
வணக்கமுன்னா வணக்கம்! இது வண்ணத்தமிழ் வணக்கம் !!
ஒரு நட்சத்திரத்தின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு, தமிழ்மணத்துள் காலடி பதித்தவன், இவ்வார நட்சத்திரமாகியுள்ளேன். மகிழ்வாயு(சற்றுப் பயமாகவும்)ள்ளது.
காலடி எடுத்து வைத்த கணங்களில், பின்னூட்டத்தைத் தமிழில் எழுதும் தகமை கூட இல்லாதிருந்தேன். முயற்சித்ததில், ஒருதினத்தில் வலைப்பதிவாளனாக அடியெடுக்க முடிந்தது. அதற்குப்பின் படிப்படியான உருவாக்கம். அதற்கான அத்திவாரம், என் ஆர்வம். ஒருநாளில் வந்ததல்ல இந்த ஆர்வம்.
ஏழு வயதில் வாசிப்பு ஆர்வம், ஒன்பது வயதில், எழுத்தார்வம், பன்னிரண்டு வயதில் நடிப்பார்வம், எனத்தொடர்ந்த ஆர்வங்கள் பலவாகி............... ஐரோப்பா வந்த பொழுதில் கணனியில் தமிழ் கண்டு, கண்கள் விரிந்து, விரும்பி அறிந்து, சுயமாகத் தெரிந்து கொண்டதின் தொடர்ச்சியெனக் கொள்ளலாம்.
எண்ணங்களில், எழுத்துக்களில், உயர்வுகள் காணாத சாதாரணமானவன். மிகமிகச் சாதாரணமானவன். என்னிடம் இருந்து உங்களுக்கிடைக்கக் கூடியவைகள் பற்றிப் பெரிதாக ஏதும் சொல்லவோ, எதிர்பார்ப்புண்டாக்கி, ஏமாற்றவோ எண்ணவில்லை நான்.
என் எழுத்துக்களில் அதிகமானவை, என் அனுபவ வெளிப்பாடுகளாவே இருக்கும். ஏனெனில் வாழ்க்கையை அங்கிருந்தே, அதிலிருந்தே, அறிந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோன்றே என் எண்ணங்களில் சாதனையாளர்களாகத் தோன்றும், சராசரி மனிதர்கள் சிலரையும், இந்நாட்களில் உங்களோடு உறவாட எழுத்தால் அழைத்து வர எண்ணியுள்ளேன்.
எழுத்தில் எனக்கு ஆர்வமிருந்த போதும், எழுதுவதில் நான் படு சோம்பேறி.(பக்கம் பக்கமாக எழுதுபவர்ளைப் பார்த்து எப்போதும் ஆச்சரியப்படுவதுண்டு) ஆயினும் முடிந்தளவு முயற்சிக்கின்றேன் இவ்வாரத்தில். என் எழுத்துக்களைப் படித்துச் சொல்லுங்கள். என் எழுத்தால் மட்டுமல்லாது, உங்கள் கருத்துக்களாலும், பொலிவுற அமையட்டும் இவ்வாரம்.
தமிழ்மணத்தில் வலம் வருவதும் (ஒரு சில வேளைகள் தவிர்த்து) ஒரு நல்ல அனுபவமே. புதிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். பல புதிய விடயங்களையும் கற்றுக் கொள்ள முடிந்தது. இங்கு வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. எத்தனை அறிஞர்கள், எத்தனை வல்லுணர்கள், எத்தனை நுட்பவியலாளர்கள். ஏன்டா இவ்வளவு காலமும் இந்த களத்தைத் தவறவிட்டோம் எனக் கவலையுற்றதுமுண்டு.
நண்பர்களே!முண்டாசுக் கவிஞனின் நினைவுநாளில் தொடங்கும் இந்த வாரம், மேலும் சில முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட வாரமாக கருதுகின்றேன். முடிந்தவரைக்கும் சுவைபடத்தருவதற்கு முனைகின்றேன். முகஞ்சுழியாது, குறைகளைந்து, குணங்கொள்ள வேண்டுகின்றேன்.
இந்த அரியவாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினரையும், என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அத்தனை உள்ளங்களையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கின்றேன்.
தினமும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்பது நட்சத்திரவாரத்தின் பிரதான விதி. பார்ப்போம்....
தமிழ்மணநிர்வாகம் தெரிவுசெய்தவகையில் நட்சத்திரமாக நான் அறியப்பட்டபோதும், என்னைப் பொறுத்தவரையில் இவ்வாரத்தில் என்னுடன், என் எழுத்துக்களுடன் உறவாட வரும் நீங்கள் ஒவ்வொருவருமே, நட்சத்திரம்தான். வாழைகட்டி, மாலையிட்டு, மரியாதைகளுடன் வரவேற்றுக்கொள்கின்றேன். வாருங்கள்! கரங்கொடுங்கள்! சேர்ந்து சிறப்பித்து, மனம் மகிழ்வோம்.!
மகிழ்வோடு உங்களை வரவேற்க மற்றுமோர் இசை வணக்கம்