Tuesday, July 17, 2007

தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.


உங்களுக்கு, கிட்டிப்புள்ளு (கிட்டிப்பொல்லு, கில்லி) விளையாட்டு, விளையாடும் முறை ஞாபகமிருக்கிறதா? என சென்றவாரம் இணையத்தூதில் உரையாடியபோது நண்பரொருவர்,கேட்டார். என்ன திடீரென கிட்டிப்புள் விளையாட்டைப் பற்றி அக்கறையாக் கேட்கிறியள் என்ற கேள்வியோடு, உரையாடல் தொடர்ந்த போது, விளையாட்டு முறைகள் சற்று ஞாபகமற்றுப் போயிருந்தது எனக்கும் உறைத்தது.

ஒருகாலத்தில், நாளும் பொழுதும் இந்த விளையாட்டுக்களோடு திரிந்த நமக்கே, வாழ்நிலைச்சூழலின் சறுக்கலில் அவை நினைவற்றுப்போயுள்ளன. அப்படியாயின், போரும் வாழ்வுமாகிப்போன, எங்கள் புலத்திலோ, அந்நியச்சூழலே நம் வாழ்தளம் என்றாகிப்போன புலம்பெயர்சூழலிலோ, வாழுகின்ற நம் இளைய தலைமுறைக்கு, இந்த விளையாட்டுக்கள் பற்றி ஏதேனும் தெரிய முடியுமா?

இப்படியொரு கேள்வி இப்புலம்பெயர் சூழலில் எழுந்தபோதுதான், தொடக்கக் கேள்வி என்னையும் நோக்கி வந்தது. எதுவுமற்ற ஏதிலிகளாக, வேதனைகளைச்சுமந்த வண்ணம், இருப்பினை எண்ணிக் கொண்டு, புலம்பெயர்ந்த வேளையிலோ, பின் வந்த வெறுமை மிகு வாழ்க்கைக் காலங்களிலோ விளையாட்டுக்கள் எங்கள் மனதை நிறைத்திருக்கவில்லை. அதனால் அவை மறக்கப்படுமாறுமாயிற்று. வறண்டுபோன எங்கள் வாழ்வியலில், புது வசந்தங்களென் எங்கள் பிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் ஓடியாடி விளையாடும் தருணங்கள் வந்தபோது, எங்கள் மனங்களிலும், இளமைக்கால ஞாபகங்கள் எழுந்து உட்கார்ந்தன. வீதிகளிலும், விளையாட்டுத்திடல்களிலும், நாங்கள் ஆடிய விளையாட்டுக்கள் ஞாபகத்திற்கு வந்தன. கூடவே, இவைபற்றியும் எங்கள் செல்வங்களுக்கு சொல்லிக்கொடுக்கவோ அல்லது சொல்லி வைக்கவோ வேண்டுமல்லோ என்ற எண்ணங்கள் இப்போ எல்லாத் திக்குகளிலும், எழும்பத் தொடங்கியுள்ளன.

இப்படியான இன்றைய காலச் சூழலில், சுவிற்சர்லாந்து தமிழ்மன்றத்தின் விளையாட்டுத்துறை, தனது பத்தாம் ஆண்டு நிறைவை மலர்வெளியிட்டு நினைவுப்படுத்த விரும்பியபோது, மேற்சொன்ன எண்ணங்கள் வீச்சாக எழ,வாழ்த்துச் செய்திகளோடல்லாது, வளமான தமிழர் நம் விளையாட்டுக்கள் குறித்த சங்கதிகள் பலவற்றுடன், வீச்சு என்ற விளையாட்டுச்சிறப்பிதழ் மலர்ந்துள்ளது. அருமையான வடிவமைப்பில், அழகான படங்களுடன், அருமையான கட்டுரைகளும் அடங்கிய வீச்சு, உண்மையில் நம் விளையாட்டுத்துறைசார் வெளியீடுகளில் பெருவீச்சாகவே உள்ளது.

விளையாட்டிலிருந்து வினைதீர்க்கும் மருத்துவம்வரை ஒரு அஞ்சலோட்டம் எனும், ஏ.ஜி. யோகராஜாவின் நீளமான கட்டுரை, வெறுமனே ஒரு கட்டுரை எனச் சொல்லிவிட முடியாது. எங்கள் சமூகத்தின் வாழ்வியல் கூறொன்றினை விரிவாகப் பார்க்கக் கூடிய புத்தகமொன்றின் முதல்வாசிப்பு எனச் சொல்லத்தக்கது. புலம்பெயர் சூழலில் தொடங்கி, ஆன்மீகம்வரை அஞ்சலோட்மெனச் செல்லும் கட்டுரையில், எத்தனை எத்தனை எண்ணங்கள், சான்றுகள், நோக்குகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து, பொன். சுந்தரராஜன் எழுதியுள்ள, தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒரு ஆய்வுக்கான அறிமுகம் எனும் கட்டுரை, எங்கள் பாரம்பரிய விளையாட்டுக் பலவற்றையும், சுருக்கக் குறிப்பில் அறிமுகம் செய்து வைக்கிறது. கிளித்தட்டு,கிட்டிப் புள் அடித்தல், பட்டம் விடுதல், படகோட்டல், மாட்டுவண்டில் சவாரி,போர்த்தேங்காய் அடித்தல், காளை அடக்குதல், பேய்பந்து அடித்தல், காயா, பழமா, சடுகுடு விளையாட்டு, புலியும் ஆடும், நொண்டி அடித்தல் அல்லது கெந்துதல், பகலாட்ட தாகம், என்உலக்கை குத்து, பச்சைக்குதிரை, அம்மானை, கீச்சுமாச்சுத் தம்பலம், தட்டாங்கல் என கட்டுரையில் பல விளையாட்டுகள் வந்து போகின்றன. இவை மட்டுமல்லாது, சுவிற்சர்லாந்தில் விளையாடப்படும் கோடைகால, குளிர்கால வினளயாட்டுக்கள் என்பன பற்றிய மதுரா குணசிங்கத்தின், சுவிஸ் சாரல்களில் எனும் கட்டுரையும், வேறுசில கட்டுரைகளும், கவிதைகளும், உள்ளடக்கி வீச்சு வந்திருக்கிறது.

புலம்பெயர் சூழலில் இத்தகைய முயற்சிகள், அவசியமானது ஆரோக்கியமானது. ஆனால் இத்தகைய முயற்சிகளின் வெற்றியும், உந்துதலும் பெற வேண்டுமாயின், நாமும், நமது இளைய தலைமுறையும், இவற்றை வாசிக்கவும், சுவாசிக்கவும் வேண்டும். அதுவே இத்தகைய பணிகளில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும், உயர்வுக்கும் கொண்டு செல்லும். பயன்பெறவும் தரவும் விரும்புவோர், சுவிஸ், லுசேர்ண் தமிழமன்றத்துடன் தொடர்பு கொள்ளலாம் .






படங்களுக்கான நன்றிகள்: சுவிஸ் முரசம், சந்திரவதனா செல்வக்குமாரன்.

17 comments:

வி. ஜெ. சந்திரன் said...

மலைநாடான் வணக்கம்

எமது பாரம் பரிய விளையாட்டுக்களில் பலவற்றை எமக்கு தெரியாது. இணைய உரையாடலில் தான் மீள நினைவுபடுத்தி கொண்டோம். அண்மையில் நடந்த கனடா தினத்தில் இங்குள்ள பெரியவர் ஒருவரும் எதிர் பாராத விதமாய் கிட்டி புல்லு, மற்றும் கிளித்தட்டு விதிகள் பற்றி கேட்ட போது வசந்தனும், நானும் இணையம் மூலம் ஏற்கனவே உரையாடியதை வைத்து தான் அவருக்கு விதிகளை சொல்லியிருந்தேன். அவர் கிட்டி புல்லில் மிக ஆர்வமாக இருந்தார். அதை பற்றி அவருக்கு விளக்கமளிக்க உதவியது வசந்தன் தான். ஆனாலும் இன்னும் கிட்டி புல்லின் விதிகளில் சிறிதளவு குழப்பம் இருக்கிறது. எமக்கு தெரிந்தவற்றை, அவற்றின் விதிகளை ஆவணப்படுத்தவேண்டியது முக்கியம்.

வி. ஜெ. சந்திரன் said...

//எமக்கு தெரியாது//
திருத்தம்
சிலவற்றை தெரியாது. தெரிந்தவற்றின் விதிகள் மறந்துவிட்டது.

வடுவூர் குமார் said...

கிட்டிப்புல்- இந்த விளையாட்டை நேரம் காலம் இல்லாமல் விளையாடியது உண்டு.எங்களில் ஒருவன் "கிருஷ்ணன்" என்று பெயர்.. புல்லை உந்தும் போது எப்படியாவது பிடித்து ஆட்டமிழக்கச்செய்து விடுவான்.
அதற்காகவே அவனுக்கு நாங்கள் "பொட்டி கிருஷ்ணன்" என்று பெயர் வைத்தோம். பொட்டி- என்றால் ஆட்டமிழக்க வைப்பது.
பல நகரங்களில் விளையாட இடமே இல்லை,அதுவும் கிரிக்கெட் வந்த பிறகு பல பழைய விளையாட்டுக்கள் வழக்கொழித்து போயின.

மலைநாடான் said...

வி.ஜே!

புலப்பெயர்வு, போர்ச்சூழல், என்பதற்கும் அப்பால் , தொழில்நுட்ப வளர்ச்சியும், இத்தகைய தேசிய விளையாட்டுக்கள் வழக்கொழியக் காரணமாகின்றது என்றும் சொல்லலாம். இத்தகைய நிலையில், உங்களைப் போன்றவர்களின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.

ஆவணப்படுத்தலின் அவசியம், இப்போ எல்லாவிடங்களிலும் அவசியமாகிறது. :) கருத்துக்கு நன்றி.

Anonymous said...

கிட்டிப்புள்ளு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில கட்டிவைச்சு சுடுகுறானே....

மலைநாடான் said...

வடுவூர் குமார்!

உண்மை. எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன..

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

மலைநாடான் said...

அனானி!

உங்கள் கருத்தும் ஏற்றுக் கொள்ளத்த தக்கதே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிள்ளைப் பிராயத்துக்கு ஒரு நொடியில் அழைத்துச் சென்ற மலைநாடன் ஐயாவுக்கு நன்றி!
கிட்டிப்புள், பல்லாங்குழி, மற்றும் இலக்கிய விளையாட்டுகள் தான் எத்தனை எத்தனை....

அம்மானை என்ற விளையாட்டு இன்று அந்தாக்ஷரி என்றும் பாட்டுக்குப் பாட்டு என்றும் வடிவம் தான் மாறி உள்ளது!

இது பற்றி ஒரு தொடர் போடுங்க மலைநாடன்....வலைப்பதிவுலகில் முதன் முறையாக கில்லி விளையாடலாம் வாங்க! :-)

✪சிந்தாநதி said...

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்தும், மறந்தும் போனதை இனி இம்மாதிரி மீள் நினைவுகள் வழிதான் கண்டுவர வேண்டும் போல் இருக்கிறது. விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்றாகிப் போன சூழலில் அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமில்லை. வரலாற்றிலாவது அவற்றை பதிவு செய்தல் நம் கடமைதான்.

மலைநாடான் said...

ரவிசங்கர்!

உங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி. உங்கள் எண்ணத்தை செயலாக்க முயன்று பார்க்கலாம். நன்றி.

குமரன் (Kumaran) said...

பள்ளியில் ஆடிய விளையாட்டுகளை நினைவு படுத்திவிட்டீர்கள். இங்கே அமெரிக்கச் சூழலில் அவற்றை என் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியுமா தெரியவில்லையே?!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
தலைமுறை மறப்பது மாத்திரமல்ல!
சொன்னால் ஆச்சரியப்படுகிறார்கள்.
(இதே ஆச்சரியம் நமக்கும் நம் பாட்டாமார் கதையில் ஏற்ப்பட்டது)
இருட்டியபின்னும் சிலவிளையாட்டில் குறிப்பிட்ட கணக்கு முடிக்க நின்றே விளையாட வேண்டும். இன்று நம் நாட்டுப்பிள்ளைகளுக்கு சாத்தியமா??
வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளும் 'கேம் போயில்'' தானே உதைபந்தாடுது.
ஆவணப் படுத்தி வைக்க வேண்டியதே!

Anonymous said...

how many of you are ready to play old-tamil-classic games with your children?
you are the reason for losing your background.....do always don't blame "others"

அற்புதன் said...

யோகன் சொன்னதும் ஒரு விடயம் மனதில் உதித்தது.யாராவது கணணி வல்லுனர்கள் ,இப்படியான விளையாட்டுக்களை அனிமேசனில் கணனி விளையாட்டாச் செய்தால் என்ன?

குறிப்பா நின்ரண்டோ வீயில (Nintendo Wii)கிட்டிப்புள்ளு நல்லா விளயாடலாம்,ஏணெண்டா அதன் கொன்ர்ரோலரில மோசன் சென்சிங்க் இருக்கு(motion sensing),அதாவது நாங்கள் அதை நகர்தேக்க அதற்க்குள் இருக்கும் உணர்கருவி அதன் இயக்கத்தை உணர்ந்து திரையில் தெரியும் விளையாட்டுடன் எம்மை இணைக்கிறது.நீங்கள் அந்தக் கொன்ர்ரோலரை பொல்லாகப் பாவிக்கலாம்.இப்படி எதாவது செய்தால் தான் நீங்கள் நினைக்கிற மாதிரி அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லலாம். நாங்கள் எந்த வித முன் நேற்றங்களையும் செய்யாமல் அது காவப் படப் போறதில்லை.கிரிக்கட்டும் பல மாற்றங்களைச் சந்தித்து இருக்கிறது.குறிப்பா ஐந்து நாள் ஆட்டம் ஒரு நாளானது, இப்படிப் பல.வாழும் முறை மாற்றத் தோடு மாற்றம் காணாத விளையாட்டுக்கள் வழக் கொழிந்து தான் போகும்.

மலைநாடான் said...

குமரன்! யோகன்!

நீங்கள் இருவரும் சொல்வது போன்று நினைவுகளில் மட்டுமே, இவ்விளையாட்டுக்கள் தங்கிவிடப் போகின்றன போல்தான் தெரிகிறது. என்ன செய்ய முடியும்.

தகடூர் கோபி(Gopi) said...

மலைநாடான்,

பல்லாங்குழியை வலைப்பக்கத்தில் விளையாடும் வண்ணம் அமைக்க முடியுமா என்று ஒருமுறை பொன்ஸ் எனது வலைத்தளப் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.

அதற்கான சோதனை முயற்சியில் இறங்கியதில் கிடைத்தது பல்லாங்குழி. மென்பொருள்களுக்கே உரித்தான இலக்கணப்படி இன்னும் சில வழுக்களை(Bugs) சரி செய்ய வேண்டியிருக்கிறது.

இது போல வலை விளையாட்டுக்களாக நம் பாரம்பரிய விளையாட்டுக்களை புலம்பெயர் தமிழர் குழந்தைகளுக்கு அறியத்தருவதன் மூலமும் வற்றை வழக்கொழியாமல் வைத்திருக்க இயலும்.

காண்டீபன் said...

வணக்கம் மலைநாடான்...
எமது பாரம் பரிய விளையாட்டுக்களை பாதுகாப்பது அவசியம்,இது தொடர்பன பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்