Monday, May 29, 2006

கெல்வெத்தியாவின் முன்னால் தமிழீழத்தின் உரிமைக்குரல்



29.05.2006 பிற்பகல் 2.00 மணிக்கு சுவிற்சர்லாந்து பாராளுமன்றமான கெல்வெத்தியா விற்கு முன்னால், கொட்டும் மழையில் திரண்டெழுந்த தமிழீழ மக்கள், தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். வருட இறுதிப்பரீட்சைக்காலமாகவும், கடமைநாளாக இருந்த போதும், ஆயிரக்கணக்கில் குழுமிய மக்கள் மத்தியில், சுவிஸ் பசுமைக் கட்சியின் தலைவி, பேராசியர் ஜான் மரிய ஜுலியா, உட்பட பலர் உரையாற்றினார்கள். இளைய தலைமுறை உறுப்பினர்களால் சுவிஸ் மொழியிலும், தமிழ்மொழியிலும், உரிமைக்குரல்பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுவிஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சில நம்பிக்கைக் கூற்றுக்களும் வாசிக்கப்பட்டது.

உரிமைக்குரலும், உரத்த பாடல்களும்

விடுதலைப்போராட்டத் தளங்களில் கலைஞர்கள் பங்கு இன்றியமையாதது. உலகின் பல்வேறு கலைஞர்களது உணர்வுபூர்வமான பங்களிப்புப் படைப்புக்கள் வரலாற்றுச் சான்றாகவும், வளரும் போராட்டங்களுக்கு வாழ்த்துக் கூறுபவையாகவும் இருக்கின்றன.

இன்று உலகின் பலபாகங்களிலும் நடைபெறும் ஈழத்தமிழர்களின் உரிமைக்குரல் போராட்டத்திற்காக, எங்கள் கலைஞன் வர்ண. ராமேஸ்வரன் தன் மாணவர்களுடன் சேர்ந்து, தயாரித்து வழங்கிய இரு பாடல்கள் இப்போதுதான் தனிமடலில் கிடைக்கப்பெற்றேன்.

இந்நிகழ்வுபற்றி ஏலவே சந்திரவதனாவும் வேறுசில நண்பர்களும் பதிவுகள் இட்டுள்ளார்கள். புலத்தில் எங்கள் தேசியவிடுதலைகுறித்த ஒரு மக்கள் செயற்பாட்டில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் தெரிந்திருந்தும், ஐரோப்பிய தொழில்முறை இயந்திரம் இடம்தராததால் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத உணர்வினை, இப்பாடல் பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

எங்கள் கலைஞனின் இந்தப்பாடலை, உரத்துப்பாடவும் கேட்கவும் அருகேயுள்ள Stickam Player ல் 1, 2 வது பாடலை தெரிவுசெய்யுங்கள்.

1 வது பாடல்: கூடுவோம் கூடுவோம்

பாடல் வரிகள்: பொன்னையா விவேகானந்தன்

இசையும் குரலும்: வர்ண. ராமேஸ்வரன்

தயாரிப்பு: C.T.R. வானொலி கனடா

2 வது பாடல்: தமிழா தமிழா

பாடல் வரிகளும் இசையும்: வர்ண. ராமேஸ்வரன்

பாடல் குரல்: வர்ண. ராமேஸ்வரனும் மாணவர்களும்.

தயாரிப்பு: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம். கனடா

கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினர்க்கும், கனடா C.T.R வானொலியினர்க்கும்,வர்ணம் கலைக்கூடத்தினர்க்கும் எம் நன்றிகள்.

Sunday, May 28, 2006

வெறுப்பேத்தியிருக்கக் கூடிய பாடல்

பாடல்: ஆடுகின்றான் கண்ணன்..

பாடியவர்: சிறிநிவாஸ்

இசை: சத்யா

பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது என்று கேட்கின்றீர்களா? அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு உதவித்தகவல். சிலகாலங்களுக்கு முன், தமிழ்நாட்டில் கணவன்மார்களுக்கு வெறுப்பினைத் தந்திருக்கக் கூடிய பாடல். உண்மையில் நல்ல இசைக் கோப்புடனான பாடல். என் குடும்பத்தில் அனைவர்க்குமே பிடித்தபாடல். பாடலைக் அருகேயுள்ள Stickam player ல்
3 வது பாடலைக் கேளுங்கள்.

Sunday, May 21, 2006

ஸ்ரீ ரங்கம் - ஒரு பண்பாட்டுக் கோலம் 2




மூன்று வருடங்களுக்கு முன் ஒரு மார்கழிமாத பகல் பொழுதில் ஸ்ரீ ரங்கம் செல்லும் வாய்புக் கிடைத்தது. ஸ்ரீ ரங்கத்தின் ராஜகோபுரம் உயர எழுந்ததினால்தான் இலங்கையில் பிரச்சனை என்றும், கோபுரங்களில் அழகானது ஸ்ரீரங்கக் கோபுரம் எனவும், ' பச்சை மாமலை போல் மேனி.. எனத்தொடங்கி அரங்க மாநகருளானே' என முடிவுறும், தெரிந்த சில பாசுரங்களின் தமிழகும், தமிழகப்பத்திரிகைகளில் ஸ்ரீரங்கம் ஏதோ ஒருவகையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருந்ததாலும், என்பெற்றோர் ஸ்ரீரங்கம் பற்றிப் பெருமிதமாகக் கதைப்பதை சின்னவயதுமுதல் கேட்டு வளர்ந்ததினாலும், ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் எனும் ஆவல் என்னுள் எழுந்திருந்தது என்னமோ உண்மைதான். வைணவ தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம் என அறிந்திருந்தேன். அங்கே நடைபெறும் சுவர்க்கவாசல் ஏகாதசி பற்றியும் சிறிது தெரியும். ஆனால் அவை குறித்து வேறெதுவும் தெரியாது.

இந்நிலையில் அழைத்துச் சென்ற நண்பர் மேலதிகமாகச் சில தகவலகளைச் சொன்னார்.சுவர்க்க வாசல் ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களும், பின்னதாக பத்து நாட்களும், விசேட விழாநாட்கள் என்றார். அதிலும் முதல் பத்து நாட்களைப் பகல் பத்தென்றும், பின்னைய பத்து நாட்களை இராப்பத்தென்றும் குறிப்பிட்டு விழா நடப்பதாகவும் சொன்னார்.
இதன்பின் அவர் பேசும்போது இந்தியக் கலாச்சாரமும், தத்துவார்த்தமும், அவ்வளவு விரைவில் அழிந்துவிடும் என யாரும் அஞசத்தேவையில்லை எனும் நம்பிக்கை தரும் ஒரு விடயம் இந்த விழாவிலே உண்டு. நீங்கள் கொடுத்து வைத்தவர், இப்போ பகல் பத்து காலம். ஆகையால், பகல் உற்சவத்தின் போதே நீங்கள் அதைக்காணக் கூடியதாகவிருக்கும் என்று சொல்லி என் ஆவலை அதிகப்படுத்தினார்.


ஸ்ரீரங்கம் சென்றடைந்தோம். வானுயர் வண்ணக் கோபுரம் கண்டோம். மூலவரின் அழகுபார்த்து வியந்தோம். பின் பிரகாரம் சுற்றி வந்தோம். பிரகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் மக்கள் குழுமியிருந்தார்கள். பாசுரம் படிக்கும் சத்தம் கேட்டது. சுகமான ஒரு தாளலயத்தில் தனித்துவப் பண்ணோடு பாசுரம் கேட்டது. மக்கள் கூட்டத்தை அண்மிய பொழுது, ஆழ்வார்கள் போல் அலங்காரம் செய்த வண்ணமாய், அடியார்கள் சிலர் வரிசையாக நின்று, பக்தியுடன் பாசுரம் பாடும் காட்சி தென்பட்டது.
நண்பர் சொன்ன நாளைய நம்பிக்கையும் தென்பட்டதுபோலவே தோன்றியது. ஆம், பாசுரம் பாடியவர்களுள் இளையவர்களும் இருந்தார்கள். ஆகா இதுவல்லவோ நற்பணி என எண்ணிக் கொண்டிருந்தவேளையில், 'பெருமாள் வைர அலங்காரத்தில் காட்சி தாறார், சேவிச்சுங்கோ..' நண்பர் சொன்னார். ரங்கநாதரைத் தேடி என் கண்கள் சுழன்ற கணத்தில் விழிகளில் விழுந்த அந்தக் காட்சி அச்சம் தருவதாயிற்று.


ஆழ்வார்கள் பாசுரம் பாட அகமகிழ்ந்து கேட்கும் ரங்கநாதரைக்காண திரும்பிய என் விழிகளின் திரையில் ஸ்ரீரங்கநாதரும், நாச்சியாரும் மேடையில் வீற்றிருக்க, சூழவும் ஆயுதம் தரித்த சீருடைக் காவலர்கள். தூரத்தே செல்கையில் கேட்ட பாசுரத்தின் இனிமை மறந்துபோயிற்று. சூழல் ஏற்படுத்திய பக்திப் பரவசம் பறந்து போயிற்று.
கரும்படை காவல் சூழ வீற்றிருக்கும் அரசியலாளர் போலான இறையவரைப்பார்க்க முடியவில்லை.
விவரம் தெரிந்த நாள்முதலே, இராணுவ அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்ததாலோ என்னவோ, ஆயுதந்தரித்த வீரரைக் கண்டதும், அருவருப்பும் அச்சமும் இணைந்தே வருகிறது. என்ன செய்ய?

ஏன் இப்படி ? .....

'பெருமாள வைர அலங்காரத்தில பாரக்க புண்ணியம் பண்ணிருக்கோணும்.....' நண்பர் ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்...