Saturday, June 07, 2008

அகதியாய் வந்த வீரன்




Euro 2008 உதைபந்தாட்டப் போட்டிகள், சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் அமைந்துள்ள St.Jackop மைதானத்தில் இன்று ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு, மிகவும் குதுகலமாக ஆரம்பமாகியது. உலகக் கோப்பை போட்டிகளைப்போலவே மிகவும் எதிர்பார்ப்புக்களும், ஆர்வங்களும் மிகுந்ததாக அமையும் இந்த ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இன்றைய ஆரம்பப் போட்டிகளில், சென்ற உலகக்கோப்பைப் போட்டிகளின் தகமையடிப்படையில், உலகத்தரத்தில் 6வது இடத்தில் இருக்கக் கூடிய செக் குடியரசு அணியுடன் சுவிற்சர்லாந்து அணி மோதியது. மிக இறுக்கமாகவும் விறுவிறுவிறுப்பாகவும் இருந்த விளையாட்டில் இடைவேளைக்கு முன்னதாக சுவிஸ் அணியின் தலைமைவீரர் அலெக்ஸ் ப்ரெய் காலில் பட்ட அடி காரணமாக, போட்டியில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. போட்டி ஆரம்பமாகி முதல் ஆட்டத்தின் அரையிறுதிக்குள்ளாகவே இதன் காரணமாக கண்ணீர் சிந்தியவாறே மைதானத்தைவிட்டு வெளியேறினார். போட்டியின் இரண்டாம் பகுதியில் செக். அணி ஒரு கோல் அடித்தது. சுவிஸ் அணி சிறப்பாக விளையாடியபோதும், இரு முறை கோல் விழும் சந்தர்பங்கள் தவறிப்போனது. போட்டியின் முடிவில் 1 கோலால் செக் குடியரசு அணி வெற்றிபெற்றது.

இனி அகதியாய் வந்த, அந்த வீரன் பற்றி.

91ல் முதல் முதலாக சுவிற்சர்லாந்தில் வேலைக்குச் சென்ற தொழிற்சாலையில் என்னுடன் வேலைக்கு அவனும் வந்திருந்தான். இருவருக்கும் எந்தவிதமான உறவோ, கலாச்சாரத் தொடர்புகளோ, நிற ஒற்றுமையோ இல்லை. ஆயினும் இருவருக்குமிடையில் ஒரு நெருக்கம் இருந்தது. காரணம் அவனும் என்னைப் போன்றே சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அகதி. அந்தக் காலப்பகுதியில் சுவிற்சர்லாந்திலிருந்து பெரும்பாலான அகதிகளின், அரசியல் தஞ்சம் கோரல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப் பட்டுக்கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த மண்ணிலும், நிச்சயமற்ற ஒரு வாழ்வு . இது குறித்த கவலையும் பகிர்தலுமே பெரும்பாலும் அவனும் நானும் சந்திக்கும் வேளைகளில் நிறைந்திருக்கும்.
சிலவருடங்களின் பின் மற்றொரு தொழிலிடத்தில் வேறு பணியிலிருந்தபோது, அவனது மனைவி அங்கே பணிக்கு வந்திருந்தாள். அவளிடமும் அதே துயரமும், பயமும், எப்போதுமிருந்தது. அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் . அவர்களது எதிர்காலம் குறித்த அச்சம், எல்லாப் பெற்றோர்கள் போலவும் பெரிதாகவிருந்தது. அந்தக்காலப்பகுதியில், அவர்களது நாடான கோசோவோ நாட்டில் பிரச்சனைகள் சற்று அமைதியுற, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளைத் திருப்பியனுப்பத் தொடங்கியது சுவிஸ். இவர்களும் திரும்பிச் செல்ல வேண்டும் எனும் நிலை தோன்றிற்று. கலங்கியவண்ணம் நின்ற பெற்றோர்களின் கையைப் பிடித்த வண்ணம் ஏதுமறியாது சிரித்த வண்ணம் நின்றான் அவர்களது மகன். அவன்தான் சுவிற்சர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவனான Valon Behrami. சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவன்.பாடசாலைக் காலத்திலேயே பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியவன். வலோனின் சகோதரியும் நல்லதொரு தடக்கள வீராங்கனை.

அந்தப் பணியிலிருந்து விலகிய சில காலங்களின் பின், ஒரு சந்தர்ப்பத்தில் வலோனின் பெற்றோரைச் சந்தித்த போது, தங்களது அரசியல் தஞ்ச மனு,
மேன்முறையீட்டின்போது, பிள்ளைகளின் கல்வி சார்ந்த மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். பிள்ளைகள் பற்றி விசாரித்த போது, வலோன் இத்தாலியில் ஒரு கழகத்துக்காக விளையாடுவதாவும், மகள் தொடர்ந்து படிப்பதாவும் சொன்னார்கள். பிள்ளைகளின் உயர்வின் மகிழ்வ அந்தப் பெற்றோர் முகத்தில் தெரிந்தது.

சென்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் போது சுவிஸ் அணிக்காக வலோன் விளையாடத் தொடங்கியபோது, அவனது புகழும், நிலையும் முற்றாக மாறியது. அவனது குடும்பத்தின் நிலையும் வாழ்வும் அப்படியே. தங்களுக்கு மறுவாழ்வளித்த இந்த நாட்டுக்கு, தன் மகனின் விளையாட்டு மூலம் நன்றி செலுத்த முடிந்ததையிட்டு பெருமையடைகின்றோம் என அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நா தழதழக்கக் கூறினார். இன்று அந்தக் குடும்பத்தின் வாழ்வு மலர்ச்சிபெற்றுள்ளது. அதற்குக் காரணம், வலோனின் விளையாட்டுத் திறமை மட்டுமல்ல, அதுவும் ஒரு தகுதியான அடிப்படைதான் என்றவகையிலும், தங்கள் விருப்தினடிப்படையில் அல்லாது, பிள்ளையின் ஆர்வம் அறிந்து அதன்வழியில், அவனை ஊக்குவித்து வளர்த்த பெற்றோரது நம்பிக்கையும்தான். அது இருக்கும்வரை வளர்வது வலோன் மட்டுமல்ல.....


1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றி