Monday, September 10, 2007

புதிய உலகசாதனை முயற்சியில் சாரணர்.


சென்ற 08.09.07 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் தென்மாநிலமாகிய ரெசின் மாநிலத்தில், Mendrisio பிரிவு சாரணர்களால், சாரணர் அமைப்பின் 100 வருட நிறைவினை முன்னிட்டு, சாரணர்களின் கழுத்துப்பட்டிகளை இணைத்து உருவாக்கிய, உலகின் நீளமான கழுத்துப்பட்டித் தொடர் உருவாக்கும் சாதனை முயற்சியில், பல நாடுகளிலிருந்தும் சாரணர்கள் கழுத்துப்பட்டிகளை அனுப்பி வைத்திருந்தனர். சுவிற்சர்லாந்தின் பல மாநிலங்களிலும் இருந்து வந்த சாரணர்களும், தங்கள் பகுதிகளின் சாரணர்கள் சார்பில், கழுத்துப்பட்டிகளை இணைத்துத் தொடுத்தனர்.




பல வண்ணங்களில் அமைந்த இக்கழுத்துப் பட்டிகளை, நடுவர்களின் கண்காணிப்பில், சாரணர்கள் மகிழ்வோடு நீளமாகத்தொடுத்தனர். காலைமுதல் மாலை வரை நடந்த இச்சாதனை முயற்றியில், யப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்த கழுத்துப்பட்டிகளில் நடுவில், " வெல்க தமிழ்" எனும் தலைப்புடன் தமிழீழசாரணர் சார்பிலும் கழுத்துப்பட்டி இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.


காலை 10.00 மணிமுதல் மாலை 05.12 மணிவரை மேற்கொள்ளப்பட்ட இச்சாதனை முயற்சியில், 733 கழுத்துப்பட்டிகளை இணைத்து, 760 மீற்றர் நீளமான கழுத்துப்பட்டித் தொடரினை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முயற்சியில் பிற்பகல் 2.26 மணியளவில், 500 கழுத்துபட்டிகளை இணைத்திருந்த போதே உலகசாதனை வரையறைக்குள் வந்துவிட்டபோதும், பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக மேலதிகமாக 233 கழுத்துப்பட்டிகள் சேர்க்கப்பட்டு புதிய சாதனை தோற்றுவிக்கப்பட்டது.

இந்த புதிய உலகசாதனை முயற்சிகள் பற்றிய தகவல்கள், தற்போது கின்னஸ் உலக சாதனை அமைப்பினர் கவனத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

3 comments:

வெற்றி said...

/* " வெல்க தமிழ்" எனும் தலைப்புடன் தமிழீழசாரணர் சார்பிலும் கழுத்துப்பட்டி இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. */


"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
என பாரதி அன்று கண்ட கனவு இன்று நனவாகிறது.

தகவல்களுக்கு நன்றி மலைநாடான்.

தனசேகர் said...

தகவல்களுக்கு நன்றி மலைநாடான ..

நானும் ஒரு சாரணர் என்பதிலும் (ஒரு முறை சாரணர் ஆனால் அவன் வாழ்க்கை முழுதும் சாரணர்தான்), தமிழன் என்ற முறையிலும் மகிழ்ச்சியடைகிறேன் !!

மலைநாடான் said...

வெற்றி!

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.