Thursday, June 05, 2008

பாலபாரதி ,வலைப்பதிவு, இன்னும் சில

"நீண்டநாட்கள் வலைப்பதிவுகள் பக்கம் காணேல்ல..!" எனத் தெலைபேசியில் சயந்தன் கேட்டது உண்மையெனினும், புதிதாக எழுதவில்லையே தவிர, நேரங்கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கின்றேன்.சில வேளைகளில் எழுதுவதிலும் பார்க்க அதுவே நிறைவு தருவதாகவிருக்கிறது என்பதும் உண்மை. அன்மைக்காலங்களில் சில செய்திகள், பதிவுகள், பார்த்தபோது இதுகுறித்து நாமும் எழுதவேண்டும் என நினைத்ததுண்டு. அவை பற்றிய முழுமையாக இல்லாவிடினும் சிறுகுறிப்பாகவேனும் இன்று பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். ஏற்கனவே இப்படிச் சில இடுகைகள் எழுதியிருப்பினும், இன்று எழுதத் தூண்டுதலாயிருந்த பாலபாரதிக்கும், சயந்தனுக்கும் நன்றி. சயந்தனுக்கு கூடவே இனிய 49வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

வலைப்பதிவுகள் குறித்து, பதிவர் சிந்தாநதியிடம் நான் செவ்வி கண்டபோது, சிந்தா நதி அழகாக் குறிப்பிட்டிருந்தார் வலைப்பதிவுகள் என்பது திறந்து வைக்கும் நமது தினக்குறிப்பு என்று. இது சுவையான அனுபவம், புதிய இலக்கிய வடிவம் என்றும் கூட சொல்லலாம். பிறமொழிகளில் வரும் பெரும்பாலான வலைப்பதிவுகள் இப்படித்தான் உள்ளன. அத்தகைய போக்கில் தமிழில் அவ்வப்போது சிலர் எழுதியிருந்தாலும், பாலபாரதி தனது விடுபட்டவை வலைப்பதிவில் தற்போது திகதிவாரியாக எழுதிவரும் தினக்குறிப்புக்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. சுரதாவோடு பேசும்போது, பாலபாரதியின் இந்தத் தொடக்கம் மேலும் பலரை இவ்விதம் எழுதத் தூண்டும், அதுவே வலைப்பதிவுகள் என்பதற்கான முழுமை நோக்கி நமை அழைத்துச் செல்லும் என்றார். உண்மைதான், பாலபாரதியின் தினக்குறிப்புக்கள் மீதான இந்தப்பிடிப்பிற்கு பாலபாரதியின் எழுத்தழகும், அவர் தொடும் சமூகக்கூறுகளும் முக்கியமானவையென்று நினைக்கின்றேன். அவ்விதம் எழுதவிரும்புபவர்களுக்கு பாலபாரதியின் விடுபட்டவை குறிப்புக்கள் நல் உதாரணமாய் அமையட்டும்.

சென்ற சிலவாரங்களுக்கு முன் இலண்டனிலிருந்து ஒளிபரப்பாகும், தீபம் தொலைக்காட்சியில், மலேசியத் தமிழர்கள் சார்பில் அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்த அமைப்பின், முக்கிய உறுப்பினர் திரு. வேதமூர்த்தி அவர்களின் செவ்வி காணக்கிடைத்தது. செவ்வி கண்ட செய்தியாளர் அனஸ் அவர்களினால் முறையாகத் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு, மிக நேர்த்தியாகப் பதிலளித்திருந்தார் திரு. வேதமூர்த்தி. மலேசியத்தமிழர்களுக்குக் கிட்டாத பல உரிமைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் நேயர்கள் தொலைபேசிவாயிலாக வேதமூர்த்தியோடு உரையாடினார்கள். உரையாடலில் கலந்து கொண்ட பலர், ஈழத்தமிழர்கள். அவர்களில் பலரும் வேதமூர்த்தியிடம் முன் வைத்த வேண்டுகோள், தயவு செய்து உங்கள் பிர்ச்சனைகளை பேசித்தீர்க்க முயற்சியுங்கள். அதற்கு மேலான ஒருபோராட்டத்திற்கு, குறிப்பாக ஆயுதப்போராட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். பட்டவனுக்குத்தானே தெரியும் வலியின் கொடுமை. பேச்சுக்களின் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் எல்லோர் விருப்பமும், ஆனால் வட்டமிடும், கழுகுகளின் அலகிடுக்கில் ஆயுதமும், கண்களின் தேடலில் பிணங்களும் தானே இருக்கின்றன...இவை கடந்து மலேசியத் தமிழர்கள் வாழ்வு, நன்றென மலரட்டும்.

ஏதோ சில காரணங்களைக்காட்டி நாம் விலக்கிடும் சிலவிடயங்கள் மேலைத்தேயத்தவர்களினால் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் போது, அட இது நம்மிடம் இருந்ததுதானே எனவியக்கத் தோன்றும். 2006ல் என் மருதநிழல் வலைப்பதிவில் கும்பத்துமால் என்னும் இடுகையில், தென்தமிழீழத்தில் பழக்கதில் இருந்த ஒரு மாந்திரீக விளையாட்டைக் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றிய பின்னூட்டங்களில் மு.மயூரன், அது தற்போது ஆய்வில் உள்ள ஒரு தொழில்நுட்பம் என்ற வகையில் பின்னூட்டமிட்டிருந்தார். பின்னர் இத்துறைசார்ந்து கல்விபயிலும் என்மகனுடன் உரையாடும்போது, அவரும் அதை உறுதிசெய்தார். இருவரும் இதுபற்றி விரிவாக எழுதும்படியும் கேட்டிருந்தார்கள். எழுதவில்லை. சென்றவாரத்தில் பார்க்கக் கிடைத்தொழில்நுட்பச் செய்தியொன்றில், குரங்கொன்றின் மூளையின் சிந்திக்கும் ஆற்றலில், ரோபோ வின் கை அசைவுறச் செய்யப்படிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுநுட்பத்தின் வெற்றிப்பரிணாமம், விபத்துக்களில் உறுப்புக்களை இழந்தவர்களது செற்கை உறுப்புக்களை, அவர்களது சிந்தனைக்கட்டளைப்பிரகாரம் இயங்கவைக்கமுடியும் என்பதாகும். இந்த நுட்பத்தை அடியொற்றியதாக இருக்கக் கூடிய தென்தமிழீழ மாந்திரீக விளையாட்டில் நேரடியாக இந்தச் செயலைக்கண்ணுற்று வியந்திருக்கின்றேன். இத் தொழில்நுட்பம் தென் தமிழீழத்தில் மட்டும் இருந்ததாகச் சொல்ல மூடியாது. இதன் நீட்சி கேரளாவிலும், ஆபிரிக்காவிலும், கூட இருப்பதாக நண்பரொருவர் சொன்னார். இதுகுறித்து இன்னும் அறியவேண்டும்..

பாரி.அரசு அவர்களின் பதிவில் ஈழத்துச் சாதீயம் குறித்து எழுந்த உரையாடலுக்கு ஈழத்துச் சாதீயப்புரிதல் குறித்து சயந்தன் விரிவான ஒருபின்னூட்டத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஒருபகுதியில் "இயல்பாகவே யாழ்ப்பாணம் சைவச் சூழலுக்குட்பட்டது. பார்ப்பணர்கள் என்பது தனியே பிராமணர்கள்தான் (பார்ப்பனியம் என்பதை நான் சகல உயர்சாதி மேலாதிக்கங்களினதும் அடையாளம் என்ற நான் விளங்கி கொண்டிருக்கிறேன் )என உணரும் ஒரு யாழ்ப்பாணத்தவர் - பிராமணியத்துக்கெதிரான கருத்துடன் ஒன்றிப் போக அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை." எனக் குறிப்பிடுகின்றார். உண்மை. ஈழத்துச் சாதீயப் போராட்டங்களில் பங்கொண்டிருந்தவர்கள் பலரிடமும் இது குறித்த புரிதல் இருந்தது. (கே.டானியல், தெனியான் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களில் கூட அவற்றைக் காணலாம்) ஆனால் அங்குள்ள பிராமணர்களுக்கு இது குறித்த புரிதல் இருந்ததா என்பது சந்தேகம்தான்..

யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடர்பான ஆவணப்படம் "எரியும் நினைவுகள்" வெளிவந்துள்ளது. பார்த்த சில நண்பர்கள் சிலரின் கருத்தில், படம் முழுமை பெறவில்லையோ அல்லது அது தொடர்பாக முன்னமே நிறையத் தெரிந்திருந்தமையால், தமக்கு அவ்விதமாகத் தெரிகிறதோ என்பதாகச் சொன்னார்கள். இரண்டும் உண்மைதான். ஏனெனில் என்னிடம் சொன்னவர்கள் ஏலவே இது குறித்து நன்றாகத் தெரிந்திருப்பவர்கள். அவர்கள் அறிந்து கொள்ளப் புதிதாக எதையும் தருவதற்கில்லை.படத்தின் தொகுப்பு வேலைகள் நடைபெற்றபோது பார்த்த எனக்கும் அப்பிடித்தான் இருந்தது. இதற்கும் மேலாக அதன் பாதிப்பை வெளிக்கொணர வேண்டுமாயின், இது குறித்து இன்னமும் உணர்வு பூர்வமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். அது சாத்தியமாயிருக்குமெனத் தோன்றவில்லை.( இதுதொடர்பான கருத்துக்களைச் சொல்லலக் கூடிய முக்கியமான பலர் தாயகத்தில் இல்லை) அப்படித்தான் அதன் நெறியாளர் சோமிதரனும் சொல்கின்றார். எப்படியாயினும், முக்கியமான அடக்குமுறைக் குறியீட்டு அழிவினை, பதிவு செய்தவகையில் எரியும் நினைவுகள் முக்கியம் பெறுகிறது. தான் பிறந்த 19 தினங்களில் எரிக்கப்பட்ட ஒரு நூலகத்தின் வரலாற்றை, ஒரு அடக்குமுறை அரசின் கேவலமான முகத்தை, முடிந்தளவில் பதிவுசெய்தமைக்காக சோமிதரனைப் பாராட்டலாம்.

எரியும் நினைவுகள் குறித்து இயக்குனர் சோமிதரனின் செவ்வி.




செவ்விக்கு நன்றி: பெரியார் வலைக்காட்சி

3 comments:

Anonymous said...

பாலபாரதியின் முயற்சி நல்ல முன்மாதிரி.
சோமி ரொம்ப அழகாயிருக்காரு :)

லக்கிலுக் said...

//சோமி ரொம்ப அழகாயிருக்காரு :)//

மலைநாடனாரே! சோமிக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க :-)

சயந்தன் said...

சயந்தனுக்கு கூடவே இனிய 49வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

அது சரி - என்னை விட நீங்கள் 20 வயது மூத்தவர் என்பதை இப்போதும் ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே ? :)