Sunday, November 26, 2006

கார்த்திகைத் தீபங்கள், பூக்கள், வேர்கள்.

முன்பெல்லாம் கார்த்திகை மாதம் வந்தால், பூரணை நாளில் வரும் விளக்கீடு நாள்தான் நினைவுக்கு வரும். இந்தியாவில் தீபாவளிநாட்களில் நடக்கும் தீபஅலங்காரங்களுக்கு இணையாக இவை இருக்கும். வீடுகள் கோவில்கள் வேலையிடங்கள் என எல்லாவிடங்களிலும், தீங்கள் ஜொலிக்கும். வளவுகளின் கோடிகளிலும், தோட்டந்துரவுகளிலும்,கூடச் சிறுதீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கும். நாட்கள் சிலவற்றுக்கு முன்பே இந்த அலங்காரத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினத்தில் அரங்கேற்றுவதும், அரங்கேறியவைகளை பார்த்து ரசிப்பதிலும், சிலவேளைகளில் பகைகொள்வதிலும், பொழுதுகள் கழியும். கார்த்திகை மாதத்தீபவிழாவிற்குக் கதைகள் பலவிருந்தாலும், இதற்குமேல் பெரிதாக எதையும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.


கார்த்திகைப்பூக்களைக் காணும் வேளைகளில், அதன் வர்ணங்களும், வடிவும் மனதுக்கு பிடிந்திருந்ததுதான், ஆனால் அன்றைய பொழுதுகளில் அதன்மீதான் நேசிப்புக்கு, அழகான பூ என்பதற்கு மேலாக எந்தவித அர்த்தப்பாடும் இருந்திருக்கவில்லை.


ஆனால் இன்று, கார்த்திகைத்தீபங்கள் என்றால் நினைவுக்கு வருவதெல்லாம், எம்மோடு கள்ளன் பொலிஸ் விளையாடிய, சினிமாவுக்குச் சேர்ந்து சென்ற, அர்த்த ராத்திரிகள் வரைக்கும் அமர்ந்திருந்து கதைகள் பல பேசிய, பாடசாலைக் காலங்களைப் பங்குகொண்ட, நண்பர்களின் முகங்கள்தான். கண்மூடிக்கொண்ட கடைசிக்கணங்கள் வரைக்கும், சிரித்துப் பேசிய அந்தச் சிங்கார முகங்கள்தான். கனக்கும் நினைவுகளுக்கும், கண்ணீர்த்திரைகளுக்கும் மத்தியில் வந்து கண்சிமிட்டிச் செல்வது எம் மாவீரர் முகங்கள்தான். இதயம் களத்துபோகும் கார்த்திகை இருபத்தியேழு.....



கார்த்திகைப்பூக்களை இப்போது காணும்போதெல்லாம், காதலிக்கத் தோன்றுகிறது. நேசிப்பிற்குரிய நண்பர்களின் முகங்களை நினைக்கத்தோன்றுகிறது. எதுவும் பேசாது எடுத்துணரத்தோன்றுகிறது. தொட்டுத் தழுவிச் சுகம் காணத் தோன்றுகிறது. கார்த்திகைப்பூவுக்கும் அர்த்தம் அதிகம் தெரிகிறது, அதன் அழகைப்போல,...
இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமான வேர்களெல்லாம் மண்ணின் அடியே மறைந்துபோய் படர்ந்திருக்கின்றன. பார்வைக்குப் புலப்படா வேர்களும், வேர்களின் மூலமும், வெளிப்படாது ஆழப்புதைந்து மறைந்துபோயிருப்பினும், ஈழத்தமிழினத்தின் இன்றைய துளிர்ப்பின் மூலம் அதுவே. இனிவரும் காலங்களில் தமிழின் வாழ்வும் அதுவே....

நினைப்போம், நெகிழ்வோம், நெஞ்சாரவாழ்த்துவோம்...









பாடல் இடம்பெற்ற இறுவட்டு: அன்னைதமிழ்
வெளியீடு: சுவிஸ் பணியகம் - நன்றி

1 comment:

கானா பிரபா said...

தம் எதிர்கால சந்ததி தழைக்கத் தன்னை உரமாக்கிய மாவீரர் தற்கொடை தனைப் போற்றி இறஞ்சுவோம்.