ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களிலெல்லாம், திருகோணமலையில் இனககலவரம் நிகழ்ந்திருக்கிறது. இப்போதும்....தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து நிற்பவர்கள் காலம்காலமாக பேரினவாதிகளால் அழிக்கப்படுகிறார்கள் என்பதை இப்பதிவில் நான் எழுதியதற்கு, மேலும் ஆதாரம் சேர்பதாக, பின்னூட்டப் பதிவிட்ட நண்பர் வசந்தன், \\ திருமலை நடராசன் \\ பற்றிய மேலதிகத் தகவல்கள் அமைந்தன. அவருக்கும், அவர்கூற்றை மேலும் உறுதிப்படுத்திய மற்றைய நண்பர்களுக்கும் நன்றி. இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலிலும், அன்றைய பொழுதில் நடந்தவை போன்ற தாக்குதல்களும், கொலைகளும் தொடர்ந்த வண்ணமிருப்பது, நாட்டின் மொத்த நலனுக்கும் ஊறுவிளைக்கக் கூடியதென்பது இன்னமும் உணரப்படாமலிருக்கும். கசப்பான உண்மை. இத்தகைய சந்தர்பங்களில் எல்லாம் ஊடாகங்களில் வரும் செய்திகளை உற்று நோக்கின் ஒரு ஒற்றுமையை அவதானிக்கலாம்.திருகோணமலையில் கலவரங்கள் நடைபெறும் போதெல்லாம்; தமிழர்கள் மீதான தாக்குதலுக்காக வெளியிடங்களில் இருந்து கலகக்காறர்கள் அழைத்து வரப்படுவதுதென்பது. இப்போதும் அப்படியே. திருகோணமலையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் சிங்கள ஒற்றுமையை கலைப்பதற்கு பேரினவாத ஆட்சியாளர் கையாளும் தந்திரோபாயம் இது. திருகோணமலையில் தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தடையாக வளர்ந்து விட்டது கண்ணுற்று மருண்டு போயிற்று. அதை முறியடிக்க பலவழிகளிலும் முயற்சிக்கிறது. அதில் ஒன்று இலங்கைத்தீவின் உள்ளநாட்டுப்பிரச்சனைக்கு மூல காரணமாய இனப்பிரச்சினையை, மதப்பிரச்சினையாக வெளியுலகுக்கு காட்ட முற்படுவது. வெளிநாடுகளின் கவனம் பல்வேறு காரணிகளாலும், இலங்கைத்தீவு நோக்கித் திசை திரும்பியுள்ள இக்கால கட்டத்தில் இப்பிரச்சினையை, பௌத்தபாரம்பரியத்தின் மீது தொடுக்கப்படுகின்ற போராட்டமாக அடையாளப்படுத்துவதன் மூலம், பௌத்தபாரம்பரியம் மிக்க சீனா, ஜப்பான், ஆகிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனும் தந்திரோபாயத்தை தற்போது பேரினவாதம் கவசமாக அணிந்து கொள்ள முனைகிறது.மேலும் இந்த விடயம் உடனடியாக, கவனயீர்ப்புப் பெற வேண்டுமாயின், உலகின் கண்கள் உற்று நோக்கும், திருகோணமலையில் அதை நடைமுறைப்படுத்துவதே பயன்தரும் எனப்புரிந்துகொண்டு செயற்படுகின்றது. இந்நோக்கத்தின் வெளிப்படையான செயற்படுதான், அண்மையில், திருகோணமலையில் மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்ட புத்தர்சிலை விவகாரம். உலகின் பார்வைக்கு இலங்கை ஒரு பௌத்த பாரம்பரிய நாடு என வெளிப்படுத்தவும், தனது ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை நியாயப்படுத்தவும், திருகோணமலையில் தமிழர் வரலாற்றினை அழித்தொழிக்கவும், போடப்பட்ட இப்புதிய திட்டத்தினை, இரவோடிரவாக அரச இயந்திரத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தியது. இந் நடவடிக்கைக்கு எதிர்புத் தெரிவித்த தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தொடரின் மூன்றாவது பகுதிக்கு, தேவன் எனும் வாசகர் எழுதி, எம்மால் பிரசுரிக்கப்படாத பின்னூட்டம், உண்மைநிலையினைப் புரிந்து கொள்ளும் அவசியம் கருதி இங்கே சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
மலைநாடன் அவர்களே!
கேடு கெட்ட இந்துமதத்தின் பிள்ளையார்களை ஏன் தமிழர்கள் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? பிள்ளையார் குளிக்கப்போனால் அப்படியே போய்த்தொலையட்டும் என்று இருந்திருக்க வேண்டியதுதானே? தமிழர்கள் எல்லோரும் கேடு கெட்ட இந்து மதத்தை விட்டு விட்டு பௌத்தமதத்தில் சேர்ந்திருந்தால் சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் பூத்துக்குலுங்கியிருக்குமே? அதனை விட்டு ஏன் கேடு கெட்ட இந்துமதத்தின் குளிக்கப்போன பிள்ளையார்களை தேடி எடுத்து உட்கார வைக்க வேண்டும்? பிள்ளையார்களை விட்டுவிட்டு புத்தசிலைகளை மட்டுமே வணங்க வந்திருந்தால் இத்தனை பிரச்னைகள் இருந்திருக்காதே? அம்பேத்கார் வழியில் பெரியார் வழியில் பௌத்தமதத்தை தழுவியிருந்தால் இத்தனை அழிவு நடந்திருக்காதே. அதே வேளையில் உலகத்தின் ஒரே மோசமான விஷயமான சாதியையும் ஒழித்திருக்கலாம்.
சிந்தியுங்கள்.
எப்போது பௌத்தமதத்தில் இணைந்து சிங்களம் பேச ஆரம்பிக்கப்போகிறீர்கள்?
தேவன்.
மதங்களின் ஆளுமை, தேசிய சிறுபாண்மை இனங்களின் இறைமையை அழித்துவிடக் கூடாதென்பதே எமது கருத்து. இனத்தின், மொழியின், இறைமையைப் பாதிக்கா வண்ணம் இணைந்தியங்குவதென்பது வேறு, இனத்தை, மொழியை, ஆக்கிரமித்து, நிலைகொள்வதென்பது வேறு. அது பௌத்தமோ, இந்துத்துவமோ, கத்தோலிக்கமோ, அல்லது இஸ்லாமோ, எந்த ஒரு மதக்கோட்பாட்டையும், இனத்தின் அடையாளமாகக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்வது போன்று தமிழர்களெல்லாம் பௌத்தர்களாகிவிடுவது, இப்பிரச்சினைக்குத் தீர்வாகிவிடுமா?. இது சிறுபிள்ளைத் தனமான வாதமாக உங்களுக்குத் தெரியவில்லை. (இந்துத்துவ அடிப்படை, விமர்சனத்துக்குரியது என்பது வேறுவிடயம்.அதற்காக, அதை மேற்கோளிட்டு, சிங்களப்பேரினவாதத்துக்குச் சாமரம் வீசமுடியாது ) எங்களில் சிலர் இப்படியான எண்ணப்பாடுகளில் தான் இன்னமும் உள்ளார்கள். இத்தகைய எண்ணங்களே மாற்றார், எம்மை அடிமை கொள்ள வலுச்சேர்க்கிறது. இலங்கையில், திருகோணமலையிலும் ஏனைய தமிழ்ப்பிரதேசங்களிலும், தமிழ்மக்கள் மீது பௌத்த மூலாம் பூசப்பட்ட சிங்களப் பேரினவாதமே திணிக்கப்படுகிறதன்றி, தூய பௌத்தமதக் கோட்பாடு கொண்டாடப்படவில்லை என்பது அனைவராலும் உணர்ந்து கொள்ளப் படவேண்டியதொன்று. உணரப்படுமா...?
Thursday, April 13, 2006
Sunday, April 09, 2006
திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 7
கல்மெட்டியாவகுளம் என்று தற்போது அழைக்கப்படும் குளத்தின் உண்மையான பெயர் 'வெண்டரசன்குளம்'. கந்தளாய்குளத்தின் கட்டுமானப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிய தன் மந்திரிகளில் ஒருவனனான வெண்டரசன் பெயரினைக் கந்தளாய் குளத்தின் இனைக்குளமான இக்குளத்திற்கு குளக்கோட்டு மன்னன் வைத்து, அவனைக் கௌரவித்தான் என்பது இக்குளம்பற்றி திருகோணமலைவாழ் தமிழ்மக்கள் மத்தியில் செவிவழிக்கதையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுபற்றிய வரலாற்றுக்குறிப்புக்கள் இருப்பது பற்றிச் சரியாகத்தெரியவில்லை. ஆயினும் கந்தளாய்குளம், வெண்டரசன் குளம், என்பன அக்காலத்தமிழ்மன்னர்களின் சிறந்த நீர்ப்பாசனத்திட்டத்திற்குச் சிறப்பான உதாரணமாகச் சொல்லலாம்.தமிழ்மக்களின் வாழ்விடப்பயிர்நிலங்களின் நீர்ப்பாசனத்துக்கென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நீர்நிலைகளின் நீர்கூட, பேரினவாத அரசுகளின் சூழ்ச்சிகாரணமாக கந்தளாய் சீனி ஆலையின் கரும்பு வயல்களுக்குத் திருப்பப்பட்டு, சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாச்சப்பட்டு, எஞ்சிய நீரைதமிழ்பகுதிகளுக்கு வழங்கிய சம்பவங்கள் கூட நடந்தன. இந்த நீர்ப்பாசனங்களால் வருடத்திற்கு மூன்றுபோக நெற்செய்கை நடந்த தமிழ் வயல்களெல்லாம், இரண்டுபோகம், ஒருபோகமென்றாகி, விளைச்சலை முற்றாக நிறுத்திக் கொண்ட கொடுமை கூட, சிங்களப்பேரினவாதிகளின் கடும்போக்கில் நடந்தது. திருகோணமலை மாவட்டத்தின் நெல்விளைச்சலில், பெரும்பகுதியை விளைவித்துக் கொடுத்த அந்த விளைநிலங்களும், அந்த விளைநிலங்களின் உழைப்பாளர்களும், ஒருகாலத்தில் இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. திருகோணமலையின் புவியற்சிறப்பில் முக்கியமான மற்றொரு விடயம், தமிழ் கூறும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்பவற்றில், பாலை தவிர்ந்த ஏனைய நால்வகை நிலங்களையும், இம்மாவட்டத்தில் ஒரு சேரக்காணலாம். எத்துனை இன்னல்கள் விளைந்த போதும், இப்பகுதி மக்களின் திடமான மனப்போக்கினை அசைக்கமுடியாமலிருந்தது. அதனைக்குலைப்பதற்கு வேறு சில முறைகளைப் பேரினவாதம், கையாளத் தொடங்கியது. பலகாலமாக தமிழ்ப்பிரதேசங்களுள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்த சிங்களக்குடும்பங்களை (இவர்களில் சிலர் திருமணபந்தங்களினாலும், தமிழர்களோடு இணைந்திருந்தனர்) தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள். அதற்காகச் சிலபல சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படியான சலுகைகளுக்கு பலியாகிவிட்ட சிங்களக் குடும்பங்களையும், சில முஸ்லீம் குடும்பங்களையும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, முற்போக்கச் செயற்பட்ட இளைஞர்கள் சம்பந்தமான தரவுகளையும், வேறு விடயங்களையும், அறிந்து கொண்டார்கள். அப்படி அறியப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு, அவ் இளைஞர்களைக் குறிவைத்து அரச இயந்திரம் நகர்ந்தது. அந்த நகர்வில் சிக்குண்ட சில இளைஞர்கள் தவிர, பலர் பின்னாளில் தமிழீழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களின் முதல்நிலை உறுப்பினர்களானார்கள்.பின்னாட்களில், சிங்களப்பேரினவாதம் செயற்பட்ட விதத்திலும், அதன்வேகத்திலும், திருகோணமலையை சூழவும் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களால் முற்றாக அழிந்தொழிந்து போயிருக்கும். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறா திருப்பதற்கு முக்கிய காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்ததனாலென்றே சொல்லலாம். ஆயுதப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, இன்றைய பொழுதில் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டமாக மாற்றம் பெற்றிருக்கும் நிலையில், அதன் வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாத பேரினவாதம் மாற்று வழிகளை நாடத் தொடங்கியுள்ளது போன்று, அதன் தற்போதைய செயற்பாடுகள் தோற்றம் காட்டுகின்றன. அந்த நரித்தனச் செயற்பாடுகளால் மொத்த நாட்டினையும், அழிவின் பாதையில் வழி நடத்தத் துணிந்து விட்டார்கள் போலும்.....
Saturday, April 08, 2006
திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 6
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நதிமூலம், தமிழ் மாணவர்கள் மீதான கல்வித் தரப்படுத்தல் என்றே பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். வட தமிழீழ இளைஞர்கள், பேரினவாத அரசின் நிசத்தை நேரடியாகத் தரிசிக்க அது வழியிட்டிருக்கலாம். ஆனால் தென் தமிழீழத்தில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், தமிழீழம எனும் எண்ணப்பாடு கருவுறக் காரணமாய் அமைந்த முக்கிய அம்சம், பேரினவாத ஆட்சியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றங்களும், அக்குடியேற்றவாதிகள், தமிழ்மக்கள் மீது மெல்ல மெல்ல காட்டிய அடக்குமுறைகளுமே. 1983 க்கு முன்னரும் தென்பகுதியில் தமிழர்கள் மீதான தாக்குதல்களுடனான இனக்கலவரம், நடைபெற்றிருந்தாலும், 83 கலவரம் தேசியமட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், சற்றுச் சர்வதேச மட்டத்திலும், கவனயீர்ப்புப் பெற காரணமாக பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். அவை எல்லாவற்றிலும், குறிப்பிடத்தக்கதானது, தமிழ் இளைஞர்களின் ஆயுதத் தாக்குதல். ஆனால் இக்கால கட்டத்திற்கு முன்னமே, தென் தமிழீழத்தில், சிங்களக் காடையர்களிடமிருந்து, தங்கள் பிரதேசங்களைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்தாக்குதல் செய்ய, அல்லது எதிர்தாக்குதலுக்கு தயராக உள்ளார்கள் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழ்மக்களுக்கு இருந்தது. அந்தக் கட்டாயத்தை உணர்ந்து அதனைக் கையேற்றுக் கொண்டவர்கள் தமிழ் இளைஞர்கள்.தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள், தங்கள் பாராளுமன்றப் பதவி பறிபோகா வண்ணம், தமிழ்காத்துக் கொண்டிருக்க, ஆங்காங்கே எந்தவித நிறுவனப்படுத்தலுமின்றி, சிறுசிறு குழுக்களாக, (விழிப்புக்குழு, எல்லைக்குழு, காவற்குழு, என்பது போன்று) தமிழ்மண் பறிபோகா வண்ணம் காத்துக் கொண்டிருந்தார்கள் தமிழ் இளைஞர்கள்.நானறிந்தவரை, திருகோணமலையில் சிவன்கோவிலடி, பத்தாம்குறிச்சி, நிலாவெளி சாம்பல்தீவு, தம்பலகாமம், சேனயூர் கட்டைபறிச்சான், அரசடி, படுக்கை,ஆகிய பகுதிகளில், இவ்வாறு சில இளைஞர்குழுக்கள் அவ்வப்போது நிகழும் கலவரங்களிலிருந்து, தமிழ்பிரதேசங்களைக் காப்பாற்றி வந்தார்கள். அவர்களின் எதிர்செயற்பாடு குறித்து இனஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் அச்சமும் இருந்தது.காலப்போக்கில், கருத்தியல் ரீதியாக இவ்விளைஞர்கள் நெருக்கம் கொள்ள, இதே கருத்தோட்டத்திலிருந்த வடபகுதி இளைஞர்களோடும், தொடர்புகளுண்டாயிற்று. இந்தக் கருத்தியலும் எண்ணப்பாடும் பரவலாகத் தமிழ்இளைஞகள் மத்தியில் வலுப்பெறவே, தமிழ்அரசியற் தலைவர்களின் தலைக்குள்ளும் இது விடயம் மெதுவாகக் குடிபுகுந்தது. என்நினைவுக்குள்ள வரையில் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோஷத்துடன் தேர்தலுக்கு களமிறங்கியது. தமிழுணர்வால் உந்தப்பட்டிருந்த இளைஞர்களை உள்வாங்கவும், அவர்கள் உடலுழைப்பினைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெற்றுக்கொள்ளவும், தமிழீழக்கோஷம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தமிழீழம் எனும் தனிநாட்டுக் கோரிக்கையும், தமிழீழத்தின் தலைநகராக திருகோணமலை மொழியப்பட்டதும், அந்தச் சந்தர்ப்பத்திலென்றே கருதுகின்றேன். அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்ற பின், வெற்றிக்கொண்டாட்டங்கள் பெரும் விழாவாக திருகோணமலையிலேயே நடந்தன. சிவன்கோயிலடியிலிருந்து, விழா நடந்த திருமலை முற்றவெளிவரைக்கும், அலங்காரங்களும் , ஊர்வலங்களும் கூட நடைபெற்றதாக ஞாபகம். வெற்றித் தலைவர்களுக்கு இரத்தத் திலகங்கள் கூட வைக்கப்பட்டதாகவும் ஞாபகம். இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம், பேரினவாதிகளைச் சற்று மருளச்செய்ததென்றும் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் வெகுகாலம் நீடிக்கவில்லை. ஆக்கிரமிப்பும், அடக்குமுறைகளும், தொடர்ந்தன. ( இந்த இடத்தில் பெயர் சுட்டாது பின்னூட்டமிட்ட நண்பர் குறிப்பிட்ட சம்பவத்தைச் சேர்த்துக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன்.) தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்களின் சாம்பல் திருகோணமாலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செய்யப்பட்ட போதும் ஒரு கலவரம் வெடித்தது. தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அச்சமுற்ற பேரினவாதம், அதைக்குலைத்துவிடவேண்டுமென்ற அக்கறையோடு, அச்சமூட்டும் வகையில் அரங்கேற்றியது. அதைவிட இரகசியமாக இன்னொரு விடயமும் நடந்தது. தமிழுணர்வுடன் செயற்பட்ட இளைஞர்கள், பேரினவாதக்கட்சிகளில் அங்கம் பெற்றிருந்த தமிழ், முஸ்லீம், அரசியல் தலைவர்கள் சிலரால், அரச இயந்திரத்துக்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். இவ்விதம் திருகோணமலை, தமிழர்களால் முக்கியத்துவப்படுத்துவதைக் கவனித்துக் கொண்ட பேரினவாதிகளால், குடியேற்றச் செயற்பாடுகளிலும், புராதன தமிழ்நிலங்களிலிருந்து, மக்களை குடிவிரட்டும் செயற்பாடுகளிலும், தீவிரமாகச் சிங்களக் காடையர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இத்தகைய செயற்பாட்டுக்கு பலியான முதல் தமிழ்கிராமங்களென, பன்குளம், கந்தளாய், என்பவற்றைக் குறிப்பிடலாம்.மொரவேவாத் திட்டத்தின் மூலம் குடியேற்றஞ் செய்யப்பட்டவர்களால், பன்குளம் சூறையாடப்பட்டது. பன்குளத்தில் வசித்த மக்கள் அடித்துவிரட்டப்படனர். தங்கள் உறவுகள் வாழ்ந்த ஏனைய இடங்களுக்கு, அவர்கள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். இதுபோல் கல்மெட்டியாவத்திட்டத்தின் மூலமும், மற்றுமொரு திட்டத்தின்( பெயர்சரியாக ஞாபகம் இல்லை) மூலமும், கந்தளாய் பகுதியைச் சூழவும் குடியேற்றப்பட்ட காடையர்களால், கந்தளாய் பகுதி தமிழ்மக்கள் நிர்க்கதியாக்கப் பட்டார்கள். இதில் கல்மெட்டியாவத்திட்டத்தின் மூலமான கல்மெட்டியாக்குளம், ஒரு புராதன நீர்பாசனத்திட்டம். அதற்குச் சுவையான ஒரு கதையுமுண்டு. கதைகேட்க அடுத்த பகுதி வாருங்கள்..
Sunday, April 02, 2006
திருகோணமலை -ஒருபார்வை- பகுதி5

பெயர் என்பது அழைப்பதற்கு மட்டும்தான் என்பதையும் கடந்து, மனிதர்களின், சமுகத்தின், வரலாற்று ஆவணமாகவும் பயன் தரக்கூடியது. ஆதலால்தான் வரலாற்றுத் திரிபாளர்கள் இது குறித்த விடயத்தில் மிக அவதானமாகச் செயற்படுகிறார்கள் போலும். சிங்களப் பேரினவாத அரசுகளும் தனது திட்டமிட்ட குடியேற்றங்களின் போது, பெயர்குறித்த விடயங்களில் அவதானமாகவே செயற்பட்டது. அதனால்தான் பன்னெடுங்காலம் அழகிய தமிழ்பெயர்களைத்தாங்கி நின்ற எங்கள் தமிழ்கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களின் பின் தம் பெயரிழந்து, பொலிவிழந்து, போயின. அப்படித் திருகோணமலை மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சில தமிழ்கிராமங்களின் பெயர்களையும், அவை தற்போது அழைக்கப்படும் சிங்களப் பெயர்களையும் தருவது இந் நோக்கினைச் செம்மைப்படுத்துமெனக் கருதி இங்கே தருகின்றேன்.
கந்தளாய் - கந்தல
குமரேசன் கடவை - கோமரங்கடவெல
புடவைக்கட்டு - பொடவக்கட்டுவ
பன்குளம் - மொரவெவா
தம்பலகாமம் - தம்பலகமுவ
வெண்டரசன் குளம் - கல்மெட்டியாவ
கும்புறுபிட்டி - கும்புறு பிட்டிய
இவை தவிர இன்னும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் பலவும் உண்டு. மேலேயுள்ள படத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் சில சிகப்பு நிறத்திலும், புராதன தமிழப்பெயர்களுடைய கிராமங்கள் நீல நிறத்திலும் காட்டப்படிருக்கிறது. இதை நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்கள் என்றால் தமிழ்க்கிராமங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக்கிராமங்களைக் காண்பீர்கள். இவ்விதம் காணும் குடியேற்றங்களை மேலும் ஊன்றிக் கவனித்தால், திருமலை நகரைச் சுற்றிவளைப்பதுபோல் அமைந்திருக்கும்.
இப்படியான குடியேற்றங்களுக்கு சிங்கள அரசுகள், வெளிநாட்டு உதவிகளைத் தந்திரமாகப் பயன்படுத்தியதுபோன்று, வேறு சில விடயங்களையும் பயன்படுத்திக் கொண்டன. அதில் முக்கியமானது தமிழ், முஸ்லீம், மிதவாத அரசியல் தலைவர்களின் பதவி மோகம் என்பது மிகையாகாது. இக்கட்சிகளின் பிரமுகர்கள் தஙகள் பாராளுமன்ற இருப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக, தக்க வைத்துக் கொள்வதற்காக, இக்குடியேற்றங்கள் குறித்து அக்கறை கொள்ளாது அல்லது கண்டுகொள்ளாது இருந்தனர். தமிழ்மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிதுத்துவப்படுத்திய இத் தலைவர்களின் அசமந்தப்போக்கு பின்னாளில் தமிழ்மக்களை சொல்லொனாத் துயருக்கு இட்டுச் சென்றது. இக்குடியேற்றங்களின் பயங்கரத்தை முதலில் சரிவரப்புரிந்து கொண்டவர்கள் தமிழ்இளைஞர்களே! . இளைஞர்கள் இதைப்புரிந்து கொண்டதன் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? . பார்ப்போம்....
Subscribe to:
Posts (Atom)