Saturday, February 17, 2007

சாகர சங்கமம் - எண்ணங்கள்

சாகரனை எனக்குத் தெரியாது. சாகரனின் மறைவின் பின்னரே சாகரனைப் பற்றி அறியத் தொடங்கினேன். தமிழ்மணத்தில் வந்த அஞ்சலிப்பதிவகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் மதிகந்தசாமி தொடர்பு கொண்டு, எனது வானொலி நிகழ்ச்சியில் சிறு நினைவுக்குறிப்புச் செய்ய முடியுமா எனக் கேட்டிருந்தார். அவர் கேட்கும் போது சென்றவார வானொலி நிகழ்ச்சி, ஒலிபரப்புக்காக இணையத்தொடர்பில் ஏற்றப்பட்டுவிட்டதென்பதைச் சொல்லிவிட்டு, இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த இளைஞருக்கு தனியாக ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை செய்வது கூடப் பொருத்தமாக இருக்குமெனத் தெரிவித்தேன். தேனீ உமர் அவர்களுக்குச் செய்யத் தவறிவிட்டதையும் நினைவில் கொண்டேன். தெரிவித்த மாத்திரத்தில், சாகரனைப் பற்றித் தெரிந்து கொள்ள அவரது பதிவுகளின் சுட்டிகளையும், பலரது தொலைபேசி இலக்கங்களையும், மின்மடல் முகவரிகளையும் தந்தார்கள். சாகரன்பற்றிய பதிவுகளைஇட்டிருந்த நண்பர்கள் சிலரை நானும் தெரிவுசெய்தேன்.

உலகளாவிய ரீதியில் தமிழ்மொழிக்கெனச் செயற்பட்டவனின், மறைவுக்கு உலகப் பரம்பலில் இருந்து அஞ்சலிகள் வரக்கூடியதாக இருக்கும் வகையில், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தேன். விடுத்தமாத்திரத்தில் பலரும் விரைந்து வந்து பங்களித்தார்கள். சிலர் விருப்பம் தெரிவித்த போதிலும், உரையாட முடியாமல் தவித்தார்கள். சிலநண்பர்கள் ஒலிப்பதிவின் போது அழுதேவிட்டார்கள். நண்பர் கே.வி.ராஜா பேசமுடியாது விக்கித் நின்றுகொண்டார். சக வலைப்பதிவாளனின் இழப்பில் நேசமுடன் இவர்கள் கலந்து கொண்டது நெஞ்சுக்கு நிறைவாக இருந்தது. அவர்களுடைய உணர்வுகளைக் கலைக்காது, ஒலிப்பதிவுகளைத் தொகுக்க மிகுந்த சிரத்தையெடுக்க வேண்டியிருந்தது. பதிவுக்குத் தேவையான எழுத்துப்பிரதியை உருவாக்குவதிலும், இசைக்கோப்புக்குத் தேவையான இசைகோப்புக்களைத் தேடியெடுத்துத்தருவதிலும், ஈழத்து நண்பர்கள், நேரடி இணையத்தொடர்பில் நின்று, நேரகாலம் பாராது உதவினார்கள்.
நண்பர் சிந்தாநதி தேவையான படங்கள் அனைத்தையும் மின்மடலில் தந்துவினார். இப்படியாக நண்பர்கள் பலரும், தந்த சிறப்பான பங்களிப்புக்களுடன் முடிந்தவரையில் ஒலிப்பதிவாக, நாம் முன்னால் வாழ்ந்து மறைந்த சாகரனுக்கு, அனைத்து வலைப்பதிவர் சார்பிலும், அஞ்சலி செய்துள்ளோம்.

இணைந்து பணியாற்றிய அனைவர்க்கும் நன்றிகள்.

அஞ்சலிப் பதிவுக்கு இங்கே



12 comments:

sathiri said...

அஞ்சலி நிகழ்வு பதிவிற்கு நன்றிகள் மலை நாடான் அத்துடன் சாகரனின் குடும்பத்தாரிற்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

ஒரு நல்ல தமிழனின் மறைவை அருமையகப் பதிவிட்டு இருக்கிறிர்கள்.
கல்யாண் அவர்களின் பெற்றொரை எண்ணிக் கலக்கம் கூடுகிறது.
மனைவிக்கும் குழந்தைக்கும் ஆறுதல யார் சொல்லி என்ன செய்யலாம்.
கடவுள் அவர்களுக்கு உரம் தந்து மீட்க வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாகரனைத் தனிப்பட்ட வகையில் தெரியாது;இவர் பதிவுகள் சில படித்துள்ளேன்.ஒரு சக பதிவரென நினைத்திருந்தேன்.
ஆனால் அவர் இந்த வலையுலகில் ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டதை; மறைவின் பின்பே இணையச் செய்திகள் மூலம் உணர்ந்தேன்.
அவர் மிக இளம் வயதில் மறைந்தது. மிகப் பேரிழப்பு! சகலருக்குமே!!
அன்னாரின் பெற்றோர்,மனைவி;உற்றார், உறவினர்... துன்பத்தைக் காலம் தான் கலைக்க வேண்டும்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கும்; பிரிவால் துயருறும் அனைவருக்கும் எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.
இவ்வங்சலிப் பதிவை ஏற்பாடு செய்து;எங்களையும் பங்கேற்க வைத்த நண்பர் மலைநாடருக்கு நன்றி!

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

ஒலிப்பதிவைக் கேட்டேன், நண்பர்களின் அஞ்சலிப்பகிர்வு நெஞ்சைக்கனமாக்கியது.

மலைநாடான் said...

சாத்திரி, வல்லிசிம்ஹன்,யோகன், பிரபா!

உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

ஒலிப்பதிவுக்கு நன்றி மலைநாடான்.
நல்ல நேர்த்தியாக வந்துள்ளது.

இது தனியே அஞ்சலிப்பதிவு மட்டுமன்று; சாகரன் பற்றிய ஓர் ஆவணத் தொகுப்புமாகும்.
அவ்வகையில் இவ்வொலிப்பதிவு கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது.

சின்னக்குட்டி said...

அஞ்சலி நிகழ்வு பதிவிற்கு நன்றிகள் மலை நாடான்

மலைநாடான் said...

வசந்தன், சின்னக்குட்டி!

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இணையத்தில் தமிழ் வளர்க்க முயன்ற ஒரு இளைஞனின் உழைப்பு, என்றும் நினைவுகளில் இருக்க, ஒரு ஆவணப்பதிவாக இது அமைய வேண்டும் என்றென்னிய செயற்பாடுதான் இது. ஒரளவுக்குத் சரியாகச் செயற்பட முடிந்துள்ளது என்பது, உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது.
கருத்துக்கு நன்றி.

thiru said...

தமிழார்வம் கொண்ட ஒரு இளைஞனை தமிழ் வலைப்பதிவு உலகம் இழந்துள்ளது. அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும், குறிப்பாக சாகரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன்.

மலைநாடான் said...

திரு!

உண்மை. தங்கள் கருத்துக்கு நன்றி

ஞானவெட்டியான் said...

பயனுள்ள முயற்சி;செயல், மலை நாடரே!

நண்பர் வசந்தன் கூறியது;இது தனியே அஞ்சலிப்பதிவு மட்டுமன்று; சாகரன் பற்றிய ஓர் ஆவணத் தொகுப்புமாகும்.

ஆம் நண்பரே! இன்னும் பத்தாண்டுகள் கழித்து இவ்வொலிப்பதிவினை சாகரனின் கண்மணி கேட்கும்போது, "என் தந்தை இப்படி இருந்துள்ளார்; நானும் அவரளவுக்கு உயரல் வேண்டும்" என்னும் உந்துதல் பெற இது உதவும்.

மலைநாடான் said...

ஞானவெட்டியன் ஐயா!

உண்மையில் என் நோக்கமும் அதுவே.

உங்களைப் போன்ற பெரியவர்களின் வரவும், பாராட்டுதல்களும் செயலூக்கம் தருவதாக உள்ளது.

நன்றி!