றுமொரு உண்மையும், தொழில் அக்கறையும் கூட ஒளிந்திருப்பது உண்மை. சுவிற்சர்லாந்தில் தரம் காணல் என்பதில் அத்துனை அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்ம.

நாட்டிற்கான நாளைய தலைமுறை உருவாக்கம் என்பதில் அவர்கள் காண்பிக்கும் அக்கறையும், ஆர்வமும், இளைய தலைமுறை குறித்த உயர்வான சிந்தனையும் அதற்குள் அடங்கியிருந்தன.

Read more...

ஒரு ஜேர்மனியத் திரைப்பட அனுபவம்

>> Saturday, August 08, 2009

பாயும் வேங்கைப் புலியினை அடையாளமாகவும், மஞ்சள் நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப் பெயரையும் கொண்டமைந்த லோகார்ணோ உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் முதலிரு வாரங்களில் நடைபெறும் இந்தத் திரைத்திருவிழா 62ம் ஆண்டுக் கோலாகலம், இம்மாதம் 5ந் திகதி முதல், 15ந் திகதிவரை நடைபெறுகிறது.


இநத் விழாவின் (இது பற்றிய விரிவான கட்டுரையை இந்தச் சுட்டியில் காணலாம்) பல்வேறு சிறப்புக்களில் ஒன்று , திறந்தவெளிச் சினிமா. அந்தத் திறந்த வெளிச்சினிமாவில் இயக்குனர் Ludi Boeken நெறியாள்கையில் உருவான UNTER BAUERN - RETTER IN DER NACHT எனும் ஜேர்மனியத் திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இரண்டாம் உலக யுத்த காலத்தைக் கதையின் நிகழ்காலமாகவும், ஜேர்மனியை கதையின் நிகழ்களமாகவும் கொண்ட ஒரு திரைப்படம். படத்தின் மொழிமூலமும் ஜேர்மனே.


போர் எத்தகைய கொடியது என்பதைப் போர் நடந்த நாடுகளில், அந்தப்போருக்குள் வாழ்ந்தவர்களால்தான் மிகநன்றாக உணரமுடியும். இந்தப் போர்களின் வலி, தனிமனித மனங்களில் ஏற்படுத்தும் , வலி, துயரம், என்பது சொல்லி விவரிக்க முடியாதது. ஆனால் அந்த வலியைப் பார்வையாளர்களின் மனதில் சிறப்பாக பதிவு செய்ய லூடி போகெனால் முடிந்திருக்கிறது என்பதை படம் நிறைவுபெற்றதும், Locarno Piazza Grande பெருமுற்றத்தில் நிறைந்திருந்த பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் கரவொலி நிரூபனம் செய்தது.


UNTER BAUERN - RETTER IN DER NACHT என்ற ஜேர்மனிய மொழித் தலைப்பைத் தமிழில் 'பண்ணைக்காறர்கள் இருக்கிறார்கள் இரவுகளைக் காப்பாற்ற' எனப் பொருள் கொள்ள முடியும். பொருத்தமான தலைப்புத்தான். இரண்டாம் உலக மாகாயுத்ததின் போது நிகழ்ந்த உண்மைக்கதையினை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. ஒரு யுத்தகாலக் கதையென்றபோதும், ஒரு விமானக் குண்டுவீச்சு , ஒரு துப்பாக்கிச்சூடு, ஒரு இரத்தம் தெறிக்கும் காட்சி, என்பன மட்டுமே திரையில் வருகிறது. 100 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில், இவை சில நொடிகள் மட்டுமே.


யூதக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு தாய், மகள், தந்தை, என மூன்றுபேரை ஜேர்மன் குடும்பம் ஒன்று, ஹிட்லரின் நாசிப்படைகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் கதை. அந்தக் கதைக்குள் எத்தனை தனிமனித உணர்வுகள், உணர்ச்சிப் போராட்டங்கள், வலிகள் வந்து போகின்றன. எல்லாக் கணங்களிலும், மனிதநேயம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆக்ரோசமான வசனங்கள், அடிதடிகள், என எதுவுமில்லாமல், அமைதியாக, பண்ணைக்காறர்களின் வாழ்வியலோடு நகர்கிறது கதை. நாமும் அதனோடே வாழ்ந்து விடுகிறோம்.


என்னைப் பொறுத்தவரை படத்தின் எல்லாக் காட்சிகளும் தவிர்க்கமுடியாதவை. ஆனாலும் ஒரு சில காட்சிகள் அப்படியே கண்வழிபுகுந்து, புலனில் ஆழப் பதிந்து விடுகிறது. ஹிட்லரின் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பேரன், இறந்ததையும், போரின் நிலையையும், அறியும் பெரியவர், சுவரில் மாட்டியிருக்கும் ஹிட்லரின் படத்தைக் கழட்டிக் கீழே வைப்பது, தொலைபேசி மணி அடிக்கும் போதெல்லாம் பயந்வாறும், பிரார்த்தித்தவாறும், தொலைபேசியை எடுக்கும் தாய், ஜேர்மனியர்கள் தோற்றுப் போவதை அறியும் யுதப் பெண், அந்நாட்டு மக்களுக்கு அத்தகைய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென பச்சாதாபம் கொள்ளும் நிலை, என எல்லாவிடத்திலும் எழுந்து நிற்பது மனித நேயம். நாசிகளால் மூன்று இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வேளையில் எம்மால் மூன்ற பேரைக் காப்பாற்ற முடிந்ததே எனக் காப்பாற்றிய அந்த ஜேர்மன் குடும்பத்தின் மன நிறைவு கொள்கின்றது. ஆனால் அதே சமயம் அந்தப்போரில் தங்களது இரு ஆண் வாரிசுகளை இழந்து நிற்கிறது.


அதிகாரங்கள் எல்லாவிடத்திலும் பிறழ்நிலையாகவே இருக்கின்றன. ஆனால் அதிகாரங்களுக்ககுட்பட்ட மக்களேயாயினும், நேயமிக்க மனிதர்களாக இருக்கின்றனர் பலர் என்பது பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனதில் இன்னும் சில கதைகள் ஒடின. 83க் கலவரத்தின் போது, தமிழர்களைக் காப்பாற்றிய சிங்களக் குடும்பங்கள், 85களில், தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் அரசால் வேட்டையாடப்பட்டபோது, அவர்களை மறைத்து வைத்திருந்த தமிழ்க் குடும்பங்கள், என நான் கண்ட சாட்சியங்களின் கதைகள் அவை. போரின் வலியை மனித உறவுகளின் உணர்வினால் சொன்ன வகையில், சிங்கள இயக்குநர் பிரசன்னா விதானகேயின் நெறியாள்கையில் வந்த புரஹந்த களுவர சிங்களப்படம் ( இப்படம் பற்றிய ஷோபா சக்தியின் பதிவு) ஞாபகத்துக்கு வந்தது.


விழாவில் இக்காட்சியின் ஹைலைட்டான விடயம், படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக கலைஞர்கள் அறிமுகத்தின் போது, இந்த உண்மைக் கதையின் சாட்சியங்களாக இயக்குனர் இரு பெண்மணிகளை மேடைக்கு அழைத்தார். இக்கதையின் நிஜமான நாயகியான அந்த யூதப் பெண்ணுக்கு 97 வயது. அவரைக் காப்பாற்றிய குடும்பத்தலைவியான ஜேர்மனியப் பெண்ணுக்கு 82 வயது. அந்த இரு மூதாட்டிகளும் இத்திரைக்கதையின் மூலக்கதைக்குரிய நிஜப் பாத்திரங்கள். நிஜமான நாயகியான 97 வயதுடைய Marga Spiegelக்குப் பக்கத்தில் நின்ற, திரைப்படத்தில் அவரது பாத்திரத்தை ஏற்று நடித்த Veronica Ferres பேசுவதற்கு வார்த்தைகளின்றிக் கலங்கி நின்றார்.


இயக்குனர் Ludi Boeken இத் திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் போது , இது ஒரு வரலாற்றுப் படமல்ல. ஆனால் வரலாற்றில் வாழ்ந்த மாந்தர்களின் மன உணர்வு பேசும் படம் என்று. அது முற்றிலும் உண்மை . படம் பார்த்து முடிகையில் அதை உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன், யூதக் குடும்பத்தைக் காப்பாற்றிய ஜேர்மன் குடும்பத்தின் தலைவியான அநத் 82 வயதுப் பெண்மணிக்கு இப்படத்தை அர்ப்பணிக்கின்றேன் எனச் சொல்ல..அதிர்ந்து ஒலித்தது கரவொலி. வெற்றி பெற வேண்டியது அதிகாரங்கள் அல்ல மானுடம் என அழகாக அடுத்த தலைமுறைக்குச் சொலலிக் கொடுக்கின்றார்கள்...ம்ம்..

நன்றி: 4தமிழ்மீடியா

Read more...

சிந்தாநதியை பிரபாகரனுக்குப் பிடிக்கும்.

>> Wednesday, July 22, 2009




" சிந்தா! உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்.."

" என்னங்க திடீரென இப்பிடிச் சொல்றீங்க.."
" உண்மை சிந்தா! உங்கள அவர் சந்தித்தால், நிச்சயம் அவருக்கு உங்களைப் பிடிக்கும்.."

பதிவர் சிந்தாநதிக்கும் எனக்குமிடையில் நடந்த உரையாடல் ஒன்றில் பரிமாறப்பட்ட வசனங்கள் இவை. இன்று, சிந்தாவும் இல்லை, பிரபாகரனும் இல்லை.
..........................................................................................

கடந்த வாரங்களில் இணையத் தொடர்பற்ற இடத்தில் நின்றதால் உடன் தெரியவில்லை. நேற்றிரவு மீளவும் இணையத் தொடர்பில் வந்த போதே இணையவழி கிடைத்த நண்பனை இழந்திருக்கின்றேன் என்பது தெரிந்தது. வலித்தது. வலித்துக் களைத்துப் போன மனதில் மறுபடியும் ஒரு மரணத்தின் வலி.
சிந்தாநதியின் சொந்தப் பெயர் என்ன?, அவரது வயதென்ன..? அவரது படம் உண்டா..? அவரைச் சந்தித்திருக்கின்றீர்களா..? என பதிவுலக நண்பர்களைக் கேட்டால், அவை அத்தனைக்கும் அநேகம் பேர் தரும் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அத்தனை பேருடனும் அருகிருந்தவர் போல் இணைய வழி இணைந்திருந்தார் . அதுதான் சிந்தாநதி.

சிந்தாநதி தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்த போதுதான் தொடர்பு கொண்டேன். ' இணையத்தில் இன்பத் தமிழ் ' வாராந்திர வானொலி நிகழ்ச்சி தொடங்கியபோது, வலைப்பதிவுகள் பற்றிச் செவ்விகாண்பதற்குப் பொருத்தமான நபராக, மதி கந்தசாமி எனக்குச் சுட்டி தந்தது சிந்தாநதியை. அந்த ஒலிப்பதிவுக்காகத் தான் முதலில் தொடர்பு கொண்டேன். அன்று தொடங்கி, கடந்த சில மாதங்களாக இணையத் தொடர்பில் அவர் இல்லாதிருக்கும் வரை அருகிருந்தோம்.

இணையத்தின் மூலம் நான் அதிகம் பேசிய நண்பர் அவர் மட்டும்தான். ஐ.டி துறையில் பட்டம் பெற்றவராக அவரை நானறியேன். ஆனால் அவருள் ஐ.டி தொழில் நுட்பம் அடங்கிக் கிடந்தது. தேடலில் கணினி கற்ற அவரிடம், தேங்கிக் கிடந்தது கணினித் தொழில் நுட்பம். அதைவிட மிகுதியாகவிருந்தது அவரது தன்னடக்கம்.

அவரைப் பற்றி காசி அவர்கள் நினைவு கூர்கையில், தேனி உமரும், தேன் கூடு சாகரனும் இணைந்த கலவை சிந்தாநதி எனக் குறிப்பிடுகின்றார். உண்மையும் அதுதான். நுட்பத் தகவல்களை வலைப்பதிவுலகில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதின் தொடக்கப் புள்ளி என்று கூடச் சொல்லலாம்.

கணினி, இணையம், என்பதற்கப்பாலும், பன்முகத் திறமை மிக்கவராக சிந்தாவைக் காண முடிந்தது. ஈழத்து அரசியல் யதார்த்தம் குறித்து சரிவரத் தெரிந்த பதிவுல நண்பர்களின் எண்ணிக்கையை அடக்கிவிட இரு கைவிரல்கள் அதிகமென்பேன். ஆனால் அந்த எண்ணிக்கைக்குள் தவிர்க்கப்பட முடியாதவராக சிந்தா இருந்தார்.

செய்தியாளனாக, கணனிச் சித்திரம் வரைபவராக (சாகரனுக்கு அஞ்சலி செலுத்த "சாகர சங்கமம்" ஒலிப்பதிவு செய்த போது, ஒரு நிமிடத்தில் முகப்புப் படம் செய்து தந்தார்) , இசை ரசிகராக, எனப் பலவிதமாய் பரிமளித்த அவர் , எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல நட்புப் பாராட்டுபவராக இருந்தார். அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் நான் கண்ட சிறப்பு சுயமரியாதை மிக்கவராக இருந்தார் என்பதே. அவருடன் பழகிய பலருக்கும் அவர் ஒரு ஊனமுற்றவர் என்பது நீண்ட காலத்தின் பின்பே தெரிய வந்திருக்கும். தன்மீது மற்றவர் கழிவிரக்கம் கொள்ளக் கூடாதென்னும் சுய மரியாதையின் நிமித்தமே அதனை அவர் வெளிப்படுத்துவதில்லை என்பதை அறிந்து கொண்ட தினத்திலேதான்
" சிந்தா! உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்.." என்றேன்.
ஏன் என்றார்.
சார்ள்ஸ் அன்டனியை தனக்குப் பிடிக்கும் என்பதற்குப் பிரபாகரன் சொல்லும் காரணம், தன் மீது யாரும் கழிவிரக்கம் கொள்வதைச் சார்ள்ஸ் விரும்புவதில்லை என்பதே என்கிறார். அதே குணமும், மனலிமையும், உங்களிடமும் இருக்கிறது. ஆகையால் பிரபாகரனை நீங்கள் சந்தித்தால் நிச்சயம் உங்களை அவருக்குப் பிடிக்கும் என்றேன்.
சிரித்தார்.
அழுகின்றேன். சொல்ல இன்னமும் உண்டு. ஆனாலும் சொல்ல முடியாது அழுகின்றேன். சென்ற ஆண்டில் அவரை நேரில் சந்திக்கும் தருணத்தைத் தவறவிட்டதை எண்ணி, பிள்ளைகள் மீது அவர் கொண்டிருந்த நேசம் கருதி, இரத்தலற்ற அவரது ஆளுமை நினைந்து, ஆறுதல் தரும் நட்பு நினைத்து அழுகின்றேன்.

சிந்தா! சென்று வா நண்பா!

Read more...
.
.

  © Blogger templates by Ourblogtemplates.com 2008

Back to TOP