Monday, January 08, 2007

நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது.

இந்த வருடத்தின் முதல் நாளிலேயே இந்தப்பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணமிருந்திருந்தாலும், எப்படியோ தள்ளிப் போயிற்று. ஆனாலும் அது கூட நல்லதற்குத்தான் போலும்.



//பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும்//

கருத்தாளர்களும், களமாடுபவர்களும், புரிதலில் வேறுபடும் புள்ளியிது. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

இது ஆழியூரானின் பதிவில் நான் இட்ட பின்னூட்டக்கருத்து. இது ஏதோ இந்தப் பதிவைப்படித்ததாலோ அல்லது இதனூடு தொடர்புபட்ட பிற பதிவுகளைப்படித்ததினலோ மட்டும் வந்ததில்லை. இதுவரையிலான என் வாழ்க்கைக்காலத்தில் பலதடவைகள் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் வந்த வார்த்தைகள் அவை. கண்ட உண்மையும் அதுதான்.


ஒரு இக்கட்டான சூழலை, கருத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கையாளும் தன்மையிலும், செயலாற்றுவோர் , அனுகும் தன்மையிலும், இந்த வேறுபாடு தெரியும். உடனடித் தேவையை அல்லது உடனடி உதவியை வழங்குவதில் , எப்போதும் சிந்தனையாளர்களை விடச் செயலாளார்கள் ஒரு படி முன்னேயே நிற்பார்கள். அதேசமயம் ஒரு ஒரு செயற்திட்டத்தைச் ஒழுங்குறச் செயற்படுத்துவதில், செயற்பாட்டாளர்கள் தவறிவிடுவதும் உண்டு. இதற்கு முக்கியமான காரணம், உதவிசெய்வதில் அவர்களை உந்தித்தள்ளும் உணர்வுதான். அதீத உணர்ச்சி வசப்படுதல் காரணமாக புறச்சூழ்நிலை பற்றிய சிந்தனையை இழந்துவிடுவது. இந்த உணர்ச்சி வசப்படுதலைக் கட்டமைத்துச் செலாற்ற எல்லோராலும் முடிவதில்லை. உதவி என அபயம் எழுப்புவோர் உள்ளங்களில் எப்போதும் இடம்பிடித்துக் கொள்பவர்கள் செயலாற்றுபவர்களே.

சென்ற ஆண்டிலேயே வலைப்பதிவு செய்ய வந்த என்னை, தங்கள் உதவும் பண்பால் உளம்கவர்ந்து கொண்ட சில பதிவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது. தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடிப்பது, படைப்பது, என்பதற்கும் அப்பால், செயல்முனைபவர்களாத் தென்பட்ட அவர்களை சிறப்பிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். இத்தகைய உதவிச் செயற்பாடுகள் ஏலவே முன்னரும், சுனாமி அனர்த்தத்தின் போதும், பிற சந்தர்பங்களிலும், நடந்துள்ளதாக மூத்த வலைப்பதிவாள நண்பர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய செயற்பாட்டாளர்களையும், அவர்களது செயற்திறனையும் விதந்து கொண்டே, சென்ற ஆண்டின் செயற்பாட்டாளர்களைக் கண்டு கொள்வோம்.

என்றென்றும் அன்புடன் பாலா , திரு , செந்தழல் ரவி ஆகிய இந்த மூன்று நண்பர்களும் ஆற்றியுள்ள, ஆற்றிவருகின்ற பணி எப்போதும் பாராட்டத்தக்கது.


என்றென்றும் அன்புடன் பாலா:-

செப்ரெம்பர் மாதத்தில், மாணவி கெளசல்யாவுக்கு உதவி , நவம்பர் மாதத்தில், ஸ்வேதா உயிர்வாழ உதவி , டிசம்பர் மாதத்தில், லோகப்பிரியாவுக்கு உதவி , என தன்னாலான உதவிப்பணிகளை முன்வைத்து, வலைப்பதிவு நண்பர்கள் பலரையும் ஒன்றினைத்து, தொடர்ந்து முன்முனைகிறார். பணிகளை முன்னெடுப்பது மட்டுமல்ல, தொடர்ந்து அவற்றின் செயற்திறனையும், அவதானித்து அவ்வப்போது அறியத்தந்து கொண்டுமிருப்பது அவரது பணிகளின் மேல் நம்பிக்கையையும், ஆர்வத்தினையும் ஏற்படுத்துகிறது. தொடருங்கள் பாலா!


திரு:-

கண்ணீருடன்... பதிவில் தொடங்கி, அடுத்தடுத்து பதிவுகள் மூலம் நண்பர்கள் பலரின் ஆலோசனைகள் பெற்று , ஈழத்தமிழர்களுக்கு உதவக் கையெழுத்து இயக்கம் எனத் தொடங்கிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் கையெழுத்தினைப் பெற்று, ஐ.நா சபைக்கு அனுப்பும் பெரும்பணியை நிறைவேற்றியுள்ளார். அதற்கும் மேலாக, தன் தமிழகப் பயணத்தின் போது, ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள அகதிமுகாம்களுக்குச் சென்று, அகதிகள் நிலைகுறித்தும், அவர்களுக்கு மேலதிக உதவிகளை எப்படிச் செய்வது என்பதும் பற்றியும் ஆராய்ந்துள்ளார். அரசியலுக்கப்பால், துன்பப்படுகின்ற மக்களுக்கான மனிதாபிமான உதவிப்பணியாக, அதை முன்னெடுத்து முனைவது பாராட்டுதலுக்குரியது. இதை ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய காரணத்தால், ஈழத்தமிழன் எனும் வகையில் ஈரலிக்கும் இதயமுடன் பார்த்தபோதும், இங்கே நான் பாராட்டுவது, அவரது மனிதாபிமானம் எனும் மானுடநேசிப்பிற்காகவே.


செந்தழல் ரவி:-

ஆண்டின் இறுதிப்பகுதியில் அதிரடியாக, ஏழைப்பெண் மகாலட்சுமிக்கு ... உதவிகோரிப் பதிவிட்டுக் , காரசாரமான கருத்துப்பகிர்வுகளுடன் தளர்ந்துபோகாமல், மகாலட்சுமி கல்விக்கு உதவி , பின்னர் என்றென்றும் அன்புடன் பாலாவின் பணிகளுடன் இணைந்துள்ளார்.

இது என்னவோ பார்ப்பதற்கு இலகுவான பணிகளெனத் தோன்றிடினும், செயலாக்கும் போது பல சிரமங்களையுந் தரக்கூடியவை. அத்தகைய தடைகளனைத்துயும் தாண்டி, வெற்றிகரமாக இப்பணிகளை நிறைவேற்றியுள்ள இந்த நண்பர்களுக்கு (நண்பர்களுக்குள்) நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது என்பதால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தத் தோன்றியது.
இவர்களை மட்டுமல்ல, இவர்களோடு இப்பணியில் பங்கு கொண்ட பலரும் இருக்கின்றார்கள். அத்தனை உள்ளங்களையும் உவகையுடன் பாராட்டுவோம்.

நண்பர்களே! உங்கள் உந்துதிறன், புத்தாண்டில் மேலும் பல புதிய பணிகளுக்கு வித்திடட்டும். பல்லுயிரும் பலன் பெறட்டும். வலைப்பதிவுலகு வளமான பணிகள் பலவற்றை வளர்த்தெடுக்கட்டும்

பாலா!
என்றென்றும் இது போன்றே அன்பாயிருங்கள்.

திரு!
உங்கள் பெயரில் போலவே செயலிலும் திரு நிறையட்டும்.

செந்தழல் ரவி!
உங்கள் சிந்தனைகள் மேலும் சிறப்படையட்டும். அதனால் பசித்திருக்கும் பலரும் பயன் பெறட்டும்.

- இனிய அன்புடன்
மலைநாடான்

9 comments:

Anonymous said...

மலைநாடன் உங்களுடன் சேர்ந்து நானும் எ.அ.பாலா, திரு, ரவி இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இன்னும் ஊரணிக்கு உதவி செய்த பத்மா, குழந்தைகளுக்கான "உதவி"க்குப் பதிவிட்ட மதி, குணவதி கல்விக்கு உதவிய மனசு என்று நன்றிக்குரியவர்கள் இன்னும் நிறையவே...

மலைநாடான் said...

//ஊரணிக்கு உதவி செய்த பத்மா, குழந்தைகளுக்கான "உதவி"க்குப் பதிவிட்ட மதி, குணவதி கல்விக்கு உதவிய மனசு என்று நன்றிக்குரியவர்கள் இன்னும் நிறையவே... //



பொன்ஸ்!

பத்மா, மதி, ஆகியோரது செயற்பாடுகளை மற்றுமொரு பதிவில் எழுதுவதாக இருந்ததால், அவர்களை இங்கே இணைத்துக்கொள்ளவில்லை. உண்மையில் மனசு கண்ணனின் குணவதிக்கு உதவி பதிவு எனக்குத் தெரியாது போய்விட்டது. அறியத்தந்தமைக்கு நன்றி. இவர்களது பணியைப்பாராட்டுவதும், தொடர்சியாக வேறும் செய்ய எண்ணியதால், எண்ணங்களைப் பதிவாக்கியுள்ளேன். மேலதிக தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி.

மலைநாடான் said...

நண்பர்களே!
இது வார்புருவில் செய்த மாற்றத்தை பரிசோதிப்பதற்காக ஒரு பின்னூட்டம்.

Anonymous said...

மலைநாடர்!
இத்தனை அல்லலுறுவோருக்கு ஆறுதலாகக் கை கொடுக்க எண்ணிய அனைவருக்கும் நன்றி. ஆனாலும் எல்லோரும் கூடி இழுத்த தேரில் என்கையும் இல்லை என்ற வெட்கம் கலந்த உணர்வு எனக்குள்ளது. இந்த ஆண்டிலாவது இயன்ற வரை கைகொடுக்க முயல உள்ளேன்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

கொடுக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணமே மகத்தானது. இனிவரும் காலங்களில் கூட உதவலாம்தானே.

enRenRum-anbudan.BALA said...

மலைநாடன்,
தங்கள் அன்புக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. பல நண்பர்களும் சமூக உதவி முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவது, உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.
எ.அ.பாலா

மலைநாடான் said...

பாலா!
ஆச்சரியமாகவிருக்கிறது. நேற்றுத்தான் இந்தப் பதிவைப் படித்திருக்கிறீர்கள் போலும். நான் நினைத்திருந்தேன் நீங்கள்இப்பதிவை ஏற்கனவே படித்து விட்டீர்கள் என்று.:) பறவாயில்லை. உங்களைப் பாராட்டிப் பதிவிட்ட நான் உங்களிடமும் அதைத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் பணிப்பளு, மற்றும் வேலைகள் காரணமாக மறந்து போய்வி்ட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். தங்கள் வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி

ச.சங்கர் said...

மலைநாடான்

கவித்துவமான உங்கள் இந்தப் பதிவிற்கும் குறிப்பாக தலைப்புக்கும் வாழ்த்துக்களும்

ரவி said...

இப்போதுதான் பதிவை பார்த்தேன்...ரொம்ப நன்றி......!!!!!!!