பூவைப்போல புன்னகை காட்டு

>> Wednesday, March 19, 2008

இரண்டு வருடங்களுக்கு முன் இந்த மாதத்தில்தான வலைப்பதிவுகளில் எழுத வந்தேன். குறிஞ்சிமலர்தான் எழுதத்தொடங்கிய முதல்வலைப்பதிவு. அதன் ஆரம்ப அறிமுக இடுகைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது குறிஞ்சிமலரில் நான் எழுதும் நூறாவது இடுகை. சற்றுத்திரும்பி, எழுதியவைகளை வாசித்துப் பார்க்கையில் என்னளவில் எனக்கு நிறைவாக இருக்கிறது. ஏனெனில் எனது இடுகைகளினால் யாரும் காயம் பட்டிருக்க முடியாது. எல்லோர்க்கும் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற சித்தாந்ததில் என் கருத்துக்களை முடக்கிக் கொண்டேன் என்றும் சொல்ல முடியாது. என்னால் என் கருத்துக்களைக் கொஞ்சமேனும் தெளிவாகச் சொல்ல முடிந்திருக்கிறது என்னும் நிறைவோடு....





" CHRIGU ". 21 வருடங்களில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தவனின் கதை. இசையும் கலையுமென வாழ்ந்த ஒரு இளைஞன், தான் சாவைச் சந்தித்த தருணங்கள் வரை பதிவு செய்த வரலாற்றுப்பதிவு. வாழ்வில் சாதிக்க நினைத்ததைச் சாவில் சாதித்துக் காட்டியவனின் சரிதம்.


கிறிஸ்டியன்... அதுதான் அவனது பெயர். சுவிற்சர்லாந்தின் ஜுரா மாநிலத்தைச் சேர்ந்தவன். இளைஞனாக வளர்ந்தபோது இசையில் நாட்டம். இயல்பாக ஒளியைப் பதிவு செய்ய விருப்பம். அதனால் ஒரு ஒளிப்பதிவுக் கலைஞனாக உருவாகிக்கொள்கின்றான். எப்போதும் கூடவே ஒளிப்பதிவுக்கருவி. அது கருவி அல்ல அவனது மூச்சுப்பை என்றும் சொல்லலாம். இந்தியாவிலும், எகிப்திலும், கொட்டிக்கிடக்கும் கலைப்பொக்கிசங்கள் எந்தவொரு கலைஞனுக்கும் பிடித்தமானதுதானே?. இவனுக்கும் பிடித்திருந்தது. அங்கெல்லாம் சென்றான். அத்தனையையும், தன் விழிவழிப் பார்வைகளால் பதிவாக்கினான். நண்பர்களுக்குக் காட்டி மகிழ்ந்தான். காட்சிப்படுத்தலினால் இந்த உலகை, ஒருநாள் கவர்வேன் என்றான்....



இரத்தப்புற்றுநோய் கிறிஸ்டியனுக்கு. எத்தனையோ விருப்பங்கள், எத்தனையோ கனவுகள், என்றிருந்த அந்த இருபதுகளில் நின்றவனுக்கு இப்படியொரு வருத்தம் என்றதும், அதிர்ந்து போனான். ஆட்டம், பாட்டு, என மகிழ்ந்து திரிந்தவனுக்கு, மரணத்தின் சைகை தெரிந்தபோது...நொடிந்து போய்விட்டான். கையிலிருந்து கமெரா நழுவிக்கொண்டது. கூடவே திரிந்த நண்பர்கள் உடைந்துபோனார்கள்...

மரணம். அனைவர்க்கும் சர்வ நிச்சயமானது. அதை வெற்றிகொள்ளவேண்டும். கிறிஸ்டியன் அதை வெற்றிகொள்ள வேண்மென விரும்பினான். நண்பர்கள் கமெராவைக் கைகளில் எடுத்துக் கொடுத்தார்கள். எப்போதும் போல் உன் இறுதிக்கணங்கள்வரை, உன் எண்ணங்களைப்பதிவு செய். உன் உணர்வுகளை, வலிகளைப் பதிவு செய். உன் உள்ளத்தின் குரலைப் பதிவு செய் என உற்சாகமூட்டலை உள்ளிருந்தும், உடனிருந்தும் பெற்றான். சோர்ந்து போனவன் நிமிர்ந்தெழுந்தான். தன் கமெராக்காதலியை இறுகப்பிடித்தான். இறுதிக்கணங்கள்வரை.. தன் எண்ணங்களை, வண்ணங்களை, வலிகளைப்பதிவு செய்தான். பதிவுசெய்தவாறே படுத்துறங்கிப்போனான்....

மீளாத்துயிலில் ஆழ்ந்துபோனவனின் சாம்பலோடு, அவன் நேசித்த இந்தியநதிகளின் கரைகளுக்கு அவன் நண்பர்கள் வந்தனர். குளிர்ச்சி மிக்கதென வியந்து அவன் இரசித்த நதிகளின் நீரோட்டத்தில் சாம்பலாய் அவனைச் சங்கமிக்க வைத்தனர். கிறிஸ்டியன்! உன் ஆசையை, நேசிப்பை நாமறிவோம். ..கொண்ட நட்பின் பேரால் நாமதைத் தொடர்வோம் என சபதமெடுத்தனர். நதிகளின் வெள்ளத்து நுரைப்பில் கிறிஸ்டியன் சிரித்து விடைபெற்றான்....

ஜான் காஸ்மான். கிறிஸ்டியனுடைய நண்பன். கிறிஸ்டியனின் கனவுக்கு வடிவு கொடுத்தவன். மரணத்தின் பின்னும் அவனுக்கு வாழ்வு கொடுத்தவன். கிறிஸ்டியன் பதிவு செய்த எண்ணங்களை, வண்ணங்களை, வலிகளை, எடுத்துப்பார்த்தான். குடும்பம், நண்பர்கள், குதுகலம், நோய், வலி, தெளிவு, என பலபரிமாணங்கள் 120 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஒளிச்சுவடிகளில் பதிவாகியிருந்தன. அத்தனையையும் உற்று நோக்கி, ஒற்றியெடுத்து வடித்தபோது, 21 வயதுவரை வாழ்ந்த இளைஞனின் தனித்துவமான கதை, காவியமாக திரைகளில் தெறித்தது. அதுதான் " CHRIGU "......

உலகத்திரைப்படவிழாவில் தன் ஒளிப்படைப்பால் உலகைக்க கவரவிரும்பிய கிறிஸ்டியனின் விருப்பம், வாழ்வின் பின்னால் நிறைவேறியது. நண்பன் ஜான் காஸ்மானின் படத்தொகுப்பில், Mundartisten - இசைக்குழு நண்பர்களின் இசையில், இறப்பின் பின்னும் எழுந்து நடந்தான் கிறிஸ்டியன். உலக அரங்கின் சுவர்களில் உயர நின்று, சாதித்துவிட்டான். ஆம், " CHRIGU " 57 பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு விருதுபெற்றது. தொடர்ந்து மேலும் பலவிருதுகளைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் விளம்பரஅறிவுப்புக்களில் நின்று கிறிஸ்டியன் சிரித்தபடி கேட்கின்றான், "மரணத்தை வென்றுவிட்டேனா..?"



திரைகளிலும், திரைப்படவிழாக்களிலும், கலந்துகொண்டபின், மார்ச் மாதம் 27ந் திகதி முதல் ஒளித்தகடுகளில் வருகின்றான் கிறிஸ்டியன். இந்த வெற்றிக் காவியத்தில் வரும் இந்தியக் காட்சிகளுக்கு, இசையணி சேர்த்திருப்பவன் ஒரு ஈழத்துநண்பன்.

----------------------------------------------------------------------------







வலைப்பதிவுலகில் தன் வலிகளைப் பதிவு செய்பவர்களில், இதே தன்மையில் தன்வலிகளை கேன்சருடன் ஒரு யுத்தம் எனப் பதிவுசெய்யும் தோழி அனுராதாவின் பதிவினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுராதாவின் பதிவைச் சங்கமம் விருதுக் குழுமம் சென்ற ஆண்டின்சிறந்த அனுபவப் பதிவாக தெரிவுசெய்து கெளரவப்படுத்தியிருக்கிறது. மிகச்சிறந்த இத்தெரிவினை மேற்கொண்ட சங்கம் குழுமத்தினர்க்கும், நடுவர்களுக்கும், பாராட்டுக்கள். உடல்உபாதையால், உளச்சோர்வால், தளர்ந்துபோயிருந்த அனுராதா, இத்தெரிவினால் மீண்டும் உற்சாகம் பெற்றுள்ளார். வலைப்பதிவர் தோழி அனுராதா அவர்களுக்கு, அவரது முயற்சிக்கு, அவரது வெற்றிக்கு, அவரது உயிர்ப்புக்கு, அர்பணிப்பாக, இவ் இடுகையும், இப்பாடலும். தோழி! பூவைப் போல புன்னகை காட்டு.






பாடலுக்கான நன்றிகள்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி, மற்றும் போராளிக் கலைஞர்கள்.

கிறிஸ்டியன் படங்களுக்கான நன்றிகள்: CHRIGU தளம்.

9 comments:

மலைநாடான் March 19, 2008 4:58 PM  

இதில் வரும் பாடலுக்கான விளக்கம்

சயந்தனின் பதிவில் பார்க்கலாம்.

Anonymous March 19, 2008 7:30 PM  

கிறிஸ்தியன் சாகவில்லை வாழ்கிறான்.

யோகா March 19, 2008 11:48 PM  

100 வது பதிவில் நல்ல விடயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

மலைநாடான் March 20, 2008 9:55 AM  

யோகா!

உங்கள் பாராட்டுக்கு நன்றி. தொட்ட விடயத்தைப் பற்றியும் சற்றுச் சொல்லியிருக்கலாமே. :)

Anonymous March 21, 2008 12:48 AM  

மிக்க நன்றி மலை நாடான் அவர்களே.கருத்துச் செரிவுள்ள பாடல்.
தேர்ந்த இசை.அருமையான குரல் வளம்.நன்றாக ரசித்தேன்.

- anuratha subramanian

சயந்தன் March 21, 2008 12:53 AM  

அண்ணை
இந்தப் பாடல் குறித்து சிநேகிதியும் ஒரு பதிவெழுதியுள்ளார்.

மலைநாடான் March 21, 2008 6:19 AM  

அனுராதா!

நிச்சயம் இப்பாடல் உங்களுக்குப் பிடிக்குமென்பது தெரியும்.:) நன்றி.

கானா பிரபா March 21, 2008 11:30 AM  

vaazhthukkal malainaadan

மலைநாடான் April 06, 2008 10:29 AM  

பிரபா!

வாழ்த்துக்கு நன்றி. திரைப்பட ஆர்வலரான நீங்கள் பார்க்க வேண்டிய படம்.

நன்றி

.
.

  © Blogger templates by Ourblogtemplates.com 2008

Back to TOP